Ilaya Rani Ch4 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
இளையராணி – சாண்டில்யன்
அத்தியாயம் – 4 இளையராணியின் விளையாட்டு
Ilaya Rani Ch4 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
இதழ்களில் புன்முறுவலையும் இதயத்தில் கடுங் கோபத்தையும் கொண்ட அமரன், இளைய ராணி காட்டிய இடத்தில் அமராமல் அவளுக்கு எதிரேயிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். “ஏன் அமரா? சிற்றன்னையின் பக்கத்தில் உட்காரக் கசக்கிறதா உனக்கு?” என்று வேடிக்கையாகக் கேட்பதுபோல் கேட்ட இளையராணியை நோக்கிய அமரன், இல்லை, சாணியார் அருகில் அமர்ந்தால் ராணியாரை நேரில் கண்ணாரக் காணும் பாக்கியம் கிடைக்காது. தவிர தந்தை உட்கார வேண்டிய இடத்தில் தனயன் உட் காருவதும் சரியாகாது” என்று கூறினான். அத்துடன் கேட்டான்: “நான் வந்த காரியம் என்னவென்று நீங்கள் கேட்கவில்லையே!”
“வந்ததும் வராததுமாகக் காரியத்தைப்பற்றி விசாரிப்பது கண்ணியக் குறைவல்லவா அமரா? நீ உணவருந்தியபின் பேசுவோம்” என்ற இளையராணி, “வா உனக்குத் தயார் செய்து வைத்திருக்கும் அறையைக் காட்டுகிறேன்” என்று கூறி, ஆசனத்திலிருந்து எழும் திருக்க முயன்றாள்.
“வேண்டாம் ராணி” என்ற இருப்புச் சலாகை இருப்புச் சலாகையுடன் உராயும் ஒலியில் எழுந்த அமரன் குரல் அவளை அப்படியே உட்கார வைத்தது.
உன்னிஷ்டம் அமரா! வந்த காரியத்தைச் சொல்” என்று வினவினாள் ராணி.
அமரன் சட்டைப் பையிலிருந்த இரண்டு வளையல்களை எடுத்து இளைய ராணியிடம் காட்டினான் “இவற்றை நீங்கள் அடையாளம் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்” என்று கூறி அவளை உற்று நோக்கினான்.
இளைய ராணி அந்த வளையல்களைக் கையில் வாங்கி உற்றுப் பார்த்தாள். பிறகு முகத்தில் குழப்பத்தைக் காட்டி, “யாருடைய வளையல்கள் இவை? ‘என்றும் கேட்டாள்.
இளைய ராணியின் நடிப்பைக் கண்டு அசந்து போனான் அமரன். உள் உணர்ச்சிகளை அவள் எத்தனை தூரம் அடக்க முடியுமென்பது அவனுக்கே பெரும் விசித்திரமாயிருந்தது. அத்துடன் அவள் பாசாங்கு அவனுக்குக் கோபத்தையும் விளைவிக்கவே, “இவை இன்னாருடைய வளையல்கள் என்பது புரிய வில்லை உங்களுக்கு?” என்று சினத்தைக் குரலில் காட்டி வினவினான்.
“புரியவில்லை அமரா! நீதான் சொல்லேன்” என்றாள் இளைய ராணி.
“அவற்றில் அம்பர் ராஜமுத்திரை இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினான் அமரன்.
“ஆம், இருக்கிறது” என்றாள் கமலாதேவி.
“அதை அணியக்கூடியவர் இங்கு இருப்பது உங்களுக்குத் தெரியாதா” இம்முறை கேள்வியில் உக்ரம் அதிகமாகியது.
“எனக்கேன் தெரிய வேண்டும் அமரா? அப்படி அம்பர் அரசகுல வளையலை அணியக்கூடிய யாரும் இங்கில்லையே” என்றாள் ராணி.
இளைய ராணி ஏதோ சொல்ல வாயெடுத்தான், அதற்குள் அவளுக்குப் பின்னாலிருந்த கதவு மெல்லத் திறந்து மெல்லிய தேகத்துடனும் பயந்துள்ளும் வதனத்துடனும் ஒரு வாலிபன் நுழைந்து இளைய ராணியின் வசனத்தை நெருங்கி அவள் பின்னால் நின்றான். “ஏனம்மா? இது ரஜனியின் வளையல் அல்லவா? இதை எதற்காக நீ கையில் வைத்துக் கொண்டிருக்கிறாய்? கொடு, அவளிடம் கொடுத்து விடுகிறேன்” என்று தனது அசட்டுத்தனத்தைக் காட்டவும் செய்தான்.
கமலாதேவியின் அழகிய கண்களில் சற்றே சினம் ஏறியது. ஒருமுறை திரும்பி அந்த வாலிபனை நோக்கினாள். “ஜஸ்வந்தசிம்மா! உன்னை யார் இங்கு வரச் சொன்னது?” என்று வினவவும் செய்தாள், குரலிலும் சினத்தைக் காட்டி.
“இளவரசனான நான் எங்கும் போவதையோ வரு வதையோ யார் தடுக்க முடியும்?” என்று வினவினான் ஜஸ்வந்த சிம்மன்.
“உள்ளே போகிறாயா இல்லையா?” என்றாள் கமலாதேவி.
“முடியாது.”
“ஏன் முடியாது?”
“அங்கே போனால் ரஜனி விரட்டுகிறாள்.”
இளைய ராணிக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. “ரஜனி விரட்டுகிறாளா! சீ மடையா! வெட்க மாயில்லை உனக்கு?” என்று சீறினாள் இளைய ராணி.
“தேவி! சிதோதய வம்ச அரசகுமாரனை நீங்கள் இப்படி திட்டுவது முறையல்ல” என்று அமரசிம்மன் அவர்கள் சம்பாஷணைக்கு இடையில் புகுந்தான.
இளைய ராணி அமரசிம்மன் மீது தனது கோபத்தைத் திருப்பினாள். ‘’அமரா! உனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடாதே” என்று சீறினாள் கமலாதேவி.
அமான் முகத்தில் வியப்பு படர்ந்தது. “எனக்கு சம்பந்தமில்லாத விஷயமா! என் தம்பியைக் கண்டபடி பேசுகிறீர்கள். எந்த ரஜனியை நான் தேடி வந்தேனோ அவளைப்பற்றி ஏதுமே தெரியாதென்கிறீர்கள்! என்ன ‘தேவி! நீங்கள் பேசுவது பெரும் விந்தையாயிருக்கிறதே” என்றான் அமரன் ஏளனக் குரலில்.
அதுவரை சற்றுக் குழம்பியிருந்த உணர்ச்சிகளை இளைய ராணி கட்டுக்குள் கொண்டுவந்து புன்முறுவல் செய்தாள். ”உன்னை நாள் கழித்துப் பார்த்ததால் ஒரே குழப்பத்திலிருந்தேன் அமரா! உன் தம்பியைப் பார்த் தாயா…..எப்படி இருக்கிறான்?” என்றாள் ஜஸ்வந்த சிம்மனைக் கையால் சுட்டிக் காட்டி.
ஜஸ்வந்தசிம்மன் அமரனை உற்று நோக்கினான்: “நீ என் அண்ணனா?” என்றும் கேட்டான்.
“ஆம் தம்பி!” என்றான் அமரன்.
“உன் பெயர்தான் அமரனா?” என்றும் கேட்டான் ஜஸ்வந்தசிம்மன்.
“ஆம்.”
”உன்னைப்பற்றித் தான் இரண்டு நாளாக அரண் மனையில் பேச்சு.”
“என்ன பேச்சு?”
“நீ வந்து ரஜனியைத் தூக்கிக்கொண்டு போய் விடுவாய் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.
இளைய ராணிக்கு இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. ஜஸ்வந்தசிம்மன் அசட்டுத்தனத்தைச் சகிக்க முடியாமல், “அமரா! இந்தப் பைத்தியம் சொல்வகை நீஜமென்று நம்பாதே! ரஜனியைத் தூக்கிச் செல்ல நீ என்ன அரக்கனா அல்லது இங்கு ரஜனிக்குத்தான் எதாவது குறைவா?” என்று கூறிவிட்டு, “டேய் ஜஸ்வந்த், உள்ளே செல். ரஜனியை அனுப்பு இங்கே…. அவளே பதில் சொல்லட்டும் அமரனுக்கு” என்றாள்.
ஜஸ்வந்தசிம்மன் நகரவில்லை. இடித்த புளிபோல் நின்ற இடத்தில் நின்றான். அமரன் அவ்விருவரையும் உற்றுப் பார்த்தான் சில விநாடிகள். அம்மணி! லஸ்வந்தசிம்மனை அனுப்ப வேண்டாம். வேறு காவ லரை அனுப்புங்கள், ரஜனியை மீட்டுப்போக வந்திருக் கிறேன் நான். சீக்கிரம் அனுப்பி வையுங்கள் அம்பர் அரசகுமாரியை” என்று கூறினான்.
“மீட்டுப் போகவா? இதென்ன பைத்தியம் அமரா! நான் அவளை ஏதோ சிறை வைத்திருப்பது போலல்லவா பேசுகிறாய். காணாமற்போன அவள் வளையலை யாரோ கழற்றி உனக்கு அனுப்பியதை நிஜமென்று நினைத்து இவ்வளவு தூரம் பிரயாணப் பட்டு வந்தாயோ” என்று ராணி வினவினாள்.
“மகாராணி! இந்த மாதிரி விளையாட்டில் எனக்குப் பழக்கம் கிடையாது. அம்பர் ராஜகுமாரி நேரில் என்னிடம் ‘அந்த வளையலை நான் அனுப்பவில்லை’ என்று சொன்னாலொழிய இவ்விடத்தை விட்டு அசைய மாட்டேன்” என்றான் அமரன்.
“சரி! உன் ஆசையையுந்தான் கெடுப்பானேன்? இதோ வரவழைக்கிறேன் ரஜனியை” என்று ராணி சொல்லிவிட்டு அவளை அழைத்து வர ஒரு வேலைக்காரனை அனுப்பினாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்தவுடன் அமரன் கோபமெல்லாம் பறந்து, என்றும் காணாத புதுமையைக் கண்டுவிட்டது போல் அவன் கண்கள் அகன்று மலர்ந்தன. சரியாக மதிப்பு. போடத் தெரியாத மட உலகம் ரஜனியை அழகி என்.. லேசாகச் சொல்கிறது. பூலோகத்தில் காண முடியாது அற்புத அழகி ரஜனி என்றல்லவா சொல்ல வேண்டும். என்று அவன் சிந்தித்தான்.
ரஜனி உள்ளே நடந்து வந்த அமரிக்கையிலேயே அழகு ததும்புவதை அமரன் கண்டான். வசந்த காலத்தில் பூரணமாகப் பூத்துக் குலுங்கும் ஜாதிக்கொடி அசைந்து வருவது போல நடந்து வந்த ரஜனியின் மீது கண்களைப் பதித்திருந்த அமரன், சித்தியின் கண்களும் தன்மீது பதிந்திருந்ததை அறிந்து பார்வையைச் சிறிது அப்புறப்படுத்திக் கொண்டான்.
“ராஜகுமாரி! நீங்கள் அனுப்பிய வளையல்களைக் கண்டு என் கடமையைச் செலுத்த வந்தேன். நீங்கள் என்னுடன் வரத் தயாரா?” என்று கேட்டான் அமரன்.
அவள் வாயிலிருந்து வார்த்தை வருமுன்னே இளைய ராணி புன்சிரிப்புடன் இடைமறித்து, “ரஜனி! உன்னை ஏதோ நாங்கள் சிறை வைத்திருக்கிறோமாம், உன்னை மீட்க வந்திருக்கிறானாம் அமரன். என்ன வேடிக்கை பார்த்தாயா?” என்றாள். அப்பொழுது அமரன் முகத்தில் கிளம்பிக் கொண்டிருந்த புகைச்சலை இளையராணி கண்டு கபடமகாச் சிரித்தாள். தன் சம்பாஷணையில் இளைய ராணி குறுக்கிட்டதே அவன் கோபத்தைக் கிளறிவிட்டது. அவள் ஏளனமாகச் சிரித்தது அதை நன்றாக விசிறி ஜ்வாலையும் கிளப்பியது. “மகாராணி! இந்த நாட்டிய வித்தையெல்லாம் பார்க்க நான் இங்கு வரவில்லை . காரியமாக வந்திருக்கிறேன். ஒழுங்காகக் காரியம் கவனிப்போம்!’ என்று அமரன் அதட்டலான குரலில் இரைந்தான்.
“அப்படியானால் காரியத்தைக் கவனிப்போம் அமரா” என்று இளைய ராணியும் கோபத்துடன் பேசிக் கையைத் தட்டினாள். அடுத்த நிமிடம் அக்கம்பக்கத்திலிருந்த அறைகளிலிருந்து ஆயுதபாணிகளாக அம்பர் வீரர்கள் அமரனைச் சூழ்ந்து நெருங்கினர்.
இம்மாதிரியான ஆபத்தான நிலைமையில் அமர சிம்மன் பலமுறை அகப்பட்டுக் கொண்டிருக்கிறான். இந்த ஆபத்தை அவன் ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. இளைய ராணி நிலைமையை நிதானிப்பதற்கு மன்னமே அமரனின் மூளை அதி துரிதமாக வேலை செய்தது. அமரனின் இடது கை ரஜனியின் இடுப்பைச் சுற்றி தன் பக்கமாக இழுத்துக் கொண்டது. வலது கை மின்னல் வேகத்தில் எழுந்து கத்தியை உருவி ஜஸ்வந்த சிம்மன் கழுத்தைக் குறிபார்த்துத் தடவியது.
“ஐயோ!” என்று ஜஸ்வந்தசிம்மன் கதறினான்.
“அடே! ஒரு அடி பின்னால் நகர்ந்தால் கத்தி கழுத்தில் பாய்ந்து விடும்! நகராதே. மகாராணி! அந்த அம்பர் நரிகள் ஆயுதங்களை உடனே கீழே எறி யட்டும். ஒரு வினாடி தாமதமானால் பிள்ளையின் உயிர் கணவேகத்தில் எமலோகம் பறந்து விடும், சத்தியம்” என்று அமரன் ஆவேசத்துடன் கூவினான்.
அரண்மனையின் உயர்ந்த சுவர்களும் அவன் சொன்னதை ஆமோதிப்பன போல் சத்தியம் சத்தியம் என்று நாலா பக்கங்களிலிருந்தும் பயங்கரமாக எதிரொலி செய்தன.