Alai Arasi Ch15 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
Alai Arasi Ch15 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அடர்த்தியான மலைக்காட்டுக்குள் இருந்த மர்மக் குகையும், குகைக்குள் பாதாளத்தை நோக்கி ஓடியபடிகளும், படிகளின் கீழே இருந்த சமதரையும், மகாசக்தி சிலையும், மெல்லிய திரை மறைத்திருந்த அறையும் எல்லாமே பிரமை தட்டும் திகைப்பைத் தரும் சூழ்நிலையை அளித்திருந்தாலும், வைரம் பாய்ந்த நெஞ்சை படைத்த இளவழுதி எதையும் லக்ஷியம் செய்யாமல் அறைக்குள் நடந்த நிகழ்ச்சிகளை திரைக்கு வெளியிலிருந்தே கவனித்துக் கொண்டிருந்தான். திரையும் மிக மெல்லியதாயிருந்ததால் உள்ளே நடந்த நிகழ்ச்சிகளைக் கவனிப்பதில் எந்தவித தடங்கலுமில்லாததால் திரைக்கு ஒரு புறத்தில் மறைவாக நின்றே அறை நாடகத்தை இளவழுதி கவனிக்கலானான். கேரள பெரிய மந்திரவாதி தமது மெல்லிய நீண்ட பிரம்பை நீட்டிய கட்டிலில் கிடந்த அலை அரசி விழித்துக் கொண்டு கட்டிலின் எழுந்து நின்று, கால்மாட்டை நோக்கி, அங்கிருந்த இரட்டையை இரட்டையென்று உணராததால் ‘என் காலடி இத்தனைப் பெரிய கண்ணாடியை யார் வைத்தது?’ என் வினவிய போது அவள் மயக்கம் தீரவில்லையென்பதைப் மயக்க நிலையிலேயே பேசுகிறாளென்பதையும் புரிந்து கொண் இளவழுதி, அறைக்குள் செல்ல ஒரு அடி எடுத்து வைக்க சமயத்தில் பெரிய மந்திரவாதியின் குரல் மீண்டும் ஒலிக்கவே முன்வைத்த காலை பின்வைத்து நிதானித்தான் இளவழுதி,
“அரசி! உன் காலடியில் கண்ணாடி இல்லை . உற்றுப் பார்” என்றார் பெரிய மந்திரவாதி.
“என் உருவம் தெரிகிறதே. கண்ணாடியில்லாமல் எப்படித் தெரியும்?” என்று கூறிய அலை அரசி தனது கண்களை பெரிய மந்திரவாதி மீது திருப்பினாள்.
அந்தக் கண்களைப் பார்த்த இளவழுதியின் மனம் பகீரென்றது. கண்களில் உயிரையே காணோம். ஏதோ பதுமையில் பாதிக்கப்பட்ட கண்ணாடிகளைப் போல் கண்கள் தெரிந்தன.
மந்திரவாதி மீண்டும் சொன்னார், “அரசி என்னைப் பார்க்காதே, உன் சகோதரியைப் பார். உன் காலடியில் நிற்கிறாள்.”
அரசி கண்களைத் திருப்பாமலே “எனக்கு எது சகோதரி?” என்று கேட்டாள்,
காலடியில் பார், இருக்கிறாள்” என்றார் பெரிய மந்திரவாதி.
திரும்பி காலடியை நோக்கினாள் அரசி. அப்பொழுதும் அந்த இன்னொரு அரசி பதுமைபோல் நின்றிருந்தாள். அப்பொழுது அவள் அந்த இரட்டை, மெதுவாகப் பேச முற்பட்டு “சகோதரி! வா இப்படி” என்று கூறித் தனது கைகளை நீட்டினாள்.
அரசி இரண்டடி நடந்து நின்றாள். “நீ எப்படி எனக்கு சகோதரி?” என்று கேட்டாள்.
“உடன் பிறந்ததால்” சுருக்கமாக இருந்தது பதில்.
“எப்பொழுது பிறந்தாய்?” என்று அரசி வினவினாள்.
பயாருக்குத் தெரியும்? பிறப்பை யாரும் அறிவதில்லை. ஏன் பிறக்கிறோம்? எதற்கு வந்தோம்? என்பது எந்த மனிதனுக்கும் தெரியாது. போகும்போதும் எங்கு போகிறோமென்பதும் தெரியாது. இந்த மர்மங்கள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை” என்றாள் அரசியின் இரட்டை.
அரசி இருமுறை தலையை ஆட்டிவிட்டு மெதுவாக கட்டிலின் முனைக்குச் செல்லவே அந்த இரட்டை அப்படியே அவளைக் கையில் ஏந்தி கீழே இறக்கினாள்.
கட்டிலிருந்த இடத்தின் மறுகோடியில் நின்ற இருசகோதரிகளும் ஒருவரையொருவர் நீண்டநேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். பிறகு அந்த இரட்டைப் பெண் அரசியை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள். அரசியின் முதுகைத் தடவிக் கொடுத்தாள். ”சகோதரி! சகோதரி!” என்று இருமுறை அழைத்தாள். அந்த சமயத்தில் பெரிய மந்திரவாதி அவர்களை அணுகி தனது மந்திரப் பிரம்பால் அரசியின் தலையை இருமுறை தட்டவே அரசியின் உடல் ஒருமுறை சிலிர்த்தது பிறகு நிதானத்துக்கு வந்தது. அரசி சற்று எட்ட நின்று சகோதரியை நோக்கினாள். இம்முறை அவள் பார்வையில் பழைய தெளிவும் தீட்சண்யமும் இருந்தன. அவள் பேச்சிலும் அந்தத் தெளிவு பரிமளித்தது. ”ஆம், நீ என் சகோதரியாகத் தான் இருக்க வேண்டும். ஓரிரு முறை நமது குருநாதர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். எப்படி இங்கு வந்தாய்? எதற்காக வந்தாய் இத்தனை நாள் எங்கிருந்தாய்?” என்று கேள்விகளை வீசினாள் அலை அரசி.
“சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். உன்னை இங்கு அனுப்பிய குருநாதர்தான் என்னையும் அனுப்பினார். நீ எதற்காக வந்தாயோ அதற்காகத்தான் நானும் வந்தேன்” என்றாள் இரட்டை,
“உன் பெயர்?”
“கடலரசி”
“யார் வைத்தது பெயரை?”
“உனக்குப் பெயர் வைத்தவர்தான். கடலும் அலையும் ஒன்று என்பதற்காக இப்படி இருவருக்கும் பெயர் வைத்தார் காரணமில்லாமல் மதகுரு எதையும் செய்ய மாட்டார்” இதை கடலரசி மிகத் தெளிவாகச் சொன்னாள். இம்முறை அவள் பழைய தெரியாத பாஷையில் பேசவில்லை. தெள்ளுத்தமிழிலேயே பேசினாள்.
அத்துடன் அவர்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரிய மந்திரவாதி, ”பெண்களே! நீங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டதால் இனி அடுத்து நடக்க வேண்டியதைக் கவனிப்போம் இப்படி வாருங்கள்’’ என்று அவர்களை அழைத்துக் கொண்டு திரை நீக்கி வெளியே வந்து மகா சக்தியின் சிலைக்கு அருகில் அவர்கள் இருவரையும் உட்கார வைத்தார். “இனி உங்கள் மத குருவை அழைக்கிறேன். கண்களைப் புருவத்தின் மத்திக்குக் கொண்டு வாருங்கள்” என்று உத்தரவிட இரு பெண்களும் பருவ மத்தியை நோக்க பிரம்பை இருமுறை அவர்கள் தலையில் தட்டி ‘உங்கள் மதகுருவை அழையுங்கள்” என்றார். சிறிதுநேரம் இருவரும் பூர்ணமான மோனநிலையில் உட்காந்திருந்தார்கள். பிறகு மெதுவாக கடலரசி ”குருவே! வாருங்கள். உங்கள் திருவடி பலம்” என்று வண்டின் குரலைப் போன்ற சிங்காரக் குரலில் பேசினாள். அவள் குரல் மெல்லியதாக அந்தப் பாதாள சமதரை முழுவதுமே எதிரொலித்தது. அவள் அழைத்ததும் ஏதேதோ விபரீதமான வாத்ய ஒலிகள் எங்கிருந்தோ மெதுவாகக் கேட்டன. பிறகு குகையின் மேலேயிருந்து ஒரு பெரிய ஒளியொன்று சமதரையில் இறங்கியது. அந்த ஒலியிலிருந்து ஒலியொன்று பிறந்தது. “அரசிகளே! நீங்கள் தகுந்த இடத்தில் சந்தித்திருக்கிறீர்கள். எதற்காக என்னை அழைத்தீர்கள்?” என்ற கேள்வி மெதுவாக குகையில் பரவியது.
அடுத்து நாங்கள் செய்ய வேண்டியதைக் கேட்கவே அழைத்தோம். உத்தரவு என்ன?” என்று அலை அரசி கேட்டாள்.
அரசி! எனது நண்பர் பெரிய மந்திரவாதியின் சொற்படி நடக்க ஏற்கனவே உத்தரவிட்டேனே, நினைப்பில்லையா?” என்று ஒளியிருந்த இடத்தில் ஒலி எழுந்தது.
அவர்தான் உங்களுடன் பேச உத்தரவிட்டார்” என்றாள் கடலரசி.
“சேரமன்னர் என்ன சொன்னார்?” என்று மதகுரு வினவினார்.
“ஆறுநாள் கழித்துப் புறப்படலாம் என்று சொன்னார். என்றாள் அலை அரசி.
‘’அரசர் கட்டளைப்படி நட அவர் எது சொன்னாலும் தவறு இருக்காது” என்றார் மதகுரு.
உங்கள் முதல் கட்டளைப்படி நான் முன்னமேயே இங்கிருந்து, கிளம்பியிருக்க வேண்டும்?” என்றாள் அலை அரசி.
“எந்த ஒரு கட்டளையை நிறைவேற்றுவதும் சூழ்நிலையைப் பொறுத்தது. அதற்குத்தான் எனது நண்பரை கலந்து கொள்ளச் சொன்னேன். கேரள மந்திரவாதி உங்கள் இருவருக்குமே வழிகாட்டுவார்’ என்ற மதகுரு “நண்பரே” என்று கேரள பெரிய மந்திரவாதியை அழைத்தார். பெரிய மந்திரவாதி தாம் இருந்த இடத்தைவிட்டு முதலில் ஒளி விழுந்த இடத்துக்கு வந்து நின்று கொண்டு “நண்பரே! நான் செய்ய வேண்டியது என்ன?’’ என்று கேட்டார்.
“இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இரு அரசிகளும் எங்கள் நாட்டுக்கு வரவேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து விடுங்கள்’’ என்றார் மதகுரு,
“சேர மன்னனிடம் சொல்கிறேன்” என்றார் பெரிய மந்திரவாதி,
“சொன்னால் போதாது. வற்புறுத்தும். இங்கு நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது” என்றார் மதகுரு.
“போர் மூண்டுவிட்டதா?” பெரிய மந்திரவாதி கேட்டார்.
“நிகழும் தருவாயிலிருக்கிறது” என்ற மதகுரு சற்று பெருமூச்சு விட்ட சப்தம் குகையில் தெளிவாகக் கேட்டது. அதை அடுத்து மீண்டும் மதகுரு பேசினார். “என் கட்சிக்குத் தலைவன் வேண்டும். காலதாமதம் கூடாது” என்று.
“தலைவனா?” பெரிய மந்திரவாதி கேட்டார் வியப்புடன்.
‘’ஆம்’’ மதகுருவின் குரல் நிச்சயத்துடன் ஒலித்தது.
‘’தலைவனை எங்கிருந்து சம்பாதிப்பது?” என்று பெரிய மந்திரவாதி கேட்டார்.
‘’நீ சம்பாதிக்க வேண்டாம். நான் சம்பாதித்து விட்டேன் “
‘’யார் அது?’’
மெதுவான நகைப்பொலியொன்று குகைக்குள் கேட்டது. அதை அடுத்து மதகுருவின் குரல் ஒலித்தது. “உமது அருகிலேயே இருக்கிறான் இளவழுதி மறைந்து நிற்காதே வெளியே வா!
என்று ஆணையிட்டது. திகைத்தது இளவழுதி மட்டுமல்ல, குகையிலிருந்த அனைவருமே திகைத்தார்கள். திகைப்பை அதிகப்படுத்த குகையின் கதவு வேறு திறந்து மூன்றாவது உருவமொன்றும் உள்ளே நுழைந்து குகையின் சமதரை நிகழ்ச்சிகளைக் கவனிக்கலாயிற்று.