Naga Deepam Ch20 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
நாகதீபம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 20. விதியே நீ சொல்
Naga Deepam Ch20 | Naga Deepam Sandilyan | TamilNovel.in
ராஜபுத்திரியின் அந்தரங்க எண்ணத்தைப் புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, “வேண்டாம் ராஜபுத்திரி! சற்றுப் பொறுப்போம்” என்ற சொற்களை மெள்ளவே உச்சரித்தானானாலும், அந்தச் சொற்களை அந்தப் பெரு விடுதியின்
அறையின் பிரமாண்டமான சுவர்கள் காதில் வாங்கிப் பேரொலி செய்த பிரமை ஏற்பட்டது அவளுக்கு. அந்தச் சுவர்களின் உச்சியில் விரிந்த வண்ண விமானத்தில் தீட்டப்பட்டிருந்த பொம்மைகள் கூடத் தன்னை விந்தையுடன் பார்ப்பது
போலிருந்தது ராஜபுதனத்தின் பழைய படைத் தலைவனுக்கு. ராஜபுத்திரி என்ன சொன்னாள், எதற்குத் தூண்டுகிறாள் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலாவுக்கு வியப்பை விட அச்சமே இதயத்தில் ஓங்கி
நின்றதால், அவன் அவளைப் பார்ப்பதை விலக்கிக் கொண்டு எழுந்து சற்று விலகி நின்று கண்களைத் தரையில் ஓட்டிக் கொண்டு மீண்டும் சொன்னான்: “ராஜபுத்திரி! கிடைத்தற்கரிய புதையல் கிடைக்கும் போது, அதைக் கையால்
தொடவும் திறனற்று நிற்கிறேன் நான். என் நிலைமை அப்பேர்ப்பட்டது” என்று.
ராஜபுத்திரி முக்காட்டை மீண்டும் சிறிது இறக்கிவிட்டு அதன் மடிந்த கூரிய நுனி முகத்தை அரைப்பாகம் மறைக்க, தலை நிமிர்ந்து ஹரிதாஸ் ஜாலாவை நோக்கினாள். பிறகு, “இப்படிப் பாருங்கள்” என்றாள். ஹரிதாஸ் ஜாலாவும் தலை
நிமிர்ந்து அவளை நோக்கினான். அவள் விழிகள் கம்பீரமாக அவன் கண்களைச் சந்தித்தன. அந்தக் கண்களில் அந்தச் சமயம் வழக்க மாக இருக்கவேண்டிய நாணம் இல்லாததைக் கண்டு வியப்படைந்தான் அவன்,
ராஜபுத்திரிகளின் முக்காட்டை முதன் முதலில் ஒரு ராஜபுத்திரன் நீக்குவது நிஷேத் அறையில் தான். அப்பொழுது அவள் மலர் முகத்தை புருஷனின் கண் வண்டுகள் துருவித் துழாவ முடியும். அதன்பின் நிகழ்வதெல்லாம்
இயற்கையின் கூற்று. அந்த இயற்கை அளிக்கும் பூர்ணத்துவத்தின் பூர்வாங்க சடங்கே முக்காடு விலக்குதல். அந்தச் செய்கைக்குத் தன்னைத் தூண்டிய ராஜபுத்திரி அடுத்தபடி தங்கள் காதல் அனுபவத்தின் பூர்ணத்துவத்தையே
எதிர்பார்க்கிறாள் என்பதை அறிந்த ஹரிதாஸ் ஜாலா. அந்தச் சமயத்தில் பெண்களுக்கு இருக்கவேண்டிய நாணத்தின் சிறு சாயைகூட ராஜபுத்திரியின் கண்களில் இல்லாததைக் கவனித்து வியப்பே அடைந்தான். அந்த வியப்பு அவன்
முகத்தில் சந்தேகத்துக்கு இடமின்றிப் பரவியதை ராஜபுத்திரியும் கவனித்தாள். இருப்பினும், அவள் முகம் நாணத்தால் சிவக்கவில்லை. கண்கள் கம்பீரத்துடன் அவனை நோக்கின. ‘நிரம்பா மென் சொல்’ என்று இலக்கியம் வருணிக்கும்
தழுதழுத்த வார்த்தைகளும் அவளிடமிருந்து வெளிவரவில்லை. சொற்கள் திடமாகவே உதிர்ந்தன. “சந்தர்ப்பத்தை உத்தேசித்து உணர்ச்சிகள் மாறுபடுவது இயற்கை வீரரே!” என்றாள் ராஜபுத்திரி.
எதுவும் விளங்காமலே கேட்டான் ஹரிதாஸ் ஜாலா பதிலுக்கு, “எந்தச் சந்தர்ப்பம் ராஜபுத்திரி?” என்று.
“நாமிருக்கும் சந்தர்ப்பம்” என்று திடமாகவே பதில் சொன்ன ராஜபுத்திரியும் மஞ்சத்திலிருந்து எழுந்திருந்து அவனுக்குச் சற்று அருகில் வந்து நின்று கொண்டாள்.
ராஜபுத்திரி அப்படி நெருங்கி வந்தது ஹரிதாஸ் ஜாலாவின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் புரட்டியது. ஆகவே, “இப்பொழுது நாமிருக்கும் சந்தர்ப்பம் வீரரே” என்று அவள் விளக்கித் தெளிவாகச் சொன்ன பதிலைக் கூட அவன்
சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாகையால் மீண்டும் திணறிக் கொண்டே, “பிதாமஹர் கூட ஊரில் இல்லை” என்றுமென்று விழுங்கினான்.
“பிதாமஹருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்றாள் ராஜபுத்திரி.
“வேறு யாருக்கும் இதற்கும் சம்பந்தம்” என்று வினவினான் ஹரிதாஸ் ஜாலா.
ராஜபுத்திரியின் கண்கள் அவன் கண்களைத் திடமாகச் சந்தித்தன. “ராணாவுக்கும் இதற்கும் சம்பந்தம்” என்றாள் அவள்.
“அவருக்கு இதில் என்ன சம்பந்தம்?” என்று வினவினான் ஹரிதாஸ்.
“என்னை வேறொருவருக்கு மணமுடிக்க திட்டமிட்டிருப்பதாக சுந்தர் தாஸ் கூறவில்லையா கூடாரத்தில்?” என்று ராஜபுத்திரி கேட்டாள்.
“ஆம் சொன்னான்.”
“யாருக்கு மணமுடிக்க உத்தேசம்?”
“எனக்கு எப்படித் தெரியும்?”
“ஊகித்துப் பாருங்கள் “
“ஊகிக்க புத்தி மறுக்கிறது ராஜபுத்திரி.”
“அப்படியானால் உங்களுக்குப் பதில் நான் உந்து கட்டுமா?”
சொல், யாரது?”
“சுந்தர்தாஸ்” என்றாள் ராஜபுத்திரி. ராஜபுத்திரியின் அந்தப் பதில் ஹரிதாஸைத் திடுக்கிட வைத்தது. “இருக்காது ராஜபுத்திரி, ஒருநாளும் இருக்காது” என்றான் ஹரிதாஸ்.
“ஏன் இருக்காது?”
“சுந்தர்தாஸின் குலம்…”
“அதைப்பற்றி இப்பொழுது கவலைப்படுவார் இல்லை”
“குலம், வீரம் இவற்றை கவனிக்கும் காலம் ராணா பிரதாப்போடு போய்விட்டது. இப்பொழுதெல்லாம்…”
“சொல் ராஜபுத்திரி”
“சந்தர்ப்பவாதம், சுகமான சுமுகமான முடிவுகள் இவை ராணாவின் சுற்றுவட்டாரங்களில் வலுத்திருக்கின்றன. அதன் பிரதான கர்த்தா சுந்தர்தாஸ். அவனைத் திருப்தி செய்ய ராணா எதையும் செய்வார்.”
“பிதாமஹரை மீறியா?”
“ஆம்.”
“நமக்குத்தான் ஏற்கனவே விவாகம் ஆகிவிட்டதே.”
“அது யாருக்கும் தெரியாதல்லவா?”
“பிதாமஹரை தெரியுமே” என்றான் ஹரிதாஸ்
ராஜபுத்திரி அவனுக்கு வெகு அருகில் வந்து அவன்மீது கை வைத்துக் கொண்டு, “பிதாமஹருக்குத் தெரியும். ஆனால் ராணாவுக்குத் தெரியாது. ராணா சுந்தர்தாஸுக்கு உறுதிமொழி கொடுத்து விட்டார். என்னை அளிப்பதாக.
ராணா சொல் மாற முடியுமா?” என்று வினவினாள்.
ஹரிதாஸ் ஜாலாவின் முகத்தில் கவலை மெள்ள மெள்ள விரிந்தது. அத்துடன் கோபக்குறியும் மெள்ள மெள்ளக் கண்களில் படர்ந்தது, “ராணா சொல் மட்டுமா மாற முடியாது ராஜபுத்திரி? என் வாளையும் மீற முடியாது” என்றான்
கோபம் குரலில் தொனிக்க.
“இருக்கலாம். ஆனால் வாளின் உபயோகத்துக்கு அவகாசமிருக்கிறது. சுந்தர்தாஸ் பரம அயோக்கியன். பிதாமஹர் வருவதற்குள் ராணாவே பின்வாங்க முடியாத பெரும் சிக்கலைச் சிருஷ்டித்துவிடுவான். ராணா வீன் சொல்லையும்
தேக்கி நிறுத்தக்கூடிய சக்தி ராஜபுதனத்தில் ஒன்றுதான்” என்ற ராஜபுத்திரி, ஹரிதாஸின் மார்பின் மீது தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
எந்தச் சக்தியை அவள் குறிப்பிடுகிறாள் என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அவள் முக்காட்டைச் சிறிது தள்ளி தலைமுகப்பின் குழல்களைக் கோதிவிட்டான். தான் அவளைப் பால்யத்தில் மணமுடித்தது.
பிதாமஹர் இன்னும் சில பிரபுக்கள் ஆகியோர்களைத் தவிர யாருக்கும் தெரியா தென்பதையும், அன்று அந்த மாளிகை வீரர்கள் அறிய ராஜபுத்திரியின் அறையில் தான் தங்கிவிடும் பட்சத்தில் அந்தக் காந்தருவ விவாகத்தை உணரும்
மாளிகை வீரர்கள், அந்த மணத்தையும் ராஜபுத்திரியின் கற்பையும் காக்க ராணாவைக்கூட எதிர்ப்பார்கள் என்பதையும், அப்படித் திருமண விஷயம் பகிரங்கமாகப் பரவி விட்டால், அதை உடைக்க ராணாவும் அஞ்சுவாரென்பதையும்
உணர்ந்து கொண்ட ஹரிதாஸ் ஜாலா, அந்தக் காரணத்தை முன்னிட்டே ராஜபுத்திரி தன்னை அறைக்கு அழைத்திருக்கிறாளென்பதையும் புரிந்து கொண்டான்.
பல விஷயங்கள் அந்தச் சமயத்தில் புரிந்தது அவனுக்கு. காதலின் பூர்த்திக்கு அழைத்த அவள் குரலிலோ முகத்திலோ நாணமில்லாதிருந்தது என் என்பதை அறிந்து கொண்டான் அவன். ராஜபுத்திரி அந்தச் சமயத்தில் செய்ய
முற்பட்டது தன் கடமையாகையால், காதலைவிடக் கடமை உணர்ச்சி அந்தச் சமயத்தில் அவள் இதயத்தில் ஓங்கி நிற்பதைப் புரிந்துகொண்டான். தன்னை அர்ப்பணிக்க அவள் வலுவில் அழைத்த சொற்கள் கூட கர்மத்தைச் செய்ய முற்பட்ட
ஒரு வீராங்கனையின் சொற்கள் போல ஒலித்தனவேயொழிய, காதல் வசப்பட்டு மதியிழந்த மங்கையின் சொற்களைப் போல ஒலிக்காததன் காரணத்தைப் புரிந்துகொண்டான் அந்த வாலிப வீரன். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில்
ராஜபுத்திர ஸ்திரீகளின் அடிப்படையான குணங்களின் உரம், கற்பின் மாபெரும் சக்தி, தியாகத்தில் அவர்களுக்கிருந்த இணையிலா உறுதி இவற்றை நினைத்த ஹரிதாஸ் ஜாலா, “இவர்களால் தான் ராஜபுதனம் வரலாற்றில் வாழ்கிறது” என்று
தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். ties
இந்த உணர்வாலும் நினைப்புகளாலும் ஏற்பட்ட பெருமை, பிரமை இவற்றையும் மீறித் தன் மனத்தில் மட்டும் காதலும் பயமும் எழுந்து நின்றதை எண்ணிய ஹரிதாஸ் ஜாலா, தான் போர்க்களத்தில் வீரனேயொழிய, காதற்கூடத்தில்
பெரும் கோழை என்பதை நினைத்து உள்ளுரச் சிரித்துக் கொண்டான். அவன் மனத்தில் ஓங்கி நின்றதெல்லாம் எத்தகைய ஒரு மாணிக்கம் தன் கையில் சிக்கியிருக்கிறதென்ற நினைப்புத்தான். இந்த மாணிக்கத்துக்கு ராஜபுதனத்தின்
நாகரத்தினம் எந்த விதத்தில் நிகராகும்? என்று தன்னைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டான். இத்தகைய மாணிக்கங்கள் ராஜபுதனத்தில் இருக்கும் போது அந்த நாகதீபம் ஜஹாங்கீரின் கைக்குப் போனால்தானென்ன?” என்று
நினைத்தான்.
இப்படித் திரும்பத் திரும்ப பலபடி நினைத்தாலும், கையில் சிக்கி நின்ற அந்தப் பெண்ணெனும் ரத்தினம், அசல் மாணிக்கத்தைப் போல கெட்டியாயில்லாமல் புஷ்பம் போல் மென்மையாயிருந்தாலும், அதை ஆசையுடன் நெடுக அவன்
கைகள் தடவிக் கொடுத்தன. அந்த ஸ்பரிசத்தில் ராஜபுதனப் புஷ்பம் சுழன்றது. அதன் இதழ்கள் அவன் உடல்களில் ஆங்காங்கு படவே, ஹரிதாஸ் ஜாலாவின் உறுதியெல்லாம் காற்றில் பறந்தது. அவன் திடீரென்று அவளை இறுக
அணைத்தான். பிறகு இரு கைகளாலும் தோளைப் பிடித்துச் சற்று எட்ட நிற்க வைத்துப் பார்த்தான். அடுத்தபடி அவன் வலது கை அவள் தோளிலிருந்து விலகி முக்காட்டைச் சரேலென அடியோடு நீக்கியது. அந்தப் பணியை முடித்த
வலது கை, அவள் முகவாய்க் கட்டையில் பதிந்து கன்னம், இரண்டையும் அழுந்தப் பிடித்தது. கண்கள் கண்களை நீண்ட நேரம் சந்தித்தன. அதே நேரத்தில் அவன் இடதுகை அவள் இடையிலிறங்கி வளைந்து இறுக்கி அவளை அருகே
இழுத்தது. பூர்ண சம்மதத்துடன் தனது கடமையைச் செய்ய ராஜபுத்திரியும் அருகில் நெருங்கினாள். அடுத்த விநாடி அறைக்கதவு தட தடவென இடிபட்டது. இருவரும் அதிர்ச்சியுற்று விலகி நின்றார்கள்.
ராஜபுத்திரியின் குரலில் அந்த அதிர்ச்சி தெரிந்தது. “விதி விளையாடிவிட்டது வீரரே” என்று கூறிய அவள். “யாரது? வா உள்ளே!” என்று உத்தரவிட்டாள்.
திறந்திருந்த அந்த போஜன அறைக்கதவை மரியாதைக்கு இடித்த வீரன், வெகு வேகமாக உள்ளே வந்து ராஜபுத்திரியையும் ஹரிதாஸ் ஜாலாவையும் வணங்கினான்.
“என்ன விசேஷம்?” என்று ராஜபுத்திரி உஷ்ணத்துடன் கேட்டாள்.
“ராணாவின் வீரர்கள் வந்திருக்கிறார்கள்” என்றான் அந்த வீரன்.
“சரி; வரச்சொல்” என்றாள் ராஜபுத்திரி,
அடுத்த சில விநாடிகளில் ராணாவின் மெய்க்காவலர் இருவர் உள்ளே நுழைந்ததைக் கண்ட ராஜபுத்திரி, கம்பீரமாக அந்த அறை நடுவில் நின்று கொண்டு வெளிநாட்டுத் தூதரை வரவேற்கும் ராணி போல் அவர்களை வரவேற்றாள்.
வந்த மெய்க் காவலலிருவரும் ராஜபுத்திரியைத் தலை தாழ்த்தி மிகுந்த மரியாதையுடன் வணங்கி, “ராணா அனுப்பியிருக்கிறார் ராஜபுத்திரி” என்று சொற்பமாக வார்த்தைகளைச் சொன்னார்கள்.
“ராணாவின் மெய்க்காவலரை நானறிவேன். மெய்க்காவலரை அனுப்பும்படியான அத்தனை பெரிய அலுவல் என்ன ராணாவுக்கு இப்பொழுது?” என்று கேட்டாள் அவள்.
“ராஜபுத்திரி அறியாததல்ல. ராஜபுதனத்தின் பெரும் படைத்தலைவர்களை அழைக்க வேறொரு படைத்தலைவரோ அல்லது அதே அந்தஸ்து பெற்ற மெய்க்காவலரோதான் அனுப்பப்படுவது வழக்கம்” என்றான் தூதரில் ஒருவன்.
“ராணா எந்தப் படைத்தலைவரை அழைக்க விரும்புகிறார்?” என்று ஏதுமறியாதது போல் கேட்டாள் ராஜபுத்திரி..
பதிலுக்கு ஹரிதாஸ் ஜாலாவை நோக்கிய அந்தத் தூதனை, “இவரை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று வினவினாள் ராஜபுத்திரி.
“ஹரிதாஸ் ஜாலாவை அறியாதவர்கள் ராஜபுதனத்தில் கிடையாது” என்றான் அந்தத் தூதன் மறுபடியும்.
“இவர் இப்பொழுது படைத்தலைவர் அல்லவே,” என்றாள் ராஜபுத்திரி.
தூதன் முகத்தில் உணர்ச்சியேதுமில்லை. “அதை நிர்ணயிப்பது நீங்களுமல்ல, நானுமல்ல” என்றான் தூதன்.
ராஜபுத்திரி புரிந்து கொண்டாள். யாருக்கு என்ன பதவி என்பதை நிர்ணயிப்பது ராணாவே தவிர, வேறுயாருமில்லை என்பதைத் தூதன் அறிவுறுத்துகிறான் என்பதை அறிந்து கொண்ட ராஜபுத்திரி, “படைத்தலைவர் எப்பொழுது
வர வேண்டும்?” என்று வினவினாள்.
“இப்பொழுதே! எங்களுடன்” என்றான் தூதன்.
“அத்தனை அவசரமா?”
“ஆம்”
இந்தக் கேள்வி அர்த்தமற்றது என்பது ராஜபுத்திரிக்குத் தெரிந்தும் கேட்டாள். அவள் அதைக் கேட்டும் அசைவற்று நின்ற இடத்திலேயே நின்ற மெய்க்காவலன், “கையுடன் இன்று அழைத்துவர ராணா உத்தரவிட்டிருக்கிறார். அவ்வளவு
தான் எனக்குத் தெரியும்” என்றான்.
அதைக்கேட்ட பின்பும் ராஜபுத்திரி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அவளைத் தன் கைச்சைகையால் தடுத்த ஹரிதாஸ், “சரி! வெளியே நில்லுங்கள். என் புரவியைத் தயார் செய்யச் சொல்லுங்கள். இதோ வந்து விட்டேன்” என்றதும்,
அவ்விரு மெய்க்காவலரும் வெளியே சென்றனர். அவர்கள் வெளியே சென்றதும் கதவு மூடப்பட்டதும் ராஜபுத்திரி ஹரிதாஸின் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். அவள் கைகள் அவனை இறுக்கின. “வேண்டாம், போகாதீர்கள்”
என்று குரல் நடுங்கக் கூறவும் செய்தாள்.
“அஞ்சாதே ராஜபுத்திரி! இந்த ராணாவல்ல, ராஜபுதனம் முழுவதும் திரண்டாலும் நம்மைப் பிரிக்க முடியாது. எதற்கு அழைக்கிறார் என்பதை அறிந்து வருகிறேன்” என்று சொல்லி, அந்த அறையிலிருந்து தனது அறையை நோக்கிச்
சென்றான்.
ராஜபுத்திரி அவன் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். உணவு அருந்தாமலே செல்லும் ஹரிதாஸை, உணவு வர்க்கங்களும் மஞ்சத்திலிருந்து பரிதாபமாகத் பார்த்தன. ராஜபுத்திரி பெருமூச்சு விட்டாள். பிறகு திரும்பி வந்து
மஞ்சத்தில் உட்கார்ந்து முகத்தைத் தன் இரு கைகளாலும் மூடிக் கொண்டான்.
“கணவனைக் காப்பாற்ற இன்று என்னை ஒப்படைக்க எண்ணினேன். ஆனால் ஏன் இப்படி நடந்தது? விதியே நீ சொல்?” என்று கேட்டாள் சற்று இரைந்து.
விதி பதில் சொல்லிற்று. அங்கல்ல, ராணாவின் மாளிகையில். பதில் பயங்கரமாயிருந்தது. ஹரிதாஸ் ஜாலாவைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது அதன் பதில், பதிலை விதி வாயால் சொல்ல வைத்தது. மன்னனின் முதல் கட்டளை
மெள்ள மெள்ள வெளிவந்தது. “நாகதீபம் என்ற ஒரு ரத்தினம் இருக்கிறது…” என்ற ராணா துவக்கினார் தமது கட்டளையை.