Mohana Silai Ch 35 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 35. பிரதிஷ்டை
Mohana Silai Ch 35 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மகனும் மகளும் காதலில் சிக்குண்ட காரணத்தால் தஞ்சைப் படையெடுப்பைச் சிறிது தள்ளிப்போடும்படி தன்னைக் கேட்டுக்கொண்டதும் விஜயாலய சோழதேவன் சிறிது புன்சிரிப்பைக் காட்டினாலும், படையெடுப்பை ஒத்திப்போட
சிறிதளவும் இஷ்டமில்லாத இதயத்துடன் இரு செல்வங்களுக்கும் அந்த அறையிலிருந்து போக உத்தரவு கொடுத்தான். அவர்கள் சென்றதும் பஞ்சணையில் உட்கார்ந்த விஜயாலயன் மீண்டும் மோகனச்சிலையைக் கையிலெடுத்து அதன்
முதுகையும், முதுகில் தன்னால் பிரிக்கப்பட்ட நரம்புத் தையலையும் உற்று நோக்கினான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் மீதியிருந்த இரண்டு மூன்று தையல்களையும் ஊசிகொண்டு பிரித்து முதுகின் தந்தப் பட்டைகளைத்
தனது
குறுவாள் நுனியால் லேசாக விலக்கினான்.
மோகனச்சிலையின் முதுகின் தோல் போன்ற மெல்லிய யானையின் தந்தப் பட்டைகளைக் குறுக்கே அடைத்து நின்றது மேலும் ஒரு பட்டை. அதையும் லேசாகக் குறுவாள் கொண்டு நீக்கி மெள்ள பட்டை நொறுங்காமலும்
விரியாமலும் அதை மேலே எடுத்தான். அந்தப் பட்டையின் கீழே நான்கு சிறு மாணிக்கங்கள் செக்கச்செவேலென்று கதிர்களை வீசியதால் மன்னன் கண்கள் ஒரு விநாடி பார்வை இழந்தன. மறுவிநாடி அவன் கண்கள் அந்த மாணிக்கங்களின்
ஒளிவீச்சுக்குத் தங்களைச் சரிசெய்து கொண்டதும் மன்னன் அவற்றைச் சிறிதும் அலுக்காமல் மோகனச்சிலையைப் படுக்கையில் குப்புறக் கிடத்திவிட்டு அறைக் கதவைத் தாளிட்டுத் திரும்பினான். திரும்பியபின்பு முதுகிலிருந்து
எடுத்த தந்தப் பட்டைகளை ஆராய்ந்தான். பட்டைகள் மிக மெல்லியதாகத் துணிபோல் வளையக்கூடிய வண்ணம் பதனப்படுத்தப்பட்டிருந்தன. சிலையில் அவை திணிக்கப்பட்டு ஆறு நூற்றாண்டுகள் ஓடிவிட்டபோதிலும் அவற்றின்
வழவழப்போ மஞ்சள் நிற அழகோ சிறிதும் மாறுபடவில்லையென்பதை சோழ மன்னன் கவனித்தான்.
ஆறு பட்டைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே பட்டை போல் காட்சியளிக்கும்படி செய்யப்பட்டிருந்தாலும் மொத்தத்தில் ஏதோ ஓலைச்சுவடி போன்ற ஒரு அமைப்பை அவை பெற்றிருந்தன. இந்தத் தந்தச் சுவடிகளை
ஒவ்வொன்றாகப் புரட்டினான் விஜயாலயன். ஆனால், அந்தப் பட்டைகள் எதிலும் எந்தவித ரகசியமும் குறிக்கப்படாமையால் அவை முதுகுக்குப் புஷ்டியளிக்கவே புகுத்தப்பட்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான். ஆகையால்
இதை நான் ஏன் பிரித்தேன் என்ற எண்ணத்துடன் அவற்றை மீண்டும் இணைத்துப் பழையபடி முதுகில் புதைத்துவிடலாமென்று எண்ணிய சமயத்தில் சட்டென்று ஒரு யோசனை தோன்றவே மோகனச் சிலையிலிருந்த மாணிக்கங்களைக்
கையில் கொட்டிக்கொண்டு எழுந்திருந்தான். அவற்றைப் பஞ்சணையில் வைத்துவிட்டுப் பக்கத்தில் தந்தப் பட்டைகளையும் வைத்தான். ஒரு விநாடி பெரிதும் பிரமித்து நின்றான்.
மாணிக்கங்களின் செவ்விய ஒளிவீச்சில் பக்கத்திலிருந்த தந்தப் பட்டைகளில் பச்சை நிற எழுத்துக்கள் தோன்றலாயின. மாணிக்கங்களுக்கும் பட்டைகளுக்கும் ஏதோ சம்பந்தமிருக்க வேண்டுமென்று உணர்ந்து கொண்ட சோழ
மன்னன் பஞ்சணைக்கருகில் தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து மாணிக்கங்களின் ஒளியில் முதல் பட்டையை எடுத்து நீட்டினான். சிறிதும் அழியாது அன்றுபோல் தீட்டப்பட்ட பச்சை நிற எழுத்துக்கள் அவன் கண்களுக்கு
மிகத்தெளிவாகத் தென்பட்டன. முதல் பட்டையில் தீட்டப்பட்டிருந்தன, “புகார் மன்னன் இளஞ்சேட் சென்னி தனது பரம்பரைக்கு எழுதும் மடல்” என்ற சொற்கள். அந்தச் சொற்களுக்குக் கீழே பதினேழு சின்னஞ்சிறு சூரிய பிம்பச்
சித்திரங்கள் தெரிந்தன. அவற்றின் அழகை நீண்ட நேரம் பருகிய விஜயாலயன், அந்தத் தந்த ஓலையைப் புரட்டினான். பின்பக்கத்திலிருந்து தொடர்ச்சியாக வாசகங்கள் சின்னஞ்சிறு எழுத்துக்களில் தெரிந்தன. ஒவ்வொன்றிலும் ஆறு
வரிகள் இருந்தன. பக்கங்களுக்குத் தமிழ் இலக்கங்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
அந்தப் பக்கங்களை மிக மெதுவாக ஊன்றிப் படித்தான் விஜயாலயன். அவற்றில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
“இளஞ்சேட் சென்னி சொல்கிறேன், கேள். இதை ஒருவன் தான் பிரிக்க முடியும். அவன் பெயருக்கும் வெற்றிக்கும், பொருத்தமிருக்கும் அந்த வெற்றி பொருள்படும் படியாக வேறு மொழியில் இருக்கும். அவன் இதைக் கேட்ட
நாளிலிருந்து ஒரு மாத காலத்தில் பேரரசனாவான். அவன் இடும் வித்து சோழப் பேரரசை நிறுவும், பெருக்கும். அடுத்த பதினொரு தலைமுறைகளில் சோழர் அரசு பெரிதும் விரிந்து கடலுக்கு அப்பாலும் செல்லும். அப்படி வித்திடும்
எனது பரம்பரைச் செல்வன் வேறு ஆசாபாசங்களுக்கு இடமளிக்க மாட்டான். கர்ம வீரனாகச் செயல்புரிவான். அந்த சாம்ராஜ்யத் தலைநகரம் இப்போதுள்ள இரு தலைநகரங்களான புகாரிலும் இருக்காது, உறையூரிலும் இருக்காது. இந்தப்
பட்டையை அவன் தொடும் காலத்தில் புகார் சீரழிந்து கிடக்கும். உறையூர் பலவீனப்பட்டுக் கிடக்கும். ஆகவே இரண்டையும் அவன் துறந்து வேறு நிலையான இடத்தில் தலைநகர் அமைப்பான். அந்தத் தலைநகரில் பல அரசரும்
சோழர்களிடம் தஞ்சமடையவார்களாதலால் அது தஞ்சை எனப்படும். இந்த ஓலையை என் குலத்தான் கையிலெடுக்கும் வரை தமிழகம் இருளில் மறைந்து கிடக்கும். இதை அவன் எடுத்தபின்பு இந்த மாணிக்கங்களின் ரத்த ஒளி போல்
எதிரிகள் ரத்தம் தமிழகத்தில் பெருகியோடும். இருந்த இருள் அந்த ஒளியில் அழியும். இந்த சிலையும் நாகத்தின் ரத்த பலியால் கண்டெக்கப்படும். அதைக் கண்டெப்பவன் பெயர் வரலாற்றில் வராது. நாகசர்ப்ப சாபம் அது. ஆனால் அவன்
வாள் சோழப் பேரரசை நிறுவ உதவும்.”
அந்த ஆறு பட்டைகளில் இவ்வளவுதானிருந்தது. கடைசிப் படையின் பின்புறத்தில் ஒரு குறிப்பு மட்டும் இருந்தது. “இந்தச் சுவடிகளைப் பழையபடி சிலையில் மறைத்துத் தைத்துவிடு. கிழக்கே கடலருகில் ஓரிடத்தில் புதைத்துவிடு.
அந்த இடத்துக்கு நாகப்பட்டினம் என்று பெயர் வரும். மீண்டும் இது நாகதேவதையால் பாதுகாக்கப்படும். இந்த வரிகள் தமிழ் தந்த முனிவர் அகத்தியர் நாடியிலிருந்து எடுக்கப்பட்டவை” என்று காணப்பட்டது குறிப்பில். கீழே பதினொரு
சூரிய பிம்பங்களும் காணப்பட்டன. அதில் பதினொரு தலைமுறைகளின் அரசர் பெயர்களும் மிக நுணுக்கமாகக் குறிக்கப்பட்டிருந்தன. அவற்றின் தலையில் இருந்தது ஆதித்தன் என்ற பெயர். “இந்த சிலை என் தாயின் உருவம் பெற்றது”
என்றும் இருந்தது.
இந்த அற்புதத்தைப் படித்த விஜயாலயன் நெடுநேரம் மண்டியிட்ட நிலையிலிருந்து எழுந்திருக்கவில்லை. மீண்டும் மீண்டும் இளஞ்சேட் சென்னியின் தீர்க்கதரிசனம் அவன் புத்தியில் நடமாடி பெரும் பிரமிப்பை அளித்தது. “ஆறு
நூற்றாண்டுகளுக்குப் பின்பாக வரப்போவதைச் சொல்ல ஒரு நாடி இருக்குமானால் அது தமிழ்நாட்டுக்குச் சொத்து. அதை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தன்னுள் சொல்லிக் கொண்டான். பிறகு சிலைக்குள் அந்தத் தந்த
பட்டைகளைச் சரியாக அடுக்கி மிக மெதுவாகத் திணித்தான். பிறகு பயபக்தியுடன் அதன் முதுகையும் தைத்தான் பழையபடி. பிறகு கீழே விழுந்திருந்த மெழுகுத் தூள்களைக் கையால் திரட்டிக் கொண்டு அறைச் சாளரத்தின் மூலம்
வெயிலில் காட்டினான். அந்த சாதாரண வெயிலுக்கும் மெழுகு உருகும் அற்புதத்தைக் கண்ட சோழ தேவன் அதை மீண்டும் சிலையின் முதுகில் தடவி அழுத்தினான்.
அதற்குப் பிறகுதான் கதவைத் திறந்து அமைச்சரை அழைத்தான். அவன் அழைப்பைக் கேட்ட இரு காவலர் அமைச்சரை அழைக்க ஓடினார்கள். சற்று நேரத்தில் அமைச்சரும் வந்தார், அரச மக்களும் வந்தார்கள். அவர்கள் மூவரையும்
நோக்கிய விஜயாலயன், “நீங்கள் அனைவரும் நீராடியாகிவிட்டீர்களா?” என்று விசாரித்தான் சற்று சலனப்பட்ட குரலில்.
“நீராடி விட்டோம்” என்று மற்றவர்களுக்குப் பதிலாக ஆதித்தனே பேசினான்.
“சரி, எல்லோரும் பூஜாக் கிரகத்துக்கு வாருங்கள்” என்று அழைத்துக் கொண்டு உப்பரிகைப்படிகளில் இறங்கிச் சென்றான் விஜயாலயன்.
மூவரும் அறையில் வந்தபோதே மன்னன் கண்களில் ஏதோ ஒரு அற்புத ஒளி இருப்பதைக் கண்டார்கள். அவன் பார்வையில் மட்டுமின்றி நடையிலும் பிரமிப்பும் ஏதோ ஒருவித நடையிலும் கனவும் இருப்பதை மூவரும் பார்த்தார்கள்.
ஆனால், யாரும் அதைப்பற்றி மன்னனைக் கேட்கவில்லை. கனவில் நடப்பவன்போல் மோகனச்சிலையைக் கைகளில் ஏந்தி முன்னே மன்னவன் நடக்க, பின்னால் மற்ற மூவரும் நடந்து சென்றார்கள். நேராக பூஜை அறையை நாடிய
மன்னன் சட்டென்று அதன் வாயிலிலேயே நின்று எதையோ உற்றுக் கேட்டான். அமைச்சர் காதில் கூட அந்த ஒலி கேட்டதால் அவரும் பிரமித்து நின்றார். வெளியே பல சங்குகள் முழங்கும் ஒலி கேட்டது. அந்த ஒலி வரவர வலுத்து
அரண்மனையை அடைந்தது. பெரிதாக யாரோ வேதம் சொல்லும் கீதம் அரண்மனை வாயிலை ஆக்கிரமித்தது.
அரசன் அமைச்சரை நோக்கினான். அமைச்சர் அதன் குறிப்பறிந்து வேகமாக வெளியே நடந்தார். அரண்மனைப் பெருவாயிலில் நினைக்கவும் முடியாத விசித்திரத்தைக் கண்டார். அங்கு சங்கரநாரயணன் நின்று கொண்டிருந்தார் பத்து
வேதியர்களுடன். அமைச்சரைக் கண்டதும், “அச்சுதரே! எங்களைப் பூஜை அறைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கட்டளையிட்டார்.
அச்சுதர் அவர் திருவடிகளில் வணங்கினார். பிறகு ஏதும் பேசாமல் வழிகாட்டி முன் சென்றார். சங்கரநாராயணன் வேதத்தைப் பலமாகச் சொல்லிக்கொண்டு பின்தொடர்ந்தார். பூஜை அறைக்கு முன்பு வந்ததும், “சோழ
சாம்ராஜ்யாதிபதியே நீ நீடுழிவாழி என்று வாழ்த்தி விட்டுக் கைகளை நீட்டி “அந்தச் சிலையை இப்படிக் கொடு” என்று கேட்டார்.
“சேரமன்னர் குருநாதரே! இங்கு எப்பொழுது வந்தீர்கள்? எதற்காக?” என்று கேட்டான் சோழன்.
“இந்த மாதாவைப் பிரதிஷ்டை செய்ய. உன் சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரக் கல் நட” என்றார் சங்கரநாராயணன்.
சோழ தேவன் மிதமிஞ்சிய பிரமிப்பால் பேசவில்லை. சிலையை அவர் கையில் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்ட சங்கரநாராயணன். தலையைத் திருப்பித்தன் பின்னால் வந்திருந்த வேதியருக்கு ஏதோ சைகை செய்ய, வேதியர்கள்
பெரும் கோஷத்துடன் மந்திரங்களை ஓதிக் கொண்டு கைகளிலிருந்த கமண்டலங்களிலிருந்த காவிரிநீரைப் பூஜை அறையில் தெளித்தார்கள். பிறகு சங்கரநாராயணன் சிலையுடன் பூஜை அறையில் நுழைந்து சிலையை அங்கிருந்த
சுடலையாடும் சிவமூர்த்தியின் திருவடிகளில் வைத்தார். பிறகு பிரதிஷ்டா மந்திரங்களை ஓத முற்பட்டார்…
அப்பொழுது ஒரு சந்தேகம் கேட்டான் விஜயாலயன். “குருநாதரே! கங்கா ஜலம் கொண்டல்லவா பிரதிஷ்டைக்குச் சுத்தி செய்வுது வழக்கம்” என்று. வேதமந்திரங்களை ஓதமுற்பட்ட சங்கரநாரயணன், சங்கரவர்த்தி! கங்கையினும்
புனிதமானது காவிரி. அவள் மகா பதிவிரதை. எந்த அகத்திய நாடியிலிருந்து உன் குலத்தின் பிற்காலம் எழுதப்பட்டதோ அந்த அகத்தியரின் தேவிதான் காவிரி. அவள் அளிக்கும் உயிர் நீரைவிட சுத்தமானது உலகத்தில் கிடையாது” என்று
கூறி விட்டு மற்ற வேதியருடன் மந்திரங்களை ஓதினார். சிலைப் பிரதிஷ்டை முடிந்ததும் மன்னனுக்கும் மற்றோர்களுக்கும் தனது கமண்டல தீர்த்தையும் பூஜா புஷ்பங்களையும் பிரசாத மாக வழங்கினார். பிறகு மன்னனை நோக்கி,
“மன்னவா! இது நாகப்பட்டினம் செல்ல காலம் வரும்போது நானே வந்து எடுத்துப்போகிறேன். அதுவரை இதை யாரும் தொட வேண்டாம்” என்று உத்தரவிட்டார். மேலும் சொன்னார், “மன்னவா! விஜயாலயா! உன் திக் விஜய காலம் வந்து
விட்டது, நாளைக்கே தஞ்சைமீது படையெடுத்துச் செல். தாமதிக்காதே” என்று.
மன்னனும் மந்திரியும் மக்களும் பிரமித்து வாயடைத்து நின்றனர். அடுத்துப் புன்முறுவல் செய்தார் சங்கரநாராயணன் “அஞ்சாதே! உன் படைத்தலைவன் நாளைக்கு வந்து சேருவான்” என்றார்.
மன்னன் பிரமை அளவு மீறிவிட்டதால் அவன் ஏதும் பேசவில்லை. “ஆக்ஞை குருநாதரே!” என்று தலைவணங்கினான்.
அடுத்த நாளே உறையூர் போர்க்கோலம் பூண்டது. சங்கரநாராயணன் சொன்னபடி இதயகுமாரனும் வந்து சேர்ந்தான். வந்த நிலைதான் சரியில்லை.