Mohana Silai Ch 45 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
மோகனச்சிலை – சாண்டில்யன்
அத்தியாயம் – 45 புது ஓலை! புரிந்த விவரம்!
Mohana Silai Ch 45 | Mohana Silai Sandilyan | TamilNovel.in
உறையூர் அரண்மனையின் மந்திராலோசனை அறையில், இருபுறமும் சிங்கத்தலைகள் கடையப்பெற்ற மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த விஜயாலய சோழதேவன், எதிரே கைகட்டி நின்றிருந்த அச்சுதப் பேரறையரை நோக்கி
‘செந்தலையிலிருந்து புதிதாக ஏதாவது செய்தி உண்டா?” என்று வினவினான்.
அச்சுதப் பேரறையர் உடனடியாகப் பதில் செல்ல முடியாமல் தயங்கினார். “உண்டு. ஆனால், நம்பத்தகாத தாயிருக்கிறது” என்று கூறினார் தயக்கத்தைக் குரலிலும் காட்டி.
விஜயாலயன், அமைச்சரின் தயக்கத்தைக் கவனித்தானென்றாலும் அதைப் பற்றி அக்கறை ஏதும் காட்டாமல் “அச்சுதரே! உலகத்தில் நம்பத்தகாதது ஏதேதோ தினம் நடக்கிறது. ஆனால், அவையெல்லாம் அசத்தியம் என்று
சொல்வதற்கில்லை. உண்மையும் சில சந்தர்ப்பங்களில், நம் பத்தகாத மாதிரி இருக்கிறது. அதற்காக அவற்றை நாம் ஒதுக்கிவிட முடியாது” என்று கூறி இளநகை கொண்டான்.
சோழவேந்தன் சொற்களை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த அச்சுதர், “ஆம் மன்னவா! தாங்கள் சொல்வதுபோல் நம்பத்தகாத விஷயங்களில் உண்மையிருப்பதும் உண்டு. ஆனால், செந்தலையிலிருந்து இன்று
காலை கிடைத்துள்ள செய்தியை என்னால் அடியோடு நம்ப முடிய வில்லை” என்றார். இருப்பினும் தங்களிடம் சொல்வது எனது கடமை. இங்கு வந்தாளே ஒரு பெண், இதயகுமாரனை அழைத்துக்கொண்டு. அவள் செந்தலை
இளவரசியாகி விட்டாளாம்” என்று கூறினார்.
இந்தச் செய்தியால் விஜயாலயன் எந்தவித அதிர்ச்சியோ வியப்பையோ காட்டுவானென்று அச்சுதர் நினைத்திருந்தால் ஏமாந்தே போனார். அந்தச் செய்தியை சர்வசகஜமாக வர வேற்ற சோழ மன்னன், “இது நாம் எதிர்பார்த்ததுதானே?”
என்றான்.
“நாம் எதிர்பார்த்ததா!” அச்சுதர் பதிலில் வியப்பு மிதமிஞ்சி ஒலித்தது.
“ஆம். அந்தப் பெண்ணை இங்கு பார்த்ததுமே அவள் அரசகுலத்தைச் சேர்ந்தவள்தானென்று நினைத்தேன். அவள் தோரணை, பேச்சு எல்லாமே அப்படியிருந்தது. உமக்கு மட்டும் அப்படித் தோன்றவில்லையென்று நினைக்கிறேன்”
என்று சொன்னான் சோழ மன்னன்.
“இல்லை. அவள் முத்தரையர் அரண்மனைப் பணிப்பெண் என்பதை முன்னதாக அறிந்திருந்தேன்.”
“அதனால்?”
“பணிப்பெண் இளவரசியாக முடியாதென்று நினைத்தேன்.”
“நீர் நினைத்தது இருக்கட்டும். அவள் தோரணையைப் பற்றி என்ன நினைத்தீர்?”
“தோரணையா!
“ஆம் அச்சுதரே! திரும்பிச் செல்லும்போது தான் இங்கு வருவதாயிருந்தால் சோழநாட்டு மகாராணியாக வருவதாகச் சீறிவிட்டுப் போனாளல்லவா?” என்று வினவிய மன்னன், “அச்சுதரே! அந்தப் பெண்ணிடம் வீரமிருந்தது. பேச்சில்
உறுதியிருந்தது. அவள் இளவரசியானதில் வியப்பில்லை. பெரும்பிடுகர் யாரையாவது ஒரு பதவிக்கு உயர்த்தினால் தகுதியில்லாமல் உயர்த்தமாட்டார்” என்றான்.
“நீங்கள் போகிற போக்கைப் பார்த்தால் இப்பொழுது அவள் இங்கிருந்தால் உங்கள் மகனுக்கு அவளை மணமுடித்து விடுவீர்கள் போலிருக்கிறது!” என்று கேட்டார் அச்சுதர்.
“அந்த வேலை நமக்கிருக்காது. ஆதித்தனும் அந்தப் பெண்ணுமே திருமணத்தை முடித்துக்கொள்வார்கள். பேருக்கு நமது அனுமதியைக் கேட்பார்கள்” என்ற சோழமன்னன் புன் முறுவல் கொண்டான். அந்தப் புன்முறுவலில்
ஆனந்தம் பொங்கியதை அமைச்சர் கண்டார்.
அரசன் மகிழ்ச்சியைக் கண்டதால் சிறிது சினமும் அடைந்த அச்சுதப் பேரறையர், “மன்னவா! இது முறையல்ல” என்றார் குரலில் தமது உணர்ச்சியை லேசாகக் காட்டி.
“எது?’ என்று கேட்டான் மன்னன்.
“குழந்தைகளை அவர்கள் இஷ்டப்படி நடக்கவிடுவது” என்றார் அச்சுதர்.
“சரி! அவர்களை நமது இஷ்டப்படி நடக்கச்செய்வது எப்படி?” என்று கேட்டான் மன்னன்.
“மன்னர்களுக்குத் தனி வாழ்க்கை கிடையாது, அரசு நலத்தை முன்னிட்டுத்தான் அவர்கள் வாழ்க்கை என்று திட்டமாகச் சொல்லிவிடுங்கள்” என்றார் அமைச்சர்.
இதைக் கேட்டதும் விஜயாலயன் வாய்விட்டே நகைத்தான். “அச்சுதரே! அதைச் சொல்லும் உரிமையை உமக்கே அளித்துவிட்டேன். நீங்களே செய்யுங்கள் அந்தப் பணியை” என்றான் நகைப்பின் ஊடே.
“மன்னவா! இது விளையாடும் விஷயமல்ல” என்றார் அச்சுதர்.
“வினைதான்”.- மன்னன் குரலில் விஷமம் இருந்தது.
“வினையா?”
“ஆம்.”
“எப்படி மன்னவா?”
“நீர் படைத்தலைவனை அழைத்துவர நந்தவனத்துக்குப் போனீரல்லவா?”
“ஆம்.”
“அங்கு படைத்தலைவன் உம்மைச் சனியன் என்று அழைத்ததாகச் சொன்னீரே!”:
“நேர்முகமாக அழைக்கவில்லை. ஏதோ காமப்பித்தனின் உளறல் அது.”
“காமுகர் இருவராயிருக்க வேண்டுமே.”
“ஆம். இன்னொருவர்…”
“என் மகள் கண்ணழகி.”
“தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை.”
“அப்படியானால் அவளைக் கண்டிக்க என்ன செய்தீர்!”
ராஜதந்திரத்தில் இணையற்றவரென்று பெயர் பெற்றிருந்த அச்சுதர் இதைக் கேட்டுப் பிரமித்தார். “மன்னவா! இளவரசியின் விஷயம் வேறு. இருவரும் சோழநாட்டவர்” என்று இழுத்தார்.
“நாட்டுக்கு நாடு, மக்களுக்கு மக்கள் நீதி மாறுமா?” என்று வினவினான் சோழதேவன்.
“ஆகாது மன்னவா! இருப்பினும் முத்தரையருடன் சம்பந்தம்…” என்று இழுத்தார், அலுத்துக்கொண்டார், அச்சுதப் பேரறையர்.
அச்சுதப் பேரறையருக்கு முத்தரையரிடம் இருந்த வெறுப்புக்குக் காரணம் சோழ மன்னனுக்குத் தெரிந்தே இருந்தது. தனது குடும்பத்துக்கும் இதயகுமாரன் குடும்பத்துக்கும் முத்தரையர்களால் ஏற்பட்ட கொடுமையால் அவர் மனம்
நீதியைக் கவனிக்க மறுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான் விஜயாலயன். ஆகவே மெள்ளச் சொன்னான் அச்சுதரை நோக்கி. “அச்சுதரே! ஒரு தலைமுறையின், மக்களின், மக்களை ஆள்பவர்களின் அநீதிகளுக்காக மனிதனின்
அடிப்படைக் குணங்களையோ உணர்ச்சிகளையோ மாற்ற முடியாது. நீர் எந்த முத்தரையரை வெறுக்கிறீரோ அந்தக் குலத்துப் பெண்தான் இதயகுமாரனைக் காத்து இங்கு அழைத்து வந்தாள் என்பதை நீர் மறுக்க முடியாது. அதுவும்
ஈவிரக்கமற்ற இரும்பு மனத்தினரான பெரும்பிடுகர் இந்தப் பெண்ணின் இஷ்டத்துக்கு வளைந்திருக்கிறார் என்பதையும் நீர் கவனிக்க வேண்டும். முத்தரையர் படை போருக்குச் சித்தமாகிவிட்டதாக நீரே சொன்னீர். நமது படைகளும்
சித்தமாயிருக்கின்றன. இனி போரை யாரும் தவிர்க்க முடியாது. காதலும் போரைப் போலத்தான். அதையும் யாரும் தடுக்கமுடியாது. விளைவது விளைந்தே தீரும். காதலைத் தவிர்க்கக் கூடியது சாதல் ஒன்றுதான். அந்த சாதலையும் நாம்
தவிர்க்க முடியாது. தவிர்க்க முடியாத விஷயங்கள் இம்மாதிரி உலகத்தில் பல இருக்கின்றன. இதற்கெல்லாம் தனி மனிதன் கவலைப்படுவது தவறு” என்று.
மன்னன் விளகக்கத்தைக் கேட்ட அச்சுதர் மலைத்தார். சோழதேவன் விவரணத்தில் தத்துவங்கள் பல அடங்கியிருப்பதைக் கண்டார். அதற்குமேல் தாம் மன்னனிடம் எதைச் சொன்னாலும் செல்லாது என்பதைப் புரிந்து கொண்டதால்
“வருகிறேன் மன்னவா!” என்று கூறி விட்டுத் திரும்பிச் செல்ல முயன்றார்.
“ஒரே ஒரு விஷயம்” என்று கூறிய மன்னன் குரல் அவரைத்தடுத்து நிறுத்தி மறுபடியும் மன்னனை நோக்க வைத்தது.
“அந்தப் பெண்…” என்று துவங்கினான் மன்னன்.
“அவளுக்கு என்ன?” அமைச்சரின் குரலில் சலிப்பு இருந்தது.
“அவள் எனக்கு மருமகளாக வருவாளானால் அதை விட சோழ நாட்டுக்கு நல்லது எதுவும் இல்லை” என்றான் விஜயாலயன். அவன் முகத்தில் பெரிதும் சாந்தி நிலவியது. குரலில் பெருமை துலங்கியது.
“அப்படியா மன்னவா!”- அச்சுதர் வெறுப்பைக் காட்டினார்.
“அவள் வீராங்கனை. என் மகனும் வீரன். இருவர் வயிற்றிலும் பிறக்கும் மகன் மகாவீரனாயிருப்பான். கரிகால் பெருவளத்தானுக்குப் பிறகு சாம்பல் பூத்துவிட்ட சோழர்கள் வீராக்கினி மீண்டும் கொழுந்துவிட்டு எரியும்” என்ற சோழ
தேவன் குரலில் பெரும் திருப்தியிருந்தது, கண்களில் கன விருந்தது.
அந்த சமயத்தில்தான் அமைச்சரையும் அரசனையும் அசரவைத்த அந்தச் செய்தி வந்தது. செய்தி ஓலையை ஏந்தி வந்த வீரன் அமைச்சர் அனுமதியுடன் உள்ளே வந்து ஓலையை நீட்டினான். அதை வாங்கிப் படித்த அமைச்சர்.
முகத்தில் விபரீதக்களை சுடர்விட்டது. விஷயத்தை அவரே சொல்லட்டுமென்று மன்னன் காத்திருந்தான். ஓலையை ஒரு முறைக்கு இரு முறை படித்த அச்சுதர் அச்சம் பெரிதாக விரிந்தது. அந்த அச்சத்துடன் ஓலையை மன்னனிடம்
நீட்டிய அச்சுதர், “இதை நீங்களே படிப்பது நல்லது” என்றார்.
விஜயாலயன் அந்த ஓலையைப் படித்ததால் அச்சுதரைப் போல் குழம்பவில்லை, அச்சப்படவுமில்லை. “இதை எதிர் பார்த்தேன்” என்றான்.
“எதிர்பார்த்தீர்களா மன்னவா!” என்றார் அச்சுதர் பிரமிப்புடன்.
“ஆம்!”
“இப்பொழுது என்ன செய்ய உத்தேசம்?”
“நாளைக்கு மறுநாள் நமது படைகள் செந்தலை நோக்கி நகரும்.’
“இந்த ஓலை…?”
“வெறும் கண்கட்டு வித்தை. பெரும்பிடுகன் சிகண்டியல்ல. மகாவீரன்” என்ற விஜயாலயன், “இந்த ஓலையைக் கொண்டு வந்தவனைக் காவலில் வையுங்கள். இரவு விசாரிக்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்தான் ஆசனத்தைவிட்டு.
“தூதனைக் காவலில் வைப்பது சோழர் தர்மமல்ல” என்று சற்றுக் கடுமையாகவே சுட்டிக்காட்டினார் அச்சுதர்.
“இவன் தூதனல்ல” என்ற விஜயாலயன் அடுத்த அறையை நோக்கி நடந்தான் ஓலையைத் திரும்பவும் அமைச்சரிடம் கொடுத்து விட்டு. அமைச்சர் அந்த ஓலையை வாங்கித் திரும்பவும் ஆராய்ந்தார். அவருடைய முகத்தில் விவரிக்க
இயலாத பல உணர்ச்சிகள் தாண்டவமாடின.