Cheran Selvi Ch52 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 52. இருதலைக் கொள்ளி
Cheran Selvi Ch52 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
வீரபாண்டியன் மீது வெற்றிகொண்டு கருடன் கொடியை மதுரையின் பிரதான கோபுரத்தின் மீது ஏற்றிய பிறகு எட்டு நாளும் ரவிவர்மன் குலசேகரன் பாசறையில் வாளாவிருக்கவில்லை. மதுரையை வெற்றி கொண்டாலும் அதில்
பிரவேசிக்கவுமில்லை. மூன்றாவது நாள் மன்னன் கட்டளைப்படி தமது படையுடன் காஞ்சி நோக்கிப் புறப்பட்ட புலவர் மட்டும் நகருக்குள் சென்று தேவி மீனாட்சியைத் தரிசனம் செய்துவிட்டுப் புறப்பட அனுமதி கேட்டபோது
அதையும் மறுத்துவிட்டான் சேர பூபதி. “புலவரே! மகாசக்தியான மீனாட்சி எங்கும் போய்விடப் போவதில்லை. நீங்கள் திரும்பும்போது தரிசிக்கலாம்” என்று கூறிவிட்டான் ரவிவர்மன்.
“ஏன்? இந்த நாட்டில் தெய்வ தரிசனத்துக்குக்கூடத் தடை உண்டா?” என்று வினவினார் புலவர்.
“இந்த நகருக்குள் நுழைவதில்லை, வீரபாண்டியன் மனத்தைப் புண்படுத்துவதில்லை என்று முன்னமே தீர்மானித்துவிட்டேன். அந்த உறுதியை இப்பொழுது மாற்றுவதற்கில்லை” என்றான் மன்னன்.
“வீரபாண்டியன் மனத்தையா? உன் பெண் நில மங்கையின் மனத்தையா?” என்று இடக்குக் கேள்வி கேட்டார் புலவர்.
மன்னன் புன்முறுவல் செய்தான். “என் மகளில் ஒருத்தியை இளவழுதியுடன் போர்க்களத்துக்கே அனுப்பியிருக்கிறேன். ஆக இன்னொரு பெண்ணைத் திருப்திப்படுத்த எதுவும் செய்ய அவசியமில்லை” என்று மன்னன் சுட்டிக்
காட்டினான். அத்துடன் சொன்னான் “புலவரே! நீர் கால தாமதமில்லாமல் புறப்படும். சுந்தர பாண்டியன் இளவழுதி கூறியதைப்போல் காஞ்சி நோக்கிப் பின் வாங்கிக் கொண்டிருப்பதாக ஒற்றர்கள் செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்.
நீங்கள் பெருஞ் சாலை வழியாகச் செல்லாமல் குறுக்கு வழியாகச் சென்றால், துரிதமாகப் படைகளை இயக்கினால் சுந்தர பாண்டியன் காஞ்சியை அடையவிடாமல் தடுக்கலாம். நீங்கள் அவனுக்குப் பின்புறமும் இளவழுதி முன் புறமும்
‘தாக்கினால் சுந்தரபாண்டியன் படை பாக்கு வெட்டியில் அகப்பட்ட பாக்கைப் போல் நொறுங்கி விடும்” என்று யோசனை சொன்னான்.
புலவர் தமது தலையை மட்டும் ஆட்டினார் சந்தேகத்துடன். “இதை குஸ்ரூகான் எதிர்பார்க்க மாட்டானென்று சொல்ல முடியாது. அப்படி எதிர்பார்த்தால் சுந்தரபாண்டியனை நான் பின்னால் தாக்கும் போது குஸ்ரூகான் என்னைப்
பின்னால் தாக்கலாம். சுந்தர பாண்டியன் இளவழுதியை எதிர்ப்பதை விட்டு என் மீது திரும்பினால் அவனும் குஸ்ரூகானும் பாக்கு வெட்டியாகவும் நான் பாக்காகவும் ஆகமுடியும்” என்று சுட்டிக்காட்டினார். “எதற்கும் நான்
புறப்படுகிறேன் உடனடியாக” என்று கூறிவிட்டுத் தமது படையை அடுத்த பத்து நாழிகைக்குள் மதுரையிலிருந்து வடக்கு நோக்கிச் செலுத்தினார்.
அவர் சென்ற பிறகு செய்தி ஏதும் கிடைக்கவில்லை மன்னனுக்கு. எட்டாவது நாள் தான் கிடைத்தது. கிடைத்த செய்தியும் பயங்கரமானது. கலங்காத சேர மன்னனையும் கலங்க வைத்தது. செய்தியை இளமதியே கைப்பட எழுதியிருந்தாள்.
“பாண்டிய வீரர், தங்கள் படைத் தலைவர், எதிர்பார்த்தபடிதான் சகலமும் நடந்தது. சுந்தரபாண்டியன் பின்வாங்கி ஓடினான் வழக்கம்போல்’ வழக்கம் போல் உதவிக்கு கில்ஜித் தலைவர்களையும் அழைத்தான். போர் பூவிருந்த வல்லிக்கு
ஒரு காதத்துக்கு முன்னால் நடந்தது. கில்ஜித் தலைவர் இருவரும் சுந்தர பாண்டியன் உதவிக்கு வரவில்லை. சுந்தர பாண்டியன் களத்துக்கு வந்தான். நானும். தங்கள் படைத்தலை வரும் படைகளை இருபகுதிகளாகப் பிரித்துப்
பாண்டியனை ஊடுருவினோம். படைகள் தோல்வியடையும் சமயம், சுந்தரபாண்டியன் சமாதானக் கொடி உயர்த் தினான். போர் நிறுத்தப்பட்டது. போர்க்களத்திலேயே சமாதானம் பேசினான் சுந்தரபாண்டியன். அவனுடன் பேசச் சென்ற
படைத் தலைவரைச் சரேலென்று இருவீரர்கள் கத்திகளால் குத்தினர். படைத்தலைவர் புரவியில் சாய்ந்தார். ராஜா வேகத்துடன் திரும்பி அம்புபோல் பாய்ந்து என்னிடம் வந்தது. அவரை பாசறைக்கு அனுப்பி விட்டு நான் படைகளைக்
கொண்டு சுந்தரபாண்டியனைத் தாக்கினேன். சுந்தரபாண்டியன் ஓடி விட்டான். அவன் படைகளை நாசம் செய்து விட்டேன். ஆனால் அப்பா! இவர் மரணத்தின் வாயிலில் நிற்கிறார் – இளமதி” என்று ஓலையில் பொறிக்கப்பட்டிருந்த
செய்தியைப் படித்த மன்னவன் கண் கலங்கினான். செய்தியைக் கொண்டு வந்த உபதளபதி பலபத்ரனை நோக்கி இந்தச் சதியை நீ பார்த்துக் கொண்டிருந்தாயா!” என்று வினவினான்.
“இல்லை. நான் போர்க்களத்தில் இல்லை” என்றான் பலபத்ரன்.
“ஏன்?” மன்னன் குரல் கடுமையாயிருந்தது.
“காஞ்சி நிலையைக் கண்டறிய போர் மூளுவதற்கு இரண்டு நாள் முன்பாக படைத்தலைவர் என்னை அனுப்பி விட்டார்” என்று பலபத்ரன் பதில் சொன்னான்.
காஞ்சி நிலை என்ன என்பதை மன்னன் வினவவில்லை. மனவேதனையுடன் யோசனையில் நீண்ட நேரம் திளைத்திருந்தான். “இந்தச் சதியில் புதிது ஏதுமில்லை. வீரபாண்டியனைக் கொல்லவும் இப்படித்தான் அன்று ஏற்பாடு
செய்தான். ஆனால் சுந்தரபாண்டியன் சமாதானக் கொடியை நம்பி அவனிருந்த விடம் சென்றது இளவழுதியின் தவறு” என்று சற்று இரைந்தே பேசிய மன்னன், “பலபத்ரா! மருத்துவர்கள் என்ன சொல் கிறார்கள்?” என்று வினவினான்.
“நான்கு நாட்களுக்குள் படைத்தலைவர் கண் திறந்தால் ஆபத்து விலகிவிடும் என்று சொல்கிறார்கள். அதற்கு முன்பு நிச்சயமாக ஏதும் சொல்ல முடியாதென்று கூறுகிறார்கள்” என்றான் பலபத்ரன்.
அதுவரை அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டு பிரமித்திருந்த கவிபூஷணன் ஒரு விசித்திரமான கேள்வி கேட்டான். “என்னைப் படைத்தலைவர் இருக்கு மிடத்தில் சேர்க்க முடியுமா?” என்று.
மன்னன் தன் கண்களைத் திருப்பினான் கவியை நோக்கி, “உமக்கு வைத்தியம் தெரியுமா?” என்று வினவினான்.
“தெரியாது” என்றான் கவிபூஷணன்.
“அப்படியானால் நீங்கள் எதற்குப் படைத்தலைவனைப் பார்க்க வேண்டும்?” என்று மன்னன் வினவினான்.
“வைத்தியர்களால் முடியாதது என்னால் முடியலாம்” என்றான் கவிபூஷணன்.
கவிபூஷணனை உற்று நோக்கினான் மன்னவன் “வழியில் சத்துரு பயம் இருக்கிறது” என்று கூறினான்.
“மிருத்யு பயம் இல்லாத வரையில் பாதகமில்லை” கவிபூஷணன் பதிலைத் திட்டமாகச் சொன்னான்.
“சத்ரு மிருத்யுவானால்?”
“அவனுக்கு நான் மிருத்யுவாக முடியும். மன்னவா! நான் சமஸ்கிருதக் கவிதான். தமிழ்க் கவிகளைப் போல் அறம் பாட எனக்குத் தெரியாது. ஆனால் என் ஒரு சுலோகம் எதிரியின் பல சந்ததிகளுக்கு எமனாகும்.” இதைச் சற்று
அகந்தையுடன் சொன்னான் கவி. அத்துடன் இன்று மாலை பயணமாகிறேன் பலபத்ரனுடன்” என்றும் அறிவித்தான் திட்ட மாக.
அதற்குமேல் மன்னன் எந்தத் தடையும் சொல்லவில்லை. கவிபூஷணன் பலபத்ரனுடன் புறப்பட்டான். அன்றைக்குப் பிறகு எந்தவிதச் செய்தியும் கிடைக்கவில்லை மன்னனுக்கு. திட்டமிட்டபடி பத்தாவது நாள் அதாவது பலபத்ரன்
வந்த நாளிலிருந்து இரண்டாவது நாள் ரவிவர்மன் கிளம்பினான் தனது பெரும்படையுடன் காஞ்சி நோக்கி. அவனை வழியனுப்ப வீரபாண்டியனும் நிலமங்கையும் வந்திருந்தார்கள். புரவியிலமர்ந்து படைகள் நகர, வாளைத் தூக்கு
முன்பு வீரபாண்டியன் கேட்டான். “நானும் உடன் வரட்டுமா?” என்று.
வேண்டாம்” என்றான் மன்னவன்.
“ஏன் அப்பா?” என்று பக்கத்திலிருந்த நிலமங்கை வினவினாள்.
“உன் சகோதரி காதலனை இழக்கும் தருவாயிலிருக்கிறாள். நீயும் அந்த நிலைக்கு வரவேண்டாம். வீரபாண்டியனை முன்பு காத்த நீ இப்பொழுது அவனைப் போருக்கு அனுப்ப வேண்டாம். என் பெண்களில் ஒருத்தி யாவது
சுகமாயிருக்கட்டும்” என்ற ரவிவர்மன் நிலமங்கையை உறுதியுடன் பார்த்தான்.
“அப்படியானால் நான் வருகிறேன். இளமதிக்குத் தெரிந்த போர் மர்மங்களைவிட எனக்கு அதிகம் தெரியுமே” என்றாள் நிலமங்கை.
“அடுத்த கில்ஜி படையெடுப்பு மதுரை மீது ஏற்படுமானால். அதை அப்பொழுது உபயோகப்படுத்து. இந்த வீரபாண்டியன் மனம் தளராமல் பார்த்துக்கொள். எதிரிக்கு இடங்கொடுக்காமல் தமிழ்கொழித்த மதுரையை தமிழர்
சொத்தாகவே வைத்திருக்க முயற்சி செய்” என்ற ரவிவர்மன் புரவியிலிருந்து குனிந்து தனது மகளின் நெற்றியில் முத்தமிட்டான். பிறகு நிமிர்ந்து வாளை உயர்த்தினான். முரசுகள் முழங்கின. படை. வெகு வேகமாக நகர்ந்தது.
அங்கிருந்து படைக்கு எங்கும் அதிகமாகத் தங்க இடங் கொடுக்காமல் ஒரே வாரத்தில் பாலாற்றைத் தாண்டி காஞ்சிமுன்பு வேகவதியின் அக்கரையில் பாசறை அமைத்தான் ரவிவர்மன். கோடைக்காலமானதால் வே கவதியில்
மருந்துக்குக்கூட நீரில்லை. வெள்ளை வெளேரென்ற மணல் கண்ணைப் பறித்தது. காஞ்சியின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. குஸ்ரூகான் போருக்குத் தயாராகி விட்டதை ரவிவர்மன் உணர்ந்து கொண்டான். அடுத்த நாள் புலவர்
படையும் அவன் படைக்குச் சற்று வடக்கே வந்து கலந்துகொண்டது. படைப் பிரிவுகளை நிறுத்திவிட்டு மன்னனைக் காண வந்த புலவர் அவன் பாசறையில் குழப்பத்துடனிருப்பதைக் கவனித்தார். அவர் பாசறைக்குள் தலையைக்
காட்டியதும் மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த ரவிவர்மன் தலையைத் தூக்கி, “புலவரே, உமது சீடன் என்ன ஆனான்? என் பெண் என்ன ஆனாள்? கவிபூஷணன் எங்கிருக்கிறான்?” என்று மூன்று கேள்விகளை வெகு வேகமாகத் தொடுத்தான்.
மூன்றுக்கும் விடையளிக்க முடியவில்லை புலவரால். ஆகவே அவர் பதில் கேள்வி கேட்டார். “இளவழுதி தலைமை வகித்த படை என்னவாயிற்று?” என்று.
“வழியில் நான் பார்க்கவில்லை” என்றான் மன்னவன்.
“தனிப் பேர்வழிகள் மறைய முடியும். படை எப்படி மறையும்?” என்று வினவினார் புலவர்.
“நான் கேட்க வேண்டிய கேள்விகளை நீர் கேட்கிறீர்” என்ற மன்னன் முதன்முதலாகச் சினத்தைக் காட்டினான் குரலில்.
“சிலருக்கு விஷயங்கள் தெரியாதபோது முன்னால் கேள்விகளைப் போடுவது இயல்பு” என்று புலவர் மனித குணத்தை எடுத்துச் சொன்னார்.
“நான் இனி கேள்வி கேட்கப் போவதில்லை. நாளைக்குள் குஸ்ரூகான் வெளி வந்தால் வேகவதி நதியில் குருதி ஓடும். இல்லையேல் காஞ்சியின் பெரும் கதவுகளை உடைத்து நான் உட்புகுந்து விடுவேன். அப்புறம் காஞ்சி யின் கதி
என்ன ஆகுமோ சொல்ல முடியாது” என்றான் ரவிவர்மன். இதைச் சொன்னபோது அவன் குரலில் சீற்றமில்லை. பயங்கர அமைதி காணப்பட்டது. ரவிவர்மன் போர்த் திறனைப் புலவர் அறிந்திருந்ததால் காஞ்சியின் கதியைப் பற்றி அவர்
பெரிதும் கலங்கினார். அறவழி மாறாத சேரன் தனது மகளையும் அவள் காதலனையும் காணாததால் காஞ்சியை அழித்துவிட்டால் என்ன செய்வது என்று ஏங்கினார். “நீதான் இந்த மன்னன் மகளையும் இளவழுதியையும் காக்க வேண்டும்.
வரம் தருவதில் நீ சிறந்தவனல்லவா!” என்று வரதராஜனை மனத்தால் துதித்தார். “மன்னவா! நிதானத்தைக் கை விடாதே. வரதராஜன் உன்னைக் காப்பாற்றுவான்” என்று சொன்னார்.
“பெருமாளா!” மன்னன் கேள்வியில் வெறுப்பு இருந்தது.
“ஆம்” என்றார் புலவர்.
“அவர் இப்பொழுது குஸ்ரூகான் வசத்தில் இருக்கிறார்” என்ற மன்னவன் வெறுப்பு துலங்கிய புன்முறுவலை வெளியிட்டான்.
அதற்கு மேல் விவாதிக்க இஷ்டப்படவில்லை புலவர். “நொந்த உள்ளம் உண்மையைக் காண முடியாது” என்று தீர்மானித்துக் கொண்டு தனது பாசறைக்குச் சென்றார்.
அடுத்த நாள் சொன்னபடி காஞ்சியின் தெற்கு வாசலை இடிக்கவும் ஆரம்பித்தான் ரவிவர்மன். யானைகள் மத்தகங்களால் முட்டின பெரு வாயில்களை. யானைகளால் இழுக்கப்பட்ட பெரும் வண்டிகளில் ஏற்றப்பட்ட மரங்கள் கதவுகளை
படேர் படேரென்று இடித்தன.
இத்தனைக்கும் கோட்டை மதில்கள் மீது எதிரி வீரர்களைக் காணோம். கதவுகள் உடைந்து விழுந்ததும் உள்ளேயும் படை எதுவும் காணோம். முற்றும் எதிர் பாராத இடத்திலிருந்து சேரன் பெரும்படை தாக்கப் பட்டது ரவிவர்மன்
சுற்றுமுற்றும் நோக்கினான். ஒன்று தான் படை களுடன் நகருக்குள் ஓடலாம், அல்லது பக்கங்களிலும் பின்னாலிலும் நெருங்கி வந்த எதிரிகளுடன் போரிடலாம். நகருக்குள் ஓடினால், அழிபடாத மாசு, அபகீர்த்தி இவை சம்பவிக்கும்.
திரும்பிப் போரிட்டால் இருபுறத்திலும் எதிர்ப்பு. தோல்வியும் பேரழிவும் ஏற்படலாம். இருதலைக் கொள்ளியெனத் தவித்தான் சேரன். ஒரு முடிவுக்கு வர அவனால் முடியவில்லை.