Nagadevi Ch 10 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 10. காந்தருவம்
Nagadevi Ch 10 | Nagadevi Sandilyan | TamilNovel.in
குருநாதர் தங்கியிருந்த அறையின் விளக்கு என்ன காரணத்தாலோ அதிகமாக இழித்துவிடப்பட்டிருந்ததாலும் அறை மூலையிலும் ஒரு திரை தொங்கி அறையை இரண்டாகப் பிளந்திருந்ததாலும் ஏதேதோ யோசனைகள் குருநாதரின்
மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்ததாலும், அந்த அறையில் முனகல் கேட்டதும், அது ஐயோ என்ற தீனக் குரலில் முடிந்ததையும் கவனித்த குருநாதர் சித்தத்தில் சந்தேகம் பெரிதாக ‘எழவே தமது ஆசனத்திலிருந்து எழுந்து முனகல்
தொடர்ந்து வந்து கொண்டிருந்த மூலையை நோக்கிச் சென்றார். அங்கிருந்த சீலையைச் சற்று நீக்கியதும் தனது காலில் யாரோ சரணடைந்து கிடப்பதைக் கவனித்து காலை சட்டென்று இழுத்துக்கொண்டு மறுபடியும் ஆசனத்தருகில்
வந்து, “எல்லா ! எல்லா !” என்று இருமுறை குரல் கொடுத்தார்.
அவர் குரல் கேட்டதும் எல்லன் அவசர அவசரமாக உள்ளே வந்து, “சுவாமி அழைத்தீர்களா?” என்று வினவினான்.
குருநாதர் அவனைக் கோபத்துடன் பார்த்து, “அழைக்காமல் என்ன செய்வது?” என்று எரிச்சலுடன் பேசினார்.
எல்லன் வாய் புதைத்து, “அடிமை காத்திருக்கிறேன்” என்று குழைந்தான்.
குருநாதருக்கு அதுவரை இருந்த நிதானமெல்லாம் பறந்துவிடவே என்ன கேட்கிறோமென்பதை அறியாமல், “எதற்காகக் காத்திருக்கிறாய்?” என்று வினவினார்.
“தங்கள் ஆணையை நிறைவேற்ற” என்று மேலும் குழைந்தான் எல்லன்.
குரு நாதர் பொறுமையை அடிமையோடு இழந்தார். இந்த விளக்கின் திரியை ஏன் இழித்து வைக்கிறாய்” என்று வினவினார்.
“குருநாதருக்குக் கண் கூசக்கூடாது என்பதற்காக” இதை எல்லன் கெஞ்சும் குரலில் கூறினான்.
“கண் கூசக்கூடாது என்பதற்காகவா? தெரியக் கூடாது என்பதற்காகவா?” குருநாதர் குரலில் உஷ்ணம் ஏறி இருந்தது.
“கூசக்கூடாது என்பதற்காகத்தான்.”
“இல்லை.”
“சரி.”
“தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.”
“சரி.”
“என்னடா சரிசரி என்று சரளி வரிசை பாடுகிறாய்?”
“குருநாதரின் சொற்களை எதிர்த்துப் பேசுவது அபசாரம் என்று எசமானர் அடிக்கடி சொல்லுவார்.”
“சொல்லுவாரா?”
“ஆமாம். குருநாதரிடம் எசமானுக்குள்ள பயபக்தி இந்த நாகையே அறியும்.”
“அறியுமா.”
“ஆமாம்.”
“ரொம்ப சந்தோஷம்!”
“தங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதே எங்கள் நோக்கம்.”
குருநாதர் எல்லன் இடக்கை சமாளிக்கும் நிலையில் இல்லை. “டேய் எல்லா!” என்று கடுமையாக அழைத்தார்.
“சுவாமி” என்று கேட்டான் எல்லன்.
இந்த விளக்கைத் தூண்டிக் கையில் எடுத்துக் கொள்” என்று உத்தரவிட்டார்.
குருநாதர் சொன்னபடி விளக்கைத் தூண்டி கையிலெடுத்துக்கொண்ட எல்லனை நோக்கிய சுத்தானந்தர், “விளக்குடன் அந்த மூலைக்குப் போ” என்று உத்தர விட்டு அவன் போக முற்பட்டதும் தானும் அவனைத் தொடர்ந்தார்.
சீலையருகில் இருவர் வந்ததும், “அந்த சீலையை அகற்று” என்று கூறினார்.
சொன்னபடி எல்லன் செய்ததும் கீழே கிடந்த மனிதனைச் சுட்டிக் காட்டிய குருநாதர், ‘இவன் யார்?’ என்று வினவினார்.
“தெரியாது” என்றான் எல்லன்.
அந்த சமயத்தில் அந்த மனிதன் மேலும் இருமுறை முனகினான்.
“ஏன் முனகுகிறான்?” என்று கேட்டார் குருநாதர்.
எல்லன் கீழே கிடந்தவனை கவனியாமலே சொன்னான். “இவன் மண்டையில் சிறிது அடிபட்டிருக்கிறது” என்று.
அந்த மனிதனைக் கூர்ந்து எல்லன் ஏந்தி நின்ற விளக்கொளியில் கவனித்த சுத்தானந்தர், “ஆம், அடிபட்டிருக்கிறது. அதுவும் பலமான அடியாயிருக்க வேண்டும். தலையில் போட்டுள்ள கட்டுக்கு மேலும் இரத்தம் கசிந்திருக்கிறது”
என்று கூறினார். அத்துடன் கேட்டார். இந்த நிலையிலிருக்கும் இவன் வாயில் ஏன் துணியடைத்திருக்கிறீர்கள்?” என்று.
“முதலில் வேண்டாமென்று தான் பார்த்தேன்” என்று இழுத்தான் எல்லன்.
“உம்.”
“இவன் பெரிதாகக் கத்தினான். எசமானுக்குத் தொந்தரவாயிருக்கப் போகிறதென்று வாயில் துணியடைத்தேன்.”
“சரி, கைகளை ஏன் கட்டியிருக்கிறாய்?”
“வாய்த் துணியை எடுக்காமலிருக்க.”
இதைக் கேட்ட குருநாதரின் உள்ளம் எரிமலையாகவே, “எல்லா! யாரிடம் விளையாடுகிறாய் என் பதைப் புரிந்து கொண்டிருக்கிறாயல்லவா?” என்று வெடித்தார்.
“சுவாமி! யாரிடமும் விளையாடும் நிலையில் நான் இல்லை. எசமான் இடும் கட்டளையைச் செய்கிறேன்” என்று பதில் கூறினான்.
“இவன் என்ன குற்றம் செய்தான்?” என்று மீண்டும் கேட்டார் குருநாதர்.
“தெரியாது சுவாமி.”
“குற்றம் செய்தவன் தானா என்பதாவது தெரியுமா?”
“எசமானர் தாமே சிறை செய்து கொண்டு வந்திருக்கும்போது குற்றவாளியாகத் தானிருக்க வேண்டும்.”
குற்றவாளியாயிருந்தால் சிறையில் ஏன் அடைக்கவில்லை?”
“எசமானரைத்தான் கேட்க வேண்டும்.”
இதைக் கேட்ட குருநாதர், “டேய் எல்லா! நீ பாவம் ஒன்றும் தெரியாத பூனை இல்லை நுழைநரி” என்று கூறிவிட்டு, “உன் எசமானர் இவனை எப்பொழுது எவ்விடத்திலிருந்து கொண்டு வந்தார்?” என்று வினவினார்.
“நீங்கள் வருவதற்குச் சற்று முன்புதான் கொண்டு வந்தார். கொண்டு வந்து இவனைக் கட்டிப் போட்டு வைக்கும்படி சொல்லிவிட்டு மீண்டும் வெளியே சென்றார்” என்று இம்முறை உண்மையை அப்படியே சொன்னான்.
இதைக் கேட்ட குருநாதர் சிந்தனை வசப்பட்டார். தனக்கும் தெரியாமல் ஏதோ சில்மிஷம் நடப்பதைப் புரிந்து கொண்டார். நாகதேவியை இரவு அழைத்து வரும்படி சொன்னதும் தமது ஆசிரமத்திலிருந்து மருதி தூக்கிச் செல்லப்பட்ட
நேரத்திற்கும் தாங்கள் இங்கு வரும் நேரத்திற்கும் உள்ள இடைவெளியை உபேந்திரன் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் உணர்ந் தார். நாகதேவியின் அவசரத்துக்கும் துடுக்குக்கும் இது தேவைதானென்பதை மனத்துக்குள் சொல்லிக்
கொண்டாலும், இது தம்மையும் பாதிக்குமென்ற காரணத்தால் “சரி எல்லா! நீ வெளியே போகலாம்” என்று உத்தரவு கொடுத்தார்.
எல்லன் வெளியே சென்றதும் பெரும் துரிதத்தைக் காட்டிய குருநாதர் கதவை உட்புறம் தாளிட்டுவிட்டுத் திரைச்சீலையின் அருகில் கிடந்தவன் வாயிலிருந்த துணியை எடுத்தார். துணி எடுக்கப்பட்டதால் அவன் “ஐயோ! வலிக்கிறதே!”
என்று பெரிதாக அலறினான்.
அவனை அப்படியே அறைந்து கொன்றுவிட வேண்டும் போல் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்ட குருநாதர் அறை மூலையிலிருந்த பாத்திரத்திலிருந்து கையில் சிறிது நீரை எடுத்து வந்து அவன் முகத்தில் அடிக்கவே
அவன் மெதுவாகக் கண்ணைத் திறந்தான். அவன் முகத்தை விளக்கொளியில் ஊன்றிக் கவனித்த குருநாதர் அவன் தனது ஆசிரமத்துக்கு நாகதேவியுடன் வந்த சாவகக் கப்பலின் மாலுமிகள் இரு வரில் ஒருவன் என்பதை உணர்ந்து
கொண்டார். அவன் கண் விழித்து ஏதோ சொல்ல முற்பட்டதும், “மெதுவாகப் பேசு” என்று எச்சரிக்கை செய்த குருநாதர் “ என்ன நடந்தது?” என்று விசாரித்தார்.
அவன் பேச முடியவில்லை என்று ஜாடை காட்டவே அவன் வாயில் சிறிது நீரைப் புகட்டினார்
குருநாதர். பிறகு பேச ஆரம்பித்த அவன் ‘தேவி எங்கே?’ என்று வினவினான்.
“தேவியாவது மண்ணாங்கட்டியாவது, நடந்ததைச் சொல்” என்று மிரட்டினார் சுத்தானந்தர்.
அவன் குழறிக் குழறிப் பேசினான். தலையிலிருந்த காயத்திலிருந்து இரத்தம் சேதப்பட்டுவிட்ட தன் காரணமாக. “தேவியின் கட்டளைப்படி அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்றோம்!” இங்கு அவன் சிறிது தடுமாறினான்.
“உம் சொல்” ஊக்கினார் குருநாதர்.
“அப்படியே செய்தோம். நாகலிங்கக் காட்டில் இருந்த ஊர்க்காவலன் ஒருவன் புரவியில் வந்து கொண்டிருந்தான். “நாங்கள் மறைய முயன்றோம்; அவன் விடவில்லை. நீங்கள் யார் என்று கேட்டான்” என்று மாலுமி திணறினான்.
அறை மூலைக்குச் சென்ற குருநாதர் அங்கிருந்த பிறைகளில் ஏதோ தேடினார். பிறகு ஒரு சிறு மதுக்குப்பியைத் தேடி எடுத்துக்கொண்டு வந்து மாலுமியின் வாயில் சிறிது ஊற்றினார். அவன் மடக்மடக்கென்று இரு வாய்
குடித்துவிட்டுப் பேசத் துவங்கினான். இம்முறை அவன் குரல் தெம்பாயிருந்தது. “ அந்த வீரனிடமிருந்து நாங்கள் தப்பப் பார்த்தோம். நாகதேவி ஒப்படைத்த பெண்ணை இருவரும் தூக்கிக் கொண்டிருந்ததால் ஓட முடியவில்லை. எனது
நண்பனிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்து விட்டு நான் என் வாளை எடுக்க முயன்றேன். அந்த வீரன் வாளை எடுக் காதே!” என்று மிரட்டினான். அவன் குரலில் எச்சரிக்கை பலமாக இருந்தது. இருப்பினும் நான் வாளை உருவினேன்.
வாளை அவன் வாளால் தட்டிவிட்டான் புரவியிலிருந்தபடி. இதைக்கண்ட என் நண்பன் பெண் ணைக் கீழே கிடத்திவிட்டுத் தன் வாளை உருவிக் கொண்டு என் துணைக்கு வந்தான். புரவியிலிருந்த வீரன் கீழே குதித்து எனது நண்பன்
வாளைத் தனது வாளால் சந்திப்பதற்குப் பதிலாக அவன் வாள் கரத்தின் மணிக்கட்டைப் பிடித்து உலுக்க எனது நண்பன் வாள் கீழே விழுந்தது. அதை தூர உதைத்துத் தள்ளிய அந்த வீரன் அந்தப் பெண்ணை மூடியிருந்த சீலையை நீக்கச்
சொன்னான். எனது நண்பன் நீக்கப்போகவே அந்த வீரனும் அந்தப் பெண்ணை நோக்கிக் குனிந்தான். அது தான் சமயமென்று நான் உதைக்கப்பட்டு அருகில் கிடந்த எனது நண்பன் வாளை எடுத்து அவன் முதுகில் பாய்ச்சிவிட
முயன்றேன். அந்த வீரன் முதுகிலும் கண் இருந்திருக்க வேண்டும். திடீரென்று திரும்பித் தனது வாளால் என் மண்டையில் அடித்தான். நான் சுரணை யற்று விழுந்தேன். பிறகு எதுவும் எனக்குத் தெரியாது. சுரணை வந்தபோது
இங்கிருக்கிறேன். நல்லவேளை தாங்கள் வந்தீர்கள்” என்று நடந்ததை விவரமாகச் சொன்னான்..
குருநாதர் முகத்தில் கிலி பரவியது. ‘நான் வந்தது நல்ல வேளையா’ என்று தம்மைத்தாமே நொந்து கொண்டார். காரியம் மிஞ்சிவிட்டதையும் புரிந்து கொண்டார். அநேகமாக அந்த இன்னொரு மாலுமியும் கொல்லப்பட்டிருப்பான்
என்பதையும் எந்த நிமிடத்திலும் நாகதேவியையும் தம்மையும் உபேந்திரன் சிறை செய்யக்கூடிய நிலைமையிலிருக்கிறான் என்பதையும் சந்தேகமறத் தெரிந்து கொண்டதால் சோகப் பெரு மூச்சு விட்டார். அந்த சமயத்தில் அந்த
அறைக்கதவு லேசாகத் தட்டப்பட்டது.
அவசர அவசரமாக திரைச்சீலையைத் தொங்க விட்டு சாவக மாலுமியை சத்தம் செய்ய வேண்டாமென்று எச்சரித்து விட்டுக் கதவைத் திறத்தார் குருநாதர். கதவருகில் நின்றிருந்த எல்லன், “சுவாமி! தங்களுக்கு விருந்து காத்திருக்கிறது”
என்றான்.
“விருந்தா?” என்று வாயைப் பிளந்தார் குருநாதர்.
“ஆம் சுவாமி; எசமானரும் அரசகுமாரியும் தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்” என்று கூறிய எல்லன் குருநாதர் அறை மூலையில் கண் ஓட்டியதைக் கண்டதும், “அவனைப்பற்றிக் கவலை வேண்டாம் நான் கவனித்துக் கொள்கிறேன்”
என்று தைரியம் சொன்னான்.
“அவனைப்பற்றி எனக்கென்ன கவலை?” என்று கேட்டுவிட்டு எல்லனைத் தொடர்ந்தார் குருநாதர்.
எல்லன் அவரை அடுத்த அறையில் கொண்டு விட்டுச் சென்றான். அந்த அறைக்குள் உபேந்திரன் அருகில் அவன் பஞ்சணையில் உட்கார்ந்திருந்தாள் நாகதேவி. அவள் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பிக் கிடந்தது. மகிழ்ச்சிக்குக் காரணம்
குருநாதருக்குத் தெரியாததால் சிடுசிடுவென்ற மூஞ்சியுடன் பஞ்சணைக்கு எதிரேயிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தார்.
“சுவாமி! உமது முகத்தில் மகிழ்ச்சியைக் காணோமே என்ன நடந்தது?” என்று வினவினான் உபேந்திரன்.
“நீங்களிருவரும் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களே அதுவே போதும்!” என்றார் குருநாதர். அவர் குரலில் திகில் லேசாகத் தெரிந்தது.
அவர் மேற்கொண்டு பேசுவதற்கு முன்பு எல்லன் உணவுப் பொருள்களை மூன்று வெள்ளித் தட்டுகளில் ஏந்தி வந்தான். பஞ்சணையில் இரு தட்டுகளை வைத்துவிட்டு ஒரு தட்டை சுவாமியிடம் கொடுத்தான். தட்டுகளில்
சித்திரான்னங்கள், பழ வகைகள் வைக்கப் பட்டிருந்தன. நாகதேவியும் உபேந்திரனும் உற்சாகத்துடன் உணவருந்தினாலும் குருநாதர் இரண்டொரு பழங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தட்டைக் கீழே வைக்க முயன்றார்.
அதைக் கைநீட்டி வாங்கிக்கொண்டான் எல்லன்.
“சுவாமி ஏதும் சாப்பிடவில்லையே?” என்று விசாரித்தான் உபேந்திரன்.
“பசியில்லை” என்றார் குருநாதர்.
“அப்படித்தானிருக்கும்” என்றான் உபேந்திரன்.
“எப்படித்தானிருக்கும்?” எரிந்து விழுந்தார் குருநாதர்.
“உணவு நேரம் தாண்டிவிட்டது. துறவிகள் காலப்படி நேரப்படி தான் சாப்பிட முடியும்?” என்று கூறிய உபேந்திரன் “எங்கள் வயது ஆசிரமம் இரண்டும் வேறு” என்று குறிப்பிட்டான்.
“என்ன ஆசிரமம்?” என்று சந்தேகத்துடன் கேட்டார் குருநாதர்.
நாகதேவி மெல்ல நகைத்தாள். “சொல்லிவிடட்டுமா?” என்று உபேந்திரனைப் பார்த்துக் கேட்டாள்.
“எப்படியும் தெரியப் போகிறது. சொல்லிவிடேன்!” என்றான் உபேந்திரன்.
அவன் தேவி என்ற மரியாதைச் சொல்லைக் கைவிட்டதையும், சொல்லிவிடேன் என்று சொந்தக்காரன் போல் தேவியை அழைப்பதையும் பார்த்த சுத்தானந்தர் மனத்தில் சுத்தம் ஆனந்தம் இரண்டுமே மறைந்துவிட்டதால் ‘சொல் தேவி”
என்று கடுமையாகக் கேட்டார்.
நாகதேவி குருநாதர் மீது திகைக்க சொற்களை வீசினாள். படைத்தலைவர் தம்மைத் திருமணம் செய்து கொள்ளும்படி என்னைக் கேட்டார். நானும் ஒப்புக் கொண்டுவிட்டேன்” என்று தேவி கூற, குருநாதர் பிரமித்தாரென்றால் அவர்
பிரமிப்பை ஆயிரம் மடங்கு உயர்த்தும்படியான சொற்களை உபேந்திரன் உதிர்த்தான். “நாங்கள் முறையான திருமணத்திற்குக் காத்திருக்கப் போவதில்லை” என்று கூறினான் படைத் தலைவன்.
“புரியவில்லை “ என்றார் குரு நாதர்.
“காந்தருவம் எங்களுக்கு உண்டு. ஆகையால் நாகதேவி இன்றிரவு என்னுடன் தங்குகிறாள். நீங்கள் ஆசிரமம் செல்லலாம்” என்று கூறினான் உபேந்திரன்.
எல்லன் எங்கிருந்தோ தோன்றி, “குருநாதரே! வாருங்கள் என்றழைத்தான். குருநாதர் குழம்பிய உள்ளத்துடன் எழுந்து நின்றார். ஒருமுறை இருவரை யும் பார்த்தார். பிறகு அறையிலிருந்து வெளியேறினார். வெளியே வந்ததும் சிறிது
திரும்பி நோக்கினார். அவர் முகத்திற்கு நேரே அறைக்கதவு தாளிடப்பட்டது. உள்ளிருந்து இருவர் நகைக்கும் ஒலி அவர் காதில் தெளி