Nagadevi Ch 1 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 1. மூன்று தலை நாகாபரணம்
Nagadevi Ch 1 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நான்கு திசை நாடுகளிலிருந்தும் நானாவித நாவாய்கள் நங்கூரம் பாய்ச்சி அலைகளில் நடனமிடும் காரணத்தால் நயனங்களுக்கு மிக இனியதும், நாலாவித சமயங்களுக்கும் இடங் கொடுத்ததால் இதயத்துக்கு அமைதியளிப்பதும்,
நாகலிங்க மரங்கள் கரையோரமாகக் கூட்டம் கூட்டமாகக் காணப்பட்டதால் சோழ மன்னர்கள் சிவபக்திக்கு அடையாளமாக விளங்கியதும், புத்தவிஹாரமான சூடாமணி விஹாரம் முழுவதும் கட்டப்படாவிட்டாலும், முக்கால்வாசி
எழும்பியதாலேயே அதன் கலைத்தன்மையின் சிறப்பை விளக்கி, கடற்கரையின் கலங்கரை விளக்கம் போல புத்த சமயத்துக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் தெரிந் ததும், அந்த விஹாரத்தால் பேரழகு பெற்றதுமான நாகையின் கடற்கரை
அன்று விடியற் காலையில் இயற்கையின் பொலிவை எல்லாம் அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்ததென்றாலும், அந்த அழகு எதுவும் நாகர் குலத்தவனான உபேந்திரன் மனத்தை அணுவளவும் தொடவில்லை.
சோழர்களின் பிரபலமான துறைமுகங்களில் ஒன்றும் பூகோள சாஸ்திரியான தாலமியால் ‘நிகாமா’ என்று அழைக்கப்பட்டதுமான நாகப்பட்டினத்தின் ஆழ்கடலை அடுத்த பெரிய மணற்குன்றுகளும், சற்று அந்தத் துறைமுகம்
வளைந்த இடத்தின் மேட்டில் கூட்டமாக நின்ற நாகலிங்க மரங்களில் தெரிந்த சிவந்த புஷ்பங்களும், அவற்றின் நறுமணமும், பலவகை நாவாய்களிலிருந்து இறங்கிப் படகுகளில் வந்து கொண்டிருந்த மாலுமிகளின் கூட்டமும், எதுவுமே
அவன் உணர்ச்சிகளைத் தொட்டதாகத் தெரியவில்லை. நாகைக் கடலின் வளைவு மேட்டிலிருந்த நாகலிங்கத் தோப்பின் முனையில் எழும்பி நின்ற ஒரு பெரிய மணற் குன்றின் உச்சியில் முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த
உபேந்திரன் முகம் அன்று உணர்ச்சியற்ற கல்லாயிருந்த்து.
பொழுது விடிய சில நாழிகைகளுக்கு முன்பாகவே விழித்துவிட்ட நாகப்பட்டினத் துறை முகத்தின் சிறு கடைவீதியில் அன்று வாணிபம் துவக்கப்பட்டதால் ஏற்பட்ட சப்தம்கூட அவன் காதில் விழவில்லை. எங்கும் காணப்பட்ட
பரபரப்பு அவனை எந்த விதத்திலும் பாதிக்கவும் இல்லை. வாலிபத்தின் ஆரம்ப தசையிலிருந்த நாகனான உபேந்திரன் மனத்தை ஏதோ ஒரு பெரும் சுமை அழுத்திக் கொண்டிருந்ததை மட்டும் அவ்வப்பொழுது சுருங்கி விலகிய அவன்
விசால வதனக்கோடுகள் நிரூபித்தன. இந்த நிலையில் அவன் சுமார் ஒரு மாத காலமாக இருந்தபோதிலும் அவன் சோகத்துக்குக் காரணம் என்ன வென்பது திட்டமாக நாகைவாசிகள் யாருக்கும் தெரியாமலே இருந்தாலும், பலர் அதை
நினைத்து வருந்தவே செய்தனர்.
இந்த நிலை ஏற்பட்டது முதற்கொண்டு நாகையின் பிரமுகர்கள் பலரும், ஏன், அவனைக் கடை வீதியில் கண்ட சாதாரண மக்களுங்கூட, அவன் இதய கஷ்டத்தில் பங்கு பெற நினைத்தாலும் அவன் வாயை அடியோடு திறக்காததாலும்
யார் எதைக் கேட்டாலும் விடையளிக்காமல் விலகிச் சென்ற தாலும் ‘இவனுக்கு என்ன தான் குறையிருக்க முடியும்? எதற்காக துன்பத் தின் சுமையில் அழுந்திக் கிடக்கிறான்?’ என்று எண்ணி விடை காண முடியாததால் வியப்படையவே
செய்தனர். அவர்கள் வியப்புக்குக் காரணமும் இருந்தது,
ராஜேந்திர சோழ தேவரின் மெய்க்காவலனும், அவன் உள்ளத்தைத் தனது வீரத்தால் ஆட்கொண்டவனும், மகாவீரனுமான உபேந்திரனுக்குப் பணக் குறைவோ மனக் குறைவோ இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லையென்று
மக்கள் திட்டமாக நம்பினார்கள். அவன் நெடிய அழகிய உருவத்தையும், கண்களின் தனிப்பட்ட கவர்ச்சியையும் கண்ட பல மங்கை யர்கள் அவனைப் பார்த்து இளநகை கூட்டினாலும், இமையைக்கூட அசைத்து அவற்றை அவன்
வரவேற்காததால் சுத்த கட்டைப் பிரும்மச்சாரியென்று பலரின் நகைப்புக்கு இலக்கானாலும், உபேந்திரனுடைய கண்ணியமும் அவர்களை ஆட்கொண்டதால் இவனைப் பெற்ற வயிறு பாக்கியம் செய்தது?’ என்று அதே பலர் நம்பவும் அதன்
விளைவாக அவனை மதிக்கவும் செய்தனர்.
இத்தனை குணங்களோடு அரசவைச் செல்வாக்கும் பெற்றிருந்த உபேந்திரன் சில நாள்களாக அவனுடைய இயற்கையான புன்னகையை இழந்து, புன்னகை பூத்த உதடுகளை ஒரு கடுமை ஆட்கொண்டு, அதிகமான
மௌனத்தையும் கடைப்பிடித்ததற்கு யாருக்குமே காரணம் தெரியாததால் அவனைப்பற்றி அனுதாபப் படவே செய்தார்கள். அரசர் மெய்க்காவலனாக, நாகப்பட்டினத்தில் அரசர் இல்லாத காலத்தில் அந்த நகரத்தைக் காக்கும்
படைத்தலைவனாக, தரைப்படை அனுபவம் மட்டுமின்றிக் கடலோடும் திறமையும் பெற்ற வனானதால் அரசரது வணிகக் கப்பல்களையும் கண்காணிக்கும் காப்பாளனாக, பெரும் செல்வாக்குடனிருந்த அந்த நாக வம்சத்து வாலிபன்,
அன்று காலை தீர்க்க சிந்தனையுடன் நாகைத் துறைமுகத்தில் ஆடி நின்ற நாவாய்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். நாவாய்களிலிருந்து வந்த மனிதர்கள் பலரையும் அவன் கண்கள் ஆராய்ந்து கொண்டிருந்தன. அந்த மணல்
மேட்டு உச்சியிலிருந்து இடையிடையே அவன் தனது மடியிலிருந்த ஓர் ஓலையையும் படித்துவிட்டு மறுபடி யும் அதை மடியில் சொருகிக் கொண்டான். மீண்டும் மீண்டும் எதிரே கடற்கரையை நோக்கினான்.
நாகை துறைமுகத்தில் அன்று ஏராளமான நாவாய்கள் நின்று கொண்டிருந்ததால் சிலவற்றுக்கு இடம் கிடைக்காமல் போகவே அவை கால்காதத்துக்கு அப்புறமே நின்று பெரும் படகுகள் மூலம் பயணிகளை யும் வணிகப் பொருள்
களையும் அனுப்பிக் கொண்டிருந்தன. பலதரப்பட்ட அந்தக் கப்பல்களிலிருந்து சீனரும், அராபியரும், இன்னும் பல நாட்டு மக்களும் வந்து கொண்டிருந்தும் அந்தக் கூட்டம் எதிலும் அந்த வாலிபன் கண் செலுத்தினான் இல்லை.
கல்முகத்தோடு தான் உட்கார்ந்திருந்தான். ஆனால் அந்தக் கல்லையும் சிதள்களாகச் சுத்தியல் கொண்டு உடைத்தெறியும் நிகழ்ச்சியொன்று கதிரவன் செவ்விய பழம்போல் கடலிலிருந்து எழுந்தபோது தான் நடந்தது. எழுந்த கதிரவன்
சிவப்பொளியில் குளித்துக் கொண்டு தூரத்தில் பொட்டு போல் காணப்பட்ட கப்பலொன்று வரவரப் பெரிதாகித் தனது பெரும் பாய்களை விரித்து ஓடி வந்ததும் உபேந்திரன் உட்கார்ந்த நிலையிலிருந்து சட்டென்று எழுந்து நின்றான்.
அந்தக் கப்பலும் அவனைக் காணவே ஓடி வருவதுபோல் மிகத் துரிதமாக வந்து தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றது. அதன் மீது ஆடிக்கொண்டிருந்த காஷாய வர்ணக் கொடியைச் சுற்றியிருந்த சக்கரவட்ட மரப்பலகையில் கொடியைப்
பின்னணியாகக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் உருவம் தூரப் பார்வைக்குக்கூட அழகாகத் தெரிந்தது.
தூரப் பார்வையில் சாதாரணமாக ஆணையும் பெண்ணையும் பிரித்து எடைபோட முடியாதென்றாலும் கொடியின் முன்பு தெரிந்த பலப்பல உடல் வளைவுகளும், காலைக் காற்றில் வீசிப் பறந்த குழல்வீச்சும் நின்றது
பெண்தானென்பதை சந்தேகமற தெரிவித்ததால் மணல் மேட்டு உச்சியில் நின்ற உபேந்திரனிடமிருந்து பெருமூச்சொன்று வெளி வந்தது…
தூர இருந்த கப்பலின் உச்சியில் நின்ற அந்தப் பெண் தனது கண்களை நாலா திக்கிலும் ஓடவிட்டதை அவள் தலை திரும்பியதிலிருந்தே ஊகித்த உபேந்திரன், “ இவள் கண்ணிலிருந்து யாரும் எதுவும் தப்ப முடியாது” என்று
முணுமுணுக்கவும் செய்தான். அந்த முணுமுணுப்பில் வெறுப்பும் கடுமையும் கலந்து கிடந்தன. அந்த முணுமுணுப்புடன் தலையைக் காரண மில்லாமல் இருபுறமும் ஆட்டிக்கொண்ட அந்த வாலிபன் திடீரென்று ஏதோ நினைத்துக்
கொண்டு மணல் மேட்டிலிருந்து சரசரவென்று இறங்கி துறை முகத்தின் ஓரத்துக்கு நடந்து அங்கிருந்த படகொன்றை அவிழ்த்துக்கொண்டு அதைத் துடுப்புகளால் தானே துழாவிக்கொண்டு தூர நின்ற மரக்கலத்தை நோக்கி அதைச்
செலுத்தினான். அன்று காலை வழக்க விரோதமாக அலைகள் பெரிதாகவே வந்து கொண்டிருந்தாலும் மாலுமிகளில் சிறந்தவனான உபேந்திரன் வெகு லாகவமாக அவற்றின் மேல் படகை மிதந்தோடும்படி செய்தான். படகு அவன்
கைப்பாவையென இயங்கியதால் சுமார் இரண்டரை நாழிகை நேரத்தில் அந்தப் பெரிய கப்பலின் அருகே வந்து சேர்ந்தான்.
அவனருகே நின்றது சாவகத்தீவின் பெரும் போர்க்கப்பல்களில் ஒன்று. ஆயுதம் தரித்த மாலுமிகள் அதன் தளத்தில் பெருவாரியாக உலாவிக் கொண்டிருந்தார்கள். நீள் ஈட்டிகளை ஏந்தியும், விஷந்தீட்டிய அம்புகள் கொண்ட அம்பறாத்
துணிகளையும் விற்களையும் தரித்தும் உலாவிய மாலுமிகளில் ஒருவன் உபேந்திரன் படகைக் கண்டுவிட்டதால் தனது வில்லில் ஒரு வாளியைப் பொருத்திக் குறி பார்த்து நின்றிருந்தான். படகு அருகில் வந்ததும் எட்டிப் பார்த்த அந்த
மாலுமி கையை மேலெடுத்து ஆட்ட ஒரு நூலேணி தொங்கவிடப்பட்டது. கப்பலின் பக்கப் பலகையில் படகை அந்தக் கப்பலின் வளையமொன்றில் பிணைத்துவிட்டு நூலேணியில் ஏறித் தளத்தை அடைந்த உபேந்திரனை
மாலுமியொருவன் கைய சைத்து, “அப்படியே நிற்கலாம்” என்று உத்தரவிட்டான். சட்டென்று தலையை மேலே தூக்கிப் பார்த்த உபேந்திரன் கருடன் கொடியருகில் நின்றிருந்த பெண் மறைந்துவிட்டதைக் கண்டதால் சிறிது சாந்தியடைந்து
தனது கூரிய கண்களால் தன்னைத் தடை செய்த மாலுமியை நோக்கினான்.
பதிலுக்கு மாலுமி கையை நீட்டினான். உபேந்திரன் ஏதும் பேசாமல் மடியிலிருந்து ஓலையை எடுத்து அவனிடம் கொடுக்க அவன் சட்டென்று திரும்பிச் சென்றான். கப்பலின் இன்னொருபுறத்தை நோக்கி. அவனை மெளனமாகப்
பின்தொடர்ந்த உபேந்திரன் அவனுடன் மரக்கலத்தின் கீழே ஓடிய சிறு படிகளில் இறங்கிய ஓர் அறை முகப்புக்கு வந்தான். அந்த அறையைக் காத்து நின்ற சீனன் ஒருவன் மாலுமியைக் கண்டதும் கதவை லேசாகவும் ஓசைப்படாமலும்
திறக்கவே உள்ளே சென்ற மாலுமி ஒரு விநாடிக் கெல்லாம் திரும்பி வந்து உபேந்திரனை நோக்கி, உள்ளே செல்லலாம்” என்று அறிவித்தான்.
அறைக்குள்ளே நுழைந்த உபேந்திரன் அந்த அறைக் கதவை மிக மெதுவாகச் சாத்தினான். அறையின் கோடியிலிருந்த ஒரு பஞ்சணையில் ஒருக்களித்துப் படுத்திருந்த ஒரு பெண் அவன் காலடி ஓசை கேட்டதும் சற்றுத் திரும்பிப்
பார்த்தாள். பிறகு நிமிர்ந்து உட்கார்ந்தாள். “எதிர்பார்த்தபடி வந்துவிட்டாய். நல்லது” என்று அதிகார தோரணையில் கூறிய அந்தப் பெண், “நான் யாரென்று புரிகிறதா உனக்கு?” என்று வினவினாள்.
உபேந்திரன் உணர்ச்சிகள் நிலைமீறி ஓடிக்கொண்டிருந்ததால் அவன் உடனடியாகப் பதில் சொல்லாமல் சில விநாடிகள் மௌனமே சாதித்தான். பிறகு மெதுவாகக் கேட்டான். “தெரிகிறது ஏன் அழைத்தாய் என்னை?” என்று.
அவளும் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. நீண்ட நேரம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி அவனை நோக்கிய விழிகளில் அவாவும் வியப்பும் மாறி மாறிப் புலப்பட்டன. கடைசியாக ஏதோ தீர்மானத்துக்கு
வந்த அந்தப் பெண் தனது முன்னுச்சி மயிர்களில் சொருகியிருந்த ஒரு சிறு ஆபரணத்தைத் தொட்டுக் காட்டினாள். மூன்று தலையை உடைய நாகப்பதக்கம் அந்தக் குழல் நடுவே பளிச் சிட்டது. அந்த நாகத்தின் மூன்று தலைகளிலும்
மூன்று பெரிய மாணிக்கக் கற்கள் தீயைக் கக்குவனபோல் சுடர்விட்டன.
அந்த மூன்று தலை நாகாபரணத்தையும் அவள் அதைத் தொட்டுக் காட்டிய முறையையும் கவனித்த உபேந்திரன் உணர்ச்சிப் பெருக்கால் அச்சம் கலந்த பெருமூச்சு ஒன்றை விட்டான். பிரமித்தும் நின்றான் பல விநாடிகள் அசைவற்று.
அவள் செய்த சமிக்ஞையிலிருந்தே அவள் என்ன கட்டளையிடுகிறாள் என்பது உபேந்திரனுக்குப் புலப்பட்டதால் அவன் மனதில் அச்சம் உதயமாகி அதன் விளைவாக லேசாக நடுங்கவும் செய்தான்.