Cheran Selvi Ch19 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 19. விதானத்தில் ஒரு விசித்திரம்
Cheran Selvi Ch19 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
கவி சமுத்திரபந்தன் கண்விழித்தபோது தான் இருக்கும் இடம் எது என்பதைப் புரிந்துகொள்ள அவனால் முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தான் உண்மையாகவே விழித்துக் கொண்டாகி விட்டதா அல்லது தெரிவது சொப்பனமா
என்பதும் புரியவில்லை சமுத்திரபந்தனுக்கு. அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த நான்கு பேர்களைக் கண்டதும், நிற்பவர்கள் மனிதர்களா பிசாசுகளா என்பதை நிர்ணயிக்க முடியாத காரணத்தால் சொப்பனத்தில் பிசாசுகள் வருவது
நல்லதைக் குறிக்காது” என்று முணுமுணுத்தான் கவி. இத்தனையிலும் கையை நகர்த்திப் படுத்திருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்து “ நல்ல பஞ்சணையாகத் தெரிகிறது. என்னைக் கொண்டு வந்தவர்கள் யாராயிருந்தாலும் என்
அந்தஸ்தைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்று உள்ளூர எண்ணியதால் சிறிது புன்முறுவலையும் தனது அழகிய உதடுகளில் படரவிட்டுக் கொண்டான். இதோடு தலையில் வலி இருக்கவே அதை லேசாகத் தடவி அங்கிருந்த சிறு
முண்டைக் கண்டதும் தன்னை அடித்து அங்கு கொண்டு வந்தது அஜ்மல்கான் என்ற நினைப்பு வரவே “ஸலீம் ஸலீம்” என்று இருமுறை கூவி எழுந்து உட்கார முயன்று முடியாததால் படுத்த நிலையிலேயே கிடந்தான் கவி.
கவியின் செயல் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டு பதுமைகள் போல் நின்றிருந்த நால்வரும் அவன் ஸலீமின் பெயரை உச்சரித்ததும் தாங்கள் பதுமைகள் அல்லவென்பதைக் காட்ட நடந்து அவன் படுத்திருந்த கட்டிலுக்கு
அருகில் வத்தார்கள், “அரே கவி! உனக்கு என்னா வேணும்?” என்று கொச்சைத் தமிழில் கேட்டான் அவர்களில் ஒருவன்.
கவி தன்னைக் கேட்டவனைப் படுத்த வண்ணமே கூர்ந்து நோக்கினான். “என்னை இங்கு கொண்டு வந்தவர் வேண்டும்” என்றான்.
“கவி! நான் தான் அது. என்னா வேணும் சொல்” என்றான் சுற்றி நின்ற பயங்கரப் பிரகிருதிகளில் ஒருவன்.
“நீ அல்ல.” கவியின் பதில் திட்டமாயிருந்தது.
“நான் தான்.” அவனும் கடுமையாகப் பேசினான்.
“நீ கருவி.”
“நான்?”
“கருவி, அதாவது ஆயுதம். உனக்கு வேணாட்டுக் கவீச்வரனைக் கொண்டு வரும் அளவுக்குத் திறமையும் கிடையாது, புத்தியும் கிடையாது” என்று தடிப்பாகப் பேசினான் கவி.
இதைக் கேட்டதும் அந்த மனிதனின் மீசை தாடி. இரண்டுமே துடித்தன. தலையில் கட்டப்பட்டிருந்த பெரிய அரபுநாட்டுத் துணியை ஒரு முறை அவன் கையால் சரிப்படுத்திக் கொண்டான் கோபத்தை அடக்கிக் கொள்ள. ‘கவி! இன்னும்
ஒரு தரம் பேசினே உன்னை இங்கேயே கொண்ணுப் போடுவேன்” என்று சீறினான் அந்த மனிதன். அது எப்படி நடக்கும் என்பதை உணர்த்த இரு கைகளையும் மென்னியைப் பிடிக்கும் பாணியில் விரல்களை அகற்றியும் குறுக்கியும்
காட்டினான்.
ஆனால் கவியின் அசட்டுத் துணிச்சல் அபாரமாயிருந்தது. “என்னைக் கொன்றால் அந்த நுழை நரி ஸலீம் உன்னைக் கொன்றுவிடுவான். என்னைக் கொல்ல அழைத்து வரவில்லை அவன். எனக்குத் தெரிந்த ரகசி யத்தை வாங்கவே
இங்கு வரவழைத்திருக்கிறான்” என்று கவி கூறிக் கொண்டிருக்கையில் “உண்மை “ என்று சொல்லிக்கொண்டே அஜ்மல்கான் உள்ளே நுழைந்தான் கூடாரத்தின் திரையை விலக்கிக் கொண்டு.
அஜமல்கானின் வருகை மற்ற நால்வரையும் கட்டிலை விட்டு அகல வைத்தது. “கவி எப்பொழுது கண் விழித்தார்?” என்று புன்முறுவலுடன் வினவிக் கொண்டு கட்டிலுக்கு அருகில் வந்த ஸலீம் ‘.இவர்கள் உங்களைச் சரியாக
நடத்தினார்களா?” என்று வினவினான் கவியை நோக்கி.
அஜ்மல்கானை கவி தனது கூரிய விழிகளால் நோக்கினான். “இல்லை. என்னைக் கொல்வதாகப் பயமுறுத்தினான் ஒருவன்” என்றான் கவி பதிலுக்கு.
“அதை நானே கேட்டேன்” என்ற அஜ்மல்கான் கோபம் மிகுந்த விழிகளை அந்த நால்வர் மீதும் திருப்பினான். அவர்களில் கவியைக் கொல்வதாகப் பயமுறுத்தியவன் ‘நவாப்! கவி எங்களைத் திட்டினான்” என்றான் சிறிது நடுக்கத்துடன்.
“வசை பாடினாரா?” என்று நல்ல தமிழில் கேட்டான் அஜ்மல்கான்.
“பாடலை, பேசினான்” என்றான் அந்த மனிதன்…
அஜ்மல்கான் புன்முறுவல் கொண்டான். “பார்த்தீர்களா கவி! இவனுக்குத் தமிழின் சுவை அடியோடு தெரியவில்லை” என்று கூறினான்.
அந்த மனிதன் அப்பொழுதும் விடவில்லை. “எங்களை சைத்தான்னு கூப்பிட்டான்” என்று புகார் செய்தான்.
அந்த வார்த்தையே எனக்குத் தெரியாது. அது சமஸ்கிருதமுமில்லை. தமிழுமில்லை “ என்றான் கவி இகழ்ச்சி நிரம்பிய குரலில்.
“வேறு என்ன சொன்னீர்கள் கவி?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான் அஜ்மல்கான்.
“பிசாசுகள் மாதிரி இருந்தது. சொப்பனத்தில் அப்படி வரக் கூடாதே என்று நானாகச் சொல்லிக் கொண்டேன்.. இவனுக்கு அதைப் பற்றி என்ன?” என்ற கவி “ஆமாம் ஸலீம், உங்கள் பாஷையில் பிசாசுக்கு சைத்தான் என்று பெயரா?”
என்று கவி கேட்டான்.
“கிட்டத்திட்ட அப்படித்தான்” என்று பிசாசு மொழி பெயர்ப்பைப் பற்றிப் பேசாமல் “கவி அவர்கள் மன்னிக்க வேண்டும். தங்களைக் கொண்டு வந்த முறை பிசகு. ஆனால் நீங்களாகக் கூப்பிட்டால் வரமாட்டீர்கள்” என்றான் அஜ்மல்கான்.
கவி படுத்த வண்ணமே அஜ்மல்கானைப் பார்த்தான். “என்னை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்” என்றான்.
“தங்கள் ராஜ விசுவாசம் நான் அறியாததல்ல” என்றான் அஜ்மல்கான் பாராட்டும் வகையில்.
“ஆம், உயிரே போனாலும் அரசனைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்” என்றான் சமுத்திரபந்தன்,
அஜ்மல்கான் தனது குறுந்தாடியை இடது கைவிரல் களால் சிறிது ஆற்றிவிட்டான். தீவிர சிந்தனை அவன் முகத்தில் படர்ந்திருந்தது. “கவி உங்களைக் கொல்ல இஷ்டமில்லை. உங்களைக் கொன்றால் சேர நாடு பெரிய கவிஞனை
இழக்கும்” என்றான் அஜ்மல்கான் சிந்தனைக்குப் பிறகு. அவன் குரலில் வருத்தம் மண்டிக் கிடந்தது.
கவி பெருமூச்சு விட்டான். “என் மதிப்பு உனக்காவது தெரிந்திருக்கிறதே” என்றான் அந்தப் பெரு மூச்சைத் தொடர்ந்து.
அஜ்மல்கான் முகத்தில் வியப்பைக் காட்டினான். “ஏன் யாருக்குத் தெரியவில்லை? அரசர் உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறாரே?” என்றான் வியப்பு குரலிலும் ஒலிக்க.
“அதெல்லாம் மேலுக்கு. உண்மையில் அவர் பிரமை பிரேமை இரண்டும் இன்னொரு கவி மீதுதான்” என்றான் சமுத்திரபந்தன்.
“இன்னொரு கவியா!”
“ஆம்”
“நான் பார்த்ததில்லை”
“பார்த்திருக்கமாட்டாய். அவன் அரண்மனையில் கடைசி கட்டில் ஒரு சிறு அறையில் இருக்கிறான். சாதாரண உடை உடுக்கிறான் எளியவன் போல் நடிக்க, அவனைத்தான் அரசர் நம்புகிறார்.”
“அவன் பெயர்?”
“கவிபூஷணன்”
“கவிபூஷணனா?”
“ஆம்”
“பெயர் புதிதாக இருக்கிறது” என்ற அஜ்மல்கான், “அவன் அப்படி என்ன உயர்வு?” என்று வினவினான்.
கவியின் கண்களில் பொறாமை துளிர்விட்டது. “முகஸ்துதி செய்வான். அரசனைப் பற்றிக் கவிதைகள் கட்டுவான். நாளைக்குப் படையெடுத்து இஸ்லாத்தின் ஆதிக்கத்தைத் தெற்கிலிருந்து மன்னர் அகற்றும்போது சாசனக்
கவிதைகளை அவன் தான் இயற்றுவான்” என்றான் சமுத்திரபந்தன் எரிச்சலுடன்.
அஜ்மல்கான் தீவிர சிந்தனையில் இறங்கினான் மீண்டும். “கவிபூஷணன், கவிபூஷணன்” என்று இரு முறை வாய் விட்டுச் சொன்னான். இஸ்லாத்தின் ஆதிக்கத்தை ரவிவர்மன் அகற்றி விடுவானா?” என்றும் நினைத்து முகத்தில்
பயங்கரமான கோபத்தையும் படர விட்டுக் கொண்டான் அஜ்மல்கான். அந்த சமயத்தில் அவன் கண்களில் நரிப்பார்வை மாறிப் புலிப் பார்வை உரு எடுத்தது. சில வினாடிகள் தான் இந்த நிலை. திடீரென தனது உணர்ச்சிகளை மறைத்துக்
கொண்டான் அஜ்மல்கான். அவன் உதடுகளில் பழைய புன்சிரிப்பு தோன்றியது. “கவி, அந்தக் கவியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.
“ஆமாம், பார்த்துக் கொள்வாய். அவனைத்தான் பார்த்துக் கொள்வாய். இப்பொழுது வந்திருக்கிறானே அந்தத் தடித் தமிழ்ப் புலவன். அவனை என்ன செய்வாய்?” என்றும் வெறுப்புடன் வினவினான் சமுத்திர பந்தன்.
அஜ்மல்கான் முகத்தில் கிலி தெரிந்தது. “புலவரா! எந்தப் புலவர்?” என்று கேட்டான் சிறிது அச்சத்துடன்.
“நினைத்தேன் அப்பொழுதே” என்றான் கவி.
“என்ன நினைத்தீர்”
“புலவனைக் கண்டால் யாரும் பயப்படுவார்கள் என்று “
நான் பயப்பட்டதாக யார் சொன்னது?”
“யார் சொல்ல வேண்டும்? உன் முகமே சொல்லிற்றே.”
அஜ்மல்கான் இதற்குக் கோபித்துக் கொள்ளவுமில்லை நேரிடையாகப் பதில் சொல்லவுமில்லை. “யார் மதுரைப் புலவரா?” என்று மட்டும் கேட்டான். கேள்வியில் ஆவல் தொனித்தது, அச்சமும் தொனித்தது.
“ஆம். அவன் தான் என்றான் கவி.
அப்பொழுதும் அஜ்மல்கானுக்கு நம்பிக்கை இல்லாத தால் கேட்டான் “பார்வைக்கு எப்படியிருக்கிறார்?” என்று.
“நல்ல கட்டுமஸ்தாயிருக்கிறான். அவனை அழித்தால் இரண்டு பேரைச் செய்யலாம்” என்றான் சமுத்திரபந்தன்.
அஜ்மல்கான் சந்தேகம் தெளிந்து விடவே “புலவர் எப்பொழுது வந்தார்?” என்று கேட்டான்.
“நேற்று வந்த உடனேயே, மன்னர் புலவனை அழைத்துக் கொண்டு விரைந்து விட்டார் பாசறைக்கு” என்றான் கவி.
அதைப்பற்றிச் சிரத்தை காட்டவில்லை அஜ்மல்கான். “யார் வந்தாலென்ன? எதிர்கரையிலிருக்கும் சிறு சைன்னியத்தை வைத்துக் கொண்டு இன்னும் ஆங்காங்கு இருந்து கொண்டிருக்கும் மாலிக்காபூர் படைப்பிரிவுகளைச் சமாளித்து
விட முடியுமா?” என்று இரைந்து சொன்னான் சற்று கடுப்புடன்.
இதைக் கேட்ட கவி நகைத்தான். “சிறு சைன்னியமா?” என்று கூறவும் செய்தான் இகழ்ச்சியின் ஊடே.
“சிறு சைன்னியமில்லாமலென்ன? எங்களுக்குக் கண்ணில்லையா அக்கரையைப் பார்க்க” என்றான் அஜ்மல்கான்.
“ஆமாம், மன்னன் உன் கண்ணெதிரே படைகளைக் கொண்டு வந்து நிறுத்துவான். இந்த உப்பங்கழிக்கு அக்கரையிலிருக்கும் யானைப்படையைப் பார்த்திருக்கிறாயா? உன் மூளை அதற்கு மேல் வேலை செய்யாது” என்றான் கவி.
‘கவி! தப்புக் கணக்குப் போடுகிறீர்கள் என்னைப் பற்றி. யானைப் படையைத் தாண்டியிருக்கும் சிறு புரவிப் படையையும் காலாட் படையையும் கூடப் பார்த்திருக்கிறேன்” என்ற அஜ்மல்கான் கவியை வெற்றிப் பார்வையாகப்
பார்த்தான்..
அதுவரையில் படுத்துக் கொண்டிருந்த கவி துள்ளி எழுந்தான். “உன் கண்ணில் மண்ணைத் தூவ. மன்னன் நடமாட விடும் சின்னஞ்சிறு படை வரிசைகளைப் பார்த்து எல்லாம் தெரிந்து விட்டதாக மார் தட்டுகிறாய். நீயும் ஒரு ஒற்றன்
என்று பெயர் வைத்திருக்கிறாயே?” என்று மிக இகழ்ச்சியாகப் பேசினான் கவி
அடுத்த வினாடி அவன் மீது புலியைப் போல் பாய்ந்த அஜ்மல்கான் கவியைப் படுக்கையில் தள்ளி அவன் குரல் வளையைப் பிடித்து “என்னை ஒற்றனென்று யார் சொன்னது? சொல், சொல்” என்று பயங்கரமாகக் கூவினான்.
கவி பேச முயன்றான், முடியவில்லை குரல்வளை நன்றாகப் பிடிக்கப்பட்டிருந்ததால். ஆகவே கையை எடுத்து கழுத்தைக் காட்டினான் கவி. பிதுங்கிய விழிகளையும் மிரள மிரள விழித்தான்.
நிலைமையைப் புரிந்து கொண்ட அஜ்மல்கான் குரல் வளையிலிருந்து தன் விரல்களை நீக்கினான். “இப்பொழுது சொல், எத்தனை படைப்பிரிவுகள் இருக்கின்றன? எத்தனை வீரர் இருக்கிறார்கள்?” என்று.
சமுத்திரபந்தன் மெள்ள மீண்டும் எழுந்து உட்கார்ந்து கொண்டான். “நிச்சயமாகத் தெரியாது.
ஆனால் இருபதினாயிரம் வீரருக்குக் குறைவில்லை. இரண்டு மாலிக்காபூர்களை பட்சணம் செய்யத் தேவையான படை இருக்கிறது. நல்ல வேளை மாலிக்காபூர் போய்விட்டான் வடக்கே. உன் போதாத காலம் நீ இங்கு சிக்கிக்
கொண்டாய்” என்றான் சமுத்திரபந்தன். “ஸலீம்! நீ ஒற்றனென்பது மன்னனுக்கு நீ வந்த நாளே நன்றாகத் தெரியும், போதாக் குறைக்கு அந்தப் பாண்டிய நாட்டானையும் அரசன் சேனா திபதியாக்கி விட்டான்” என்று கூறினான்
பெருமையுடன்.
யார் இளவழுதியையா!” என்று வியப்புடன் வினவினான் அஜ்மல்கான்.
“ஆம்”
“பலபத்ரன் இல்லையா?”
“இருக்கிறான் உபசேனாதிபதியாக”
“இளவழுதிக்குப் போர் பயிற்சி உண்டா?”
“இருக்கலாம். இல்லா விட்டால் அரசர் அத்தனை தூரம் அவனை நம்புவாரா?”
“உண்மை உண்மை “ என்ற அஜ்மல்கான் “கவி! இப்பொழுது நீரும் நானும் ஒன்று” என்றான்.
“சேசே! நீ யார் நான் யார்? கவி சமுத்திரபந்த னெங்கே, கேவலம் ஒற்றன் எங்கே!” என்றான் கவி அசட்டுத் தைரியத்தை மீண்டும் காட்டி.
“கவி என்னிடம் விளையாடாதே’ என்று லேசாக அதட்டினான் அஜ்மல்கான்.
“ஆம். உன்னுடன் விளையாட வருகிறேன். முதலில் என்னை அரண்மனை சேர்த்துவிடு. இல்லாவிட்டால் அரசன். உன்னை சமாப்தி செய்து விடுவான்?” என்று அதட்டினான் கவி.
“சரி கவி! உங்களை அனுப்பி விடுகிறேன். அரசன் சைன்னியத்தில் பெரும் பிரிவு எங்கிருக்கிறது?” என்று விசாரித்தான்.
கவி இறுமாப்புடன் பார்த்தான் அஜ்மல்கானை. “ஸலீம்! உனக்குத் தெரிந்தாலும் நீ அங்கு போக முடியாது. அஷ்ட முடி ஏரியில் அக்கரைத் தோப்புகள் மிக விசாலமானவை, அடர்த்தியானவை. ஏரிக்கு அக்கரை யில் நீ காலை
வைக்கமுடியாது. எப்பொழுதும் அங்கு கண்காணிப்பு இருந்து கொண்டிருக்கிறது. வீணாக அங்கே போய் பிராணனைவிடாதே” என்றான் கவி.
அஜ்மல்கான் ஏதோ யோசித்தான். “இந்த இளவழுதி மட்டும் எப்படிப் போனான் அங்கே?” என்று விசாரித்தான்.
“அரச மகள் அழைத்துப் போனாள்.”
“வழி?”
“படகு வழி.”
“துறை எங்கிருக்கிறது?”
இதற்குப் பிறகு கவி பேச மறுத்தான். அஜ்மல்கானும் அவனை வலியுறுத்தவில்லை. “டேய் யாரங்கே?” என்று அழைக்கப் பழைய அசுரப் பிரகிருதிகளில் ஒருவன் வந்தான். “கவியைக் கொண்டு போய் அரண்மனைக்கு முன்பாக
விட்டுவிடு” என்று உத்தரவிட்டான் அந்த வீரனுக்கு அஜ்மல்கான்.
அஜ்மல்கான் ஆணைப்படி கவியை அழைத்துப் போக ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. கவியும் தனது உடைகளை சரிப்படுத்திக் கொண்டு கூடார வாயிலுக்கு வந்து சுற்று முற்றும் நோக்கினான். இது நேர் எதிர்க்கரை. இங்கு
கூடாரமடித்திருக்கிறாய். கெட்டிக்காரத்தனமாகத் தான் கடைத் தெருவிலிருந்து இங்கு என்னை அழைத்து வந்து விட்டாய்” என்று கவி அஜ்மல்கானை சிலாகித்து விட்டு, தன்னை அழைத்துச் செல்லத் தயாராயிருந்த வீரனுடன்
புறப்பட்டான். இருவரும் புரவியில் அரண் மனையின் பிரதான வாயிலை அடைந்ததும் உடன் வந்த வீரன் அவனை விட்டு விட்டு வெகு துரிதமாகப் பின் வாங்கிச் சென்று விட்டான்.
ஆனால் கவி சமுத்திரபந்தன் புரவியிலிருந்தே அரண்மனை விதானத்தின் விமான உச்சியைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளத்தே பெரும் எரிமலை உருவாகிக் கொண்டிருந்தது. மூச்சு பெருமூச்சாக, கனல் காற்றாக
வெளிவந்து கொண்டிருந்தது. “கவிபூஷணா! நீ வெற்றி கொண்டுவிட்டாய் புரிகிறது எனக்கு. ஆனால் அந்த வெற்றி எத்தனை நாளைக்கு நிலைக்கிறது பார்க்கிறேன்” என்று உதடுகளில் சொற்களைச் சிறிது பலமாகவே உச்சரித்தான்.
அப்படி வேதனையையும், விரோதத்தையும் வளர்க்கும்காட்சி விரிந்தது அரண்மனை விதானத்தில் அன்று, கவியின் சுடுவிழிகள் முன்பாக.