Cheran Selvi Ch51 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 51. வெற்றியும் வேதனையும்
Cheran Selvi Ch51 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரமான் பாசறைக்குள் புலவருடன் இளவழுதி நுழைந்தபோது, சேரமன்னன் பலபத்ரனுடனும் இன்னும் சில உபதளபதிகளுடனும் இரு கவிகளுடனும் தீவிரமாக சுந்தரபாண்டியனை பற்றித் தர்க்கித்துக் கொண்டிருந்தானாகையால்
புலவரும் இளவழுதியும் உள்ளே நுழைந்த தைக்கூட அவன் கவனிக்கவில்லை. தமது வருகையை அறிவிக்க “மன்னா!” என்று புலவர் தமது கரகரத்த குரலைக் கிளப்பிய பின்பே அவரையும் அவருக்குப் பின்னால் நின்ற தனது
படைத்தலைவனையும் கவனித்த ரவிவர்மன் அதிகமாக ஏதும் விவாதிக்காமல் உடனடியாக விஷயத்துக்கு வந்து “படைத்தலைவரிடம் அடுத்த நடவடிக்கையைப் பற்றிச் சொல்லிவிட்டீர்களா?” என்று விசாரித்தான்.
“சொல்லிவிட்டேன்” என்ற புலவர் உபதளபதிகளைத் தமது பார்வையிலிருந்து ஒதுக்கிவிட்டு இரு கவிகளை மட்டும் கவனித்தார் உற்று. பிறகு கேட்டார் “இங்கு நடப்பது போர் மந்திராலோசனை தானே?” என்று.
அவரது மனம் ஓடுகிற திசையைப் புரிந்துகொண்ட மன்னன் “ஆம். கவியரங்கமல்ல. ஆனால் இங்கு கவிகளுக்கும் வேலையிருக்கிறது” என்று கூறினான்.
மன்னன் சொல்லால் துணிவடைந்த சமுத்திர பந்தன் “ஆம். புலவரே! தமிழ் புலவருக்கு இருக்கும் வேலை சமஸ்கிருத கவிகளுக்கும் உண்டு” என்று கூறிப் புலவரும் தங்களைப் போலத்தான் என்பதை ஊர்ஜிதம் செய்தான்.
கவிபூஷணன் ஏதும் யேசவில்லை. வழக்கம்போல் மௌனமே சாதித்தான். இந்தக் கவிச் சச்சரவை மன்னனே நொடிப்பொழுதில் நிறுத்தினான். ‘ புலவரே! நீர் போர்த் தந்திரமறிந்தவர், போரிடக் கூடியவர். இவர்களால் அது முடியாது.
ஆனால் கவிபூஷணன் நமது சாஸனங்களைப் படைக்கிறார். நமது செயல்கள் சரியாகக் கற்களில் வெட்டப்பட்டால் தான் பிற்காலச் சந்ததிகள் இஸ்லாம் படையெடுத்தபோது தமிழ்மன்னர்கள் எல்லோருமே கையைக் கட்டிக் கொண்டு
உட்கார்ந்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள். அப்படி வரலாறு சமைக்க, முன் சென்ற மன்னர்களைப் பின் வரும் மக்கள் அறிய, சாஸனங்கள் துணை புரிகின்றன. அந்த சாஸனங்களை இயற்றும் கவிஞன், போருக்குப்
படைத் தலைவன் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம்” என்று கூறினான். மேலும் ஏதோ பேச முயன்ற சமுத்திர பந்தன் வாயைத் தனது கையசைப்பினாலேயே தடுத்தான்.
மேலும் சொன்னான் மன்னன் புலவரை நோக்கி, “புலவரே இளவழுதி விடியற் காலைக்குள் கிளம்பட்டும் வீரதவளப்பட்டணத்தை நோக்கி. நாம் மட்டும் இங்கு பத்து நாள் தங்கிவிட்டுப் பிறகு காஞ்சி நோக்கிச் செல் வோம்” என்று.
புலவர் பதிலேதும் பேசவில்லை சில வினாடிகள்”பத்து நாட்கள் இங்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நான் அறியலாமா?” என்று வின வினார் மிகப் பணிவு நிரம்பிய குரலில்.
புலவர் குரலில் பணிவுடன் ஏளனமும் கலந்திருப்பதை மன்னன் கவனிக்கத் தவறவில்லையானாலும் கவிகள் இருவரும் கவனிக்காததால் அவர்களில் சமுத்திரபந்தன் சினந்து ‘புலவரே! நீர் மன்னன் சந்நிதானத்தில் மன்னருடன்
பேசுகிறீர்?” என்று கடிந்து கூறினான்.
கண்ணுக்கு இன்னும் அத்தனை பழுது ஏற்படவில்லை” என்றார் புலவர் சமுத்திரபந்தனை நோக்கி.
“மூளைக்கு?” என்று சாமர்த்தியமாக வினவினான் சமுத்திரபந்தன்.
புலவர் புன்முறுவல் கொண்டார். “யார் மூளையைப் பற்றி என்று தெரிந்தால் பதில் சொல்வது எளிது” என்றார் புலவர் புன்முறுவலைத் தொடர்ந்து.
சமுத்திரபந்தன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதுவரை மௌனமாயிருந்த கவிபூஷணன் சமுத்திர பந்தனைச் சுடும் விழிகளால் நோக்கினான். “இதற்கெல்லாம் அவகாசமிருக்கிறது. சந்தர்ப்பமிருக்கிறது” என்றும்
சொன்னான்.
கவிபூஷணன் சொல்லை ரவிவர்மன் குலசேகரன் தலை தாழ்த்தி ஆமோதித்தான். “புலவரே நீங்கள் உங்கள் பாசறைக்குச் செல்லுங்கள். இன்னும் மூன்று நாட்களில் நீர் உமது படையுடன் கிளம்புகிறீர். பத்து நாட்கள் இங்கு
தங்கப்போவது நான் தான்” என்று அறிவித்தான்.
“மூன்றாவது நாள் நான் எங்கு செல்லவேண்டும்?” என்று புலவர் கேட்டார்.
“அதைப்பற்றி அப்பொழுது சொல்கிறேன்” என்று மன்னன் உறுதியாகக் கூறினான்.
“உன் பெண்ணை என்ன செய்யட்டும்?” என்று வினவினார் புலவர்.
ரவிவர்மன் சிந்தனையில் இறங்கினான். அதிக நேரம் சிந்திக்கக்கூட இல்லை அவன். “அவள் படைத் தலைவருடன் செல்லட்டும்?” என்று கூறினான்.
அரசன் ஆணையைக் கேட்ட புலவர் இளவழுதி இருவருமே பிரமித்தார்கள். “மன்னவா! அவள் பெண்…” என்று ஏதோ துவங்கினார்.
அதை முன்னமே சொல்லிவிட்டீர்கள். அவளைப் பற்றித்தான் கேள்வியும் கேட்டீர்கள்” என்றான் மன்னவன் எந்த உணர்ச்சியும் தெளிவாகத் தெரியாத குரலில்,
“படைத்தலைவர்…” இழுத்தார் புலவர், மென்றும் விழுங்கினார் மீதிச் சொற்களை.
“இளவழுதி?” மன்னன் கேள்வி அசிரத்தையுடன் வெளிவந்தது.
“ஆம்”
“அவருக்கென்ன?”
“வாலிபன்?”
“அதனாலென்ன?
“அரசகுமாரியும் வயது வந்தவள்…”
“என் மகள் எனக்குத் தெரியாதா?”
“தெரியும் மன்னவா தெரியும். இருவரையும் ஒன்றாகவே அனுப்புவது…”
புலவர் சொற்களை முடிக்குமுன்பு இடையிலேயே வெட்டிய ரவிவர்மன் “அவர்கள் ஒன்றாக இருப்பதும் போவதும் புதிதல்ல. புலவரே! எந்த ஆண்மகனாகட்டும் பெண்ணாகட்டும் அவர்களைக் கட்டுப்படுத்துவது உடம்பில்
இயற்கையாக உள்ள உணர்ச்சிகள், கட்டுப்பாடுகள். இதுவரை ஏதும் தவறு நடக்கவில்லை. இனிமேலும் நடக்காது. கவலைப்படாதீர்கள். இளமதிக்கு சுந்தர பாண்டியன் மீது எடுக்கும் படையெடுப்பில் வேலையிருக்கிறது” என்று
கூறினான்.
பிறகு புலவரையும் கவிகளையும் அனுப்பிவிட்டு கச்சையிலிருந்த ஒரு ஓலையை எடுத்து இளவழுதியிடம் நீட்டி “இதைப் படி” உன்று உத்தரவிட்டான்.
அந்த ஓலையில் ரவிவர்மன் சுந்தரபாண்டியனை வெற்றிகொண்டதாகக் கவிதை புனைந்திருந்தான் கவிபூஷணன். வெற்றி காணுமுன்பே வெற்றிக்கவிதை புனைந்துவிட்ட கவிபூஷணனைப்பற்றிப் பெரிதும் உள்ளூர சிலாகித்துக்
கொண்டான் இளவழுதி. அந்த சிலாகிப்புக்குச் சேரமன்னனும் சுருதி கூட்டினான் “கவி வாக்கு பொய்ப்பதில்லை” என்று.
இளவழுதி ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தான். “இதை என்ன செய்யட்டும்?” என்றும் வினவினான்.
“காஞ்சிக்கு முன்பு பூவிருந்தவல்லியெனும் சிறு நகரம் இருக்கிறது” என்று துவங்கினான் மன்னன்.
“தெரியும் மன்னவா” என்றான் படைத்தலைவன்.
“அங்குள்ள பெருமாள்கோவில் பிரசித்தம்.”
“கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“அதன் சுவற்றில் இதைப் பொறித்துவிடு.”
இளவழுதி சிந்தித்தான். “ஏன் அந்தக் கோவிலில் பொறிக்க வேண்டும்! காஞ்சியில் கோவில்கள் இல்லையா?” என்று வினவினான்.
“இருக்கின்றன. அங்கு பொறிக்க வேறு சாஸனம் இருக்கிறது” என்ற மன்னன் “அங்கு பொறிக்கப்படும் சாஸனம் நமது மதுரா விஜயத்தைப் பற்றியது.”
அதற்குப் பிறகு சாஸனங்களைப் பற்றிய பேச்சை எடுக்கவில்லை மன்னன். “இளவழுதி! நான் போர் துவங்கியது பாண்டியர்களை வெற்றிகொள்ள அல்ல. அஜ்மல்கானையும் குஸ்ரூகானையும் மாலிக்காபூர் மீதி விட்டுப்போன
படைப்பிரிவுகளையும் தமிழ்நாட்டி லிருந்து அகற்ற. நாம் மாலிக்காபூரின் உபதளபதிகளைச் சிறையெடுக்க முயலுகையில் இடைஞ்சலாயிருந்த பாண்டியப் பயிர்களையும் களைய வேண்டியதாயிற்று. ஆனால் ஓடிவிட்ட
சுந்தரபாண்டியன் இப்படித் திடீரென தலை தூக்குவான் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. தந்தையைக் கொலை செய்த சுந்தரபாண்டியனை நாம் கொன்றாலும் தவறில்லை. மாலிக்காபூரை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து நாட்டுக்குத்
தீமை இழைத்தவன் சுந்தரபாண்டியன். ஏதோ விதிவசத்தால் இடையே இந்த வீரபாண்டியனும் சிக்கிக்கொண்டான். இவனை மறந்து விடுவோம். நாளைக் காலையில் நமது கருடன் கொடி மதுரை மீது பறக்கும். மதுரையின் சரித்திரம்
மீண்டும் பயனுள்ள சரித்திரமாகும். ஆனால் சுந்தரபாண்டியன் வீரபாண்டியனல்ல. அவன் வட நாட்டிலுள்ள கில்ஜி மன்னர் இங்கு நாட்டிய விஷவித்து. இப்பொழுது கூட நிச்சயமில்லை எனக்கு, சுந்தர பாண்டியன் தனியாக
இயங்குகிறானா என்பது. அநேக மாக அவனை முன்னுக்கு இழுத்து வந்திருப்பவன் குஸ்ரூகானோ அஜ்மல்கானோ இருவரில் ஒருவர். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் இரு. முதலில் ஒற்றர்களை விட்டு விஷயமறிந்து பிறகு தாக்கு”
என்று தனது கருத்துக்களை விவரித்தான்.
மன்னன் சொன்னதை எல்லாம் நிதானமாகக் கேட்டுக்கொண்ட இளவழுதி கடைசியாக ஒரு கேள்வி கேட்டான். “இந்தப் படையெடுப்பில் என்னுடன் இளவரசி வரவேண்டுமா?” என்று.
“அவள் உடன் வருவது உனக்குத் தனிபலம், பாண்டியர்களை அவள் நன்கு அறிந்து வந்தவள். உனக்கு சந்தேகம் ஏதாவது ஏற்பட்டால் அவளைக் கேட்கலாம்” என்றான் ரவிவர்மன்.
அதற்குமேல் இளவழுதி பேசவில்லை. வெற்றிச் செய்தி இன்னும் எட்டுநாளில் உங்களுக்கு வரும்” என்று கூறினான் முடிவில்.
“எட்டு நாள் எதற்கு? இங்கிருந்து வீரதவளப் பட்டணம் இரண்டு நாள் பயணந்தானே?” என்று வினவினான் ரவிவர்மன்.
“சுந்தரபாண்டியனை நான் வீர தவளப்பட்டணத்தில் எதிர்பார்க்கவில்லை” என்று திட்டமாக அறிவித்தான் படைத்தலைவன்.
மன்னன் கண்கள் வியப்பால் மலர்ந்தன. “அதெப்படித் தெரியும் உனக்கு?” என்று வினவினான்.
“ஊகந்தான். சுந்தரபாண்டியன் குஸ்ரூகானின் கருவி. கருவியை உபயோகப்படுத்துவது குஸ்ரூகானின் இஷ்டம்” என்றான் இளவழுதி.
“குஸ்ரூகானின் இஷ்டமென்ன?”
“அவன் நினைக்கும் பாதையில் நம்மை இழுப்பது.”
“அந்தப் பாதை எது?”
நான் வீரதவளப்பட்டணத்தை அடைந்தவுடன் சுந்தரபாண்டியன் பின்வாங்கும் பாதை.”
“அது எது என்று சொல்ல முடியுமா?”
“சொல்லமுடியும். காஞ்சி செல்லும் பெருவழியாக சுந்தரபாண்டியன் பின் வாங்குவான். நான் தொடருவேன். எந்த இடத்தில் அவனைச் சந்திக்க வேண்டுமோ அங்கு சந்திப்பேன். சந்தித்த அன்று ஒன்று சுந்தரபாண்டியன் இறப்பான்
அல்லது ஓடிவிடுவான். எப்படியும் எட்டாவது நாள் வெற்றிச்செய்தி அனுப்புகிறேன்” என்று விவரித்த இளவழுதி மன்னனிடம் விடை பெற்றுக்கொண்டு தனது பாசறைக்குத் திரும்பினான்.
சேரமன்னன் திருப்தியடைந்த மனத்துடன் நித்திரைக்குச் சென்றான். ஏழு நாட்கள் ஓடின. எட்டாவது நாள் விடியற்காலை செய்தி வந்தது. வெற்றிச் செய்திதான். இருப்பினும் படைத்தலைவனிடமிருந்து வரவில்லை. இளமதியிடமிருந்து
வந்திருந்தது. வெற்றிச்செய்தி விளக்கமாயிருந்தது. விளக்கத்தில் வேதனை மிக அதிகமாகக் கலந்திருந்தது. – ஓலையைப் படித்த சேரமன்னன் கலங்காத நெஞ்சமும் கலங்கியது. அப்படியொரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை.