Ilaya Rani Ch5 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
இளையராணி – சாண்டில்யன்
அத்தியாயம் – 5 கோபமும் சாந்தமும்
Ilaya Rani Ch5 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
பிள்ளையின் உயிர் சக்களத்தி மகனின் கத்தி முனையில் ஊசலாடுவதை இளைய ராணி கண்டு நிமிஷ நோம் செயலற்று அதிர்ந்து போனாள். கோபம் அவமானம், பிரமை முதலிய பல உணர்ச்சிகள் அவள் உள்ளத்தில் அலை அலையாக எழுந்து மோதி பிரளயத்தில் அகப்பட்ட துரும்பு போல் அவளை ஆட்டிக் தூக்கி எறிந்து கொண்டிருந்தன. ‘ஜஸ்வந்தசிம்மன் பின்னுக்குப் பாய்ந்து தன்னை ஏன் காப்பாற்றிக் கொள்ளக் கூடாது?’ என்ற சீற்றம் ஒரு பக்கம். கண்மூடிக் கண் திறப்பதற்குள் என் வெற்றியைத் தோல்வியாக மாற்றிவிட்டானே அமரன்; சக்களத்திக்கல்லவா இப்படிப்பட்ட பிள்ளை பிறந்தான்’ என்பதில் பொறாமை கலந்த அவமானம் ஒரு பக்கம், நிலைமை மீட்க முடியாமல் நம் கையை மீறிவிட்டதே’ என்பதால் ஏற்பட்ட பிரமை ஒரு பக்கம் அவளை வாட்ட ஆரம்பித்தன.
இளைய ராணி ஒரு விநாடி சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்தக் கபடப் பார்வையைக் கோபத்தால் தீட்சண்யமாக ஜொலித்துக் கொண்டிருந்த அமரனின் கண்கள் இடையில் தடுத்தன. மகாராணியின் சிந்தனை எந்தத் திசையில் பாய்ந்து கொண்டிருக்கிறதென்பதை அமரன் அறிந்து கொண்டான். அவன் குரல் மீண்டும் பயங்கரமாக ஒலிக்க ஆரம்பித்தது. மகாராணி! ‘சந்தேகமே வேண்டாம். இந்த அம்பர் கூலிகள் ஒரு ‘அடி முன்னே எடுத்து வைத்தால் அடுந்த விநாடி ‘பிள்ளையின் பிரேதத்தை நீர் மடியில் தாங்க வேண்டியதுதான்” என்றான். அதுவரையில் மேலோட்டமாக ஜஸ்வந்தசிம்மன் கழுத்தைத் தடவிக் கொண்டிருந்த கத்தி சிறிது அழுந்தவும் ஆரம்பித்தது.
அம்மா! அவர்களைக் கத்தியைக் கீழே போடச் சொல். அண்ணா, வேண்டாம்! நான் உன் தம்பி” என்று கதறினான் ஜஸ்வந்தசிம்மன்.
“இந்த ரகசியத்தை உன் அம்மாவிடம் சொல்லு. தம்பி! நான் உன் அண்ணன் என்பதை மறந்து எவ்வளவு பேர் என்னைச் சுற்றி நெருங்குகிறார்கள் பார்” என்று அம்பர் வீரர்களைக் காட்டி இடிபோல் சிரித்தான் அமரசிம்மன். அவன் இடது காலும் இடத்தை விட்டுக் சிளம்பி ஜஸ்வந்தசிம்மனின் வலது காலை அசைய முடியாமல் உரமாக மிதித்துக் கொண்டது.
எதிரியிடம் செல்லாத கோபத்தை இளைய ராணி தன்னுடைய ஆட்களின்மேல் திருப்பினாள். “எதற்காக ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு மரம்போல் நிற்கிறீர்கள்? அம்பரில் உங்களுக்கென்ன தீவட்டி பிடிக்கும் உத்தியோகமா? எறியுங்கள் கீழே!” என்று சீறினாள்.
அம்பர் வீரர்கள் ஆயுதங்களைக் கீழே எறிந்த பின்புதான் ரஜனியின் இடுப்பிலிருந்த தன் கையைத் தளர்த்தினான் அமரன். இந்த நாடகம் நடந்த இரண்டு மூன்று நிமிஷங்களில் ரஜனியின் நிலைமை எப்படியிருந்தது? அமரன் பெயரைத்தான் அவள் கேள்விப் பட்டிருந்தாள். அவனைப் பார்த்தது கிடையாது. முன் பின் பாராத ஒரு புருஷனால் எதிர்பாராத சமயத்தில் முரட்டுத்தனமாக கட்டி இழுக்கப்பட்ட ஸ்திரீயின் மனோ உணர்ச்சிகள் எப்படியிருக்க முடியும் “அடடா, நம்மாலல்லவா சுத்த வீரனான இந்தப் புருஷன் இளையராணியின் வலைக்கு சிக்கிவிட்டான்” என்று நினைப்பதைத் தொடர்ந்து மின்னல்போல் வந்த ‘’ஐயோ! ஜஸ்வந்தசிம்மன் போய் விட்டானே” என்று அனகாபங் கலந்த பீதியும், முதல் முதலாகப் புருஷனின் ஸ்பரிசம் ஏற்படும்போது ‘ஐயோ, இதென்ன ‘என்று மேலுக்கு அங்கலாய்த்தாலும் உள்ளூர ஏற்படும் உவகை தோய்ந்த வெட்கமும் அவளைப் பிடித்து வாட்டவே, அவள் பேச முடியாமலும் எதிரேயிருந்த வர்களைப் பார்க்கக் கூசியும் கண்களை நிலத்தில் ஓட்டினாள். மனது மாத்திரம் மேலெழுந்து நாடகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தது. அமரன் கை தளர்ந்ததும் அவளும் சிறிது விலக ஆரம்பித்தாள்.
ராஜகுமாரி! அபாய காலங்களில் சமூகத்தின் சாதாரணக் கட்டுப்பாடுகளைக் கவனிப்பது முட்டாள் தனம். நீங்கள் சிறிது நகர்ந்தால் காரியம் கெட்டுப் போகும். என் வாள் வீச்சின் எல்லைக்குள் இருக்கும் வரையில்தான் உங்களுக்குப் பந்தோபஸ்து. நகர வேண்டாம்!” என்று அமரன் எச்சரித்தான். பிறகு ரகூ! ரகூ!” என்று சேவகனைக் கூப்பிட்டான்.
ஏகத்தாறாகச் சைன்னியம் வைத்து நடத்தும் சமயங்களில் சேனாதிபதி எவ்வளவு ஒழுங்காகவும் திட்டமாகவும் காரியத்தை நடத்தவேண்டுமோ அவ்வளவு திட்டத்துடன் வேலையை முடிக்க ஆரம்பித்தான் அமரசிம்மன்.
“ரகூ! அதோ அந்த ஆயுதங்களைப் பொறுக்கிக் கட்டி ஒரு மூலையில் வை. அவர்களை வரிசையாக நிறுத்து. ராஜகுமாரி! இளைய ராணியிடமிருந்து அரண்மனைச் சிறையின் சாவியை வாங்குங்கள்” என்று அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உத்தரவு கொடுத்தான். “தம்பீ! என் அருகில் வா” என்று ஜஸ்வந்தசிம்மனை மட்டும் அருகில் இழுத்துக் கொண் டான். உருவின கத்தி உருவியபடியே இருந்தது.
நிபுணனால் இயக்கப்படும் யந்திரங்கள் போல் அவரவர்கள் தங்கள் வேலையைச் செய்து முடித்தார்கள் “இனி நாம் கிளம்பலாம். ஒரே ஒரு வேலை மட்டும் பாக்கியிருக்கிறது ராஜகுமாரி! என் இளைய தாயாரைத் தயவுசெய்து அந்த ஆசனத்தில் உட்கார வைத்து அத்துடன் சேர்த்துக் கயிற்றினால் கட்டிவிடுங்கள்” என்று ரஜனிக்கு மீண்டும் உத்தரவிட்டான்.
என்ன இருந்தாலும் பெண் மனமல்லவா? ரஜனி சிறிது யோசித்தாள். “ராஜகுமாரி! யோசிக்க அவகாச மில்லை. உங்கள் நிலைமையில் எனது இளைய தாயார் இருந்தால் இந்தப் பணியை இத்தனை நேரம் நான் சொல்லாமலே செய்திருப்பார்கள்” என்று எச்சரித்தான்.
ரஜனி அறைகுறை மனத்தோடுதான் இளையராணியைக் கட்டினாள். “ரகூ! இந்த அம்பர் நரிகளை ஓட்டிக் கொண்டு முன்னால் போ. நான் தம்பியை அழைத்துக் கொண்டு வருகிறேன். அவர்களில் ஒருவன் திரும்பினாலும் தம்பிக்குத் தர்ப்பணம் செய்யும் பாக்கியத்தை சம்பாதித்துக் கொள்கிறேன், போ” என்று உத்தரவிட்டான் அமரன். அம்பர் வீரர்கள், அவர்களைத் தொடர்ந்து சிறைச் சாவிகளுடன் ரகு, அவனுக்குப் பின்னால் ராஜகுமாரி, அவளுக்குப் பின்னால் நிராயுத பாணியான ஜஸ்வந்தசிம்மன், அவனுக்குப் பின்னால் உருவின கத்தியுடன் அமரன். இத்தகைய ஓர் ஊர்வலம் கோட்டைக்குள்ளிருந்த சிறைச்சாலையை நோக்கிக் கிளம்பியது.
வெகுதூரம் வாய் திறவாதிருந்த இளைய ராணி அமரன் போகும்போது ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள், “அமரா! அடுத்த தடவை நீ இந்தக கோட்டைக்குள் நுழைந்தால் உயிருடன் வெளியில் செல்லாதபடி பார்த்துக் கொள்கிறேன்” என்று.
அமரன் கோபம் அப்பொழுது சிறிது தணி திருந்தது. ஆகையால் சிறிது ஹாஸ்யமும் அவன் பேச்சில் கலந்தது. ‘சிறிய தாய் இவ்வளவு கருணை வைத்திருப்பதற்கு மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். நான் மறுதடவை வருவ திருக்கட்டும். இந்தத் தடவை உங்கள் பிள்ளை உயிருடன் கோட்டைக்கு திரும்ப வேண்டுமே, அதற்காகக் கடவுளைப் பிரார்த்தியுங்கள்” என்று சொல்லி விடை பெற்று கொண்டான் அமரன்.
இந்த சம்பவங்கள் நடந்த அரை ஜாமத்திற்குப் பிறகு மேவார் தலைநகருக்கு வெளியே ஹாராவளித் தொடரின் சாரலில் அண்ணனும் தம்பியும் பிரிந்தனர்.
“தம்பீ! அரண்மனைக்குச் சௌக்கியமாகத் திரும்பி போ. உன் மேல் எனக்குக் கோபமில்லை. ராஜபுதனத்தில் ஒரு ராஜபுத்திரன் செலுத்த வேண்டிய தர்மத்தைச் செலுத்தினேன். நீ போனவுடன் அம்பர் வீரர்களை சிறையிலிருந்து விடுவித்து விடு. இந்தா சாவி, முடியுமானால் ராஜ்ய ஆசையிலிருந்து தாயாரை திருப்பப் பார்” என்று அமரன் தம்பிக்குப் புத்தி சொன்னான்.
ஜஸ்வந்தசிம்மன் ஒரு கையை நீட்டிச் சாவியை வாங்கிக் கொண்டான். ஆனால், பதில் ஏதும் சொல்ல வில்லை. மௌனமாக நின்றான்.
அமரன் மேலும் பேச ஆரம்பித்தான்: “குடும்பச் சண்டையாலும், தாயாதிக் காய்ச்சலாலும், பெண்ணாசையாலும் ராஜபுதனம் க்ஷணசை அடைந்து விட்டது தம்பி! ராணி சம்யுக்தை காலத்திலிருந்து இன்றுவரை இதே கதைதான். இந்தப் பாரத நாட்டை ஆள வேண்டிய மேவார் ஏன் சிற்றரசாக இருக்கிறது! சுதந்திரக் கொடி ஏந்திய பிரதாபசிம்மன் ஏன் கானகத்தில் குடிசையில் மாண்டான். இந்த தேச மக்களின் அல்பத்தனம், சுயநலம், குடும்ப விரோதம் இவைதான் காரணம். இதையெல்லாம் தாயாருக்குச் சொல்லு மேவாருக்கு அதிர்ஷ்டமிருந்தால் அவள் காதில் ஏறட்டும் என்று சொல்லிவிட்டு, ரஜனியைத் தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு தானும் ஏறினான்.
ரகுவும் தயாரானான். இரு புரவிகளும் ஹாராவளி மலைத்தொடரில் பாய்ந்து சென்றன. அவை கண்ணுக்கு மறையும் வரையில் ஜஸ்வந்தசிம்மன் பார்த்துக் கொண்டு நின்றான்! கையிலிருந்த சாவியை ஒரு முறை பார்த்தான். “அம்மா கோபித்துக் கொள்வாள். போக வேண்டும்” என்று எண்ணியவண்ணம் பெருமூச்சு விட்டு நகரத்தை நோக்கித் திரும்பினான். அவன் என்ன செய்வான், பாவம்? அம்மா வளர்த்த பிள்ளை, தன் எண்ணங்கள் ஈடேற அவனைத் தன் மேற்பார்வை யாகிற நிழலிலே வளர்த்தாள் இளையராணி! நிழலடித்த செடியானான் ஜஸ்வந்தசிம்மன், அவன் உடலோ உள்ளமோ வளர்ச்சியடையவில்லை.
மலைப் பிராந்தியத்தின் கரடுமுரடான பாதைகளில் குதிரை தாவியும் இடறியும் நடந்து சென்றபோது ஆட்டத்தினால் ஏற்பட்ட தொடர்ச்சியான புருஷஸ்பர்சம் ரஜனியின் உடலில் சொல்லவொண்ணாக் கூச்சத்தை உண்டு பண்ணியது. அவ்வப்பொழுது குதிரை லகானைப் பிடித்து இழுப்பதால் அவள் மெல்லிய தேகத்தை அணைத்து அணைத்துப் பிடித்த அமரனின் நீண்ட கைகள் மட்டும் மைதீட்டிய கருவிழிகழுக்கு இலக்காயின், ரஜனி தனது நிலைமை பற்றி என்னென்னவோ யோசித்தாள். “இளைய ராணியின் தூண்டுகோலால் ஐஸ்வந்தசிம்மன் எனது அருகில் நெருங்கும் போதெல்லாம் அவனைத் துரும்பிலும் கேவலமாக நடத்தினேனே, எந்தத் துணிவைக் கொண்டு இவருடன் தனிமையில் வந்தேன்? அப்பா ஒப்புக்கொண்ட கல்யாணம், அத்தை முறையாக வேண்டிய கமலாதேவி சம்மதித்த சம்பந்தம் அது எனக்கு ஏன் பிடிக்கவில்லை? இவ்வளவு நெருக்கமாக இவருடன்… ஐயோ நினைக்கக்கூட வெட்கமாயிரும்கிறதே’ என்று பலவாறு யோசித்தாள்.
தன்னையே பல கேள்விகள் கேட்டுக் கொன்டாள். விடைகள் கோவையாக வரவில்லை. விடை கண்டுபிடிக்காத விந்தைதான்! இயற்கை சில பேரைப் பார்க்ததும் விரும்புகிறோம். சிலரைப் பார்த்ததும் வெறுக்கிறோம், மனிதனின் சின்னஞ்சிறு மூளையிலிருந்து இவற்றுக்கு விடை கிடைப்பதில்லை. ஆகவே ரஜனியும் காரணம் கண்டுபிடிக்க வெகுநேரம் தன் மனத்துடன் போராடிவிட்டுத் தலையைச் சிறிது நிமிர்த்தி, அஞ்சன விழிகளை எதிரேயிருந்த நிலப் பரப்பின்மீது ஓட்டினாள். சந்திரகிரியின் தடாகத்துக் கருகில் குதிரை வந்து விட்டதை உணர்ந்தாள்.
தலையைச் சிறிது திருப்பி, “சந்திரகிரி போலிருக்கிறதே” என்று அமரனைக் கேட்க இதழ்களைச் சிறிது அசக்கினாள். வாயை முழுதும் விட்டுக் கேட்க வெட்க மாயிருந்தபடியால், சொற்கள் குறைந்த தொனியில் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் வெளிவந்தன.