Cheran Selvi Ch44 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 44. ‘காஞ்சியில் சந்திப்போம்’
Cheran Selvi Ch44 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
இளவழுதி, குஸ்ரூகான், இருவருமே மறைந்துவிட்டார்கள் என்ற செய்தி அஜ்மல்கான் மூளைக்கு அதிகக் குழப்பத்தை விளைவித்துவிட்டதால் அவன் தனது கூடாரத்தில் நிலைத்து நின்றான் பல வினாடிகள்.” அவர்கள் இருவரும்
சேர்ந்து தான் வெளியேறியிருக் கிறார்கள் என்பதில் அஜமல்கானுக்குச் சிறிதும் சந்தேகமில்லையென்றாலும், எதற்காக அப்படி ஒரே சமயத்தில் மறைந்திருக்கிறார்கள், எங்கு சென்றிருக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாத புதிராகயிருந்தது
புதிய தளபதிக்கு. அமீர் குஸ்ரூகான் தன்னைத் தளபதி யாக்கியதில் பெரிய சூழ்ச்சி ஏதோ இருக்கிறதென்பதை அஜ்மல் உணர்ந்து கொண்டாலும், அது என்ன சூழ்ச்சி, அது எந்த இடத்தில் எந்தச் சிக்கலில் தன்னைக் கொண்டுபோய்
விடும் என்பது அடியோடு புரியாததால் கலங்கினான். அந்தக் கலக்கத்தின் விளைவாகக் காவலரை நாற்புறமும் அனுப்பி இருவரையும் தேட உத்தரவு பிறப்பித்தான்.
பொதிய மலைப்பகுதியைக் காவலரும் ஒற்றரும் சல்லடை போட்டுச் சலித்தும் இருவரும் கிடைக்காத தால் இளவழுதி போயிருந்தால் எப்படியும் சேரமன்னனிடந்தான் போயிருக்க வேண்டும் என்ற நினைப்பில் அங்கும் ஒற்றர்களை
ஏவினான். அங்கு சேரன் படையே இல்லையென்றும், சேரன் தெற்கு நோக்கி நகர்ந்து விட்டானென்றும் ஒற்றர் கொண்டு வந்த செய்தி அவனுக்குப் பெரும் அதிர்ச்சியை மட்டுமின்றி வியப்பையும் அளித்தது. மதுரையை வெற்றி கொள்ளக்
கிளம்பிய சேரன் பொதிய மலையிலிருந்து வடமேற்கே சென்று மதுரையை அடைய வேண்டியிருக்க, எதற்காகத் தெற்கே சென்றுவிட்டான் என்று சிந்தித்தும் விடை கிடைக்கவில்லை புதுத் தளபதிக்கு.
ஏதும் புரியாத நிலையில் எந்த மனிதனும் விஷயங்களை அசரப் போடுவது போல் அஜ்மல்கானும் பொறுத்திருந்து பார்க்கத் தீர்மனித்தான். பொறுத்திருந்த சமயத்திலும் வாளாவிருக்காமல் படைகளை இரண்டு நாளைக்கொரு
முறை திரட்டி அணிவகுத்து அவற்றைப் போருக்குச் சித்தமாக வைத்திருந்தான். அத்துடன் நாலா பக்கங்களிலும் ஒற்றர்களை அனுப்பி மதுரையையும் கண்காணித்து வந்தான். சுமார் பத்து நாட்கள் இப்படிக் கழிந்த பிறகு ஒற்றர்
கொண்டு வந்த செய்தி அஜ்மல்கானைத் திக்குமுக்காடச் செய்தது. வந்த ஒற்றன் அறிவித்தான் சேரர் படை மூன்று பிரிவுகளாகப் பிரிந்து மூன்று திசைகளில் மதுரையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று.
அப்பொழுது காலைநேரம். அஜ்மல்கான் பஞ்சணையில் உட்கார்ந்து கொண்டு சிறிதளவு சிற்றுண்டியருந்தி மதுவைச் சுவைத்துக் கொண்டிருந்தான் நீண்ட குவளையில். ஒற்றன் செய்தியைக் கேட்டதும் மது வருந்திய வாய் செயலை
நிறுத்தியது. குவளையும் உதடுகளை விட்டு விலகியது. அஜ்மல்கானின் கண்கள் ஒற்றனை வெறித்து நோக்கின. “எந்தத் திசைகளிலிருந்து?” என்று வினவின அவன் மதுவுண்ட உதடுகள்.
“தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு பிரிவு, மேற்கி லிருந்து நேர் வட கிழக்காக ஒரு பிரிவு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மூன்றாவது பிரிவு” என்று விளக்கினான் ஒற்றன்.
அஜ்மல்கான் திகைத்து உட்கார்ந்து விட்டான், பல வினாடிகள். “எந்தெந்த திக்கில் யார் படைகளுக்குத் தலைமை வகிக்கிறார்கள்” என்று வினவினான்.
“தெற்கிலிருந்து வடக்கே வரும் படையை சேர மன்னனே நடத்துகிறான்” என்ற ஒற்றன் தயங்கினான் சிறிது.
“உம்”
“இதுவரை மதுரையையும் இங்குள்ள நமது படைகளையும் துண்டித்த படை சற்று வடகிழக்கே திரும்பி, புலவர் தலைமையிலும் சேரன் செல்வி தலைமையிலும் செல்கிறது.”
“உம்”
“இன்னொரு படை. வட திசையிலிருந்து நேர் தெற்கே மதுரையை நோக்கி இறங்குகிறது. அதற்கு…”
“உம்.”
இந்த உம்முக்குப் பதிலில்லை. தயங்கினான் ஒற்றன். ஆகையால் தளபதி உக்கிரத்துடன் கேட்டான் “சொல்” என்று.
“சேரர் படைத்தலைவர் இளவழுதி தலைமை வகிக்கிறார்”
அஜ்மல்கான் பயங்கர மௌனம் சாதித்தான். “இத்தனையும் நீ ஒருவனாக விசாரித்தாய்?” என்று அவன் கடைசியாகக் கேட்டபொழுது கேள்வியில் அவநம்பிக்கை இருந்தது.
ஒற்றன் சிறிது நிதானித்தான். “ இல்லை நான் விசாரிக்கவில்லை “ என்றான்,
இந்தப் பதில் இன்னும் அதிக கோபத்தைக் கிளறி விடவே “விசாரிக்கவில்லையா?” என்று சீறினான் அஜ்மல்கான்.
“இல்லை “ஒற்றன் பதில் திட்டமாக இருந்தது.
“அப்படியானால் ஜோஸ்யம் சொல்கிறாயா?”
“இல்லை. அந்தக் கலை எனக்குத் தெரியாது.”
“நீ ஒற்றனா? மடையனா?”
“இரண்டுமில்லை.”
“வேறு யார்?”
“தூதன்”
“தூதனா?”
“ஆம்”
“யாருக்கு?”
ஒற்றன் பதில் சொல்லவில்லை கடைசி கேள்விக்கு. மடியிலிருந்து ஒரு ஒலையை எடுத்து நீட்டினான் தளபதியிடம். அஜ்மல்கான் அந்த ஓலையை வாங்கிக் கொண்டான் என்பதை விட பிடுங்கிக்கொண்டான் என்பது பொருந்தும்.
அதை வாங்கி முத்திரைகளை உடைத்து செய்தியைப் படித்தான். படித்ததும் பேயறைந்த முகத்துடன் சிந்தித்தான். அந்த ஒலையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது!
“மாலிக்காப்பூர் ஒற்றரும் இப்பொழுது தெற்கேயுள்ள முஸ்லீம் படைகளின் தளபதியுமான நவாப் அஜ்மல்கானுக்கு வீரபாண்டிய மன்னர் விடுக்கும் ஓலை. மாலிக்காபூர் சென்றதும் மதுரை அரியணையை உறுதிப்படுத்தித்
தருவதாகக் கூறி சேரமன்னருடன் போர் தொடுக்க நம்மை ஏவிய குஸ்ரூகான் மறைந்துவிட்ட செய்தியைக் கேட்டுப் பெரும் ஏமாற்றமடைகிறோம். இப்பொழுது வடக்கிலிருந்து தெற்கேயும், தெற்கிலிருந்து வடக்கேயும் குறுக்காக
மேற்கிலிருந்து வடகிழக்காகவும் மூன்று படைப் பிரிவுகள், சேரமன்னன் படைப்பிரிவுகள், மதுரையை நோக்கி வருகின்றன. இவற்றை எப்படிச் சமாளிப்பதாக உத்தேசம்? பொதிய மலையில் என்ன செய்கிறீர்? தவம் செய்கிறீரா சேரர்
படைகளை விரட்ட? என் படை போருக்குச் சித்தமாயிருக்கிறது. உங்கள் படை பின்புறம் தாக்கினால் சேரர் படைகளை ஓரளவு சமாளிக்கலாம். உடனடியாகப் பொதிய மலையிலிருந்து படைகளை சமவெளிக்கு இறக்குங்கள். உமது படை
பொதியமலைத் தொடரின் வடக்குக் கோடியிலிருப்பதால் நீங்கள் நேராகக் கீழிறங்கி, தெற்கிலிருந்து வரும் சேர மன்னன் படைப் பிரிவைத் துண்டிக்கலாம். சீக்கிரம் உங்கள் புறப்பாட்டை எதிர்பார்க்கிறேன். வீரபாண்டிய மன்னர்
உத்தரவுப்படி…” கடைசியில் கையொப்பம் கிறுக்கு எழுத்தாக இருந்தது.
கையெழுத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை அஜ்மல்கான். மாலிக்காபூருடன் மரியாதையாக வடபுலம் செல்லாமல் குஸ்ரூகானிடம் சேர்ந்து தென்புலத்தில் அரசமைக்கத் திட்டமிட்ட தன் மூளையை வெறுத்துக் கொண்டான். ஆகவே
மேற்கொண்டு ஏதும் செய்ய வழியில்லாததால் ஒற்றனைப் போகச் சொல்லிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான். தான் தற்காலத் தளபதியே என்பதையும் குஸ்ரூகானே எதையும் முடிவு கட்ட வேண்டுமென்பதையும், பதினைந்து நாள்
தன்னைக் காத்திருக்கச் சொன்ன குஸ்ரூகான் காரணமில்லாமல் அப்படிச் செய்யதிருக்க மாட்டானென்பதையும் உணர்ந்து கொண்ட அஜ்மல், குஸ்ரூகான் குறிப்பிட்ட பதினைந்து நாட்கள் பொறுக்கத் தீர்மானித்தான்.
அடுத்து ஐந்து நாட்களில் படையை நன்றாகப் பிரித்து அமைத்து எந்த வினாடியிலும் நகருவதற்கு சித்தமாக வைத்திருந்தான். பதினைந்தாவது நாள் காலை வரை குஸ்ரூகான் வருவானென்று எதிர்பார்த்து ஏமாந்தான். குஸ்ரூகான்
வரவில்லை. ஆனால் பதினைந்தாவது நாள் மாலையில் குஸ்ரூகான் சர்வ சாதாரணமாகப் படைத்தளத்தில் நுழைந்தான்.
அவன் வரவை காவலர் ஓடிவந்து சொல்ல குஸ்ரூகான் கூடாரத்துக்கு விரைந்த அஜ்மல்கான் தளபதி அப்பொழுதுதான் புரவியிலிருந்து கூடார வாயிலில் இறங்குவதைப் பார்த்தான். “தளபதி, வரவேண்டும் என் கவலை
இப்பொழுதுதான் தீர்ந்தது” என்று முகமன் கூறவும் செய்தான்.
குஸ்ரூகானின் புரவி மீது ஒரு கையை வைத்துக் கொண்டே திரும்பி நோக்கினான் அஜ்மல்கானை. “உபதளபதி! உங்கள் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றான்.
குஸ்ரூகானின் அந்த மகிழ்ச்சி தனது தளபதிப் பதவியை ஒரு வினாடியில் அழித்து உபதளபதியாக இறக்கிவிட்டதைக் கண்ட அஜ்மல்கான் உள்ளத்தில் சினம் துளிர்த்தாலும் அதைக் காட்டவில்லை அவன். மிகவும் பணிவைக் காட்டி
தலையை நன்றாக நிலத்தில் தாழ்த்தி வணங்கினான். அவனை உடன் வரும்படி சைகை செய்து கூடாரத்துக்குள் சென்றான் குஸ்ரூகான்.
கூடாரத்தில் சென்றதும் மஞ்சத்தில் உட்கார்ந்த தளபதி குஸ்ரூகான் எதிரே நின்ற உபதளபதியை உற்று நோக்கி விட்டு, “அஜ்மல்! படைகளின் சன்னதத்தைப் பார்த்தேன்” என்றான்.
“தங்கள் பாராட்டு எனக்குத் துணிவை அளிக்கிறது” என்று பதில் சொன்னான் அஜ்மல்கான்.
“துணிவா!”
“ஆம் நவாப்”
“நவாபா! உம் நல்லது, நல்லது.”
“உம், இந்த நவாப் பட்டத்திற்கே உன் தளபதிப் பதவியை ஊர்ஜிதம் செய்து இருக்கலாம்.”
“வேண்டாம் தளபதி.”
“ஏன் அஜ்மல்கான்?”
“தற்சமயம் யாரும் அந்தப் பதவியை விரும்ப மாட்டார்கள்.”
“என்ன அப்படி?”
“சேரமன்னன் படைகள் மதுரையை அணுகிக் கொண்டிருக்கின்றன. எந்தச் சமயத்திலும் போர் நிகழலாம். பாண்டிய மன்னன் நம்மை உதவிக்கு அழைக்கிறான்.”
அதைக் கேட்ட குஸ்ரூகான் நகைத்தான். “வீரபாண்டியன் எதை விரும்புகிறான்?”
“தெற்கிலிருந்து முன்னேறும் ரவிவர்மன் படையைத் துண்டிக்கும்படி கேட்கிறான். அவன் அனுப்பிய ஓலை அத்தனை மரியாதையாகவும் இல்லை” என்றான் அஜ்மல்.
“மரியாதை கிடக்கட்டும். நமது படைகளை இடை புகுந்து புலவர் துண்டித்தபோது பாண்டிய மன்னன் என்ன செய்து கொண்டிருந்தானாம்?”
“தெரியவில்லை நவாப்?”
“நீ பதில் ஓலைவிட்டுக் கேட்பது தானே”
“தாங்களில்லாமல் நான்…”
“எனக்குப் பதில் உன்னைத்தானே வைத்துப் போனேன். தளபதி என்ற முறையில் நீ பதிலனுப்ப வேண்டியது தானே?”
இதற்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்தான் அஜ்மல்கான். “அஜ்மல்! எந்த மனிதனும் திடீரெனப் படைத்தலைவனாகிவிட முடியாது. தனிப்பட சமயத்துக்குத் தகுந்தபடி முடிவெடுக்க முடியாதவன் தளபதியாயிருக்க முடியாது” என்ற
குஸ்ரூகான் “நாளை நமது படை நகருகிறது” என்றான்.
“உத்தரவு நவாப்” என்றான் அஜ்மல்.
.
“எங்கென்று கேட்கவில்லையே?”
“எங்கு நவாப்?”
“காஞ்சி நோக்கி?” என்றான் குஸ்ரூகான்.
அஜ்மல்கானுக்கு விளங்கவில்லை காரணம். விழித்தான். குஸ்ரூகானே சொன்னான். “உனக்கு விளங்காது அஜ்மல். இங்கு சேரனும் பாண்டியனும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளட்டும். தமிழர்கள் எப்பொழுதும் ஒருவரை
ஒருவர் அடித்துக் கொள்வது வழக்கம். அந்த சம்பிரதாயத்தை நாம் மாற்றவேண்டாம். காஞ்சியில் சந்திக்கிறேன் ரவிவர்மனை.”
இதைச் சொன்ன குஸ்ரூகான் அஜ்மல்கானை நோக்கி படைகளுக்கு உத்தரவிட்டுவிடு. நாளை விடியற்காலையில் நாம் நகர்ந்துவிடுவோம்” என்று கூறி விட்டு அஜ்மல்கான் போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை
அசைத்தான்.