Mohana Silai Ch2 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 2. வீரனா? பித்தனா?
Mohana Silai Ch2 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்து தன்னை நோக்கி வாளும்
கையுமாக வந்த பத்து வீரர்களையோ சிறிதளவும் லட்சியம் செய்யாமலும், கையிலேந்திய சிலையையோ, அத்துடன் இணைந்து நின்ற பாம்பு ரத்தமும் புற்று மண்ணும் ஒட்டிய சிலையையும் அந்த அழகியையும் மாறி மாறி நோக்கினான்
சில விநாடிகள்.
அப்படி அவன் அசட்டையுடன் காலதாமதம் செய்ததால் அவனை நெருங்கிவிட்ட பத்துக் காவலரும் தங்கள் வாட்களின் நுனிகள் அவன் உடலில் படும்படி செய்துங்கூட அவன் நின்ற நிலையிலிருந்து அகலாமல் இடது கையிலிருந்த
சிலையிலிருந்து தனது குறுவாளை வலது கையால் எடுத்து பாம்பு ரத்தத்தையும் புற்று மண்ணையும் தனது கச்சையில் துடைத்துக் கொண்டான் நிதானமாக. துடைத்த குறுவாளைக் கச்சையில் வயிற்றுக்கு மேலிருந்த உறையில்
செருகிவிட்டு இடது கையிலிருந்த தந்தச் சிலைமீது படிந்திருந்த மண்ணையும் வலது கைகளாலும் அதை ஏந்தி அதன் வேலைப்பாட்டையும் அழகையும் கவனிக்கலானான்.
அவன் தங்களைப்பற்றிக் காட்டிய அசட்டையையும், சிலையைச் சுத்தப்படுத்துவதில் காட்டிய சிரத்தையையும் கவனித்த பத்து காவலரில் தலைவனாகக் காணப்பட்ட ஒருவன், “டேய்! பத்து வாட்கள் உன்னைத் தடவி நிற்கின்றன” என்று
அறிவித்தான் சினம் ததும்பிய குரலில்.
கையிலிருந்த சிலையிலிருந்து கண்ணை எடுக்காமலே “தெரிகிறது” என்ற ஒன்றைச் சொல் பதிலைக் கூறிய இதயகுமாரன் சிறிது நேரத்திற்குப் பிறகு, “அரசகுமாரி! இந்தச் சிலையைத் தாங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா?”
என்று எதிரே எட்ட நின்றிருந்த அந்தப் பெண்ணை நோக்கிக் கேள்வியொன்றையும் வீசினான்.
பத்து வீரர்கள் வாளேந்தி நின்ற சமயத்தில் அவன் காட்டிய அசட்டையையும் தன்னைக் கேள்வி கேட்க முயன்ற துணிவையும் கண்ட அரசகுமாரியின் விழிகளில் சீற்றம் சிறிது விலகி வியப்பு குடி கொண்டதால், அதைப்பற்றி
உனக்கென்ன?” என்று வினவினாள், வியப்பு துலங்கிய குரலில்.
“காரணம் இருக்கிறது அரசகுமாரி” என்ற இதயகுமாரன், தன் கையிலிருந்த சிலைசயைச் சிறிது தூக்கி அவள் கண்களில் அது நன்றாகப் படும்படி காட்டியதன்றி, “உங்களுக்கும் இதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது” என்றும் கூறி
மீண்டும் சிலையைத் தனக்காகத் திருப்பி அதை நோக்கி விட்டு அரசகுமாரியையும் கவனித்தான்.
அரசகுமாரியின் இடை துவண்ட காரணத்தாலோ என்னவோ அவள் தனது இடையை மேலும் ஒடித்து ஒரு புறமாகச் சாய்ந்து நிற்கவே பெரும் பிரமை பிடித்துக் கொண்டது இதயகுமாரனை. “சந்தேகமில்லை. துளிக்கூட
வித்தியாசமில்லை.” மிக மெதுவாகச் சொல்லிக் கொண்டான் அந்த வாலிபன்.
சிற்றிடை அதிகமாக ஒடிந்து நின்ற நிலையில் அரசகுமாரி சாட்சாத் அந்தச் சிலையைப் போலவே காட்சியளித்தாள். அவள் சுந்தர முகமும் சிலையின் முகத்தைப் போலவே பழுப்பேறிய தந்தம் போலிருந்தது. காலை நீராட்டத்தின்போது
அவள் பூசியிருந்த மஞ்சளின் காரணமாக அவள் நெற்றியும் கன்னங்களும் தந்தத்தின் நிறங் கொண்டதன்றி கோபத்தில் சிறிதே சிவந்து விட்ட வழவழத்த கன்னங்கள் சிலையில் ஏற்கனவே ஒட்டியிருந்து பிறகு துடைக்கப்பட்டு விட்ட
புற்றின் செம்மண்ணின் நிறத்தையும் தங்களிடம் கூட்டிக் கொண்டன. பிறை நுதலுக்கு மேல் வகிடு எடுத்துப் பின்னால் பெரிதாக முடிக்கப்பட்டிருந்த தலைக் கருங்குழலின் நிறம் சிலையின் குழல் நிறத்திலிருந்து மாறுபட்டிருந்த
தேயொழிய, முடிப்பின் முறையும் சிலையின் முடிப்பைப் போலவே மிக்க கவர்ச்சியாக இருந்தது.
இடைக்குச் சற்று மேலே எழுந்த இரட்டை அழகுகளின் பரிமாணம் அதிகமே தவிர மற்றபடி சிலையின் மார்பகத்தின் அமைப்பே அவளுக்குமிருந்தது. இருப்பது பொய்யோ எனும் இடைக்குக் கீழே தெரிந்த ஆலிலை வயிறும் சரி, அதன் கீழே
உறுதியுடன் செதுக்கிவிட்டது போல் உருண்டும் பருத்தும் இறங்கிய கால்களும் சரி, சிலையின் உருவத்தை அப்படியே அச்சாக வார்த்திருந்தது.
இப்படித் திகைக்கும்படியாக இருந்த ஒற்றுமையைக் கவனித்துப் பிரமித்த இதயகுமாரன் மனத்தில் எண்ணங்கள் ஏதேதோ எழுந்தாலும் உணர்ச்சிகள் பலபடி சுழன்றாலும், அவற்றுக்கெல்லாம் இடங்கொடாமல் அரசகுமாரியைப் பார்த்து,
“அரசகுமாரி! உங்கள் காவலரைச் சற்று விலகச் சொல்லுங்கள்” என்று விண்ணப்பித்துக் கொண்டான்.
அப்பொழுதாவது அரசகுமாரி சிறிது சிந்தித்திருக்கலாம் ஆனால், உள்ளே எழுந்திருந்திருந்த சீற்றம் அதிகப்படவே தனது காவலரை நோக்கி, “ஏன் நிற்கிறீர்கள்? கடமையைச் செய்யுங்கள்” என்று உத்தரவிடவே செய்தாள். அந்தப்
பிழையை அவள் இரண்டாம் முறை செய்திருக்காவிட்டால், அவன் சிலையையும் நோக்கித் தன்னையும் ஆராய்ந்த தருணத்தில் ஏற்பட்ட சிறு மாறுதல்களைக் கவனித்தாவது இருந்தால், நிலைமை பெரிதும் மாறுபட்டிருக்கும்
அவன் அவளுடன் பேச்சுக் கொடுத்த சமயத்தில் விஜயன் மெள்ள அவனை நோக்கி நகர்ந்து அருகில் நின்று விட்டது. அதன் முதுகில் எறியப்பட்ட கடிவாளம் அவன் வலது கையைச் சிறிது தடவவும் முற்பட்ட சமயத்தில் காவலர்
தலைவன் தனது வாளைச் சிறிது அழுத்தினான் இதயகுமாரன் மார்புமீது, “உன் வாளை இப்படிக் கொடு” என்று கையையும் நீட்டினான். “அரசகுமாரியின் உத்தரவுப்படி நடந்தால் நீ பிழைக்கக்கூடப் பிழைக்கலாம்” என்று கூறிக்
கொண்டே இதயகுமாரனை அணுகி அவன் வாளின் உறையில் கையை வைத்தான்.
அடுத்த விநாடி முற்றிலும் எதிர்பாராத மின்னல் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. காவலர் தலைவன் நீட்டிய கை வெகு வேகமாக இழுக்கப்பட்டது இதயகுமாரன் வலது கரத்தால். கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக விசிறப்பட்ட காவலர்
தலைவன் ஏதோ வித்தை செய்பவனைப்போல் குனிந்து ஓடி அருகிலிருந்த புதரில் போய் விழுந்தான். அவன் புதரில் விழுவதற்கு முன்பே எடுக்கப்பட்டுச் சுழற்றப்பட்ட இதயகுமாரன் வாள் இரு வீரர்கள் கைகளில் பாய்ந்துவிடவே
அவர்கள் அலற, மற்றவர்கள் சற்றுப் பின்னடைந்து அந்த வாலிபன் மீது வாட்களைச் செலுத்தி விட முயன்றனர். அவர்கள் வாட்களை எழுப்பு முன்பு விஜயன்மீது பாய்ந்து விட்ட இதயகுமாரன் அதன் கடிவாளத்தையும், சிலையையும்
சேர்த்துப் பிடித்துக் கொண்டு, விஜயன் பாய்ந்த வேகத்தில் சிறிது குனிந்து அரசகுமாரியை இடது கையால் ஒரே தூக்கில் தூக்கிக் கொண்டு புரவியுடன் சேர்த்து அவளை அணைத்த வண்ணம் அடர்ந்த காட்டுக்குள் புகுந்துவிட்டான்,
கருத்த மேகத்தை ஊடுருவும் மின்னல் போல.
அவன் பின்னால் காவலர் கூச்சல் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. “அரசகுமாரி! அரசகுமாரி!” என்று கூக்குரல்கள் பலபடி எழுந்தன. புரவிகளின் குளம்படிச் சத்தங்களும் ஏராளமாகக் கேட்டன. அத்தனையையும் லட்சியம்
செய்யாத இதயகுமாரன், மரங்கள் அடர்த்தியாயிருந்த ஒரு பகுதிக்கு வந்ததும் அரசகுமாரியை நன்றாகக் குதிரைமீது ஏற்றிவிட்டு புரவியைக் காட்டின் உட்பகுதியில் நிதானமாக நடக்க விட்டான். அப்படி நடந்த புரவி மரங்கள்
அடர்த்தியில்லாத ஒரு பகுதிக்கு வந்ததும் அரசகுமாரியைப் புரவியிலிருந்து இறக்காமல் தான் மட்டும் இறங்கி நின்றுகொண்டான் அந்த வாலிப வீரன். “அரசகுமாரி! அவசியமானால் நீங்களும் இறங்கிச் சற்று இளைப்பாறலாம்” என்றும்
கூறினான்.
அரசகுமாரி புரவியிலிருந்து இறங்காமலே அவனை இகழ்ச்சிக் கண்களுடன் நோக்கினாள். “நீங்கள் பெரிய வீரராயிருக்கலாம். ஆனால் அறிவாளியல்ல” என்றாள். அவள் பேச்சில் முதன் முதலாக மரியாதை தெரிந்தது.
“அப்படியா அரசகுமாரி!” என்று வினவிய இதயகுமாரன் அவளைப் பார்த்துச் சிறிது நகைத்து, “உங்களைப் போன்ற மோகனச் சிலையைப் பார்க்கும் போது அறிவிழந்தால் அது இயற்கைதானே” என்றான், நகைப்பு குரலிலும் லேசாக
ஒலிக்க.
பதில் கூறவில்லை அரசகுமாரி அவனுக்கு. புரவியின் கடிவாளத்தை இழுத்து அதன் வயிற்றிலும் உதைத்தாள் தனது இடது காலால். அடுத்த விநாடி அவள் ஏமாற்றம் அளவிட முடியாததால் திகைப்பும் விரிந்தது அவள்
சுந்தரவதனத்தில். விஜயன்கடிவாள இழுப்புக்கோ, வயிற்றில் கிடைத்த உதைக்கோ நகர மறுத்துக் கல்லால் செதுக்கப்பட்டது போல் அசையாமல் நின்றது ஒரு விநாடி. பிறகு தலையைத் திருப்பி அரசகுமாரியை நோக்கிப் பற்களைப்
பயங்கரமாகத் திறந்தது, சிரித்தது. “இது குதிரையா கழுதையா?” என்று சீறினாள் அரசகுமாரி விஜயனையும் நோக்கி, இதயகுமாரனையும் நோக்கி.
இதயகுமாரன் இதழ்களில் இளநகையொன்று அரும்பியது. “அரசகுமாரி! சொன்னால் தவறாக நினைக்க மாட்டீர்களே?” என்று கேட்டான் இதயகுமாரன் பணிவு நிரம்பிய குரலில்.
“எதை வேண்டுமானாலும் சொல்” என்ற அரசகுமாரியின் சொற்களில் சினமில்லை, பழைய மரியாதை இல்லை; இகழ்ச்சி அதிகமாயிருந்தது.
“விஜயன்? கழுதை என்றீர்கள்…” சொற்களை முடிக்கவில்லை இதயகுமாரன்.
“யார் விஜயன்” என்று அரசகுமாரி குறுக்கிட்டாள்.
“நீங்கள் அமர்ந்திருக்கும் என் புரவி” என்று விண்ணப்பித்துக் கொண்டான் இதயகுமாரன்.
“அப்படியா?”
“ஆம்.”
“அதைக் கழுதையென்றால் என்ன தவறு? இடது காலால் வயிற்றில் உதைத்தேன். அப்பொழுதும் கிளம்பவில்லை” என்று சுட்டிக்காட்டினாள் அரசகுமாரி.
“உதைத்தது தாங்கள்தானே? விஜயனல்லவே” என்று இதயகுமாரன் கேட்டான். அவன் கேள்வியில் விஷமம் பரிபூரணமாக ஒலித்தது.
அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டதால் அரசகுமாரியின் முகம் சீற்றத்தாலும், அந்த வாலிபன் சுட்டிக்காட்டிய நிந்தையாலும் பெரிதும் சிவந்தது. நீள் விழிகள் அவனைச்சுட்டுவிடுவன போல் பார்த்தன. அவள்
முகமாற்றத்தைக் கவனித்த இதயகுமாரன், அரசகுமாரிக்கு அருகில் வந்து, “அரசகுமாரி/விஜயன் என் புரவி மட்டுமல்ல. என் தோழன். அவனை வசைபாடுவது என்னை வசைபாடுவதாகும். இருப்பினும் எனக்குக் கோபமில்லை
அரசகுமாரி!அவன் வயிறு இரும்பு போன்றது. அதை உதைத்ததால் உங்கள் கமலப்பாதம் சிவந்துவிட்டது. இதோ பாருங்கள்” என்று கூறிக்கொண்டே அவள் இடது பாதத்தை எடுத்துக் கையால் தடவிக் கொடுத்தான்.
வாலிபனின் கைபட்டதால் அதுவரை சிவந்திருந்த பாதம் முன்னைவிட அதிகமாகச் சிவந்தது. உடலில் அன்று வரை அவள் அனுபவிக்காத உணர்ச்சிகள் ஊடுருவிச் சென்றன. அவற்றின் விளைவாக அவள் காலைச் சிறிது இழுத்துக்
கொள்ள முயன்றாளானாலும், அந்த வாலிபனின் மெதுவான பிடியே இரும்புப் பிடியாயிருந்ததால் தனது மலர்க் காலை விடுவித்துக்கொள்ள முடியவில்லை அவளால். ஆகவே, “காலை விடுகிறாயா, இல்லையா?” என்று சீறினாள்
அரசகுமாரி.
இதயகுமாரன் அவள் காலை விட்டான் மிக மெதுவாக. “அரசகுமாரி! மன்னிக்க வேண்டும். எந்த ஆடவனும் சித்தமிழக்கும் சமயங்கள் உண்டு” என்றும் மிகப்பணிவுடன் கூறினான்.
அரசகுமாரி அவன் பணிவைக் கண்டாள். அவன் புரவியிலிருந்து சிறிது விலகி நின்றுவிட்ட பண்பையும் கண்டாள். ஏதோ நினைத்துக்கொண்டவள் வலதுகாலையும் இடது பக்கத்தில் திருப்பிப் போட்டுப் புரவியிலிருந்து லேசாகச்
சரிந்து கீழே இறங்கி நின்றாள் புரவிமீது சாய்ந்த வண்ணம். அவள் நின்ற தோரணையைக் கண்ட இதயகுமாரன் மீண்டும் உலகை மறந்தான். அவள் அழகு அவள் நின்ற பாணியில் பன் மடங்கு அதிகமாகத் தெரிந்தது இதயகுமாரன்
கண்களுக்கு. மரக்கூட்டம் சிறிது விலகியிருந்த இடமாதலால், ஊடுருவி வந்த கதிரவன் கதிர்கள் அவள் மீது பட்டதால் அவள் வழவழத்த கன்னங்கள் அதிக மெருகு பெற்றுப் பளபளத்தன. அன்று காலையில் அவள் நீராடி.தலையைக் கோதி
விட்டுப் பெரிதாக முடிந்திருந்த குழலின் ஒரு பக்கமாக இருந்த செண்பக மலர், சிவப்பும் மஞ்சளும் கலந்த தனது இதழ்களைத் திறந்து அவள் கன்னங்களின் அழகைக் குறைக்கப் பார்த்தாலும், அது முடியவில்லை என்பதைப் புரிந்து
கொண்டான் இதயகுமாரன். அவன் கையிலிருந்த சிலையே உயிர் பெற்று வளர்ந்து பருவச் சிலையாகத் தன்னெதிரில் நின்று விட்ட பிரமை இதயகுமாரனுக்கு ஏற்பட்டதால் அரசகுமாரியை அணுக ஒரு காலை எடுத்து வைத்தவன் மீண்டும்
காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். “அரசகுமாரி!” என்று மெள்ள குரலும் கொடுத்தான்.
அவன் தன்னை அணுகக் காலை எடுத்து வைத்ததையும் அரசகுமாரி கவனித்தாள். பிறகு காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதையும் கவனித்தாள். அவன் மிகப் பண்புள்ளவன் என்பதைப் புரிந்து கொண்டதால் பணிவுடன்
உரையாடவும் தொடங்கினாள். “நீங்கள் இந்த ஊருக்குப் புதிதாக இருக்க வேண்டும்” என்றாள் தலையை நிலத்தில் தாழ்த்திய வண்ணம்.
“ஆம்.” இதயகுமாரன் பதில் திட்டமாக இருந்தது.
“வந்ததும் ஆபத்தில் சிக்கிக்கொண்டீர்கள்!”
“ஆம்.”
“என் வீரர்களை எதிர்த்தீர்கள்!”
“ஆம்.”
“அரசகுமாரியான என்னைத் தூக்கிக்கொண்டு வந்தீர்கள்!”
.
“ஆம்.”
“இதற்கு மரண தண்டனை.”
“தெரியும்.”
இதைக் கேட்ட அரசகுமாரி சிலையென நின்றாள். பிறகு கேட்டாள். “நீங்கள் யாரைப் பார்க்க வந்தீர்கள் இந்த மாருக்கு?” என்று வினவினாள்.
“இந்த ஊர் அரசகுமாரியை’ என்று பதில் சொன்னான் இதயகுமாரன்.
“எதற்கு?” என்று வினவினாள் அவள்.
“அதை அரசகுமாரியிடந்தான் சொல்ல வேண்டும்” என்றான் அந்த வாலிபன்.
“சரி, சொல்லுங்கள்” என்று ஊக்கினாள் அவள்.
அவன் பதில் ஏதும் சொல்லாததால் அவள் மீண்டும் கேட்டாள், “வீரரே! அஞ்சவேண்டாம். சொல்லுங்கள்” என்று. இம்முறை மரியாதை பெரிதும் ஒலித்தது அவள் குரலில். அது வரை அவள் குரலிலிருந்த வெறுப்பு, இகழ்ச்சி இரண்டும்
மறைந்துவிட்டன.
அவன் அப்பொழுதும் பேச மறுத்தான். பேசியபோது அவளுக்குக் காத்திருந்தது பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியைத் தொடர்ந்து அரசகுமாரியின் உடல் சிறிது நடுங்கியது. ‘நீ வீரனா? பித்தனா?” என்று வினவினாள் அவள்.
மரியாதையைக் கைவிட்டு, குரலிலும் நடுக்கம் துலங்க.