Nagadevi Ch 30 | Nagadevi Sandilyan | TamilNovel.in
நாகதேவி – சாண்டில்யன்
அத்தியாயம் – 30. பலி ஆடு
Nagadevi Ch 30 | Nagadevi Sandilyan | TamilNovel.in
குருநாதரை ‘அசையவேண்டாம்’ என்று கட்டளையிட்ட அந்த மனிதன் சற்று எட்ட இருந்த ஒரு மஞ்சத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு அவருக்கெதிரே உட்கார்ந்து கொண்டான். அப்படி உட்கார்ந்து கொண்டதால் அவன் தனக்கும்
அறைக் கதவுக்கும் இருந்த இடைவெளியை அடைத்துக் கொண்டதையும், தான் எழுந்து ஓட முயன்றாலும் அது நடவாத காரியம் என்பதையும் புரிந்து கொண்ட சுத்ததத்தர், “நானே தங்களை உட்காரச் சொல்லியிருக்க வேண்டும். ஏதோ
குழப்பத்தில் இருந்துவிட்டேன்” என்று உபசார வார்த்தை சொல்லி சமாளித்துக் கொள்ள முயன்றார்.
“யார் உபசாரம் செய்வதற்காகவும் நான் காத் திருக்கும் பழக்கமில்லை” என்று பதில் சொன்ன அந்த மனிதன் “ஏதோ தங்களுக்குக் குழப்பம் என்று சொன்னீர்களே, என்ன குழப்பம்? எதைப்பற்றி குழப்பம்?” என்று விசாரித்தான். “அதை
நீக்க நான் ஏதாவது செய்ய முடியுமானால் சொல்லுங்கள்” என்று மிகுந்த மரியாதையுடன் கேட்கவும் செய்தான்.
அந்த மனிதன் மரியாதைக் குரலுக்கு அர்த்தமேயில்லையென்பதையும் அவன் ஏதோ நாடகம் போடுகிறானென்பதையும் உணர்ந்து கொண்ட குருநாதர் “அப்படியொன்றும் குறிப்பிடக்கூடிய குழப்பமில்லை” என்றார்.
“சகிக்கக்கூடிய குழப்பமாக இருந்தால் சரிதான்” என்று அந்த மனிதன் குருநாதரைத் தனது விஷமக் கண்களால் ஊடுருவி நோக்கினான்.
தனது ஆத்மாவையே ஊடுருவுவது போலிருந்த அந்த மனிதனின் பார்வையைச் சகிக்க முடியாத சுத்ததத்தர், “தேவரே’ இங்கு எதற்காக வந்தீர்?” என்று வினவினார்.
“ஏன் என் முழுப்பெயரையும் சொல்லி அழைக்கலாமே. நான் மறைக்க வேண்டியது ஏதுமில்லையே?” என்று அந்த மனிதன் இளநகை கொட்டினான்.
“முழுப் பெயரை நான் சொல்லி யார் காதிலாவது விழுந்தால்…” என்று இழுத்தார் சுத்ததத்தர்.
“விழுந்தாலென்ன? நான் என்ன கொலை செய்து மறைந்து வாழ்கிறேனா? அல்லது மன்னருக்கு எதிராகச் சதி செய்கிறேனா?” என்று கேட்ட அந்த மனிதர் பொதுப்படையாகப் பேசுவது போல தோன்றினாலும், உண்மையில் அவர் பல
விஷயங்களை அறிந்திருக்கிறாரென்பது அவர் குரலிலிருந்தே தெரிந்தது.
அதை உணர்ந்துகொண்ட குருநாதர் சிறிது சிந்தித்து விட்டு, “இந்தளதேவரே!” என்று அவரது முழுப்பெயரையும் சொல்லி அழைத்தார். –
முழுப் பெயரையும் சொல்லி அழைத்ததும் முகத்தில் பெருமகிழ்ச்சியைக் காட்டி இந்தளதேவர் “சுத்ததத்தரே இது சரியாயிருக்கிறது. நமக்குள் ரகசியங்களும் சூழ்ச்சிகளும் எதற்கு?” என்று கேட்டார்.
“சூழ்ச்சிக்கு இங்கு என்ன இருக்கிறது?” என்று வினவினார் குருநாதர்.
“ஒன்றுமில்லையா?” தேவர் கேள்வி சர்வ சாதாரணமாயிருந்தாலும் அதில் ஏதோ உட்பொருள் இருப்பதாக குருநாதருக்குத் தோன்றியது.
அதனால் சிறிது சங்கடப்பட்டு கட்டிலில் அசைந்த குருநாதர், “ஒன்றுமில்லை “ என்று பதில் சொன்னார்.
“சந்தோஷம்” என்றார் தேவர்.
“எதற்கு சந்தோஷம்” என்று கேட்டார் குருநாதர்.
“சூழ்ச்சி எதுவுமில்லாதிருப்பதற்கு” என்ற தேவர் “நான் கடற்கரையில் உமது கையில் ஒரு நாணயம் கொடுத்தேன். எங்கே?” என்று வினவினார்.
இந்தளதேவர் தமது அறைக்குள் வந்துவிட்டதால் அவர் தமது கையில் திணித்த நாணயத்தைப்பற்றி அறவே மறந்து விட்ட குருநாதர், “இதோ இருக்கிறது என்று அதைத் தமது மடியிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.
அதைத் தமது கையில் வாங்கிக் கொண்ட தேவர் அந்த நாணயத்தின் ஒருபுறத்திலிருந்த ராஜேந்திர சோழதேவன் உருவத்தைக் காட்டி “இந்த நாணயம் செலாவணியில் இல்லை. ஆனால், சோழதேவரின் கட்டளையால் அடிக்கப்பட்டது.
முழுத்தங்கம்” என்று சொன்னார். “இதை ராஜேந்திர சோழதேவர் எதற்காக ஏற்படுத்தினார் என்பது தெரியுமா?’ என்றும் வினவினார்.
சுத்ததத்தர் இந்தளதேவரின் உள்ளங்கையில் பளபளத்த அந்தப் பொன் நாணயத்தை நீண்ட நேரம் உற்று நோக்கிவிட்டு, தெரியும் தேவரே! அரசரின் அந்தரங்கத்துக்குப் பாத்திரமான சில அதிகாரிகளுக்கு மட்டும் இது
கொடுக்கப்படுகிறது. இதை யார் வைத்திருந்தாலும் அவர்கள் சொல்வதை ராஜ ஆக்ஞை போல் நினைத்து நடக்க வேண்டுமென்ற விதியும் இருக்கிறது” என்று சொன்னார். இதைச் சொன்னதும் குருநாதர் ஒரு பெருமூச்சும் விட்டார்.
அந்தப் பெருமூச்சைக் கவனிக்கவே செய்த தேவர் இள நகை கூட்டினார். குருநாதரை நோக்கி “குரு நாதரே! நீர் பட்டிருக்கிற அவஸ்தைக்கு மன்னர் சார்பில் நீர் செய்திருக்கும் செய்கைகளுக்கு, இப்படி பெரு மூச்சுக்களை விடலாம்.
ஆனால் இனி உமக்கு விடுதலை வேளை” என்றார் குரலில் சிறிது விஷமத்தையும் கலந்து.
“எனக்கு விடுதலையா?” வியப்புடன் வினவினார் குருநாதர்.
“ஆம்.” இந்தளதேவர் உற்சாகத்துடன் பதில் கூறினார்.
“எதிரிலிருந்து விடுதலை?” குருநாதர் கேள்வியில் சந்தேகம் இருந்தது.
“சாவகக் கப்பலில் பணி செய்தீரல்லவா?”
“நானா! பணி செய்தேனா”
“ஆம். மன்னர் சார்பில்!”
“ஆம் ஆம்! பணி செய்தேன்.”
“அதை இன்றிலிருந்து நான் மேற்கொள்கிறேன்.”
குருநாதர் வாயைப் பிளந்தார். “நீர்! மேற்கொள்கிறீரா?” என்று தட்டுத் தடுமாறிக் கேட்டார்.
இந்தளதேவர் தமது முகத்தில் போலித் துயரத்தை காட்டினார்.
“நான் சொல்வது விளங்கவில்லை போலிருக்கிறது?” என்றார் குரலிலும் துயரத்தைக் காட்டி.
“ஏன் விளங்கவில்லை? விளங்குகிறது” என்று தடுமாறினார் குருநாதர்.
“அப்படியானால் அந்த ராணியிடம் என்னை அறிமுகப்படுத்த வேண்டியதுதானே?” இதை சர்வ சகஜமாகக் கேட்டார் தேவர்.
குருநாதருக்கு எரிச்சல் அதிகமாயிற்று. “தேவரே! அந்த ராணியை இல்லை தேவியை, இப்பொழுது பார்க்க முடியாது” என்றார் எரிச்சல் குரலிலும் ஒலிக்க.
“ஏன் முடியாது?”
“முடியாதென்றால் முடியாது.”
“ஏன் முடியாது? நாணயத்தைப் பார்த்தீரல்லவா? நான் சொல்வதற்குக் கீழ்ப்படிய வேண்டியது தானே உமது வேலை?”
“ஆம். ஆம். ஆனால் அத்தனை சுலபமல்ல.”
“ஏன் சுலபமல்ல? ராணிதான், இல்லை தேவிதான் உம்முடன் வந்து இன்னொரு மாளிகையில் தங்கியிருக்கிறாளே.”
குருநாதர் இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தார். “இந்தளதேவரோ எந்த மர்மத்தையும் அவிழ்ப்பதில் சூரனென்று ராஜேந்திர சோழதேவராலேயே பாராட்டப் பெற்றவர். சோழ நாட்டில் அவர் பிரசித்தி அதிகம்.
ஆகையால் அவரிடம் உண்மையை மறைக்க முடியாது. உண்மையைச் சொன்னாலோ நாகதேவி என்னை எப்படியும் அழித்து விடுவாள். உண்மை முழுவதையும் அவிழ்த்தாலோ மற்றவர்கள் இங்கேயே இன்றே என்னை நாளங்காடி
பூதத்துக்குப் பலி கொடுத்து விடுவார்கள்” என்று சிந்தித்த குருநாதர் இருதலை கொள்ளியாகத் திகைத்தார். கடைசியாக எது வந்தாலும் வரட்டும் என்று துணிவு கொண்டு, “தேவரே! உம்மிடம் நான் எனது பணியை ஒப்படைக்கு
முன்பு நீர் இங்கு வந்த காரணம் தெரிய வேண்டும்” என்றார் திட்டவட்டமாக.
“காரணம் எதுவுமில்லை. திடீரென்று மன்னர் தஞ்சையிலிருந்து நாகை வந்தார். அப்பொழுது தஞ்சையிலிருந்து என்னையும் அழைத்துக் கொண்டு வந்தார்! வாசகத்தை முடிக்கவில்லை இந்தளதேவர்.
சுத்ததத்தருக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. ஊம்…” என்று ஊக்கினார் அந்த நடுக்கத்துடன்.
“நானும் போனேன். நாகை மாளிகையில் அவருடன் தங்கினேன். நேற்று காலை மன்னர் என்னை அழைத்து புகாருக்குப் போய் வருகிறாயா?” என்று கேட்டார். சரியென்றேன். ‘உன் அடையாளத்தையும் எடுத்துக்கொண்டு போ’
என்றார். கச்சையிலிருந்து அதை எடுத்துக் காட்டினேன். ‘சரி போய் வா. அங்கு உபேந்திரன் இருந்தால் புகாரை பழைய புகாரைப் போல் நல்ல துறை முகமாக்க முடியுமா என்று பார்க்கச் சொல்’ என்றார். நான் புறப்பட்டு வந்தேன்’ என்று
விளக்கினார் இந்தளதேவர்.
தேவர் தமது பேச்சில் பல விஷயங்களை மறைத்திருக்கிறார் என்பது குருநாதருக்குத் திட்டமாகத் தெரிந்ததால் “தேவரே! நீர் முழுவதையும் சொல்லவில்லை “ என்று குற்றம் சாட்டினார்.
“உமக்குத் தெரிந்ததைத் திரும்பச் சொல்ல அவசியமில்லை என்று நினைத்தேன்” என்ற தேவர், “ஒரு விஷயம் குருநாதரே, மன்னர் சூடாமணி விஹார நிர்மாணத்தில் உமது இஷ்டப்படி செய்ய உத்தரவிட்டு விட்டார்” என்றும் கூறினார்.
அந்த இன்னோர் இடி இறங்கவே நிலைகுலைந்த குருநாதர் “ சூடாமணி விஹார நிர்மாணமா! அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்!” என்று விசாரித்தார் ஏதும் அறியா தவர்போல்.
“உமது யோசனைப்படி பாதாள அறை வைத்து விஹாரத்தைக் கட்ட ஒரு சித்திரம் தயாரித்திருப்பதாக நாகை ஸ்தபதி மன்னரிடம் சொன்னார். சித்திரத்தையும் காட்டினார். மன்னர் என்ன சொன்னார் தெரியுமா?’, என்று விவரித்தார்
தேவர்.
“என்ன சொன்னார்?” குருநாதர் கேட்டார் திகிலுடன்.
“குருநாதர் எப்படி இஷ்டப்படுகிறாரோ அப்படிக் கட்டி விடுங்கள்; சித்திரத்தில் காட்டப்பட்டுள்ள கட்டட ஏற்பாடு மிகக் கச்சிதமாயிருக்கிறது. இது பல காரியங்களுக்கும் பயன்படும் என்று சொன்னார் மன்னர்” என்ற தேவர் குருநாதரே!
நீர் கிழித்த கோட்டை மன்னர் தாண்ட மறுக்கிறார்” என்று பாராட்டவும் செய்தார்.
இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைபவர்போல் குருநாதர் அசட்டுச் சிரிப்பாகச் சிரித்தார். நமது மன்னர் மகானுபாவர். இந்த ஏழையிடம் அவருக்கு எத்தனை நம்பிக்கை’ என்று குருநாதர் மன்னரைப் பாராட்டினார்.
“குரு நாதரே” தேவர் அழைத்தார் இகழ்ச்சிக்
“ஏன் தேவரே?” என்று கேட்டார் குருநாதர்.
“மன்னர் நம்பிக்கைக்கு நாமும் பாத்திரமாக வேண்டும்” என்று சொல்லிய தேவர் திடீரென ஆசனத்திலிருந்து எழுந்து, “குருநாதரே! வாரும் நீர் அழைத்து வந்திருக்கும் தேவியை சந்திப்போம்” என்று அதிகாரக் குரலில் அழைத்தார்.