Nagadevi Ch 20 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 20. பித்தன்
Nagadevi Ch 20 | Nagadevi Sandilyan | TamilNovel.in
சிறையில் பலவந்தமாகத் தள்ளப்பட்ட உபேந்திரன், சீற்றத்துக்கு அது சமயமல்லவென்பதையும் சிந்தனைக்குத் தான் சமயமென்பதையும் உணர்ந்து கொண்டதால் அறையில் அங்குமிங்குமாக நடமாடத் தொடங்கினான். அவன்
சிந்தையும் நடமாடத் தொடங்கியது. நாகதேவி கண்ணில்பட்ட நாளாய் ஏற்பட்ட நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்துப் பார்த்து, “இவளுக்கு நிச்சயமாக சித்தப்பிரமைதான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். “இல்லாவிட்டால்
என்னை பலவந்தமாகக் கப்பலுக்கு இழுத்துச் சிறை செய்து இந்த வங்கக்கடலில் மரக்கலத்தைச் செலுத்துவாளா? இவள் தான் கிடக்கட்டும். இந்த குருநாதரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டாளே. எங்களிருவரையும்
நாகப்பட்டினத்தில் ஒரு நாள் காணாவிட்டால் ஊர் மக்கள் வாளாவிருக்கமாட்டார்களென்ற யோசனை கூடவா இவளுக்கில்லை? குருநாதர் மேற் பார்வையில்லாமல் சூடாமணி விஹாரத்தை முடிக்க ஸ்தபதி முயலமாட்டாரே. அதுகூடவா
இவளுக்குத் தெரியவில்லை? நான் ஒரு நாள் இல்லாதிருந்த விஷயம் மன்னர் காதுக்கு எட்டியிருக்குமே. எட்டியிருந்தால் உடனடியாகக் கடற்கரையையும் நாகையையும் வலை போட்டும் சல்லடை கொண்டும் துருவிப் பார்த்து விடுவார்
மன்னர் என்பதைக்கூட உணராத முட்டாளா இவள்? சரி, என்னைக் கவர்ந்து வந்து விட்டாள். நாளைக்கே புகார் கண்ணில் பட்டுவிடும். அங்குள்ள மரக்கலங்களுக்கும் பர தவருக்கும் இவள் என்ன பதில் சொல்லுவாள்?” என்றும்
வினாக்களை எழுப்பிக் கொண்டான்.
ஆனால் நாகதேவி தந்திரத்தின் எல்லையை அவன் உணரவில்லை. மறுநாள் காலையில் அவன் அறையைத் திறந்து கொண்டு சாவகத்தின் நாலைந்து மாலுமிகள் உள்ளே நுழைந்து மாலுமி உடை யொன்றை உபேந்திரனிடம்
கொடுத்து, “இதைத் தாங்கள் அணிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள் வினயத்துடன். –
“ஏன், என் உடைக்கு என்ன?” என்று உபேந்திரன் வினவினான்.
“நீங்கள் பயணத்துக்கு சித்தமாக வராததால் வேறு உடை கொண்டு வரவில்லை” என்றான் ஒரு
“உனக்கெப்படித் தெரியும் அது?” என்று உபேந்திரன் வினவினான்.
“நீங்கள் பயண மூட்டை எதையும் கொண்டு வராததை நாங்கள் பார்த்தோம்” என்று சொன்னான் இன்னொரு மாலுமி.
உபேந்திரன் அந்த மாலுமியை உற்று நோக்கி, “பார்த்தாயா? கேட்டாயா?” என்று வினவினான்.
மாலுமி தனது இதழ்களில் புன்முறுவலை வர வழைத்துக் கொண்டான். “பார்த்தேன், கேட்டேன்” என்று பதில் சொன்னான்.
“இரண்டும் செய்தாயா?” உபேந்திரன் கேள்வியில் சற்றுக் கடுமை தெரிந்தது.
“ஆம். பார்த்தது நான். கேட்டது தலைவியிடம்.”
“நாகதேவியிடமா?”
அந்த மாலுமி அடக்கத்தைக் காட்டி, “வேறு தலைவி ஏது?” என்று கேட்டான்.
“உங்கள் யாருக்கும் சுயபுத்தி கிடையாதா?” என்று சீறினான் உபேந்திரன்.
“கிடையாது.” மாலுமியிடமிருந்து திட்டமாக வந்தது பதில்.
இதைச் சொல்லிக் கொள்ள உனக்கு வெட்கமாயில்லை?”
“இல்லை.”
“இல்லையா!”
“ஆம். இல்லை சுயபுத்தியால் வரும் கஷ்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
“சுய புத்தியால் கஷ்டமா?”
“சந்தேகமில்லை. தங்கள் நிலைமையே அதற்கு உதாரணம்” என்று அத்துடன் பேச்சை முடித்த அந்த மாலுமி மற்ற மூன்று மாலுமிகளைப் பார்த்து, “வாருங்கள் போவோம். நாகை தலைவர் இந்த ஆடையைப் புனையட்டும், அரை நாழி
கழித்தும் அணியவில்லையானால் அணிவிப்போம்” என்று கூறிவிட்டு அர்த்த புஷ்டியுடன் நாகை நாகர்கள் தலைவனை நோக்கி விட்டு வெளியே நடந்தான். அறைக் கதவு மீண்டும் மூடப்பட்டது.
அவர்கள் சென்ற பின்பு அவர்கள் கொணர்ந்த ஆடையை நோக்கினான் உபேந்திரன் சில விநாடிகள். பிறகு அங்கியையும் சராயையும் எடுத்துப் பார்த்தான். இரண்டும் சுத்த வெள்ளையாயிருந்தன. இரண்டும் சுத்தமான பட்டு
என்பதையும் உணர்ந்த உபேந்திரன் வியப்பின் எல்லையை எய்தினான். அந்த வெண்பட்டு ஆடைகளிலிருந்து வந்த சுகத்தமும் அவனைப் பெரிதும் கவர்ந்தது. அந்த ஆடைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்ததும் கையை இருமுறை
தட்ட ஒரு மாலுமி உள்ளே தலையை நீட்டினான்.
“நான் நீராட வேண்டும்” என்று உபேந்திரன் கூறினான்.
வந்த மாலுமி தலை வணங்கி தன்னுடன் வரும்படி சைகை செய்து நீராட்ட அறைக்கு அழைத்துச் சென்றான். நீராட்டத்துக்கான சகல வசதிகளும் அந்த அறையில் இருந்தபடியால் சுகஸ்நானம் செய்த உபேந்திரன் திரும்பவும் தனது
அறைக்கு வந்து புதிய ஆடை களை அணிந்து கொண்டான். அந்த ஆடைகளை அவன் அணிந்து கொண்டதும் அவன் பழைய உடுப்புகள் அந்த அறையிலிருந்து அகற்றப்பட்டன.
நன்றாக நீராடி முடித்த உபேந்திரன் அந்த அறைக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு கால்களை ஆட்டிய வண்ணம் தனது உடையைக் கவனித்தான். அது சாவகத்து மாலுமிகள் அணியும் உடையானாலும் விலை உயர்ந்ததாயிருந்தது.
இடைக் கச்சைகூட வழவழப்பாகவும் நல்ல பட்டிலும் நெய்யப்பட்டிருந்தது. அது தவிர அங்கியின் பல இடங்களில் சாவகத்தின் அரசமுத்திரை பட்டால் நெய்யப்பட்டிருந்தது. இப்படி சுமார் ஆறு முத்திரைகள் சிவப்பு சிவப்பாக அந்த
வெள்ளைப்பட்டு அங்கியில் இருந்ததை உபேந்திரன் கவனித்தான். அவற்றைக் கவனித்த பிறகுதான் சட்டென்று அவனுக்கு உண்மை புத்தியில் பளிச்சிட்டது.
உடையைக் கழற்ற சரேலென்று அங்கிக்குக் கொண்டுபோன கை அப்படியே நின்றுவிட்டது. வேறு உடை ஏதும் அந்த அறையில் இல்லை. அவன் பழைய உடைகள் துரிதமாக அகற்றப்பட்டதன் காரணமும் அவனுக்கு நன்றாகத்
தெரிந்தது. பொழுதும் புலர்ந்தது. திடீரெனக் கேட்ட பேரிரைச்சலிலிருந்து தாங்கள் துறை முகத்திற்கு அருகில் வந்துவிட்டதையும் அந்தத் துறைமுகம் புகாரைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாதென்ற எண்ணமும் உண்டாகவே அவன்
தனது அறை சாளரத்தின் மூலம் வெளியே நோக்கினான்.
பழைய புகாரல்ல அது. வெளிநாட்டு மரக்கலங்கள் சரக்கேற்றி வந்ததாலும் யவனர் அதன் கோட்டைகளைக் காத்ததாலும் வெகு துணிவுள்ள மாலுமிகள் கடற்கரை யெங்கும் பரவிக் கிடந்ததாலும் சிறப்புற்ற புகாரல்ல அது. கடியலூர்
உருத்திரங் கண்ண னார் கண்ணால் கண்டு மகிழ்ந்த அந்தப் பெரும் பூம்புகார் அல்ல அது. திரும்பத் திரும்ப ஏற்பட்ட கடல்கோளாறு களால் சிதைந்து வீட்ட காவிரிப்பட்டினத்தைக் கண்டான் உபேந்திரன். அதன் பெரும் கோட்டை இடிந்து
ஒரே ஒரு சுவர் குத்துக்கல் மாதிரி நின்று கொண்டு இருந்தது.
கடற்கரையைக் காத்த கடலோடும் வீர பரதவர் கண்களில் தென்பட்டார்களில்லை. அதே வம்சத்தில் வந்து சீரழிந்து மீன் பிடித்து வாணிபம் நடத்தும் பரதர்களைக் கண்ட உபேந்திரன் ‘காலம் எதையெல்லாம் சீரழித்து விடுகிறது’ என்று
காலத்தை நொந்தான். அப்படி அழிந்த அழிவுற்ற புகாரைப் பார்த்துக் கொணடிருக்கையிலேயே இரண்டு படகுகள் நங்கூரம் பாய்ச்சிவிட்ட சாவகத்தின் மரக்கலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன. அதற்கப்புறம் அவன் எதையும்
காணப் பிரியப்படாததால் சாளரத்தை மூடிவிட்டுக் கட்டிலில் கண்களை மூடினான்.
நாழிகைகள் ஓடிக் கொண்டிருந்தன. அடிக்கடி யார் யாரோ வந்து அந்த அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். அதனால் சினங்கொண்ட உபேந்திரன் அடுத்து எட்டிப் பார்த்தவனை “போ வெளியே” என்று
சீறினான்.
அவன் சட்டென்று மறையவே சிறிது நிதானப்பட்ட உபேந்திரன் இதற்கெல்லாம் காரணம் என்னவாயிருக்கு மென்று எண்ணிப் பார்த்தும் அவனுக்கு ஏதும் விளங்க வில்லை. சூரியன் சிறிது கிளம்பியதும் தளத்திலிருந்த ஒரு சிறு துவாரம்
வழியாக உள்ளே விழுந்த வெள்ளை ஒளி வட்டத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்த உபேந்திரன் தனது அறைக் கதவு மெள்ளத் திறக்கும் ஓசை கேட்டுத் திரும்பினான். முற்றும் புது விதமான திருக்கோலததில் நாகதேவி காட்சியளித்தாள்.
உபேந் திரனை நோக்கிப் புன்முறுவலும் செய்தாள்.
“கொஞ்சம் இப்படி வருகிறீர்களா?” என்று கொஞ்சும் குரலில் வினவினாள்.
“வருவதானால் உன்னைக் கொல்லத்தான் வருவேன்” என்று கூவினான் உபேந்திரன்,
அவன் இப்படிச் சொன்னதும் நாகதேவி சற்று நகர்ந்தாள். புகாரின் பரதவர் பத்துப் பேர் நின்றிருந்தார்கள் வாயிற்படிக் சருகில். அவர்களில் ஒருவன், “தேவி! நீங்கள் சொன்னது சரிதான்” என்றான்.
“இவர் இந்த மரக்கலத்தின் தலைவர், சாவகத்திலிருந்து இதைச் செலுத்தி வந்தவரே இவர் தான்” என்றாள் தேவி.
அந்தப் பெரும் பொய்யைக் கேட்ட உபேந்திரன், “ அடிகள்ளி! என்ன வித்தை இது?” என்று அதட்டினான். பரதவர் நாகதேவியை நோக்கிப் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையை அசைத்தார்கள். உபேந் திரனுக்கு மெல்ல மெல்ல
உண்மை புலனாயிற்று. நாக தேவி மீது பாய எழுந்தான். நாகதேவி சட்டென்று பின்னடைந்தாள். புகாரின் பரதவர் பத்துப்பேர் அவன் மீது பாய்ந்து அவனை அழுத்திப் பிடித்தனர், இருவர் அவன் கால்களையும் கைகளையும் கட்டினார்கள்
கயிறுகளால். “தேவி பைத்தியத்திடம் இப்படி நீங்கள் சாதாரணமாக நடப்பது ஆபத்து; எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதும் நாகதேவி மட்டும் அறையில் நின்றிருந்தாள். அவள் உதடுகளில்
கொடூர புன்னகையொன்று அரும்பி நின்றது.