Avani Sundari Ch14 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
அவனி சுந்தரி – சாண்டில்யன்
அத்தியாயம் – 14 கைச் சிறை
Avani Sundari Ch14 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
அவனி சுந்தரியைப் புலவர் மாளிகையில் விட்டு அண்ணனிடம் பேசி, எப்படியாவது போரைத் தவிர்த்து விடலாம் என்று அரண்மனை வந்த மாவளத்தான், அண்ணனும் புலவர் கருத்தையே கொண்டிருப்பதைக் கண்டதும், வேறு வழியின்றிப் போருக்கு வேண்டிய ஆயத்தங்களை மறுநாள் முதலே செய்ய ஆரம்பித்தான். இருப்பினும், அந்த விஷயத்தில் அதிகத் துரிதத்தைக் காட்டாமலும், சிறிது அலட்சியமாகவே ஏற்பாடுகளைச் செய்யலானான். எப்படியும் இரண்டொரு நாட்களில் போரைத் தவிர்க் கக்கூடிய செய்தி ஏதாவது நெடுங்கிள்ளியிடம் இருந்து வரும் என்ற எதிர்பார்ப்பினால்.
ஆனால் இரண்டு நாட்கள் கழித்து வந்த செய்தி அவனைத் திகிலடையச் செய்தது. நெடுங்கிள்ளி கோழையாகையால், எப்படியும் போரைத் தவிர்க்கும் முறைகளைக் கையாண்டு சமாதானத்திற்கு வருவான் என்றும், உறையூர் சென்றதும் அமைச்சர்களாவது அவள் மனதைத் திருப்புவார்கள் என்றும் மாவளத்தான் நம்பிக்கை கொண்டிருந்தான். ஆனால் அந்த நம்பிக்கை எத்தனை அர்த்தமற்றது என்பது விளங்கியது மூன்றாம் நாள் காலையிலேயே. மூன்றாவது நாள் அரச காரியங்களைக் கவனிக்கவும், வழக்குகளைத் தீர்த்து நீதி வழங்கவும், நீதி மண்டபத்தில் நலங்கிள்ளி உட்கார்ந்திருந்த சமயம், நெடுங்கிள்ளியின் தூதன் ஒருவன் வந்து சேர்ந்து இருப்பதைக் காவலர் அறிவித்தனர்.
அரசனுக்கு சற்று எட்ட அமர்ந்திருந்த மாவளத்தான் சைகை காட்ட, வெளிச் சென்று தூதனை அழைத்து வந்த காவலர், அவனைச் சுதந்திரமாக விட்டதும், தூதன் இரைந்த தரலில் பேசலானான்.
“புகார் மன்னனே! இது எங்கள் மன்னர் நெடுங்கிள்ளி விடுவிக்கும் தூது. வீரர்களைக் கொண்டு அவனி சுந்தரியை விடுவிக்க வழியில்லாமல், நள்ளிரவில் திருடன் போல் நுழைந்து அவளைச் சிறை மீட்ட கோழையான உன்னை, எங்கள் மன்னர், வீரர்கள் திலகம், புகாரின் காவலர், மன்னிப்புக் கேட்கும்படியும், திருடிய பெண்ணைத் திரும்ப அனுப்பவும் ஆணையிடுகிறார். இல்லையேல், படைகளுடன் ஆவூரில் சந்திக்கும்படி அறைகூவுகிறார்” என்ற சொற்களைப் பயமின்றி உதிர்த்தான் தூதன்.
நலங்கிள்ளி மட்டும் சிறிது கண்காட்டியிருக்காவிட்டால், தாதனை அங்கேயே காவலர் வெட்டிப் போட்டிருப்பார்கள். ஆனால் அரசன் எச்சரிக்கைக் காரணமாக, வாட்களின் மேல் வைத்த கையை அகற்றினார்கள். அடுத்தபடி நலங்கிள்ளி மெல்லப் பதில் சொன்னான். “தூதனே! உன் பணியைத் திறம்படச் செய்தாய். உன் மன்னனிடம் சென்று இன்று சொற்களில் காட்டிய வீரத்தைச் செயலிலும் ஆவூரில் காட்டும்படி நான் கூறியதாகச் சொல்” என்று சர்வசாதாரணமாகக் கூறி, அவனைச் செல்லலாம் ரன்று கையைக் காட்டினான்.
தூதன் அகன்றதும், மாவளத்தான் தனது கண்களை அரசனை நோக்கித் திருப்பினான். நலங்கிள்ளியின் இதழ்களில் புன்முறுவல் இரும்பி நின்றது. “மாவளத்தான்! உன் சந்தேகத்துக்கு விடை நிடைத்துவிட்டது” என்று கூறினான் முறுவலின் ஊடே.
“எதைப் பற்றிச் சந்தேகம் அண்ணா?” மாவளத்தான் கள்வியில் வியப்பு ஒலித்தது
போரைப் பற்றி”
“நான் சந்தேகம் கொண்டதாக யார் சொன்னது?”
“நீ செய்யும் நிதான ஏற்பாடுகள்! “
இதைக் கேட்ட மாவளத்தான் பிரமித்துத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அரியணையில் இருந்து கொண்டே நலங்கிள்ளி சொன்னான் “தம்பி! எனக்கும் போரில் விருப்பமில்லை. ஆயினும், நம்மையும் மீறிய நிகழ்ச்சிகள் நம்மை ஆட்கொள்ளும் போது, கடமையைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று…
அந்த அறிவுரையைக் கேட்ட மாவளத்தான், அரச சபையில் இருந்து வெளியேறினான். அடுத்த இரண்டு நாட்களில் படைப் பிரிவுகளை வெகு துரிதமாகச் சன்னத்தம் செய்துவிட்டு, அண்ணன் ஆணையைப் பெற அவன் அந்தரங்க அறைக்குச் சென்றான். அண்ணனுடன் அங்கு புலவரும் அவனி சுந்தரியுங்கூட. இருப்பதைப் பார்த்ததும், சற்று தயங்கினான். அவன் தயக்கத்தைக் கண்ட புலவர் பெருமான், “மாவளத்தான் எதற்கும் தயங்கத் தேவையில்லை. இப்பொழுதே படையெடுப்புத் தாமதமாகிவிட்டது. ஆகவே உடனடியாகக் கிளம்பு. ஆவூர்க் கோட்டைக்குள் நெடுங்கிள்ளி உணவுப் பொருட்களை சேகரிப்பதற்குள், நீ கோட்டையை வளைக்காவிட்டால், அவனைப் பணிய வைப்பது கஷ்டம்”. என்று கூறினார்.
“ஆமாம், தம்பி! ஆவூர்க் கோட்டைச் சுவர்கள் பல மானவை. நமது பாட்டனார் கரிகாலரால் கட்டப்பட்ட திடமான கோட்டைகளில் அது ஒன்று. அதன் கதவுகளை உடைப்பதோ, அகழியைக் கடந்து சுவர்கள் மீது ஏறுவதோ, அத்தனை சுலபம் அல்ல. ஆகவே விரைந்து கோட்டையை வளைத்து விடு” என்று கூறினான், நலங்கிள்ளி.
இருவரையும் வணங்கி மாவளத்தான் புறப்பட முயன்ற சமயத்தில், அவனி சுந்தரி மெல்லக் கூறினாள் “எதற்கும் பூதலனையும் கூட அழைத்துச் செல்லுங்கள்” என்று.
மாவளத்தான் சரேலென அவளை நோக்கித் திரும்பினான் “எதற்குப் பூதலன்?” என்று வினவவும் செய்தான், தீ விழி விழித்து. அவன் பார்வை இத்தனைக்கும் நீ தானே காரணம் என்று குற்றஞ்சாட்டுவது போலிருந்தது.
அதை அவனி சுந்தரி கவனித்தாளானாலும், லட்சியம் செய்தாளில்லை. “கோட்டைகளின் பலவீனங்களைப் பூதலன் நன்றாக அறிந்தவன். தவிர உங்களைக் கண் இமையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பான்” என்றும் கூறினாள், கன்னரத்து இளவரசி
மாவளத்தான் விழிகளில் இருந்த சீற்றம் சிறிதும் தணியவில்லை. “பூதலன் உங்களைக் காத்த லட்சணத்தைக் கரிகாலன் சத்திரத்தில் நேரிடையாகக் கண்டேன். அத்தகைய பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை. தவிர கோட்டையைப் பற்றிச் சோழர் கன் அறியாததைக் கன்னரர் அறிந்திருக்க முடியாது” என்று பதில் கூறினான், சீற்றம் குரலிலும் ஒலிக்க.
அவனி சுந்தரி அதற்கு நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. “எங்களை நெடுங்கிள்ளி எப்படிக் கைது செய்தான் என்பதை நீங்கள் அறிந்து இருந்தால் இப்படிக் குற்றம்சாட்ட மாட்டீர்கள். தவிர நீங்கள் வராதிருந்தாலும் நாங்கள் இன்னும் இரண்டு நாளில் தப்பியிருப்போம். அந்த விவாதம் இப்பொழுது வேண்டாம். உங்கள் நன்மையையும் சோழ நாட்டு நன்மையையும் முன்னிட்டுச் சொல்கிறேன் அழைத்துச் செல்லுங்கள் பூதலனை” என் என்றாள், அவனி சுந்தரி திடமான குரலில்.
ஆனால் மாவளத்தான் அவளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் அண்ணனிடமும் புலவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான். அடுத்த இரண்டு நாழிகைகளுக்கெல்லாம் அரண்மனை வாசலில் முரசுகள் முழங்கின. புலவரும் நலங்கிள்ளியும் அவனி சுந்தரியும் வாயிலுக்குச் செல்ல, அங்குப் புரவி மீது பூர்ண கவசமணிந்து மாவளத்தான் அமர்ந்திருந்தான். நலங்கிள்ளி வெளியே வந்து அரண்மனைப் படிகளில் நின்றதும், தனது வாளை அவனை நோக்கி ஒருமுறை தாழ்த்தி மீண்டும் உயர்த்தினான். மறுபடியும் முரசுகள் முழங்கின. இம்முறை தாரைகளும் ஊதப்பட்டன. இளவரசன் புரவி ராஜ நடைபோட்டு நடந்து செல்ல, முதலில் புரவிப் படையும், அடுத்து யானைப் படையும், பிறகு தேர்களும் காலாட்படையும் அவனைத் தொடர்ந்தன. கடைசிக் காலாட்படை வரிசை அரண்மனையைக் கடக்கும் வரை, அங்கேயே நின்றிருந்த நலங்கிள்ளி, கடைசியாகப் புலவருடனும் அவனி சுந்தரியுடனும் உள்ளே சென்றான்.
அன்று முழுவதும் அவன் மனதில் நிம்மதி இல்லை. தனது அறையில் ஏதேதோ நினைத்த வண்ணம் உலாவிக் கொண்டிருந்தான். உணவும் அவனுக்கு அதிகமாக உட்செல்லவில்லை. இரவு வந்ததும் உறங்க முயன்றும் உறக்கமும் வராததால், நந்த வனத்தை நோக்கி நடந்தான், அன்றும் பால் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. நந்தவனத்து மயில்களும் குறுக்கே நடை போட்டன. ஆனால், இந்த இன்பச் சூழ்நிலையில் மனம் சிறிதும் செல்லாது போகவே, மெள்ளப் பளிங்குச் சுனையை நோக்கி நடந்தான். அதன் படிகளில் உட்கார்ந்து சிந்தனையில் இறங்கினான். அதே பளிங்குப்படியில் சில நாட்கள் முன்பு தன்னுடன் அவனி சுந்தரி நடத்திய நாடகத்தை எண்ணிப் பார்த்தான். “அந்த நாடகத்தால் விளைந்த போர்தானே இது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். “சேசே! என்ன தவறு? என்னைக் காக்கத்தானே அவனி சுந்தரி அந்த நாடகம் ஆடினாள்” என்று தன்னைத் திருத்தியும் கொண்டான். “பெண்கள் இல்லாவிட்டால் பூசலில்லை” என்று சற்று உரக்கவும் சொன்னான். அதைத் தொடர்ந்து தனது பின்னால் கேட்ட ஒரு நகைப்பொலியின் விளைவாகத் திரும்பிய நலங்கிள்ளி, தனக்கு வெகு அருகாமையில் அவனி சுந்தரி நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தான்.
பார்த்ததும், குழப்பமடைந்து, “நீ புலவர் மாளிகை செல்ல ‘வில்லை?” என்று வினவினான் சொற்கள் தடுமாற.
“இல்லை” என்றாள் அவனி சுந்தரி, இம்முறை நகைக்கவில்லை அவள்; புன்னகை பூத்தாள்.
“போனதை நான் பார்த்தேனே.”
“பார்த்தீர்கள்”
“அப்படியானால்…?”
*திரும்பியதைப் பார்க்கவில்லை?”
“எப்பொழுது திரும்பினாய்?”
“திரும்பிக் கொண்டே இருக்கிறேன்?”
“இன்னும் அரண்மனை செல்லவில்லையா?
“இல்லை”
“இங்குதான் நான் இருப்பேன் என்பது உனக்குத் தெரியுமா?
“தெரியாமலா வந்தேன்?”
“எப்படித் தெரியும்?”
“மனதுக்கு அமைதி அளிக்கும் இடம் இது. உங்கள் மனதுக்குத் தற்சமயம் அமைதி தேவை. ஆகையால் வேறு எங்கு போவீர்,
இதைக் கேட்ட பின்பும், அவளுக்குப் பதில் சொல்லவில்லை நலங்கிள்ளி. திரும்பி பார்த்தவன் பார்த்தபடி மலைத்து விட்டான் பல விநாடிகள். அவள் மெல்லக் கேட்டாள். “நான் போகட்டுமா?” என்று.
“எங்கே?” சினத்துடன் வந்தது நலங்கிள்ளியின் கேள்வி.
அவன் சினம் அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியைத் தந்தாலும், அவள் அதை வெளிக்காட்டவில்லை. “ஏன் என் அறைக்குத்தான்” என்றாள் அவள், எந்த உணர்ச்சியையும் புலப்படுத்தாத குரலில்.
நலங்கிள்ளியின் சினம் அப்பொழுதும் குறைந்தபாடில்லை. “உன் அறை என்று ஒன்று அரண்மனையில் இருக்கிறதா?” என்று வினவினான்.
“இருக்கிறது. நீங்கள் என்னை சிறையில் வைத்த அறை” என்று அவள் நகைத்தாள்.
நலங்கிள்ளி அவளைக் கூர்ந்து நோக்கினான். பிறகு கோபம் தலைக்கேறியதால், அவள் கையைப் பிடித்து இழுத்து தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான். அவன் கைகள் இரண்டும் அவளைச் சற்று முரட்டுத்தனமாக ஒட்டின. அவள் நகைத்தாள் மீண்டும்.
“இம்முறை எதற்காக நகைக்கிறாய்?” என்று வினவினான் நலங்கிள்ளி.
“சிறை இடம் மாறிவிட்டது” என்றாள் அவள்.
“எப்படி?”
“அறைச் சிறைக்குப் போகப் பார்த்தேன்; அதற்குப் பதில் கைச் சிறையில் இருக்கறேன்,”
“கைச் சிறையா?”
“ஆம். உங்கள் கைகள் இட்டிருக்கும் சிறை,” இம்முறை மிக மயக்கமாக நகைத்தாள் அவள். நலங்கிள்ளி சுய கட்டுப்பாட்டை பண்பாட்டை, அனைத்தையும் அறவே மறந்தான். அவளை மிக முரட்டுத்தனமாக அணைத்துக் கொண்டான்.
அவள், அவன் கைகள் இட்ட சிறையில் கிடந்தாள் சம்மதத்துடன். “இன்னும் பதினாறு நாட்கள் முடியவில்லையே?” என்று இன்பமாக முணுமுணுத்தாள்.
நலங்கிள்ளி சொன்னான், அவள் காதுக்கருகில், “கணக்கை மறந்துவிட்டேன்” என்று.