Cheran Selvi Ch53 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
சேரன் செல்வி – சாண்டில்யன்
அத்தியாயம் – 53. அவன் செயல்
Cheran Selvi Ch53 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
ஒரு காலத்தில் அகந்தையினால் உந்தப்பட்டு பெரு வேகத்துடன் பிரளயம் போல் பிரவாகித்து திருவெஃகாவின் திருமாலால் தடுத்து நிறுத்தப்பட்ட வேகவதி நதியில் அன்று பிரளயமும் இல்லை, வேகமும் இல்லை. வெறும்
மணற்பரப்பாகக் கிடந்தது. அந்த நதிக்கும் காஞ்சிமா நகரின் தெற்கு வாசலுக்கும் இடைவெளி அதிகமாயிருந்ததால் அந்தப் பக்கத்தில் அஜ்மல்கான் தனது படைகளுடன் வெகு வேகமாக இறங்கி சேரமன்னன் படைகளைப் பின்னால்
தாக்கினான். தெற்கு வாசலை உடைப்பதிலும் உடைத்து நகருக்குள் புகுவதிலும் மும்முரமாயிருந்ததில் சோலையைக் கவனிக்கவில்லை யாதலால், அந்தச் சோலைக்குள்ளிருந்து வேகவதியின் வட பகுதிக்கு அதாவது காஞ்சியின் தெற்கு
வாயிற்பகுதிக்கும் வேகவதி நதிக்கும் இடையே இருந்த நிலப்பரப்புக்குள் திடீரெனப் புகுந்த குஸ்ரூகான் படையும் தாக்க முற்படவே, இருபுறத் தாக்குதலால் சேரன் படை சிறிது தயங்கவே செய்தது. -ஆனால் அத்தயக்கம் சில வினாடிகளே
இருந்தன. ரவிவர்மன் தனது வாளைத் தலைக்கு மேல் ஆட்டிச் செய்த சைகைகளால் அவன் படையின் ஒரு பகுதி சட்டென்று திரும்பி அஜ்மல்கான் படைகளைத் தாக்க முற்பட்டன. பக்கவாட்டிலிருந்த பகுதி குஸ்ரூகான் படைகளுடன்
கைகலந்தன. போர் கடுமையாக மூண்டு விட்டது. குதிரைகள் கனைப்பும், யானைகள் பிளிறலும் வாட்களோடு வாட்கள் மோதும் பயங்கர, ஒலிகளும் எங்கும் பரவின. ரவிவர்மன் நினைத்தபடி வேகவதியிலும் இரு படைகளின் சில
பகுதிகள் இறங்கிவிட்டபடியால் நதியில் வெண் மணல் ஆங்காங்கு திட்டுத்திட்டான ரத்தத்தால் சிவப்பு நிறங்கொண்டு பலவித போர்ச் சித்திரங்களைத் தன்மீது எழுதிக் கொண்டது. அஜ்மல் கானை எதிர்த்தபகுதி முதன் முதலில்
எதிரியின் திடீர்த் தாக்குதலால் சிறிது பலவீனப்பட்டாலும் மிகுந்த திறமையுடன் போரிட்டது. பக்கவாட்டில் சோலையிலிருந்து சீறிவந்த குஸ்ரூகான் படைகளை ரவிவர்மனே நேரில் தாக்கச் சென்றுவிட்டதாலும் படைகளை முதலில்
ஊடுருவினாலும் திடீரென்று குஸ்ரூகானின் அரபுப் புரவிப்படையால் தனது படை துண்டிக்கப்பட்டு சில வீரர்களுடன் தான் குஸ்ரூகான் படையின் மத்தியில் சிக்கிக் கொண்டதாலும் அபாயம் முற்றிவிட்டதை அரசன் உணர்ந்து
கொண்டு மிகுந்த வெறியுடன் வாளைச் சுழற்றினான். சுற்றிலும் சில தலைகள் உருண்டன அவன் வாளால் துண்டிக்கப்பட்டு. சில வீரர்கள் மார்பில் காயமுற்று, புரவிகளிலிருந்து சாய்ந்து நிலத்தில் உருண்டு கொஞ்ச நஞ்சமிருந்த உயிர்
புரவிகள் குளம்புகளால் போய் விடவே ஆகாயத்தை நோக்கி கண்களைச் செங்குத்தாக நிலை நாட்டினார்கள்.
எத்தனை மும்முரமாக போரிட்டாலும் சேரன் படை எதிரிகளின் இருபுற திடீர்த்தாக்குதலால் சிறிது பல வீனப்பட்டுத் திறந்த தெற்கு வாசலை நோக்கிப் பின்னடைந்து கொண்டிருந்தது. அப்பொழுது அஜ்மல்கான் பெருநகை
நகைத்துத் தனது படைகளை அதிகமாக ஊக்குவித்து வேகவதியைக் காத்து நின்ற சேரன் படையை ஊடுருவி விட்டான். அப்படி ஊடுருவியவன் சற்று தூரத்தே குஸ்ரூகான் வலையில் சிக்கிக் கொண்டி ருந்த ரவிவர்மனைக் கண்டதும்
தனது உபதளபதியைக் காஞ்சிக்குள் புகுமாறு கட்டளையிட்டு ஒரு பகுதிப்படையுடன் ரவிவர்மனை நோக்கிச் சென்றான்.
இஸ்லாமியப் படைகளை வெற்றி கொள்ளவும் பின்னால் வரக்கூடிய படையெடுப்புகளைக் காஞ்சிக்கு வடக்கிலேயே தேக்கிவிடலாம் என்றும் ரவிவர்மன் கண்ட கனவு கனவாகவே போய்விடும் நிலைமை ஏற்பட்டுக்
கொண்டிருந்தது. இந்த நிலைமையிலும் போரின் உக்கிரம் சிறிதும் குறையாமலிருந்தது. ரவிவர்மன் தனித்துச் சிக்கிக் கொண்ட நிலையிலும் மிகப் பயங்கரமாகப் போரிட்டான். ஒரு மனிதன் புரவியில் அப்படி சக்கரமாகச் சுழல முடியும்,
மேலே வரும் வேல்களைக்கூட கத்தியால் தடுத்து விட முடியும் என்பதை குஸ்ரூவினால் கூட நம்பமுடிய வில்லை. இப்பேர்ப்பட்ட. ஒரு மகாவீரனை அழிப்பது மகாவீரனான குஸ்ரூகான் உள்ளத்துக்கு சமாதானமாயில்லாததால்
பெருமூச்சுவிட்டான். இருப்பினும் கடமையை முன்னிட்டுப் போரை உக்கிரமாக்கினான். ரவிவர்மன் அருகில் தனது புரவியைச் செலுத்தி, “ரவிவர்மா! போரை நிறுத்திவிடு. உன்னை அழிக்க மனம் வரவில்லை” என்றும் கேட்டான்.
“குஸ்ரூகான்! இந்தப் போர் உன்னுடையதுல்ல, என்னுடையதுமல்ல. இரண்டு கொள்கைகளின் போராட்டம். தமிழகத்தின் சுதந்திரப் போராட்டம். இதில் நான் மடிவது தான் நியாயம்” என்று போரிட்டுக் கொண்டே பதில் சொன்னான்
ரவிவர்மன். அந்த சமயத்தில் அஜ்மல்கான் படையும் பக்கவாட்டில் தாக்கியதும் ‘ இது தான் வரதன் சித்தம் போலிருக்கிறது” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் சேரபூபதி.
வரதன் சித்தம் அப்படியில்லை. நினைத்ததைக் கூடக் கொடுக்கும் தேவராஜன் கருணை அந்தப் பக்கம் சாய்ந்திருக்க வேண்டும். மாலைப்பொழுது நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் காஞ்சியின் மதில் மீது திடீரென ஏராளமான
வீரர்கள் தோன்றினார்கள். மேலிருந்த யந்திரங்கள் மின்னல் வேகத்தில் இயக்கப் பட்டதால் வேல்களும் அம்புகளும் சீறி வந்தன எதிரிகளை நோக்கி. சுமார் ஆயிரம் வேல்கள் எறியப்பட்டதால் அஜ்மல்கானின் படையும் அதற்கு மேலான
அம்புகளால் குஸ்ரூகான் படைகளும் பெரும் சேதப்படவே ஒரு வினாடி எதிரிப்படையில் குழப்பம் ஏற்பட்டது. அந்தக் குழப்ப மடைந்த சமயத்தில் ரவிவர்மன் படை சட்டென்று இரண்டாகப் பிளந்து மன்னன் உதவிக்குச் சென்றது.
காஞ்சியின் உள்ளே ஏதோ பலத்த அரவம் கேட்டது. உடைந்த கதவுகளின் மூலம் இளவழுதியின் படை அவன் தலைமையில் பாய்ந்து வந்து அஜ்மல்கான் படைகளைப் பக்கவாட்டில் தாக்கியது. அதே சமயத்தில் வேகவதியின் அக்கரை யிலும்
ஒரு படைப்பிரிவு இறங்கி வந்தது. அதைப் பூர்ண கவசமணிந்த இளமதி இயக்கி வந்தாள்.
அடுத்த இரண்டு நாழிகைகளில் போரின் திசை அடியோடு வேறுவிதமாகத் திரும்பி விட்டது. இளவழுதியின் ராஜா கனவேகத்தில் அஜ்மல்கானை நோக்கிச் சென்றது. தெற்கு வாசலிலிருந்து வெளிப்போந்த அவன் படையும் சிறுசிறு
பிரிவுகளாகப் பிரிந்து அஜ்மல்கான் படைகளின் நெருக்கத்தை அடைந்தன.
இளமதி வெகுவேகமாக வேகவதியைத் தாண்டித் தனது தந்தையிருக்குமிடம் நோக்கிச் சென்றாள். அவள் படையின் ஒரு பகுதி அவளை அடுத்தும் இன்னொன்று சோலைப் பகுதியை நோக்கியும் சென்றது. குஸ்ரூகான் புரிந்து
கொண்டான் இளமதியின் இருபுறத் தாக்குதல் தன்னைச் சின்னாபின்னப்படுத்தி விடுமென்று. ஆகவே சட்டென்று சோலைக்குள் பின் வாங்கினான்.
அந்தப் படையைச் சோலையில் இருந்து தடுக்க இளமதியின் படைப்பிரிவு முயன்றது. ஆனால் குஸ்ரூகான் போர்த் தந்திரம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. இளமதியை அவன் படையின் ஒரு பகுதி தாக்கியது. இன்னொரு
பகுதியுடன் சோலைக்குள் மறைந்தான் குஸ்ருகான்.
ஆனால் குஸ்ரூகான் ஓடவில்லை. எதிரே நடந்த வேகவதியின் போரை மறைவிலிருந்து கவனித்தான். அப்பொழுது அஜ்மல்கானை பெரிதும் வெறுத்தான் குஸ்ரூகான். அஜ்மல்கானை நோக்கி இளவழுதி வந்த போது அஜ்மல்கான்
தனது பழைய விரோதத்தை எண்ணி அவனை நேரிட சந்தித்தான். “அது அவசியமில்லாத சந்திப்பு. போரில் தனி உணர்ச்சிகளுக்கோ பகைக்கோ இடமில்லை” என்று குஸ்ரூகான் தனக்குள் சொல்லிக் கொண்டான்.”சேரர்
படைத்தலைவனை இவன் ஏன் திரும்பி சந்திக்கிறான்? படை முழுவதையும் திருப்பி இவன் பின்னால் நின்றால் படைத்தலைவனைச் சூழ்ந்து கொள்ளலாமே” என்று எண்ணமிட்டான் குஸ்ரூகான்.
ஆனால் அஜ்மல்கான் சேரன் படைத்தலைவனால் பலமுறை தான் ஏமாந்ததையே எண்ணினான். இம்முறை அவனைத் தொலைத்துவிடுவதென்று தீர்மானித்தான். இளவழுதியின் காயத்தையும் பலவீனத்தையும் அவன்
கேள்விப்பட்டிருந்தான். அதனால் தன் ஜன்மவிரோதி பலவீனத்துடன் வருகிறான் என்று தப்புக்கணக்குப் போட்டான். ஆனால் புறக்காயத்தால் இளவழுதியின் உள் உரம் சிறிதும் பாதிக்கப்படவில்லை யென்பதை அவன் அறியவில்லை.
ராஜாவோ அவனையே குறிவைத்துப் பாய்ந்து வந்தது. இடையில் வந்தவரைக் கால்களால் உதைத்தது. முன்னாள் வந்தவர்களை முட்டிக்கொண்டு அம்புபோல் பாய்ந்தது. அதன் போராட்டமே பயங்கரமாயிருந்ததால் அதன் மீது
அமர்ந்திருந்தவனின் உக்கிரம் சொல்லத் தரமல்லாததாயிருந்தது. படைத்தலைவன் பராக்கிரமத்தை அன்று தான் ரவிவர்மன் கண்டான். இளவழுதியின் வாள் சுழன்றது வேகமாக. அவனைச் சுற்றிலும் வீரர்கள் வீழ்ந்து கொண்டிருந்தனர்.
உடன் வந்த பலபத்ரன் படைத் தலைவனை இமை கண்ணைக் காப்பது போல் காத்துப் போராடினான்.
அஜ்மல்கானை வெகு சீக்கிரம் அடைந்துவிட்ட இளவழுதி அவன் வாளை வினாடி நேரத்தில் பறக்க விட்டான். அஜ்மல்கான் நிராயுதபாணியாக புரவி மீதிருந்து கீழே குதித்து, மாண்ட வீரன் ஒருவன் வாளை எடுத்துக் கொண்டு
நிமிர்ந்தான். நிமிர்ந்த சமயத்தில் இளவழுதியின் வாள் அவன் கழுத்தைத் தடவிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த வாளை இளவழுதி பாய்ச்ச வில்லை எதிரி கழுத்தில். போர் நிறுத்த உத்தரவை அறிவிக்கும்படி பலபத்ரனுக்குச் சைகை
காட்டினான். பலபத்ரன் வாளை உயர்த்தி ஆட்டினான் மேலும் கீழும்.
போர் நின்றது. குஸ்ரூகான் படைப்பகுதியில் மீதி யிருந்தவை சோலைக்குள் மறைந்தன. அஜ்மல்கான் படை பெரும்பாலும் சேதப்பட்டிருந்தது. அஜ்மல்கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
சேரன் வெற்றிச் சங்கை முழக்கினான். வெற்றித் தாரைகள் பலமாகச் சப்தித்தன. அந்த ரணகளத்திலேயே நின்றான் ரவிவர்மன். அந்த சமயத்தில் அவனை அணுகிய புலவரும் சமுத்திரபந்தனும் “பட்டணப் பிரவேசத்துக்கு ஏற்பாடு
செய்யலாமா?” என்று வினவினர்.
“வேண்டாம்” என்று கூறிக்கொண்டே கவிபூஷணன் அவர்களை அணுகினான்,
“ஏன்” என்று சீறினான் சமுத்திரபந்தன்.
இதே இடத்தில் இந்த ரணகளத்தில் வைகையின் கரையில் ரவிவர்மன் தென்னாட்டுச் சக்ரவர்த்தியாகி வீர பட்டாபிஷேகம் செய்து கொள்கிறான்’ என்று அறிவித்தான் கவிபூஷணன்.
சமுத்திரபந்தன் அதை ஆட்சேபித்தான். “மன்னர் புத்தாடை புனைய வேண்டும். மௌலி புனைய வேண்டும். மங்கள வாத்தியங்கள் வேண்டும்” என்று றினான்.
“அது சாதாரணப் பட்டாபிஷேகம். இது வீர பட்டாபிஷேகம். தென்னகத்தைப் பாதுகாத்த மகா வீரனின் வீராபிஷேகம். இவன் ரத்த ஆடையே நீராடிய மங்கள ஆடை. வரதராஜப் பெருமானின் கும்ப தீர்த் தமே இவனுக்கு மங்களா பிஷேக
தீர்த்தம். அவர் அணிந்த மாலையை இவன் சூடுவான்” என்றான் கவிபூஷணன்.
“கிரீடம்” என்று வினவினான் சமுத்திரபந்தன்.
“பெருமாளின் சடாரி இவன் தலைமீது சூட்டப்படும் சில வினாடிகள். அதைவிடச் சிறந்த மௌலி ஏது?” என்று கேட்ட கவிபூஷணன் “மகாராஜா! இப்படியே அமருங்கள்” என்று தன்னுடன் இருவர் கொண்டு வந்திருந்த ஆசனத்தைக்
காட்டினான்.
அந்த ஆசனத்தில் போர்க் கறைபட்ட ஆடையுடன் அமர்ந்திருந்தான் ரவிவர்மன் குலசேகரன்.தெற்குவாசலில் கோவில் வாத்தியம் ஊதியது. கும்பதீர்த்தத்தை ஒரு பட்டர் தாங்கி வந்தார் தலையில். கவிபூஷணனும் மற்ற அந்தணரும்
வேதமோத வேகவதியின் கரையில் போர்க்களத்தின் மத்தியில் ரவிவர்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்னொரு பட்டர் பட்டில் மூடிக் கொண்டு வந்த தேவப் பெருமாள் மாலையை மன்னனுக்குச் சூட்ட மற்றொரு பட்டர் பட்டில்
கொண்டு வந்திருந்த சடாரியை அவன் தலையில் சூட்டினார். அந்த சமயத்தில் படையில் சங்கங்கள் முழங்கின. அவற்றுக்கும் மேலாக கவிபூஷணன் முழங்கினான் சங்க்ரமதீரன் வாழ்க” என்று. புலவரும் அந்த ஆசியில் கலந்து
கொண்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் வேகவதி நதிதீரம் சுத்த மாக்கப்பட்டது. நகருக்குள்ளே கொண்டாட்டம் அமர்க்களப்பட்டது. அப்பொழுது மன்னன் இளமதியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான். புலவரும் கவிகளும்
படைத்தலைவரும் பின் தொடர.
கர்ப்பக்கிரகத்தில் தேவராஜன் முன்பு நின்ற மாமன்னன் ரவிவர்மன் பெருமாள் முன்னிலையில் நெடுஞ்சாண் கட்டையாக விழுந்து எழுந்தான். “பெருமாளே! உன் வரத்தால் இந்தத் தென்னகம் பிழைத்தது. மாலிக் காபூர் தமிழகத்தில்
தகர்த்த கோவில் பகுதிகள் இன்னும் ஓராண்டு காலத்தில் சீர்படுத்தப்படும். அதற்கு முன்பாக உனக்காகவே வளர்த்த இக்கன்னிகையை ஏற்றுக்கொள்” என்று இளமதியைக் கையைப் பிடித்துப் பெருமாள் முன்பு நிறுத்தினான்.
சற்று பின்னால் நின்ற இளவழுதி ஏதும் பேசவில்லை. கல்போல் உணர்ச்சியற்று நின்றிருந்தான். அந்த சமயத்தில் கவிபூஷணன், “பட்டரே! கற்பூர ஆராத்தி நடக்கட்டும்! பிறகு புஷ்பங்கட்டி இவளுக்கும் இந்த இளவழுதிக்கும்
பொருத்தமிருக்கிறதா பாரும். பிறகு அவன் திருவுள்ளம்” என்றான்.
கவியின் ஆக்ஞைப்படி செய்தார் பட்டர். முடிவில் சொன்னார் “ இரண்டுக்கும் உத்தரவாயிருக்கிறது’ என்று.
“அப்படியென்றால்?” ரவிவர்மன் வினவினான்.
“இந்தப் பெண் வரதனுக்கு அடிமை. ஆனால் பகவத் பிரசாதமாகப் படைத்தலைவனுக்கு அளிக்கப்படுகிறாள்.
இவளுக்கு மகன் பிறந்தால் பெருமாள் பெயரை வைக்கட்டும்” என்று பட்டர் கூறி இளவழுதியை முன்னால் வரச் சொல்லி பகவான் திருவடிகளில் கட்டி வைத்திருந்த பூவை எடுத்து அவனுக்கு ஒன்றையும் இளமதிக்கு ஒன்றையும்
கொடுத்தார்.
அந்த சமயத்தில் புலவர் சொன்னார். “யார் அபீஷ்டத்தையும் பகவான் கெடுப்பதில்லை. வரதராஜனல்லவா? இளவழுதிக்கும் வரம் கொடுத்துவிட்டான். அவன் திருவுள்ளத்தை யார் அறியமுடியும்?” என்று.
ரவிவர்மன் பகவானைப் பணிந்தான். கையிலிருந்த பையிலிருந்து பொன் நாணயங்களை பட்டர் தட்டில் கொட்டினான். பிறகு திரும்பினான். திரும்பி வரும் போது இளவழுதியைக் கேட்டான் “உன் மரணக்காயம் என்ன ஆயிற்று? நீ
எங்கிருந்து திடீரென முளைத்தாய்? உன் படை எங்கு மறைந்திருந்தது?” என்று
“மன்னவா! கவிபூஷணன் கவி மட்டுமல்ல, மருத்துவர் மட்டுமல்ல, போர் நுணுக்கம் அறிந்தவர். அவர் வந்ததும் என் காயங்களுக்கு ஏதோ பச்சிலை வைத்துக் கட்டினார். இரண்டு நாள் ஏதோ ஜபம் செய்தார். நான் தப்பினேன்
மரணத்திலிருந்து. பிறகு படைகளைச் செலுத்த முற்பட்டேன். படைகளைக் காஞ்சிக்குள் செலுத்தி மறைந்து விடுமாறும், அவசியமான போது திடீரெனத்தோன்றுமாறும் யோசனை சொன்னார். அதன்படிதான் சகலமும் நடந்தது! வெற்றி.
நமதல்ல, கவியின் வெற்றி” என்று விளக்கினான் இளவழுதி.
வேகவதி நதிக்கரையில் நடந்த வீராபிஷேகத்துக்குப் பிறகு சுமார் பத்து நாட்கள் தான் தங்கினான் ரவிவர்மன் காஞ்சி மாநகரில். போர் முடிந்த மறுநாளே குஸ்ரூகான் தனது படைகளுடன் தில்லி நோக்கிப் பின் வாங்கிவிட்டான்.
இளவழுதியிடம் சிறைப்பட்ட அஜ்மல்கான் வீராபி ஷேகத்தை முன்னிட்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான்.
இதற்குப் பிறகு காஞ்சியைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை ரவிவர்மன் இளவழுதியிடம் கொடுத்தான். இளவழுதி அன்று முதல் காஞ்சியின் இடிந்த பகுதிகளைச் செப்பனிடுவதிலும் சேரர்படைகளின் ஒரு
பகுதியைக் காவலுக்குக் காஞ்சியிலேயே நிறுத்துவதிலும் காலத்தைச் செலவிட்டான். அந்தக் காவற்படைக்கு பலபத்ரனைத் தளபதியாக்கினான். “பலபத்ரா! படை யெடுப்பு இத்துடன் முடியவில்லை. குஸ்ரூகான் ஓடிவிட்டானென்று
நம்பவேண்டாம். அவன் திரும்பவும் வருவான்” என்று எச்சரித்தான். அந்த எச்சரிக்கை சரியென் பதை காலமும் வரலாறும் நிரூபித்தன. ஆனால் அன்று பிற்கால நிகழ்ச்சிகளை எதிர்பாராத பலபத்ரன் காஞ்சியின் பாதுகாப்புப் பொறுப்பை
ஏற்றான்.
காஞ்சி கைவசப்பட்டதும் ரவிவர்மன் கிளம்பினான் காஞ்சியிலிருந்து சேர நாடு நோக்கி. மன்னனை வழியனுப்பிய புலவரும், இளவழுதியும் “நாங்களும் இரண்டு நாளில் புறப்படுகிறோம் எங்கள் நாட்டுக்கு” என்று கூறினார்கள்
மன்னனிடம்.
புரவியில் அமர்ந்து புறப்படத் தயாராயிருந்த ரவி வர்மன் கேட்டான் “உங்கள் நாடு என்றால்?” என்று.
“பாண்டிய நாடு” என்றார் புலவர்.
“அது இப்பொழுது சேரநாட்டுக்குள் அடக்கம்” என்றான் ரவிவர்மன்.
“தவறு ரவிவர்மா. பாண்டியர் என்றும் அடங்காத சாதி” என்றார் புலவர்.
“சாதியை விட்டு தமிழர் என்ற ஒரே சாதியை நினைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறிப் புரவியைத் தட்டிவிட்டான் ரவிவர்மன்.
அன்று காஞ்சியின் பெருமாளிகைப் பள்ளியறையில் உட்கார்ந்து தீவிர சிந்தனையிலிருந்த இளவழுதியை நோக்கிக் கையில் தட்டுடன் வந்தாள் இளமதி. தட்டை ஒருபுறம் வைத்துவிட்டு அவனை அணுகினாள் நாணத் துடன்.
“என்ன யோசனை இன்னும்? போர் முடிந்து விட்டதே” என்றாள்.
“ஆம்” என்றான் இளவழுதி.
“என்ன ஆம்?”
“முடியும் போர் முடிந்துவிட்டது.”
“முடியும் போர் முடியாத போர் என்று இருவகை உண்டா?”
“உண்டு.”
“முடியாத போர் எதுவாம்?”
“வாழ்க்கைப்போர்” என்று சொன்ன இளவழுதி அவளை இறுகப் பிடித்து இழுத்தான் தன்னை நோக்கி.
இளமதி நகைத்தாள் “போரின் ஆரம்பமே கடுமையாயிருக்கிறதே” என்றும் கூறினாள்.
“ஆம்” என்றான் இளவழுதி.
“பாண்டியர்கள் முரடர்கள்” என்றாள் இளமதி அவனுடன் இணைந்து.
“இருப்பினும் இப்பொழுது சேரர்களுக்கு அடிமைப்பட்டு விட்டார்கள்” என்ற இளவழுதி லேசாக நகைத்தான். அவளும் நகைத்தாள். பிறகு நகைப்புக்கு இடமில்லை. நகைப்பின் இடத்தை அதையும் மீறிய உணர்ச்சிகள் ஆட்கொண்டன.
பேச்சு நின்றது. பெருமூச்சு மட்டும் அவ்வப்பொழுது வெளிவந்து அறையின் நிசப்தத்தை உடைத்துக் கொண்டிருந்தது.
(முற்றும்)