Alai Arasi Ch46 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 46 வடபுல யாத்திரை
Alai Arasi Ch46 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
விஜயதசமி நாளன்று நல்ல முகூர்த்தத்தில் மன்னர் வடபுல யாத்திரை போவதென்று முடிவாயிற்று மன்னரோடு புறப்பட இருந்த படை வீரர்களின் எண்ணிக்கை மட்டும் பதினையாயிரம் படைகளோடு ஏவலாளர்கள், யானைகள், புரவிகள், எருதுகள் கறவைப் பசுக்கள் முதலியவற்றோடு, ஆயுதங்களைத் தீட்டிக் கொடுப்போரும், வைத்தியர்களும், போர்ப் பிரார்த்தனை செய்யும் கடகாச்சாரியார்களும், சமையற்காரர்களும், பல தொழிற் சம்பந்தப்பட்டவர்களும் சேர்ந்து கூட்டம் கடல்போல் பரவியது.
வடபுல யாத்திரை கிளம்புவதற்கு முன்பாகவே வீரர்கள் பலமாதகாலமாக தங்கள் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள், மன்னரின் சிறந்த தளபதிகள், பூமி நாட்டரசன் முதலானோரும் சேர்ந்து அவர்களுக்கு பலவகையில் பயிற்சிகளைக் கொடுத்திருந்தனர். பயிற்சி இரவும் பகலுமாக நடந்தது. மன்னர் புறப்படும் முன் தனது இஷ்ட தெய்வங்களைப் பூஜித்தார். பட்டத்தரசியைப் பார்த்துவரப்போனார். அரசி ”மன்னருக்கு மங்களம் உண்டாகட்டும்” என்று வேண்டி வெற்றி மாலை சூட்டியதுடன் பட்டத்துக் கத்தியையும் கொடுத்தாள். மன்னன், தான் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் உடனுக்குடன் அரண்மனைக்குத் தகவல் அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.
அங்கிருந்து தனது அமைச்சரிடம் சென்றார். அவரிடமும் ஆசி பெற்றார். “வெற்றி உண்டாகட்டும்” என்று அவர் ஆசீர்வதித்தார். அவரிடம் அரண்மனையைக் காக்கும் பொறுப்பை ஒப்படைத்து, அன்புடன் அமைச்சரைக் கட்டித்தழுவினார். கடைசியில் படைகள் தயாராக நின்று கொண்டிருந்த இடத்துக்கு தனது பட்டத்து யானைமீது ஏறிச் சென்றார். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரவியிருந்த அந்தப் பெரும் படைக் கூட்டத்தைக் கண்டு மன்னர் நெடுஞ்சேரலாதன் முகத்தில் மகிழ்ச்சிப் பெருக்கு காணப்பட்டது.
சுபலட்சணங்களுடன் மன்னரின் பட்டத்துப் புரவியை பார்த்து விட்டாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்து அதன் நெற்றிப் பொட்டில் யாகப்புரவி என்ற பெயரினைப் பொறித்த பொற்பட்டயத்தைக் கட்டினர். மன்னரும் படைகளும் புறப்படத்தயராயிருந்த நிலையில் காத்திருப்பது போன்ற பாவனை அங்கு காணப்பட்டது. ஆம்; இளவழுதிக்காகத்தான் மன்னரும் மற்றவர்களும் காத்திருந்தார்கள். இளவழுதி மதகுரு சொன்னபடி செய்யக்கூடியவராயிற்றே; இன்னும் இளவழுதியைக் காணவில்லையே?’ என்று மன்னர் நினைத்த நேரத்தில் வீரன் ஒருவன் புரவி மீது வந்திறங்கினான்.
அவன் மன்னர் முன் மண்டியிட்டு, “இளவழுதியும் அலை அரசியும் துறைமுகம் வந்து சேர்ந்தார்கள், இன்னும் சற்று நேரத்தில் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வதாகச் சொன்னார்” என்றுகூறி வணங்கினான்.
அதிகாலை நேரத்தில் எழுப்பி காலை உணவாக என்ன வேண்டுமெனக் கேட்டதும் அவளை அருகே இழுத்து கழுத்தை வளைத்து அவளது கன்னத்தில், கழுத்தில் தனது இதழ்களைப் பதித்துப் புதைத்தான். இதைவிட வேறு என்ன உணவு வேண்டும் என்று கேட்கவும் செய்தான். அரசியும் அந்த காலை நேரத்தில் ஏற்பட்ட இன்பலாகிரியில் திளைத்து தன்னை மறந்தாள்; இந்த உலகை மறந்தாள்.
“இதுவே சொர்க்கம்” என்று சொல்லவும் செய்தாள்.
“சொர்க்கம் இதுவென்றால் இந்த மரக்கலம், இந்த பஞ்சணை இதுபோன்று சொர்க்கத்தில் கிடக்குமா?” என்றாள் அரசி.
“அரசி, எங்களது சங்க இலக்கியங்களில் சொர்க்கம் பெண்களிடம் இருக்கிறது என்று பாடல் உண்டு. அவளது இதழ்களில், கழுத்தில், இளமார்பில்கூட சொர்க்கம் உண்டு. ஏன் – பெண்களின் சிற்றிடையில், அப்புறம்… அப்புறம்… பெண்ணே , ஒரு சொர்க்கம்தானே… பஞ்சணையில் கிடந்தால் என்ன? மரக்கலத்தில் கிடந்தால் என்ன? இல்லை, மண்ணில் கிடந்தால்தான் என்ன?’’ என்று அவளது கழுத்தில், மார்பில், சிற்றிடையில் இதழ்களை மீண்டும் பதித்த இளவழுதி என்ன காரணத்தினாலே அவளை அணைத்திருந்த கைகளை நீக்கி, விலகிப் படுக்க மரக்கல அறையின் விட்டத்தைப் பார்த்தான்,
இளவழுதியை நோக்கி அரசி, “என்ன சிந்தனை வயப்பட்டு விட்டீர்கள்?” என்றாள் குரலில் கேலி தொனிக்க,
“சிந்தனை செய்யக் கூடாதா?” அவன் குரல் வரண்டு போயிருந்தது.
‘’சிந்தனை செய்யும் சமயமா இது?” என்று வினவினாள் அவனது சிந்தனைக்குக் காரணம் புரியாத அலை அரசி, அவன் முகத்திலும் சிந்தனை ரேகைகள் படியலாயிற்று.
“உங்களது நினைவு வேறு எங்கோ சிறகடித்துச் சென்று விட்டது. நான் போகிறேன்” என்று எழுந்தாள்.
“ஆமாம் அரசி! என் சிந்தனை யாவும் தொண்டிக்கரையில் இறங்கியதும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கான திட்டத்தில் லயித்து விட்டது.”
“என்ன திட்டம் போட்டிருக்கிறீர்கள்?”
“என் தாத்தா பெருவழுதியைச் சந்தித்து அவரிடம் ஆசி வாங்க வேண்டும். பிறகு உன்னை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்வதா? அல்லது அரண்மனையிலுள்ள பெண்களிடம் விட்டுச் செல்வதா என்பதில் சிந்தனை தாத்தாவிடம் விட்டுச் செல்லலாம் என்றால் நான் முன்பு மாதிரி வெறும் கடலோடி அல்ல. இப்போது நான் சேரநாட்டுத் தளபதி. அதனால் உன்னை அரண்மனையில் அரசியின் பாதுகாப்பில்தான் விட்டுச்செல்ல வேண்டியிருக்கும். நீ அவர்களுடன் நைச்சியமாகப் பழக வேண்டும். அதுபோலவே
அவர்களும் உன்னிடம் அன்பு செலுத்த வேண்டுமே என்றெல்லாம் கவலை வந்து விட்டது. உனது பழக்க வழக்கங்கள் வேறு எங்களது பெண்டிரின் பழக்க வழக்கங்கள் வேறு. இதையெல்லாம் நினைத்தேன். இருந்தாலும் உன் நுண்ணறிவால் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வாய் என்னும் முடிவுக்கு வந்தேன். முற்றிலும் பிரம்மச்சாரியாக இருந்துவிட்டால் தொல்லையில்லை. இப்போது நீ வேறு என்னிடம் சேர்ந்து கொண்டு விட்டாயே, கவலைப்படாமல் இருக்க முடியுமா?” என்று கேலியுடன் நகைத்தான் இளவழுதி,
பெரிதும் குழப்பத்திற்கு ஆளான அலை அரசி அவன் கைகளுடன் தன் கைகளைப் பிணைத்துக் கொண்டவாறே ‘’சேரநாட்டு தளபதியாருக்கு களங்கம் ஏற்படும்படி இந்த அலை அரசி நடந்து கொண்டுவிட மாட்டாள் என்பதற்கு உறுதியளிக்கிறேன்; போதுமா?” என்று குனிந்து அவனது நெற்றிப் பொட்டில் ஒரு முத்தமிட்டாள்.
இளவழுதி படுக்கையைவிட்டு எழுந்து மரக்கலத்தளத்துக்கு வந்தான், சூரியன் உச்சியில் ஏறியிருந்தான். இதழமுதம் மட்டுமே பசியை அடக்கிவிடும் என்று இன்பலாகிரியில் அவன் கூறியது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தான். அவனது எண்ணத்தைக் குறிப்பால் உணர்ந்த அலை அரசி, கடல் அரசி தயாரித்து வைத்திருந்த உணவை அவனுக்கு அளித்தாள். அவளுக்கும் அதே ஆசைதானே!
உண்டு முடிந்து மரக்கலத்தளத்தின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு எதிரே பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கரும்பச்யைாக நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலை. கடற்கரையில் அவனது வருகைக்காகக் காத்திருந்த சிறு கூட்டம் கரும்புள்ளியாய் தோன்றி, மெள்ள மெள்ள பெரிதாகி மனித உருவங்கள் தெரியத் தலைப்பட்டன.
இளவழுதியின் தாத்தா பெருவழுதியும் அந்தக் கூட்டத்தில் இருந்தது கண்டு அவன் ஆச்சரியமுற்றான். சொந்த நாட்டு பூமியில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம் என்றதுமே இளவழுதிக்கு உற்சாகம் கரை புரண்டோடியது. வாய் மனோவேகம் என்பதையெல்லாம் கடந்து தனது தாத்தாவிடம் கையைப்பற்றி அணைத்துக்கொள்ள ஆவலுற்றான்,
கரையில் இறங்கி இளவழுதி வர, அவனது இரு பக்கய்ஹிலுள்ள அலை அரசியும், கடல் அரசியும் வர, பெருவழுதி எதிர்கொண்டழைத்தான். வந்த சுருக்கிலேயே அங்கிருந்த காவலனிடம் மன்னருக்கு செய்தி சொல்லி அனுப்பிவிட்டேன். தாத்தாவிடம் குசலம் விசாரித்தான்.
பெருவழுதியிடம் அலை அரசி, கடல் அரசி இருவரையும் ஒப்படைத்து, “நான் திரும்பி வரும்வரை இவர்கள் இருவரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு” என்று கூறிவிட்டு மன்னரைக் காணப் புரவியில் ஏறிய இளவழுதியை நோக்கி மந்திரி பிரதானிகள் வருவதைக் கண்டு தரையில் குதித்தான்.
“உங்கள் எல்லோரிடமும் வாழ்த்துப்பெற்றுச் செல்கிறேன் என்று குனிந்து வணங்கினான்.
அவர்களும் கையை உயரே தூக்கி “மங்களம் உண்டாகட்டு என்றார்கள்.
“மன்னர் உனக்காகவே காத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் களப்பலி கொடுக்கவில்லை. நீ உடனே செல்” என்று துரிதப்படுத்தியதுடன் அவர்களும் உடன் வரவும் செய்தார்கள்
எல்லோருமாக போர் வீரர்கள் சூழ்ந்திருந்த திடலுக்கு வந்தபோது மன்னர் தனது தலையை அசைத்து இளவழுதியின் வருகையை ஆமோதித்தார். இளவழுதியைக் கண்டதும் வீரர்கள் மட்டுமின்றி, முன்னர் வரவழைக்கப்பட்ட அரபுப் புரவிகளும் தங்களது கனைப்பின் மூலம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.
இளவழுதி தனது புரவியிலிருந்து இறங்கி இதர புரவிகள் பக்கம் சென்று அவைகளைத் தடவிக் கொடுத்தான். சில புரவிகளின் நெற்றியில் கன்னத்தைப் பதித்து தன் அன்பை வெளிப்படுத்தவும் செய்தான்.
மன்னர் நெடுஞ்சேரலாதன், மந்திரிகள், அரண்மனைப் பெண்டிர், அலை அரசி, பெருவழுதி யாவரும் இதைக்கண்டு மெய்சிலிர்த்த சமயத்தில், நடக்கக்கூடாதது ஒன்று நிகழ்ந்தது! மன்னர் இந்தச் செயலை அறவே வெறுத்தொதுக்கிய போதிலும் திடீரென நடந்து விட்டது அந்த நிகழ்ச்சி!