Cheran Selvi Ch46 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 46. பாண்டியனும் பாண்டியனும்
Cheran Selvi Ch46 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
அன்றிரவு கால் நடையாகவே சென்று படைப்பிரிவுகளை பலபத்ரனுடன் பார்த்துவிட்டுத் திரும்பி உணவருந்திய இளவழுதி “நாளை விடியற்காலையில் நமது படை நகரட்டும்” என்று மட்டும் சொன்னான். அப்பொழுது அவன் ஒரு
மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் கடிவாளம் தொங்க நின்றிருந்த ராஜா அவன் சொல்வதைப் புரிந்து கொண்டதைப் போல் உற்சாகக் கர்ஜனை செய்து அவன் தோள் மீதும் தனது கழுத்தை வைத்துக் கொண்டது. அந்த
அன்னியோனியத்தை கண்ட பலபத்ரன் “உங்கள் வசீகர சக்தி மிக அதிகம் படைத்தலைவரே” என்று பாராட்டினான். அவன் பாராட்டுதலை ஆமோதிக்காத வகையில் தலையை அசைத்த இளவழுதி “வசீகர சக்தி மன்னருக்குத் தானிருக்கிறது
பலபத்ரரே! அவர் வளர்த்த புரவியல்லவா இது?” என்று சொன்னான் புரவியின் கழுத்தைத் தடவிய வண்ணம்.
‘இல்லை தளபதி” என்று மறுத்த பலபத்ரன் “இது அரசகுமாரி வளர்த்தது” என்று கூறினான். “உங்களிடம் இதற்குள்ள ஆசையைப் பாருங்கள்” என்றும் சுட்டிக் காட்டி உதட்டில் எழவிருந்த புன்முறுவலை அடக்கிக் கொண்டான்.
அவன் சொன்னதன் பொருள் இளவழுதிக்குப் புரிந்திருந்தாலும் புரியாதது போலவே நடித்த படைத் தலைவன் கண்களை மூடிக்கொண்டான். சிந்திப்பதற்கு அடையாளமாக சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு கண் விழித்த
இளவழுதி “உபதளபதி! நீங்கள் இன்னும் ஐந்து நாழிகைகள் உறங்கலாம். அதற்குப் பிறகு படைகள் புறப்பட உத்தரவிட்டு என்னிடம் வாருங்கள்” என்று உத்தரவிட பலபத்ரன் அவனுக்குத் தலை வணங்கி நடந் தான் தனது கூடாரத்தை
நோக்கி.
நாழிகைகள் பறந்தன. இளவழுதி மட்டும் கண்ணைச் சிறிதளவும் மூடாமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். தனது புரவிப் படையை இடையில் செலுத்தி இரு புறத்திலும் காலாட்படையை வரச்சொல்லி எதிரிமீது அம்புகளைப்
பொழியச் செய்தால், அந்த அம்பு மழையை எதிரி சமாளிக்கும் சமயத்தில் தான் புரவிப் படையை மின்னல் வேகத்தில் எதிரி மீது பாயவிட்டுப் பிளந்து விடலாம். என்று திட்டம் போட்டான். அந்தத் திட்டத்துக்குச் சரியாக எப்படி எந்த வழியில்
முன்னேறலாம் என்றும் ஒருவிதத் தீர்மானத்துக்கு வந்தான். “வடக்கு வாயிலில் நுழைவது அத்தனை பிரமாதமாயிராது. அந்த வாயிற் பெருங் கதவுகளைத்தான் மாலிக்காபூர் நொறுக்கி விட்டானே” என்றும் நினைத்தான் சேரமான் படைத்
தலைவன்.
இத்தகைய எண்ணத்துடன் மறுநாள் பொழுது புலரு முன்பே படைகளை நகர்த்தினான். மதுரையை நோக்கி. எந்த இடத்திலும் சில நிமிடங்கள் கூட தாமதிக்காமல் படைகளை அழைத்துக் கொண்டு மதுரையின் வடக்கு வாசலை
அடைந்து அம்மா நகரின் பெருவாயிலையும் பெருமதிலையும் கண்ட இளவழுதி பிரமித்து நின்றான் பல வினாடிகள். மதுரை வட பெருங்கதவு சீர்படுத்தப்பட்டு நன்றாக மூடப்பட்டிருந்தது. மதிலின் மீது பாண்டிய வீரர்கள் பலர் வில்லும்
கையுமாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். வீரபாண்டியன் போருக்குத் தயாராயிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட இளவழுதி அடுத்துச் செய்ய வேண்டிய பணிகளில் மும்முரமாக இறங்கினான். பக்கத்தில் புரவி மீதமர்ந்து
வியப்புடன் வடக்கு வாயிலை நோக்கிக் கொண்டிருந்த பலபத்ரனை அழைத்து “உபதளபதி அடுத்துள்ள காட்டிலிருந்து பெரும் மரங்களை வெட்டச் சொல்லி கிளைகளைக் கழித்து நீளத்தண்டு தயார் செய்யுங்கள். இன்று மாலை
இக்கதவுகளை நாம் யானைகளைக் கொண்டும் மரப் பொறிகளைக் கொண்டும் இடித்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டான். ‘வீரபாண்டியன் சிறந்த வீரனென்று பெயர். வெளியில் வந்து போரிடுவானென்று நினைத்தேன்.
கதவடைத்து உள்ளே பதுங்கி விட்டானே? மதுரையை மாலிக்காபூர் பறித்தபோது இவன் வீரத்தையும் பறித்துவிட்டானா?” என்று தனக்குள் வினாக்களையும் எழுப்பிக் கொண்டான்.
அந்த சமயத்தில் அவன் முதல் உத்தரவுபடி விற்களை வைத்து நாண்களை ஏற்றிவிட்ட காலாட் படையையும் போர் தொடுக்க வேண்டாமென்று அடக்கி விட்டான். நாணை ஏற்றிய எதிரிகள் நாணைத் தளர்த்தியதும் மதில் மீதிருந்த
வீரபாண்டியன் வீரர்களும் விற்களைத் தோளில் மாட்டிக் கொண்டு பரம சகஜமாக உலாவினார்கள். அதைக்கண்ட இளவழுதியின் முகத்தில் சினத்தின் சாயை படர்ந்தது. தன்னை அவமானப்படுத்தவே வீரபாண்டியன் இத்தகைய
உத்தரவுகளை தனது வீரர்களுக்கும் பிறப்பித்திருக்க வேண்டுமென்று நிதர்சன மாகத் தெரிந்தது இளவழுதிக்கு. இருக்கட்டும் பார்ப்போம். படைக்கல மேந்தி களம் புகும்போது அவன் வீரத்தையும் அலட்சியத்தையும் பார்ப்போம் என்று
உள்ளூர கறுவிக் கொண்ட இளவழுதி படைகளை லேசாகப் பின்னுக்கு நகர்த்தி முற்றுகையிட்டான் மதுரையின் வடபகுதியில்,
மாலை நெருங்கியதும். அவன் ஆணைப்படி வெட்டப்பட்ட காட்டு மரங்கள் வந்தன. அவை பத்துப் பெரிய வண்டிகளிலும் ஏற்றப்பட்டு பிணைக்கப்பட்டன பலமாக, விளக்குகள் ஒவ்வோரிடத்தில் மதுரையின் மதில் மீது ஏற்றப்பட்ட
சமயத்தில் மரத்தூண்களை இயக்கத் தயாராகிவிட்ட சமயத்தில் சற்று நிதானித்தான் இளவழுதி, தூரத்தே எழுந்த பெரும் புழுதியின் விளைவாக.
அந்தப் புழுதியைக் கிளப்பி பெருவேகத்துடன் வந்தது ஒரு புரவி. அதன் மீதிருந்த அரசகுமாரி இளவழுதியின் புரவிக்கு அருகில் வந்ததும் வேகத்தால் ஏற்பட்ட இரைப்பைச் சிறிது அடக்கிக் கொண்டு “மன்னர் உங்களைப் பார்க்க
விரும்புகிறார்” என்று கூறினாள்.
இளவழுதியின் இமைகள் மேலே எழுந்தன சிந்தனைக் கடையாளமாக. “எதற்கு?” என்ற ஒரு சொல் சுருக்கமாக உதிர்ந்தது அவன் உதடுகளிலிருந்து.
“மன்னரே உங்களிடம் சொல்லுவார்” என்றாள் சேரன் செல்வி.
“ஏன் நீ சொன்னாலென்ன?” இளவழுதி சினந்து கேட்டான்.
“எனக்குத் தெரியாது.”
“மன்னர் மனதிலிருப்பது உனக்குத் தெரியாது?”
“தெரியாது”
இதற்குமேல் அவளைக் கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை என்று தீர்மானித்த இளவழுதி பலபத்ரனை அழைத்து விஷயத்தைக் கூறினான். “நான் வரும் வரையில் எதிரியாகக் கதவைத் திறந்து தாக்கினாலொழிய நீ தாக்காதே” என்று
உத்தரவிட்டு இளமதியைப் பின் பற்றிச் சென்றான். மதுரையின் மதிலைச் சுற்றி தெற்கு வாயிலுக்குள் வந்ததும் சேரமன்னர் பாசறைக்குச் சென்றான்.
கூடாரமென்று தனித்து ஏதும் அமைக்கவில்லை ரவிவர்மன். ஒரு மரக்கூட்டத்தையே கூடாரமாக்கிக் கொண்டு கீழே விரிக்கப்பட்டிருந்த வியாக்கிராசனத்தில் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான். இளவழுதியும் இளமதியும்
புரவிகளிலிருந்து இறங்கி அவரை அணுகி வணங்கியதும் தலைநிமிர்ந்து பார்த்த சேரமன்னன் இரு வரையும் அருகில் உட்காரப் பணித்து விட்டு ஆகாரத்தை மிக நிதானமாக அருந்தினான். உணவு முடித்துக்கொண்டதும் கையலம்பி
பக்கத்திலிருந்து வீரன் நீட்டிய துணியில் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு இளவழுதியை நோக்கினான். “நீ குஸ்ரூகானிடமிருந்து தப்பி படைத் தலைமையை ஏற்றுக் கொண்டது பற்றி மகிழ்ச்சி” என்று கூறினான்.
இளவழுதி அதைச் சட்டென்று மறுத்தான். “நான் தப்பவில்லை. குஸ்ரூகான் தான் தப்ப வைத்தான்” என்று கூறிவிட்டுத் தான் திரும்பிய பிறகு குஸ்ரூகான் படைத்தளத்தில் நிகழ்ந்த விவரங்களைச் சுருக்கமாகக் கூறினான்.
விவரத்தைக் கேட்ட ரவிவர்மன் வியப்பைச் சிறிதும் காட்டவில்லை. குஸ்ரூகான் அறிவில் பத்திலொரு பங்கு மாலிக்காபூருக்கு இருந்திருந்தால் இன்று பாண்டிய நாடு அவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும். நல்லவேளை கில்ஜியின்
படைகளைத் தலைமை தாங்கி குஸ்ரூகான் வரவில்லை” என்று சிலாகித்த ரவிவர்மன் “காஞ்சியில் இருக்கிறது நமக்குப் பெரிய சோதனை, இந்தப் போர் அங்குதான் முடியும்” என்று இரைந்து தனக்கே சொல்லிக் கொண்டான்.
ரவிவர்மன் குஸ்ரூகானைப் பாராட்டியது வியப்பாயில்லை இளவழுதிக்கு. சேரமன்னன் யாரிடமும் திறமையிருந்தால் பாராட்டக்கூடியவன் என்பது இளவழுதிக்குத் தெரிந்திருந்ததால் அதைப்பற்றி ஏதும் கேட்காமல் தன்னை அழைத்த
காரணத்தை மட்டும் வினவினான்.
“வீரபாண்டியனிடம் தூது செல்ல வேண்டும்” என்றான் ரவிவர்மன் விஷயத்தைச் சுற்றி வளைக்காமல்.
இளவழுதி கேட்டான். “மதுரையை முற்றுகையிட்ட பிறகு தூது அவசியமா?” என்று.
ரவிவர்மன் அவசியம் என்பதை உணர்த்த தலையை மட்டும் ஆட்டினான்.
“எதற்கு தூது!” என்று வினவினான் இளவழுதி,
“வீரபாண்டியன் நம்மிடம் பணிந்து, இணைந்து காஞ்சி வர.”
“குஸ்ரூகானை முறியடிக்க?”
“ஆம்.”
“வீரபாண்டியன் உதவியில்லாவிட்டால்?”
“அப்பொழுதும் குஸ்ரூகானை வெற்றிகொள்ளலாம்.”
“அப்படியானால் வீரபாண்டியன் தயவு எதற்கு?”
“தயவு அல்ல நாம் கேட்பது. அனாவசியப் போரைத் தவிர்க்க முயலுகிறோம். தமிழ் மக்கள் மடிவதை நிறுத்த ஒரு வாய்ப்பு அளிக்கிறோம் வீரபாண்டியனுக்கு.”
“இத்தனை அக்கறை திடீரென்று வீரபாண்டியனிடம் ஏற்படக் காரணம்?”
ரவிவர்மன் தலைநிமிர்ந்து நோக்கினான் பாண்டிய வீரனை. “காரணங்கள் மூன்று, அனாவசிய உயிர்ச் சேதத்தைத் தவிர்ப்பது ஒன்று. பாண்டியனும் பாண்டியனும் மோதுவதைத் தவிர்ப்பது இரண்டு. மூன்றாவது…” என்று ரவிவர்மன்
சிறிது நிதானித்தான்.
“சொல்லுங்கள் மகாராஜா!” என்று ஊக்கினான் படைத்தலைவன்.
“வீரபாண்டியன் என் மருமகன்” என்றான் ரவி வர்மன்.
“அதை உணர்ந்துதானே போருக்கு வந்தீர்கள்?” என்று கேட்டான் இளவழுதி.
“ஆம்.”
“போர்க்களத்தில் உறவு கொண்டாடுகிறீர்கள் மகாராஜா!”
“அது ஒன்றும் புதிதல்ல. அர்ஜுனனே போரிட மறுத்தான் உறவினர்களைக் கண்டதும்.”
“அங்கு கண்ணனிருந்தான் அவனைப் போருக்குத் தூண்ட. இங்கு யாருமில்லையே.”
இதைக் கேட்ட மன்னன் நகைத்தான் “கண்ணனைத் தோற்கடிக்கக் கூடியவர் இருக்கிறார்” என்றான் நகைப் பின் ஊடே.
“யாரது?” வியப்புடன் வினவினான் இளவழுதி.
“புலவர்” என்றான் ரவிவர்மன். “அது கிடக்கட்டும். நீ தூது போய்வா இளவழுதி. வீரபாண்டியனைச் சரணடையச் சொல். இல்லையேல் நாளை போர் மூளுமென்று சொல்லிவா. என் மகளுக்காக நான் போரைத் தாமதிப்பதாக எடுத்துக்
கூறு” என்றும் கூறினான்.
தலைவணங்கி மீண்டும் ராஜாவில் ஏறிக்கொண்டு புறப்பட்டான் மதுரை தெற்கு வாயிலை நோக்கி. மதில் மீதிருந்த வீரர்களை நோக்கி தான் சேரமன்னன் தூதனென்றும், வீரபாண்டிய மன்னரைப் பார்க்க வேண்டு மென்றும் கூறினான்.
கதவுகள் உடனடியாகத் திறக்கப்பட்டன. இளவழுதியை எதிர்பார்த்து சபாமண்டபத்திலேயே உட்கார்ந்திருந்தான், வீரபாண்டியன். அவன் அரியனையில் பாண்டிய ராணி நிலமங்கையும் அமர்ந்திருந்தாள்.
இளவழுதி அரியணைக்குச் சற்று முன்பு நின்று தடை வணங்கியதும் வீரபாண்டியன் மெல்ல நகைத்தான். நில மங்கையும் புன்முறுவல் கொண்டாள்.
இருவரையும் மாறிப் பார்த்தபடி நின்ற இளவழுதியின் மௌனத்தை வீரபாண்டியன் சொற்கள் உடைத்தன. “பாண்டியன் பாண்டியனை அழிக்கத் தூது வருவது விந்தையல்லவா இளவழுதி?” என்ற இகழ்ச்சிச் சொற்கள் உதிர்ந்தன
வீரபாண்டியன் வாயிலிருந்து.
இதைக் கேட்ட இளவழுதி பெரிதாக நகைத்தான். அவன் நகைப்பொலியை அந்த மாமண்டபத்தின் பெரும் சுவர்களும் தூண்களும் வாங்கி எதிரொலி செய்தன.
அந்த நகைப்பைக் கண்டு சிறிதளவு சினமும் கொள்ளவில்லை வீரபாண்டியன். “நகைக்கும் காரணத்தை நான் அறியலாமா?” என்று வினவினான் சர்வசாதரணமாக.
.
இளவழுதி நோக்கினான் வீரபாண்டியனை உற்று. “சுந்தர பாண்டியனும் பாண்டியன் தானே?” என்று வினவினான். அவன் குரலில் அர்த்தங்கள் பல புதைந்து கிடந்தன.
இளவழுதிக்கு வீரபாண்டியன் பதிலேதும் சொல்லவில்லை. நிலமங்கையே பதில் சொன்னாள். அவள் பதிலில் பெரும் சூட்சுமமிருந்தது. தர்க்கமிருந்தது. உண்மை பெரிதும் புதைந்து கிடந்தது, அவள் அறிவைக் கண்டு விவரிக்க
முடியாத வியப்பின் வசப்
நில மங்கையைப் பற்றிய விவரங்களை “நில மங்கை” என்ற எனது நூலில் படிக்கலாம்.
பட்ட இளவழுதி பிரமித்து, செயலிழந்து, சொல்லிழந்து நின்றான் பல வினாடிகள்.