Naga Deepam Ch18 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 18. முதல் படி
Naga Deepam Ch18 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
இருப்பது சொர்க்கமா, பூமியா என்ற நிலையில் ஆழ்ந்து கிடந்த தங்களிருவருக்கும் குறுக்கே புகுந்து சுந்தர்தாஸ் பேசிய பேச்சால் திக்பிரமை பிடித்து அடியோடு நிலை குலைந்துபோன ராஜபுத்திரிக்கு, தானே கனிவர்க்கங்களை
ஊட்டி நீரையும் குவளையில் ஊற்றிப் பருக வைத்த ஹரிதாஸ் ஜாலா, “நம் வாழ்வு சிக்கலில் துவங்கியது சிக்கலில் மேலும் ஆழ்கிறது. இருப்பினும் அஞ்சாதே” என்று தைரியம் சொன்ன தன்றி, அப்படி ஏற்பட்ட சிக்கலை அவிழ்க்கவும்
தன்னிடம் மந்திரம் இருப்பதாகக் கூறி, அவள் காதில் அந்த மந்திரத்தை ஓதியதும், ராஜபுத்திரி பெரும் பிரமிப்புக்குள்ளானாள். தான் பெரும் மர்மம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த விஷயத்தை ஹரிதாஸ் ஜாலா எப்படித்
தெரிந்து கொண்டான் என்பதும் அவளுக்குத் தெரியாத புதிராயிருந்தது. ராஜ ரகசியமென்று ராஜபுதனப் பிதாமஹரான ஜயன் சந்தாவத்தே தன்னிடம் தனிமையில் கூறியிருக்கும் அந்த மர்மம், யார் மூலமாக வெளியாகி இருக்கும் என்று
நினைத்துப் பார்த்து மேலும்மேலும் பிரமிப்பே அடைந்தாள் ராஜபுத்திரி. இந்த மர்மம் வெளியானால் ராஜபுதன வீரர்களுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்படும் என்பதையும், மேவாரின் பிற்காலத்துக்கும் அதனால் விபரீத விளைவுகள்
உண்டாகுமென்பதையும் அறிந்திருந்த ராஜபுத்திரி சற்று வருத்தப்பட்டாலும், அந்த மர்மத்தை ஹரிதாஸ் அறிந்திருப்பது அவனுக்குப் பெரும் கவசமென்பதை உணர்ந்து கொண்டாளாகையால் உள்ளூரத் திருப்தியும் அடைந்தாள்.
அவன் மந்திரத்தை மெள்ளத்தான் ராஜபுத்திரியின் காதில் ஓதினான். இருப்பினும் அவன் சொற்கள் மிகப்பெரிதாக அவள் காதில் ஒலித்தன. “சுந்தர்தாஸைப் பற்றிக் கவலைப்படாதே ராஜபுத்திரி. இவனையும் அவசியமானால்
ராணாவையும் நாம் பெரும் ஆபத்தில் சிக்க வைக்க முடியும்” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
வியப்பு மண்டிய விழிகளை அவன் மீது திடீரெனத் திருப்பியதால், காதுக்கருகிலிருந்த அவன் உதடுகள் அவள் கன்னத்தில் உராய்ந்தன. அந்த இன்பத்தைக் கூடக் கவனிக்காத ராஜபுத்திரியின் இதயத்தில் அந்தச் சமயத்தில் வியப்பே
மண்டிக் கிடந்ததால், அந்த வியப்பும் அது சம்பந்தமான கேள்வியுமே அவள் கண்களில் விரிந்து கிடந்தன. கேள்வியைப் புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா மீண்டும் அவள் கன்னத் தைத் தன் கையால் திருப்பிக் காதுக்கருகில் உதடுகளைக்
கொண்டு போய், “ஜஹாங்கீரிடம் ரகசியப் பேச்சு வார்த்தை ராணா நடத்துகிறார். அது ராஜ புதனத்தில் யாருக்கும் தெரியாது. இதைப்பற்றி மூச்சு விடாதே யாரிடமும்” என்று கூறிவிட்டு எழுந்து, வீரர்களைப் பயணத்துக்குத் தயார் செய்ய
வெளியே சென்றான்.
மொகலாயரிடம் பலமாகப் போர் தொடுத்து ராணா பிரதாப்பின் பெயருக்குப் பெருமை தேடிவிட்டார் என்று ராஜபுதனம் கொண்டாடி வந்த ராணா அமரசிம்மன், உண்மையில் யாரோ ஒரு தூதன் மூலம் மிக ரகசியமாக ஜஹாங்கீரிடம்
பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பிதாமஹரே ராஜபுத்திரியிடம் மிக ரகசியமாகச் சொல்லியிருந்தார். “ராஜபுத்திரி! நான் உயிருடனிருக்கும் வரையில் ராணா ராஜபுதனத்தின் கௌரவத்தை விற்றுவிட அனுமதிக்க மாட்டேன். அது
நடப்பதானால் என் ஆயுட்காலத்துக்குப் பின்புதான் நடக்க வேண்டும். இதை மனதிற்குள் வைத்துக்கொள். ராணாவை நானே கவனித்து வருகிறேன். அவர் சிறிது முறை பிசகி நடந்தாலும் போரை நிறுத்த ஏற்பாடு செய்தாலும், ஒன்று
நானிருக்க மாட்டேன். அல்லது அவரிருக்க மாட்டார்” என்று சொல்லியிருந்தார்.
ராஜபுத்திரிக்குப் பிதாமஹரின் பேச்சைக்கூட நம்புவது கடினமாய் இருந்தது. ‘மொகலாயர்களைத் தன்னந்தனியாக ஆயுள் முழுவதும் போரிட்டு ராஜ புதனத்தின் கௌரவத்துக்காகவே காட்டுக் குடிசையில் மாண்ட ராணா
பிரதாப்பின் மைந்தன் மொகலாயரிடம் சரண்புக விரும்புவானா?’ என்று கூடப் பலமுறை அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறாள். இருப்பினும் பிதாமஹர் பொய் சொல்லமாட்டார் என்பதையும் முதலில் போரிலிறங்க
மறுத்த ராணாவை, அரியணையிலிருந்து அவர் கையைப் பிடித்து இழுத்து இறக்கியதையும், அவள் கேள்விப்பட்டிருந்தாளாகையால் அத்தகைய ராணா ஒருவேளை சமா தானத்தை விரும்பினாலும் விரும்பலாமென்று நினைத்தாள். என்ன
இருந்தாலும் பிரதாப்பின் மைந்தன் போரை நிறுத்த மாட்டார். நிறுத்தினாலும் பிதாமஹர் சம்மதிக்க மாட்டார். பிதாமஹர் சம்மதப்படாமல் ராஜபுதனத்தில் எதுவும் நடக்க முடியாது’ என்றும் அடிக்கடி தன்னுள் சொல்லிக் கொண்டாள்.
அப்படித் தன்னுள் சர்ச்சை செய்து கொண்டு பிதாமஹருக்கும் தனக்கும் மட்டுமே தெரியுமென்று நினைத்திருந்த அந்த ராஜ ரகசியம், இரண்டு வருடங்கள் மொகலாயர் சிறையிலிருந்து விட்டு வந்துள்ள ஹரிதாஸ் ஜாலாவுக்குத்
தெரிந்தது பெரும் வியப்பாகவே இருந்தது அவளுக்கு. அந்த வியப்புடன் பயண உடை அணிந்து பஞ்சணையில் உட்கார்ந்திருந்த ராஜபுத்திரி, சிறிது நேரத்திற்குப் பின் ஹரிதாஸ் ஜாலா வீரர்களை சித்தப்படுத்தி அவளை அழைத்துச் செல்ல
உள்ளே வந்ததும், அவனை அதைப்பற்றிக் கேட்கவும் செய்தாள். “உங்களுக்கு எப்படித் தெரிந்தது அது?” என்று வினவினாள் ராஜ புத்திரி.
ஹரிதாஸ் ஜாலா அவளுக்கு வெகு அருகில் வந்தான். அவள் தோள் மீது தனது இரு கைகளையும் வைத்துக் கொண்டு அவள் விழிகளைக் கூர்ந்து நோக்கினான். “எது ராஜபுத்திரி” என்று கேட்கவும் செய்தான்.
“சற்று முன்பு காதுக்கருகில் ஓதினீர்களே, அது”
“அதுவா!” என்று சர்வ சாதாரணமாகச் சொன்ன ஹரிதாஸ், “புறப்படு ராஜபுத்திரி, புரவியில் போகும் போது பேசிக்கொண்டே போகலாம்” என்ற அவன் ஒரு கையைப் பிடித்து அவளை மஞ்சத்திலிருந்து எழுப்பினான்.
அவன் அப்படித் தூக்கியதால் எழுந்து உடலுடன் உடல் உராய நின்ற ராஜபுத்திரி, “புரவியில் போகும் போது தான் பேசமுடியாதே” என்றாள்.
“ஏன்?”
“அவன் இருப்பானே கூட”
“ஆம்”
“அவனைப் பற்றிக் கவலைப்படாதே.”
“அவன் உங்களை பயமுறுத்தினானே.
“அதைவிட நான் பன்மடங்கு பயமுறுத்தியிருக்கிறேன் கவலைப்படாதே. அவன் நம்மிடம் மிகுந்த எச்சரிக்கையுடனிருப்பான் இனி.”
“என்ன அவ்வளவு திடமாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் ராஜபுத்திரி. ஹரிதாஸ் ஜாலாவின் தோளில் ஒரு கையை வைத்துத் தனது தலையைத் தூக்கி அவன் முகத்தை நோக்கி…
“பாம்பின் கால் பாம்பறியும் ராஜபுத்திரி” என்றான் ஹரிதாஸ் ஜாலா.
“நீங்களும் பாம்பா?” என்று வினவினாள்.
“அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.”
“நீங்கள் விஷப் பிராணியா?”
“நல்லவர்களுக்கு நான் விஷப் பிராணியல்ல, விஷப் பிராணிகளுக்கு நான் விஷப் பிராணிதான். உதாரணமாக சுந்தர் தாஸ் இருக்கிறானே, அவன் சம்பந்தப்பட்டவரையில் நான் சிறிதும் கருணை காட்டமாட்டேன்.”
ராஜபுத்திரி சிறிது நேரம் யோசித்து விட்டுச் சொன்னாள் : “பிதாமஹருக்கும் இவனிடம் நல்ல அபிப்பிராயமில்லை” என்று.
ஹரிதாஸ் ஜாலா அவள் கபோலங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, “ராஜபுத்திரி, அதுவும் எனக்குத் தெரியும், அவனை உதறிவிட பிதாமஹர் எத்தனையோ முயன்றும், ராணாவின் கரம் அவனைக் காப்பதால்
முடியவில்லையென்பதும் எனக்குத் தெரியும். சுந்தர்தாஸ் வடிகட்டின அயோக்கியன். சுயநலத்துக்காக எதையும் செய்ய அஞ்சமாட்டான், ஆனால் அவன் செய்த துரதிர்ஷ்டம் நான் திடீரென இங்கு வந்து குதித்து விட்டேன்” என்று
கூறினான்.
ராஜபுத்திரிக்கு முழு உண்மை விளங்காவிட்டாலும் ஓரளவு உண்மை தெரிந்தது. சுந்தர்தாஸின் சுயநலத்துக்கு ஹரிதாஸ் வருகை பெரும் இடைஞ்சல் என்பதை அவள் புரிந்து கொண்டாள், அது மட்டுமல்லாமல் சுந்தர் தாஸுக்கும
ஹரிதாஸுக்கும் தன் முன்னிலையில் நடந்த உரையாடலில் இருந்து, சுந்தர்தாஸைப் பற்றி மற்ற யாருமே அறியாத பல உண்மைகளை ஹரிதாஸ் அறிந்திருக்கிறான் என்பதையும் உணர்ந்து கொண்டாள். ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை
ராஜ புத்திரிக்கு. இவர் ராஜத்துரோகத்தைப் பற்றி ஏதோ பேசினாரே! அதன் கருத்து என்ன? சுந்தர் தாஸ் ராஜத் துரோகியா? ராஜத் துரோகியானால் ராணாவுக்கு ஏன் உடந்தையாய் இருக்கிறான்? ராணாவின் உள்ளெண்ணத்தை
நிறைவேற்றுபவன் எப்படி ராஜத்துரோகியாக முடியும்? எல்லாம் முழு முரண்பாடாக இருக்கிறதே’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அவள் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட ஹரிதாஸ் ஜாலா கூறினான் :
“ராஜபுத்திரி! உனக்கு இப்பொழுது பல விஷயங்கள் புரியாது. போகப்போக நீயே புரிந்து கொள்வாய். இப்பொழுது ராஜபுதனத்தில் இரண்டு கட்சிகள் இருப்பதை மட்டும் புரிந்துகொள். ஒன்று சுதந்தரக் கட்சி, இன்னொன்று
சுயநலக் கட்சி” என்று.
“சுதந்தரக் கட்சியில் இருப்பது யார்? சுயநலக் கட்சியில் இருப்பது யார்?’ என்று வினவினாள் ராஜ புத்திரி.
“சுதந்தரக் கட்சியில் ஜயன் சந்தாவத்தால் காக்கப்பட்ட ராஜபுதனம் முழுவதும் இருக்கிறது!” என்றான்.
“சுயநலக் கட்சியில்?”
“இரண்டே பேர்.”
எந்த இருவரைக் குறிப்பிடுகிறான் ஹரிதாஸ் ஜாலா என்பதை ராஜபுத்திரி புரிந்து கொண்டாலும், அதைப் புரிந்து கொள்ளா ததுபோல் கேட்டாள் : ‘யார் அந்த இருவர்?’ என்று…
“ஒருவர் ராணா அமரசிம்மன், இன்னொருவன் சுந்தர்தாஸ்” என்று கூறிய – ஹரிதாஸ் ஜாலா,
“அஞ்சாதே ராஜபுத்திரி! தவிர்க்க முடியாத சக்தி ஜயன் சந்தாவத்துக்கு உதவும்” என்றும் குறிப்பிட்டான்.
“எது அந்தச் சக்தி” என்று ராஜபுத்திரி வினவியதற்குத் தன் இடையிலிருந்து வாளைப் பெருமையுடன் தட்டிக் காட்டிய ஹரிதாஸ் ஜாலா, அதற்குமேல் உரையாடலை வளர்த்தவிடாமல் ராஜபுத்திரியை அழைத்துக் கொண்டு வெளியே
சென்றான்.
பயணத்துக்குப் புரவி வீரர்கள் சித்தமாக நின்றிருந்தார்கள். அவர்களில் இருவர் ராஜபுத்திரியின் புரவியையும் ஹரிதாஸ் ஜாலாவின் புரவியையும் அக்கம் பக்கத்தில் நிற்க வைத்துக் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு
காத்திருந்தார்கள். சற்றுப் பின்னடைந்து புரவியுடன் நின்று கொண்டிருந்த சுந்தர்தாஸ், ராஜ புத்திரியும் ஹரிதாஸ் ஜாலாவும் கூடாரத்திலிருந்து புன் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ந்து கொண்டு வந்ததையும்,
இருவரும் தன்னைக் கவனியாமலே புரவிகள் மீது ஏறிவிட்டதையும் கண்டு பொறாமைப் பெருமூச்சுவிட்டான். அவ்விருவரும் புரவிகள் மீது ஏறியதும் ஹரிதாஸ் ஜாலாவின் உத்தரவுப்படி மற்ற வீரர்களும் புரவிகள் மீது ஏறி,
வரிசையாகப் பின் தொடர்ந்ததும் சுந்தர்தாஸும் புரவிமீது ஏறி, வேகமாகத் தன் புரவியை ராஜபுத்திரிக்குப் பக்கத்தில் கொண்டுபோய் சரி சமானமாகச் சவாரி செய்ய முற்பட்டான்.
அவன் அப்படித் தன்னருகில் வந்ததைச் சிறிதும் லட்சியம் செய்யாத ராஜபுத்திரி தலையை ஆணவத்துடன் நிமிர்ந்து புரவியைத் தனது இடது காலால் சற்று உதைத்து ஹரிதாஸ் ஜாலாவின் குதிரைக்கு வெகு அருகில் அதைச் செலுத்திக்
கொண்டே சென்றாள். அதைக் கவனித்த் சுந்தர் தாஸின் உள்ளத்தில் கோபம் பெரிதும் சுடர் விட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமலே பயணம் செய்தான் சுந்தர்தாஸ். இருப்பினும் அவன் முகபாவத்தாலும், புரவியில் உட்கார்ந்திருந்த
முறையாலும் அவன் உள்ளக் கொந்தளிப்பை உணர்ந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அந்தப் பொறாமை நெருப்புக்கு எண்ணெய்விட முற்பட்டு, “ராஜபுத்திரி! கூடாரத்தில் என்னிடம் ரகசியமாக ஏதோ சொன்னாயே…” என்று பேச்சைத்
தொடங்கினான்.
ராஜபுத்திரி அவன் மனோபாவத்தைப் புரிந்து அவனுக்குச் சரியாகப் பேச ஆரம்பித்து, “ரகசியம் நான் எங்கு சொன்னேன்? நீங்கள் அல்லவா என் காதுக்கருகில் முணுமுணுத்தீர்கள்” என்றாள்.
“பொய் சொல்லாதே!” என்றான் ஹரிதாஸ் ஜாலா சிரித்துக்கொண்டு.
“நானா பொய் சொல்கிறேன்?”
“ஆம்.”
“என்ன பொய் சொன்னேன்?”
“நான் ரகசியம் சொன்னதாகச் சொன்னாயே?”
“அது பொய்யா?”
“ஆமாம். நான் சொன்னது உனக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அப்படியிருக்க அது எப்படி ரகசியமாகும்?”
.
அதைக் கேட்ட ராஜபுத்திரி கலகலவென நகைத்தாள். அந்தச் சிரிப்பை அடியோடு வெறுத்த சுந்தர்தாஸின் இதயத்தில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவர்கள் பேச்சைக் கேட்க
இஷ்டப்படாத சுந்தர் தாஸ், தன் குதிரையின் வேகத்தைச் சிறிது தளர்த்திப் பின்னடையச் செய்தான். அவன் பின்னடைந்து விட்டதைக் கவனித்த ராஜபுத்திரியும் ஹரிதாஸ் ஜாலாவும் பெரிதாக நகைத்தார்கள். அந்த நகைப்பைத் தொடர்ந்து
ஹரிதாஸ் ஜாலா சொன்னான்: “ இதில் மட்டும் பின்னடைவதில்லை ராஜபுத்திரி” என்று.
“எதில்? போரிலா?” என்று கேட்டாள் ராஜபுத்திரி காதல் ததும்பும் விழிகளை அவன் மீது திருப்பி.
அவன் கண்களும் அவள் கண்களைச் சந்தித்தன. “போரிலும் சரி, காதலிலும் சரி” என்று மெள்ளப் பேசுவதுபோல் பின்னால் வந்து கொண்டு இருந்த சுந்தர் தாஸின் காதில் விழும்படி கூறினான்.
சுந்தர்தாஸின் மனம் வெடித்து விடும் எரிமலையின் நிலையிலிருந்தது. முன் சென்ற இருவரும் தன்னை ஏளனம் செய்கிறார்களென்பதை அவன் புரிந்து கொண்டான். இருப்பினும் உணர்ச்சிகளை அடியோடு அடக்கிக் கொண்டு
அவர்களைப் பின் தொடர்ந்தான். வழியெல்லாம் அந்தக் காதலர் மகிழ்ச்சியுடள் பேசிக் கொண்டு சென்றார்கள். ஹரிதாஸ் ஜாலா ஒருமுறை பெரிதாக நகைத்தான். இந்தக் கதை ஆரம்பத்தில் அவன் சிரித்த வறட்டு சிரிப்பல்ல இம்முறை அவன்
நகைத்தது. இந்த நகைப்பில் வறட்சியில்லை, வளம் இருந்தது; மன வறட்சியில்லை , வளம் இருந்தது; மன வெறுப்பு இல்லை. மகிழ்ச்சி இருநதது, கவலையில்லை காதல் இருந்தது.
இப்படிச் சிரித்த ஹரிதாஸ் ஜாலாவைக் கண்ட சுந்தர்தாஸின் மனம் மேலும் மேலும் எரிந்தது. அவன் உள்ளத்தில் தன் வெறுப்பைக் காட்டவும் ஹரிதாஸைத் தீர்த்துக் கட்டவுமான திட்டம் ஒன்று உருவாயிற்று. பெரும் அபாயமான
திட்டத்தை வகுத்தான் சுந்தர்தாஸ், அன்றிரவு அவர்களனைவரும் ஒண்டாலா கோட்டையை அடைந்ததுமே. திட்டத்தின் முதற்படியை நிர்மாணித்தான் சுந்தர் தாஸ். முதற்படியே பயங்கரமாய் இருந்தது. பெரும் குழப்பத்தையும் ஹரிதாஸ்
ஜாலாவின் இதயத்தில் உண்டாக்கியது. அந்த முதற்படி ராணாவின் முதற்கட்டளை. அந்த கட்டளையைத் தூண்டியவன் சுந்தர் தாஸ் என்பதை அறிந்த ஹரிதாஸ் ஜாலா, என்ன செய்வதென்றறியாமல் திகைத்தான்.