Alai Arasi Ch49 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
அலை அரசி – சாண்டில்யன்
அத்தியாயம் – 49 ஆண் வேடத்தில் சாதனை
Alai Arasi Ch49 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
கோட்டை மேலிருந்து பொழியப்பட்ட விஷ அம்புகள் அனைத்தும் பலனின்றி யானைகளின் தந்ததில் பிணைக்கப்பட்டிருந்த பலகைகளால் தடுக்கப்பட்டு விட்டதால் இளவழுதியும், அவனது பிரிவு வீரர்களும் கோட்டையின் சமீபம் நெருங்கினார்கள். விஷ அம்பினால் தாக்கப்பட்ட ஒருசில புரவிகள் முக்கி முனகி முன்னேறின. வீரர்கள் அந்தப் புரவியை அப்படியே விட்டுவிட்டு காலாட்படைகளோடு சேர்ந்து கொண்டு, ஈட்டி அம்பு போன்றவற்றால் கோட்டையைக் காத்து நின்ற வீரர்கள் மீது வீசினார்கள். யானைப்படை உக்கிரம் கொண்டு கோட்டையை நோக்கி வெகு வேகமாக முன்னேறியது. காவலுக்கு நின்ற வீரர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்ததால் அவர்கள் திகைத்து நின்ற நேரத்தில் யானைகள் கோட்டைக் கதவை பலம் கொண்ட மட்டும் முட்டித் தாக்கின.
கோட்டையைக் காத்து நின்ற வீரர்களும் செயலற்றுப் போனார்கள். சில வீரர்கள் சேர வீரர்களுடன் உக்கிரத்துடன் மோதினர். வாட்களின் மோதலும், ஈட்டிகளோடு ஈட்டிகள் உராய்தலும், தடுக்கப்பட்டும் எதிரிகளால் தட்டிவிடப்படும் வீழ்ந்த வாட்கள், ஈட்டிகள் இவற்றால் ஏற்பட்ட ஒலிகளும் அந்தக் கோட்டைப் பகுதியை நிகரற்ற போர்க்களமாகச் செய்தது.
கலிங்கப்படை பெரிதாயினும் எதிர்பாராமல், பயிற்சி ஏதுமில்லாமல், வழி நடத்தும் தளபதிகள் இல்லாமல் போனதாலும், நாலாப்பக்கங்களிலும் திடீர் திடீரென வந்த பலவித தாக்குதல்களினாலும் சிறிது சளைக்கவே செய்தது. அந்தச் சமயத்தில் இளவழுதி கோட்டைச் சுவரின் மீது ஏறினான். அவனைத் தொடர்ந்து வீரர்கள் பலரும் ஏறி மதிலின் தளத்தில் நின்ற வீரர்களை வெட்டி வீழ்த்தினர். இளவழுதி தனது வியூகத்தை உடனுக்குடன் மாற்றியதால் கலிங்க வீரர்கள் போராடும்
உணர்வினை அவ்வப்போது இழந்தனர். திக்கு முக்காடினர். போர் துவங்கி பல நாழிகைள் ஓடிவிட்டாலும் வெற்றி தோல்வி யார் பக்கம் என்பது திட்டமாகத் தெரியவில்லை . ஒருபுறம் தான் மண்ணையும் மன்னனையும் காப்பாற்றத் துடிக்கும் கலிங்கத்தின் மிகப்பெரிய சைன்யம், மறுபுறம் தமிழர் வீரத்தை நிலைநாட்டத் துடிக்கும் சேரர் படை ஆகவே சேதம் என்பது இருபக்கமும் அதிகமாகவே இருந்தது.
உச்சி தாண்டி ஆறு நாழிகைகள் கடந்துவிட்ட சமயத்தில் வஜ்ரஹஸ்தன் தனது பெண்டு பிள்ளைகளுடன் ரகசிய வழியில் தப்பிக்க முயல்கிறான் என்ற தகவல் இளவழுதிக்கு வந்தது. இந்தச் செய்தி கலிங்க வீரர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவவே அவர்கள் முற்றிலுமாகச் செயலிழந்து நின்றார்கள்.
இடது, வலது புறங்களில் போரிட்ட தமிழர்களும் எதிரிப்படைகளைக் கொன்று குவித்து முன்னேறி வந்து இளவழுதியுடன் சேர்ந்து கொண்டார்கள். அவர்களின் முகத்தில் வெற்றியின் அறிகுறி. அவர்கள் ஏக்காலத்தில் வஜ்ரஹஸ்தனைத் தேடிச் சென்றபோது அவனைச் சபையில் காணவில்லை. அந்தப்புரத்தை அடைந்தபோது அங்கே தாதிமார்கள், சில வேற்று நாட்டு அடிமைப் பெண்கள் தவிர அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இல்லை என்பது அங்கிருந்த அலங்கோலத்தில் தெரிந்தது. அங்கே இருந்த அடிமைப் பெண்களில் ஒருத்தியைப்பிடித்து, “எங்கே உங்கள் மன்னர்?” என்று உபதளபதிகளில் ஒருவன் கேட்க, “அவர்கள் சுரங்கவழியில் தப்பிச் செல்கிறார்கள்” என்றாள் தாதி
அவளை வழிகாட்டச் சொல்லி சுரங்க அறையின் வாயிலை அடைந்தான் இளவழுதி. “உடன் சிலவீரர்கள் மட்டும் வந்தால் போதும். உபதளபதிகள் இங்கேயே நிற்கலாம். சமயத்திற்கு ஏற்ப உசிதப்படி அவர்கள் நடந்து கொள்ளலாம்’ என்று ஒரு தீப்பந்தத்துடன் சுரங்கத்தினுள்ளே இறங்கினான்.
ஒரு நாழிகைப் பயணத்துக்குப்பின் வெளிக்காற்று சிலுசிலுவென வீச, அரண்மனைக்கு வெளியே விட்டோமென்ற எண்ணத்துடன் தனது நடையை வேகமாகப் போட்டான். சரியாக அரண்மனையின் பின்புறத்தை அடைந்தான் இருந்தது அந்தச் சுரங்க வழி,
மன்னர் வகுத்த திட்டப்படி புதிய உபதளபதியின் தலைமையில் இங்கே ஒரு படைப்பிரிவு நின்றிருக்க வேண்டுமே என் எண்ணமிட்டபடி இளவழுதி சுற்றும் முற்றும் பார்த்தான்.
தூரத்தில் தெரியும் கணவாய் வழியாக ஒருவன் பாய்ந்து முன்னேறுவதும், அந்தப் பகுதியில் பெரிய சலசலப்பும் சேரநாட்டு வீரர்களின் ஆவேசக் குரலும் துல்லியமாகக் கேட்க, இளவழுதியம் அவனது வீரர்களும் அந்தத் திசையை நோக்கி ஓடினார்கள்,
போர் துவங்க போர்ச் சங்கம் முழக்கப்பெற்று ஐந்து நாழிகைகள் கடந்தும் வெற்றிபற்றி செய்தி வராமல் அரண்மனையின் பின்புறத்தை முற்றுகையிட்டிருந்த படைவீரர்கள் சோம்பிக் கிடந்த நேரத்தில் தூரத்தே இருந்த நான்கு கால் மண்டபத்தில் அதன் தளபதி தரையில் தூசு தட்டிவிட்டுச் சிறிதே ஒருக்களித்துச் சாய்ந்த நேரத்தில் மண்டபத் தரைக்குள்ளே ஏதேதோ ஒலி கேட்டு எழுந்து உட்கார்ந்தான். வெளியே எந்த ஒலியும் கேட்காததால் மீண்டும் தரையில் படுத்து இடது காதை தரையோடு தரையாக வைத்து உற்றுக்கேட்க அந்தச் சத்தம் அருகில் நெருங்கி வருவது நன்கு புலனாகவே உஷாரானான்.
சமயோசிதமாக வீரர்கள் எல்லாரையும் பக்கத்திலுள்ள காடுகளில் ஒளிந்து கொள்ளச் சொல்லிவிட்டு தானும் ஒரு செடி மறைவில் மறைந்து கொண்டான். அவன் எதிர்பார்த்தது போல சிறிது நேரத்திற்கெல்லாம் மண்டபத்தின் மத்திய பகுதி மேல் நோக்கித் திறக்க அதிலிருந்து ஒரு பெண் உருவம் வெளிவந்தது. அவள் அரண்மனைத் தாதியாயிருக்கலாம். அவளைத் தொடர்ந்து மேலும் பல பெண்கள் வெளிவரத் தலைப்பட்டார்கள். உடன் சில வீரர்கள், தொடர்ந்து வஜ்ரஹஸ்தன் தோன்றி மண்டபத்தின் மேல் பகுதியை மூடிவிட, பக்கத்திலுள்ள கணவாய் வழியாக இமைக்கும் நேரத்தில் பல்லக்குகள் வந்து நிற்க அதில் பெண்கள் யாவரும் ஏறிக் கொண்டார்கள். கலிங்க நாட்டு வீரனொருவன் கொண்டுவந்திருந்த புரவியில் வஜ்ரஹஸ்தன் ஏறிக்கொள்ளும் சமயத்தில் மறைந்திருந்த சேரநாட்டு உபதளபதி வெளியே வந்து வஜ்ரஹஸ்தனது புரிவியின் கடிவாளத்தைப் பற்றிக்கொண்டான். “உயிருக்குப் பயந்து ஓடுவது மன்னருக்கு அழகில்லை” என்று சொல்லவும் செய்தான்
வஜ்ரஹஸ்தன் வேறுவழியின்றி புரவியிலிருந்து இறங்கிய சுருக்கிலேயே ஆவேசமாக வாளை வீசவும் செய்தான், உக்கிரமாக நடந்த இந்த வாள் போரில் சேரநாட்டுத் தளபதியன் கை தாழவே, இமைக்கும் நேரத்தில் வஜ்ரஹஸ்தன் தனது வாளை அவன் விலாவில் பாய்ச்சிவிட்டான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் சேரநாட்டு உபதளபதி கீழே சாய, கோபமுற்ற சேரநாட்டு வீரர்கள் ஏககாலத்தில் வஜ்ரஹஸ்தனைச் சூழ்ந்துகொள்ள அவனது கழுத்தைச் சுற்றி பல வாட்கள் முற்றுகையிட்டன. அதே நேரத்தில் இளவழுதியும் வீரர்களும் அங்கு வந்து சேர, வஜ்ரஹஸ்தன் செய்வதறியாது ஒரு நிமிடம் நின்றபின் தனது வாளை வானில் வீசி அது கீழ்நோக்கி வரும்போது வாளின் நுனிக்குத் தனது மார்பைக் காட்டிக்கொண்டு நிற்க, கணநேரத்தில் அவனது வாளுக்கே இரையாகிப் போயிருக்கலாம். ஆனால் அப்படி ஒரு வீரமரணத்தை வஜ்ரஹஸ்தனுக்கு வழங்க இளவழுதிக்கு விருப்பமில்லை போலும் பாய்ந்து வந்த வஜ்ரஹஸ்தனை அப்பால் தள்ளிவிட்டு தன் வாளால் கீழ்நோக்கி வரும் வஜ்ரஹஸ்தன் வாளையும் தட்டிவிட்டான்.
வஜ்ரஹஸ்தனை விலங்கிட்டு வெற்றி முழக்கத்துடன் சேரநாட்டு வீரர்கள் நெடுஞ்சேரலாதனின் பாசறைக்கு இழுத்துச் சென்றதும், இளவழுதி மயக்கமுற்று கீழே விழுந்து கிடக்கும் உபதளபதியின் பக்கம் பார்வையைச் செலுத்தினால் அந்த இடத்தில் உபதளபதியைக் காணோம். சிகிச்சையளிப்பதற்காக பாசறைக்கு எடுத்துச் சென்றிருப்பதாக வீரர்கள் சொல்லவே, தனது புரவியில் ஏறிக்கொண்டு சிகிச்சையளிக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டான்.
பாசறையைச் சுற்றிலும் ஏராளமான வீரர்கள் காயமுற்றுக் கிடந்தார்கள். அவர்களுக்கு சேரநாட்டு வைத்தியர்கள் தங்களது திறமையால் சிகிச்சை செய்து கொண்டிருந்தனர். இளவழுதி நேராக தலைமை வைத்தியரிடம் சென்று, “உபதளபதியின் காயம் எப்படி இருக்கிறது?” என்று வினவினான்.
வைத்தியர் வாயால் பதில் சொல்லாமல் சைகையால் கூடாரத்தின் பக்கமாகச் சுட்டிக்காட்டினார்.
இளவழுதி கூடாரத்தை நெருங்கியபோது, ‘மகளே வைத்தியனிடம் வெட்கப்பட்டு பயனில்லை. முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொள். நான் மருந்திடுகிறேன். பெண்கள் வேலை அந்தப்புரத்தில் இருக்கிறது. நீயோ ஆண் வேடமிட்டு போர்க்களத்திற்கு வந்து வீணான சிரமத்துக்கு ஆளாக் இருக்கிறாய். புதிய உபதளபதி பற்றி வீரர்கள் புகழ்ந்த பேசுகிறார்களே, என்ன விஷயம் என்று அப்போதே சந்தேகமிருந்தது. அழகான பெண்களுக்கு ஆண் வேடம் போட்டால் தெரியாமல் போய்விடும் என்று நினைத்தாயா? என்றார் மன்னர், அவளது காயங்களுக்கு மருந்திட்டவாறே,
“மன்னிக்க வேண்டும் மன்னவா, உங்களிடமோ உங்கள் படைத்தலைவரிடமோ நானும் உடன் வருகிறேன் என்றால் நீங்கள் அனுமதிப்பீர்கள் என்பது நிச்சயமில்லை . உங்களது வடபுல யாத்திரை வெற்றிபெற வேண்டுமென்பது என் ஆசை. அதற்கு என் தந்தையும் தனது பரிபூரண ஆசியை வழங்கியிருக்கிறார்
அப்படியிருக்க, அவரது ஆசி நிறைவேற நான் அந்தப்புரத்தில் இருப்பது முறையா? மேலும்…” என்று சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தினாள் அலை அரசி. அவன் பார்வை கூடாரத்தின் வாயில் பகுதியில் நிற்கும் இளவழுதியை நோக்கியிருந்தது.
“உன் இளவழுதியைவிட்டுப் பிரிந்திருக்கவும் உன்னால் முடியாது இல்லையா?” என்று சிறிது நகைத்தார் மன்னர்.
“அலை அரசி, நன்றாக இருக்கிறது உன் செயல் உன்னால் எங்களுக்கு பெருத்த அவமானம்” என்று வருத்தம் தொனிக்கும் குரலில் இளவழுதி சொல்லிக் கொண்டே அவளது படுக்கையருகில் வந்தான்.
“வா இளவழுதி! என்ன அப்படிச் சொல்லிவிட்டாய். இவளால் அல்லவோ வஜ்ரஹஸ்தன் பிடிபடும்படியாயிற்று”
“அதைத்தான் சொல்கிறேன் மன்னா, தங்களுக்கு படைத்தலைவன் என்ற பெயரில் நானோ, பூழித் தேவனோ இருக்க எந்த யோக்கியதையும் இல்லாமல் செய்துவிட்டாள் இந்தப் பெண்.”
”அவள் உன்னில் பாதியில்லையா? அப்படியிருக்க அந்த வெற்றியில் உனக்கும்தானே பங்கிருக்கிறது ” – மன்னர்.
“உண்மை, உண்மை. இதை இளவழுதி மன்னித்தாலும் இந்த பூழித்தேவன் மன்னிக்கத் தயாரில்லை.”
“அப்படியானால் அரசியின் இந்தச் செயலுக்குத் தண்டனை உண்டு அப்படித்தானே?”
“ஆம். அப்படித்தான்!”
“என்ன தண்டனை?”
“நாம் இவர்கள் இருவரையும் தனியே இருக்க சிறிது நேரம் அனுமதிப்பதுதான்” என்று பூழித்தேவன் சொல்ல, மன்னர் உள்பட, அங்கிருந்த அனைவரும் கேலிச்சிரிப்புச் சிரித்தார்கள் அலை அரசி பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். அவள் முகத்தில் நாணம் கனிந்தது.
கூடாரத்தின் திரையை எடுத்து மறைத்துவிட்டு அலை அரசியின் அருகில் வந்து குனிந்து அவளது இதழ்களை தன் இதழ்களுடன் சேர்த்தான் இளவழுதி. மற்ற எந்த மருந்தையும் விட இந்த இதழமுதம் இதமாயிருந்தது அவளுக்கு.