Cheran Selvi Ch1 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 1. கற்சிலையான பொற்சிலை
Cheran Selvi Ch1 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
இளமதியின் இளம் பாதங்களையும் தளிர் விரல்களையும் கடலரசன் தனது அலைக்கரங்களால் ஆசையுடன் தழுவித் தழுவிச் சென்று கொண்டிருந்தாலும் மாலைக் கதிரவன் அவள் பொன்னிறமேனிக்கு ஈடு கொடுக்க முடியாத
தனது கிரணங்களை ஈர்த்துக் கொண்டு வெட்கத்தால் முகம் சிவந்து கடலுக்குள் மெள்ள மெள்ள மறைந்து கொண்டிருந்தானாதலால், அவனது கிரணங்கள் தங்கள் தோல்விக்குப் பழி வாங்கக் கடல் நீரில் கலந்து, அதன் ஓரப் பகுதிகளை
சிவக்க அடித்து, நீலக்கடல் நீருக்குச் சிவந்த சேலையைப் போர்த்த முற்பட்டன; இயற்கை விரித்த அந்தச் சிவப்பு நீர்ச்சேலைகூட இளமதியின் அழகிய உடலை ஆசையுடன் சுற்றிக் கிடந்த சீனத்து மெல்லிய பட்டைக் கண்டதாலோ அல்லது
அவள் கன்னச் சிவப்பைப் பார்த்துவிட்டதாலோ என்னவோ, பயந்து மிகத் துரிதமாக நீங்கத் தொடங்கியதால் கடல் நீரும் பழைய நீல நிர்வாண நிலைக்குத் துரிதமாக வந்து கொண்டிருந்தது. அலைகளை அலட்சியம் செய்து நடந்து சென்ற
இளமதி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தா ளாகையால். தனது பங்கய விரல்களுக்கு மெட்டி போட அலைகள் வந்து வந்து காலின் மீது தள்ளிய கிளிஞ்சல்களையும் சிறு நத்தைக் கூடுகளையும் இலட்சியம் செய்யாமல் உதறி நடந்தாள். அவள்
நடை மெதுவாக இருந்த காரணத்தினால் இடை அளவுடன் அசைந்து, அதற்குக் கீழே பின்புறமும் மேலே முன்புறமும் எழுந்த அழகுகளை அதிகமாக அசைக்காவிட்டாலும், அந்தச் சின்ன அசைவுகூட அவற்றின் எழிலை ஆயிரம் மடங்கு
அதிகமாகவே எடுத்துக் காட்டவே, அவற்றை ஆசையுடன் பார்ப்பவை போல சற்று தூரத்தில் பறந்த பறவைக் கூட்டமொன்று அவளை நோக்கி இறங்கத் தொடங்கியது. ஆனால் அவள் மலர்க்கரங்களில் ஒன்று மேலே எழுந்து சற்றே
கலைந்த குழலைச் சரிப்படுத்த முயற்சிக்கவே, பறவைக் கூட்டம் அச்சுற்று ஜிவ்வென்று மீண்டும் வானத்தை நோக்கிப் பறந்து சென்றது. இவை போகட்டும், மேலே ஓடிய சிறு மேகத்துண்டு ஒன்று திடீரெனத் தன் கருமை நிறத்தை ஏன்
சிவப்பாக மாற்றிக் கொண்டது? இளமதியின் கருவிழிகளுக்கு இணை கொடுக்க முடியாத காரணத்தாலா? அல்லது கமல முகத்துக்குக் கண்ணாடி காட்டும் உத்தேசத்தாலா? ஏதோ ஒன்றுதான் இருக்கவேண்டும். இல்லையேல் அந்த மேகம்
வேறு வழி போகாமல் தரை வழி வர ஏன் முற்பட்டது?
இயற்கையையும் இப்படிப் பல வழிகளில் பழி வாங்கிய இளமதி, அந்த மாலை நேரத்தில் மனோகரமாகத் துலங்கிய கடலைக் கவனித்தாளில்லை. நூற்றுக் கணக்கில் ஆடி நின்ற சீனத்து மரக்கலங்களையும் விழி தூக்கிப் பார்த்தாளில்லை.
தன் பாதங்களையே பார்த்துக் கொண்டு மெள்ள நடந்து சென்றாள். சற்று நேரம் நடந்த பின்பு எதையோ நினைத்துக் கொண்டு சட்டென்று நின்று கடலுக்கு எதிரே இருந்த நகரப் பகுதியைத் திரும்பி நோக்கினாள். நேரம் போவது
தெரியாமல் நடந்துவிட்ட காரணத்தால், கதிரவன் அடியோடு மறைந்து முழுமதி வானத்தில் சஞ்சரிக்கத் துவங்கிவிட்டதை அறியா தபடியால், சேரன் தலை நகரின் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டதைக் கண்டு வியப்பும் பிரமிப்பும்
ஒருங்கே அடைந்து நின்றாள் இளமதி.
கொல்லம் தலைநகர் உலகத்திலேயே சிறந்த நகரம் போல் காட்சியளித்தது. இரவு தலைகாட்டத் தொடங்கிய அந்த நேரத்தில், * நேராய பெருவழி’ என்று சாசனங்களால் புகழப்பட்ட அந்த மாநகாந்தின் நெடுஞ்சாலை பரந்த சாலையாகவும்
இருந்ததால் அகலமான அதன் இரு புறங்களிலும் பெரு விளக்குகள் எரியத் தொடங்கின. அந்தப் பெருஞ்சாலைக்குக் குறுக்கிலும் நெடுக்கிலும் ஓடிய வீதிகளும் விரிவாயிருந்ததால், அவற்றின் இருபுறங்களிலும் கூடி பெருமாளிகைகள்
எழுந்து நின்று அம் மா நகரின் வளப்பத்துக்கும் பெருமைக்கும் சான்று கூறின. கடற்பகுதியை அடுத்து நின்ற பெரிய கடைவீதிகளில் எழுந்த இரைச்சலும், அந்த நகரின் வாணிபம் எந்த உச்ச நிலையை அடைந்திருந்தது என்பதை
விவரித்துக் கொண்டிருந்தது. கடலோரமிருந்த கடைகளின் உச்சிகளில் ஆடிய பல நாட்டுக் கொடிகள் அந்த நகரில் யாருக்கும் வணிகத்தடை கிடையாதெம் பதைத் தெளிவுபடுத்தினாலும், அக்கடைகளை அணுகு முன்பு
வரிசையாயிருந்த மூன்று சுங்கச் சாவடிகளில் சுங்கம் செலுத்தாமல் யாரும் உள்ளே செல்ல முடியா தென்பதை அறிவுறுத்த, புரவிகளில் குறுக்கே சுவர் போல் வீரர் படையொன்று நின்று கொண்டிருந்தது.
இந்தப் ‘படை வீரர் சுவரை’ அணுக பெரிய மூட்டைகளுடன் படகுகளில் இறங்கி மணலில் நடந்து சென்று கொண்டிருந்த வெளிநாட்டு வணிகர்கள் விட்ட பெருமூச்சு கொல்லம் துறைமுகத்தின் கடற்காற்றுடன் கலந்துவிட்ட
காரணத்தால் அவர்கள் பெருமூச்சு இளமதியின் காதில் விழவில்லையே தவிர, அவர்களின் தள்ளாடிய நடையைக் கண்டு அவர்கள் கஷ்டத்தை உணரவே செய்தாள். அப்படிச் சென்ற சீனர்கள், அராபியர்கள், பணத்துக்கு மூட்டை தூக்கும்
அவர்கள் கருப்பு அடிமைகள் இவர்கள் அனைவரையும் நோக்கிய இளமதி, ‘ஒருவன் பணம் சேர்க்க எத்தனை பேர் அடிமையாக வேண்டியிருக்கிறது?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.
துறைமுகத்திலிருந்து சற்று எட்டவே நின்ற கப்பல்களிலிருந்து படகுகள் பல வந்து கொண்டிருந்ததை தனது சிந்தனையைச் சிறிது கலைத்துக் கொண்டு இளமதி பார்த்தாளானாலும், அந்தப் படகுக் கூட்டங்கள் அலை களில் மிதந்து
வந்த அழகே அவளின் கண்களைப் பறித்தன வென்றாலும், சிந்தனை மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடவே சற்று நின்று பார்த்தவள் மேலும் அலை ஓரம் நடக்கத் தொடங்கினாள். கொல்லத்தின் வாணிபம் கொட்டிய கொள்ளைச்
செல்வமும் இயற்கை அழகும் உலகத்திலேயே இணையற்றதென்று அவள் நம்பினாலும் அவற்றில் எள்ளளவும் தனக்குப் பயன் இல்லையென்பதை அவள் உணர்ந்ததால் அவள் அழகிய முகத்தைச் சிந்தனை மேகம் மீண்டும் மறைக்கவே
செய்தது. அதைத் தொடர்ந்து அவள் விட்ட பெருமூச்சிலும் துன்பம் கலந்திருந்தது. அந்தத் துன்பத்தின் விளைவாகவோ என்னவோ, அவள் மீண்டும் நகர் நோக்கித் திரும்பி அலைகளைவிட்டுத் துறைமுகத்தின் மணற்பாங்கில் நடக்க
முற்பட்டு ஒரு காலை அலையிலிருந்து எடுத்து வைத்தாள். அந்தச் சமயத்தில் எழுந்தது அந்த ஒலி. அவள் பக்கத்தில் சர்ரென்று வந்து நின்ற படகிலிருந்து குதித்த வாலிபன் “உங்களைத்தான், சற்று நில்லுங்கள்” என்று குரல் எழுப்பினான்
மிக அவசரமாசு.
இளமதி சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்துத் தன் கழுத்தில் அணிந்திருந்த ஒரே ஒரு முத்தாரத்தைக் கையால் நெருடினாள். அப்படி முத்தா ரத்தை அவள் நெருடியிராவிட்டால் அந்த வாலிபனும் அவளை நோக்கி வாயைப்
பிளந்திருக்க மாட்டான். நிலை குத்திய கண்களுடன் நின்றிருக்கவும் மாட்டான், முத்தாரம் வளைந்து கிடந்த இளமதியின் செக்கச் செவேலென்ற கழுத்து அந்த வாலிபனைத் திகைக்க வைத்தது. அவள் நெருடிய விரல்களின் அழகும்
முத்தாரத்தைப் படியவொட்டாமல் எழுப்பி நிறுத்திய மார்பகத்தின் இருபகுதிகளும் அவனைப் பிரமிக்க அடித்திருந்தன. தவிர அவற்றை மூடியிருந்த சீனத்துச் சிவப்புப் பட்டில் பூ அலங்காரம் ஏதும் இல்லாததாலும் உள்ளே தெரிந்த பூ
மொட்டுகளை மறைத்த வெள்ளைச் சிறு கஞ்சுகம் தனது கடமையைச் செலுத்த முடியாமல் தவித்ததாலும், வாலிபன் இதயம் திக்கு திக்கென்று அடித்துக் கொண்டதால் அவன் அச்சத்தால் திரு திருவென விழித்தான்.
அவன் விழிப்பைக் கண்ட இளமதி இளநகை கொண்டாள். அந்த வாலிபன் மிக அழகாயிருந்தாலும், வீரனாகவே தோன்றினாலும், தன்னைக் கண்டதும் அவன் திடுக்கிட்டது அவளுக்கு ஓரளவு இன்பத்தையே தந்ததால் அதுவரை
சிந்தனையை அழுத்திய துன்பம் சிறிது விலகவும் செய்தது அவள் இதயத்திலிருந்து. ஆகவே அந்த வாலிபனை இளமதி நன்றாகவே நோக்கினாள்.
அவன் அதிக உயரமும் இல்லை, பருமனும் இல்லை. சற்று ஒல்லி என்று கூடச் சொல்லலாம். இருப்பினும் அவன் தேகம் நல்ல உறுதியுள்ள தென்பதை இரும்பு போன்ற நீண்ட அவன் கரங்கள் நிரூபித்தன. அவன் இடையில் தொங்கிய
வாள் அதிக நீளமில்லை தான். ஆனால் அதன் அகலம் எதிரிகள் யாரும் விரும்பத்தக்க அகலமல்ல என்பதை, அது அவன் இடையில் கட்டப்பட்டிருந்த முறையிலிருந்தே இளமதி புரிந்து கொண்டாள். அவன் கால்களில் அரபு நாட்டுச்
சராயைத்தான் அணிந்து கொண்டிருந்தான். மேலே ஒரு பட்டுச் சொக்காயிருந்தது. அதன் மீது ஒரு வீரச் சங்கிலியும் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் அவன் ஏதும் அணியாததால் சீராக வெட்டி விடப்பட்ட அவன் குழல்கள் காற்றில்
தாறுமாறாகப் பறந்துக் கொண்டிருந்தன மிக முரட்டுத்தனமாக.
அவள் தன்னை அளவெடுப்பதைப் பார்த்த வாலிபன் நகைத்தான் கலகலவென்று. அதனால் முகத்தில் சிறிது சினத்தைப் படரவிட்டுக் கொண்ட இளமதி, “ஏன் சிரிக்கிறாய்” என்று சீறினாள்.
அந்தச் சினத்திலும் குரலில் இனிமையிருப்பதை அந்த வாலிபன் உனர்ந்துகொண்டாலும் அவன் மட்டும் சிறிதும் சினம் கொள்ளாமலே பதில் சொன்னான், “நீங்கள் என்னை உற்றுப் பார்த்தது வேடிக்கையாயிருந்தது” என்று.
“என்ன வேடிக்கை அதில்” இளமதியின் குரலில் கடுப்பு இருந்தது.
“இளம் பெண்கள் வாலிபர்களை: உற்றுப் பார்க்கக் கூடாது.”
“அப்படியா!”
“ஆமாம்.”
“வாலிபர்கள் தனியாகச் செல்லும் இளம் பெண்களை அழைக்கலாமா?” இளமதியின் குரலில் உஷ்ணம் ஏறியது.
“அழைக்கும் காரணத்தைப் பொறுத்தது” என்று சொன்ன வாலிபன் “பெண்ணே! என்னை வீண் சண்டைக்கு இழுக்காதே” என்று கெஞ்சினான்.
“சரி உனக்கு என்ன வேண்டும் சொல்” என்று வினவினாள் இளமதி.
“அரண்மனைக்கு வழியைச் சொன்னால் போதும்” என்றான் இந்த வாலிபன்.
“அங்கு யாரைப் பார்க்க வேண்டும்?” என்று வினவினாள் அவள்.
வாலிபன் சிறிது தயங்கினான். “தவறாக நினைக்க வேண்டாம் ஒரு பெண்ணைப் பார்க்க வேண்டும் என்றான்.
“ஓகோ!” என்று நகைத்தாள் இளமதி,
“என்ன ஓகோ!” வாலிபன் குரலிலும் சிறிது சினம் தெரிந்தது.
“பெண்ணைப் பிடிக்க வந்திருக்கிறாய்…” என்றாள் இளமதி, வெறுப்புக் கலந்த புன்முறுவலைத் தன் சிவந்த அதரங்களில் படரவிட்டு.
“உளறாதே, அவளை நான் பார்த்ததே இல்லை” என்றான் வாலிபன்.
இது இன்னும் விந்தையாயிருந்தது இளமதிக்கு. “பார்த்ததே இல்லையா?” என்று கேட்டாள் வியப்புடன்.
“இல்லை.”
“அவள் பெயர்?”
“இளமதி.”
இதைக் கேட்ட அந்தப் பொற்சிலை கற்சிலையானாள்.