Mohana Silai Ch 31 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 31. காலம் மாறுகிறது.
Mohana Silai Ch 31 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மனிதன் நிதானத்தைப் பறக்கவிடும் நிலையை கோபம் என்று சொல்கிறோம். அந்த நிலையில் எப்பேர்ப்பட்ட அறிவாளியின் புத்தியும் ஒழுங்காக இயங்குவதில்லை. அன்றிரவு செந்தலை பிரதான வாசலுக்கருகில் பணிப்பெண்ணை
இழுத்த வண்ணம் போலிக் கிழவனை அணுகிய மாறன் பரமேசுவரன் இந்த நியதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான், மூர்க்கனான அவன் போலிக் கிழவன் யாரென்பதை உணர்ந்ததால் அவனையும், அவனைத் தப்புவிக்க முயன்ற
பணிப்பெண்ணையும் தீர்த்துக்கட்டி விடுவதென்ற எண்ணத்துடன்தான் ஒரு கையில் வாளை ஏந்தியும், இன்னொரு கையில் பணிப்பெண்ணின் கையை இறுகப் பிடித்துக் கொண்டும் கிழவன் வீற்றிருந்த புரவியை அணுகினான்.
கிழவனை இறங்கச் சொல்ல காவலருக்கு உத்தரவிட்ட போதும் அவன் குரலில் நிதானமின்மையும் உக்கிரமும் பிணைந்து ஒலித்தன.
இப்படி நிதானத்தை இழந்ததால் கிழவன் சரேலென்று தனது போலித் தளர்ச்சியை உதறித் தன்னைக் கிட்டி வந்த காவலர் இருவரின் தோள்பட்டைகளில் தனது வாளைப் பாய்ச்சி விட்டதன்றி சரேலென்று புரவியையும் சுழற்றித் திருப்பி
மாறன் மீது பாய்ந்துவிட்டதால், மாறன் புரவியின் மோதலால் கீழே விழ இருந்தான். அந்த சமயத்தில் மாறன் கை பெண்ணின் கையை விட்டு விட்டதால் ஆதித்த சோழன் பரமலாகவத்தைக் காட்டினான். அவன் வலது கையிலிருந்த வாள்
மாறன் விழ இருந்து நிதானித்துக் கொண்ட சமயத்தில் மாறன் வாளைக் சுழற்றி கையிலிருந்து சுழற்றிப் பறக்கவிட்டு விடவே மாறன் திடீரென நிராயுத பாணியானான்.
அவனால் விடப்பட்ட பணிப்பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் சோழன் மகனால் அவனது வாள் கரத்தாலேயே அணைத்துத் தூக்கப்பட்டு புரவி மீது குறுக்கே கிடத்தப்பட்டாள். அதே நிலையில் ஆதித்தன் ஏறிய முரட்டுப் புரவி திடீரென
ஒருசக்கரம் அடித்துத் திரும்பிப் பறந்தது பிரதான வாசல் மூலம். அதன் குறுக்கே வந்த இரு காவலர் புரவியால் தாக்குண்டு அதன் காலில் விழுந்து மிதிபட்டனர், புரவி வாயு வேகத்தில் பறந்தது செந்தலையின் வெளிவீதியில்.
ஆதித்தனின் எதிர்பாராத துணிகரச் செயலால் வாளிழந்தாலும், குதிரையின் தாக்குதலால் கீழே விழ இருந்தாலும் விழாமல் நிதானித்துக் கொண்ட மாறன் பரமேசுவரன் கண்களில் பயங்கரமான பழிவாங்கும் சாயை விரிந்தது. “ஆதித்தா!
உன் அரண்மனையைக் கொள்ளை கொண்ட மாறன் இன்னும் உயிருடனிருக்கிறானென்பதைப் புரிந்துகொள். வெகு சீக்கிரம் வருகிறேன் உன் இருப்பிடம் நோக்கி” என உள்ளூரச் சொல்லிக் கொண்டான். பிறகு எட்ட விழுந்திருந்த
தனது வாளை எடுத்துக் கொண்டு, ‘யாரங்கே! ஒரு புரவியைக் கொண்டு வா” என்று வீரர்களுக்கு உத்தரவிட்டான். புரவி வந்ததும் அதன் மீது தாவினான். புரவியின் கடிவாளத்தை இழுக்க அவன் முற்பட்ட சமயத்தில் இரு காவலர்
குறுக்கே வந்து, “இளவரசே! நாங்கள் எவ்வளவு பேர் உடன் வரட்டும்” என்று வினவினார்கள்.
“ஜோஸ்யரைக் கேளுங்கள்” என்று சீறி விழுந்தான் மாறன் பரமேசுவரன் புரவியை நடத்து முன்பு. “இல்லாவிட்டால் தர்மப்பிரபுவைக் கேளுங்கள்” என்று கூறினான்.
“யாரது விளங்கவில்லையே” என்று கேட்டான் ஒரு காவலன்.
“அரண்மனையில் இருக்கிறார்” என்று இகழ்ச்சியுடன் கூறிய மாறன், புரவியை மெல்ல நடத்த முற்பட்டான்.
“மாறா! நில்” என்று கட்டளையிட்டுக்கொண்டே பெரும்பிடுகர் மெள்ள அந்த இடத்தை நாடினார்.
அவரைப் பார்த்த மாறன் கண்கள் கொலைக்கண்களாக இருந்தன. “ஏன், உங்கள் நண்பருக்கு உதவ வந்தீர்களா?” என்ற மாறன் கேள்வியில் சீற்றம் பலமாக இருந்தது.
“இல்லை.” பெரும்பிடுகர் குரல் திட்டமாயிருந்தது. மாறன் அசையக்கூடாது என்ற ஒலியும் அதில் இருந்தது.
“வேறெதற்கு வந்தீர்கள்” என்று வினவினார் மாறன் அதிக சீற்றத்துடன்.
“ஒரு முட்டாளைக் காக்க” என்றார் பெரும்பிடுகர்.
“யாரது?”
“அரண்மனைக்குச் சென்று தகளியில் பார் தெரியும்.”
“என்னைச் சொல்கிறீர்களா?”
“இதைப் புரிந்து கொள்ள இத்தனை நேரம் பிடிக்கிறது உனக்கு. இதுவே உன் முட்டாள்தனத்துக்கு அறிகுறி. சரி, கீழே இறங்கு”- பெரும்பிடுகர் உத்தரவில் தீர்மானமும் ஆணையுமிருந்தன.
அப்பொழுதும் மாறன் புரவியிலிருந்து இறங்கினானில்லை.”ஆதித்தனைப் பிடித்து வருவதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை?” என்று வினவினான் மாறன் புரவியில் அமர்ந்தபடியே.
“எந்தவித ஆட்சேபணையுமில்லை” என்ற பெரும்பிடுகர் சிறிது ஆலோசித்துவிட்டு “இல்லை. ஒரு ஆட்சேபணையிருக்கிறது” என்றார் சாதாரணமாக.
“அது என்னவோ?”
“என் ஒரே மகனை இழப்பதில் ஆட்சேபணை இருக்கிறது.”
“என் வீரத்தில் நம்பிக்கையில்லையா உங்களுக்கு?”
“இருக்கிறது. அதனால்தான் உன்னைப் போகவேண்டாமென்று சொல்கிறேன். எனக்கு வயதாகிவிட்டது. தவிர, நோயும் வர வர என் பலத்தை உறிஞ்சிவிடுகிறது. ஆகவே தஞ்சைமீது சோழர் படையெடுப்பு நேரிடும்போது முத்தரையர்
படையை நடத்திச்செல்ல ஒரு வீரன் வேண்டியிருக்கிறது. அது என் மகனாகத்தான் இருக்கமுடியும்” என்ற முத்தரைய பூபதி, “அரண்மனைக்கு வா. பேசிக்கொள்வோம்” என்று கூறிவிட்டுத் திரும்பி நடந்தார் எட்ட இருந்த அரண்மனையை
நோக்கி.
மாறன் பரமேசுவரன் தந்தை சென்ற பிறகும் நீண்ட நேரம் புரவியிலேயே அமர்ந்திருந்தான். பிறகு புரவியிலிருந்து கீழே குதித்து நடந்தான் அரண்மனை நோக்கி. பெரும்பிடுகர் எதை மன்னித்தாலும் தம் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவரை
மன்னிக்கமாட்டார் என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்த தாலும், அவரை மீறி தான் செந்தலையைக் கடந்துவிட்டால் அதில் மீண்டும் நுழைய முடியாதென்பதை உணர்ந்திருந்ததாலும், மாறன் தலைகுனிந்தவண்ணம் நடந்து அரண்மனையை
அடைந்தான்.
அரண்மனையிலன் உச்சிப்படியில் வழக்கம் போல் அமர்ந்திருந்தார் பெரும்பிடுகர். படிகளில் நிதானத்துடன் ஏறி அவருக்கு எதிரில் நின்ற மாறன், “இப்பொழுது உங்களுக்குத் திருப்திதானே!” என்று வினவினான். அவன் உள்ளம்
எரிமலை யாயிருந்ததைக் கண்களின் உக்கிரம் நிரூபித்தது.
பெரும்பிடுகர் தமது தலையை நிமிர்த்தி ராட்சதக் கண் களால் மகனை நோக்கினார் பல விநாடிகள். “இப்படி உட்கார்” என்று தமது பக்கத்தில் சிறிது இடமும் விட்டு நகர்ந்தார். சொற்படி அமர்ந்த தமது மகனை நோக்காமல் எதிரே
அணிவகுப்பு சதுக்கத்தையும், அதற்கு அப்பாலிருந்த காட்டையும் நோக்கினார். அந்தக் காடு முழுவதிலும் தமது படைகள் நிரம்பியிருப்பதை உணர்ந்திருந்த அவர் முகத்தில் பெருமைக்குப் பதில் துயரமே உருவாகியிருந்தது.
இருப்பினும் அவர் மகனிடம் பேச ஆரம்பித்தபோது அதில் துன்பத்தின் சாயை அணுவளவும் இல்லை. நிதானமாகப் பேசினார் பெரும்பிடுகர். “மகனே! மனிதன் அவசரப்பட வேண்டிய நேரம் உண்டு. நிதானிக்க வேண்டிய நேரமும் உண்டு”
என்றார் மெள்ள.
மாறன் பரமேசுவரன் தலையைத் திருப்பித் தந்தையை நோக்கினான். “தந்தையே! உமக்கு வயதாகிறது” என்றும் சுட்டிக்காட்டினான்.
“அதனால்தான் உன்னை மீட்டு வந்தேன் ஆதித்தன் வாளிடமிருந்து. நான் இறந்தபின் பலமாக செந்தலைக் குறுநிலத்தை ஆள தலைவன் வேண்டும். வெகு சீக்கிரம் விஜயாலயன் படையெடுப்பு செந்தலை மீதும் தஞ்சை மீதும் ஏற்படலாம்.
அதை எதிர்க்க சித்தம் செய்துகொள்” என்றார் பெரும்பிடுகர்.
மாறனின் பருத்த உதடுகள் சற்று விரிந்து இளநகையைக் காட்டின. “போர் பயம் பிடித்துக்கொண்டதா? முத்தரைய பூபதியும் போரை எதிர்பார்த்து அஞ்சுகிறாரா?” என்ற மாறன் மேலும் சொன்னான், “தந்தையே! எந்தப்
போரைக்கண்டு நாம் அஞ்சினோம்? மூவேந்தர்களையும் நாம் முறியடித்து மூன்று அரசுகளையும் அதாவது தரைகளையும் நாம் ஆளவில்லையா? அதனால் தானே முத்தரையர் என்ற சொல் ஏற்பட்டு நாம் முத்தரையர் என்று
வரலாற்றில் சிறந்தோம்? அந்தப் படை இப்பொழுது அழிந்துவிட்டதா? இல்லை, நம் வீரம் ஒடுங்கிவிட்டதா?” என்று.
பெரும்பிடுகர் சிந்தனையில் இறங்கினார். நீண்ட நேரம் கழித்து அவரிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிவந்தது. “மாறா! அறிவாளிகள் பழைய சிறப்பை எண்ணிக் காலம் கழிப்பதில்லை. அன்றைய நிலையை யோசிக்கிறார்கள். நமது
முன்னோர்களான களப்பிரர் புயல் வேகத்தில் தமிழகத்தில் நுழைந்தார்கள். மூன்று ஆட்சிகளையும் பிடித்தார்கள். அதை நினைத்து நாம் பெருமைப்படலாம். எதற்கு? அவர்கள் வீரத்தைக் கடைப்பிடிக்க, அவர்களைப் பின்பற்ற, பெரும்
காரியங்களைச் சாதிக்க. பழம்பெருமை பேச அல்ல. தவிர, இன்று நமது பெயர் முத்தரையராயிருக்கலாம். ஆனால், மூன்று நமது தரைகளும் உன்னிடமில்லை. பழையபடி தமிழகத்தில் மூவேந்தர்கள் ஏற்பட்டுவிட்டார்கள். நம்மை அழிக்க
ஒன்று சேரவும் முற்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது ஆத்திரத்துக்கு இடமில்லை. நிதானத்துக்கும் எதிரி செந்தலைப் பக்கம் தலை காட்டினால் அவனை எதிர்க்க நமது படையை பலப்படுத்தவும், கட்டுபாட்டுடன் போர்புரிய
சித்தப்படுத்து வதற்கும் இது சமயம். ஆகையால் பணிப்பெண்ணுடன் சென்ற ஆதித்தனை மறந்துவிடு. எதிரிடும் போருக்கு நாளை முதல் சித்தம் செய்து கொள்” என்று பேசினார் மெதுவாக.
அவர் சொற்களின் உண்மை மாறனின் மூர்க்கம் நிரம்பிய மூளைக்கும் புலப்படவே அவனும் சிந்தனை வசப்பட்டான். “போரை எப்பொழுது எதிர்பார்க்கிறீர்கள்?” என்று வினவினான் பல விநாடிகள் கழித்து.
“அதிகப்படியாகப் போனால் இரண்டு மாதங்களில்” என்றார் பெரும்பிடுகர். நான் “இப்பொழுதே சித்தமாயிருக்கிறேன்” என்றான் மாறன்.
“நீ சித்தமாயிருக்கலாம். படை சித்தமாயில்லை. நாளை முதல் உன் மகனை வைத்துக் கொண்டு அதைச் சித்தம் செய்” என்றார் பெரும்பிடுகர்.
“ஏன்! நான் சித்தம் செய்தாலென்ன?” என்று வினவினான் மாறன்.
முத்தரையர் முகத்தில் சிறிது கவலை விரிந்தது. அவர் பேசிய போது கவலை குரலிலும் தெரிந்தது. “இப்பொழுது வரப்போவது திடீர் தாக்குதலோ கொள்ளையோ அல்ல. திட்டமிட்ட சாஸ்திரீயப் போர். வெறும் முரட்டுத்தனம் அதில்
பயன்படாது. எதிரிகளின் போர்முறைகளை உன் மகன் அறிந்திருக்கிறான்” என்றார் பெரும்பிடுகர்.
“இளையவேள் அத்தனை பெரிய தளபதியா?”
“இளைய முத்தரையன்” என்று மகனைத் திருத்திய பெரும்பிடுகர் “படைகளைச் சீர்திருத்தி அமைக்கும் போது நீயே புரிந்து கொள்வாய்” என்று கூறினார். அத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகத் தலையை
மட்டும் அசைத்தார்.
மாறன் எழுந்து உள்ளே சென்றான். அதற்குப் பிறகும் பெரும்பிடுகர் தலையை நிமிர்த்தவில்லை. எதிரிலிருந்த காட்டையே நோக்கிக் கொண்டிருந்தார். அதிலிருந்து வெளிப்பட்டு தம்மை நோக்கி நடக்க முற்பட்ட உருவத்தைக் கண்டதும்
அவர் இதழ்களில் புன்முறுவல் அரும்பிற்று. “நினைத்தபடிதான் எல்லாம் நடக்கிறது” என்று திருப்தியுடன் முணுமுணுத்துக்கொண்ட பெரும்பிடுகர் தம்மை நோக்கி வந்த உருவத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“காலம் மாறுகிறது, அதுவும் வேகமாக” என்றும் நினைத்தார்.