Mohini Vanam Ch 4 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 4 பிரம்மச்சாரி
Mohini Vanam Ch 4 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
பல போர்களைக் கண்ட மகாவீரனும் பயம் என்பதை அறவே அறியாதவனும், நடுத்தர வயதை அடைந்தும் தளராத வஜ்ரம் போன்ற தேகத்தைப் படைத்தவனும் சலூம்பிரா இனத்தின் தலைவனுமான சலூம்பிரா, அறைவாயிலில்
தோன்றியதும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தால் மகாராணா கைகால்கள் நடுங்க மீண்டும் தமது பஞ்சணையில் அமர்ந்துகொண்டார். சோம்ஜி என்று அழைக்கப்பட்டு வந்த சோமசந்த் காந்தியும் அந்தச் சமயத்தில் தமது
தலையீடு எந்தப் பயனையும் அளிக்காது என்ற எண்ணத்தால் பேச்சு மூச்சின்றிச் சிலையென நின்று விட்டார்.
ராஜமாதாவான ராம்பியாரிதேவிக்கு உள்ளூர சிறிது அச்சமிருந்தாலும் அதை உதறிவிட்டுத் தலைநிமிர்ந்து கம்பீரமாக சலூம்பிராவை நோக்கி, “சலூம்பிரா!ராணாவின் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டிய நீர் எப்படி
முன்னறிவிப்பில்லாமல் திடீரென வாளும்கையுமாக இங்கு நுழைந்தீர்?” என்று சற்றுக் கடுமையுடன் வினவினாள்.
அவள் கேட்டதை ஒரு பொருட்டாக மதிக்காத சலூம்பிரா வாயிற்படியைத் தாண்டி ராணாவின் பள்ளியறைக்குள் நுழைந்தார். நுழைந்து அந்த அறையைச் சுற்று முற்றும் நோட்டம் விட்டார் நிதானமாக. பிறகு ராஜமாதாவை நோக்கி,
“மகாராணி! மகாராணாவின் பள்ளியறையில் மகாமந்திரி இருக்கிறார். இதோ என் தம்பியைக் கொன்ற வீரன் நிற்கிறான். பெண்ணொருத்தி தரையில் கிடக்கிறாள். நாள் மட்டுந்தானா இந்தப் பள்ளியறைப் பிரவேசத்துக்கு விலக்கு?” என்று
கேட்டு கோபப் புன்முறுவலும் செய்தார்.
மகாராணி அந்தக் கோபப் புன்முறுவலை லட்சியம் செய்யாமல், “மகாமந்திரி சோம்ஜி அவசர அரசாங்க அலுவலாக ராணாவின் அனுமதி கேட்டு வந்திருக்கிறார். இந்த வீரன் திடீரென காயமடைந்த பெண்ணுடன் பிரவேசித்து விட்டான்.
அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு நான் விசாரித்துக் கொண்டிருக்கும்போது நீர் திடீரென்று வந்தீர். பெண் அடிபட்டு மயக்கத்தில் இருந்ததால் அந்த வாலிபன் முறையின்றி உள்ளே வந்தபோது நான் விசாரணை செய்தேன்.
அபாயத்தில் சரணடைய வந்த அவனுக்கும், வாளை உருவிக்கொண்டுராணாவிடம் மரியாதையின்றி உள்ளே நுழைந்த உமக்கும் வித்தியாசமில்லை?” என்று வினவினாள். அவள் குரலில் கடுமையும் இருந்தது, ராஜ தோரணையும்
இருந்தது.
அவள் கண்டனத்தைக் கேட்டதும் சலூம்பிராகூட சிறிது தயங்கினார். பிறகு தமது குரலைச் சிறிது தணித்துக் கொண்டு “மகாராணி! இவன் எனது தம்பியைக் கொன்று விட்டான். அவன் இங்கு வந்துவிட்டதால் அவனை நாடி வந்தேன்.
அவனுக்குப் புகலிடம் கொடுத்திருக்கிறீர்கள்” என்று சுட்டிக் காட்டினார்.
அதுவரை தனது வாளை உருவாமலும் அலட்சியத்துடன் அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டு மிருந்த தீப்சந்த் “சலூம்பிரா!” என்று மெதுவாகக் குரல் கொடுத்தான்.
சலூம்பிரா தமது பெரிய பயங்கர விழிகளை தீப்சந்தை நோக்கித் திருப்பினார். “யார் நீ?” என்றும் வினவினார் உக்கிரம் நிரம்பிய குரலில்.
“வயதை வைத்து வீரத்தை யாரும் எடை போடுவதில்லை” என்றான் தீப்சந்த்.
“ஆமாம் தீப்சந்த்! உன் வீரத்தைப்பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இருப்பினும், நீ என் தம்பியைக் கொன்றது குற்றம். அதற்கு விசாரணையை நடத்த வேண்டும்” என்றார் சலூம்பிரா.
“நீதி விசாரணையைவிட நமது வாட்கள் முடிவு சொல்லலாமே. ராஜபுத்திரர்களிடம் அந்தப் பழக்கம் நீண்ட காலமாக இருக்கிறதே” என்ற தீப்சந்த் தனது வாட்பிடியின் மீது கையை வைத்தான்.
“உன்னைப் போன்ற சிறுவனுடன் நான் வாட்போர் புரிவது கிடையாது” என்று தெரிவித்தார் சலூம்பிரா.
“வயதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். தாங்கள் கூறுமிடத்தில் தங்களைச் சந்திக்கிறேன்” என்றான் தீப்சந்த்
“எந்த இடத்தில் நீ என் தம்பியைக் கொன்றாயோ அங்கேயே சந்திப்போம், நாளை இரவு” என்ற சலூம்பிரா மகாராணிக்கும் மகாராணாவுக்கும் தலை வணங்கி வெளியேறினார்.
அந்த அறையிலிருந்த மற்றவர்கள் தீப்சந்தின் காலம் மறுநாளுடன் முடிந்துவிடுமென்றே நினைத்தார்கள். மகாராணி சொன்னாள், “தீப்சந்த்! இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு நீ ஓர் உதாரணம்” என்று.
தீப்சந்த் மகாராணியைப் புன்முறுவலுடன் நோக்கினான். “மகாராணி! இந்த சலூம்பிராவைப்போல் பலரை நான் பார்த்திருக்கிறேன். கவலைப்படாதீர்கள். ஒரு உறுதி மட்டும் கூறுகிறேன். உங்கள் படைத்தலைவரை,
நான் கொல்வதில்லை” என்று சொல்லி விட்டுக் கீழே கிடந்த பூங்கொடியை எடுத்து மீண்டும் தோளில் போட்டுக் கொண்டு, “இந்தப் பெண்ணுக்குச் சீக்கிரம் ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டும். நான் இந்த நகரத்தின் பிரதான
மருத்துவர் இல்லத்துக்கு இவளை எடுத்துச் செல்கிறேன்” என்று கூறிவிட்டுப் படியை நோக்கிக் காலடி எடுத்து வைத்தான்.
“தீப்சந்த்! நில்! அபலையான ஒரு பெண்ணுக்குச் சிகிச்சை செய்ய மேவார் ராணி மறுத்தாள் என்ற அவப் பெயர் எனக்கு வேண்டாம். அவளை உள்ளே கொண்டு வா” என்று கூறி உள்ளே நடந்தாள்.
அவளைப் பின்பற்றிச் சென்ற தீப்சந்த் உள்ளறை யொன்றில் இருந்த பஞ்சணையை மகாராணி காட்ட அதில் படுக்க வைத்தான் அந்தப் பெண்ணை, மகாராணி உத்தரவிட உள்ளிருந்து பணிமகள் ஒருத்தி கொண்டுவந்த நீரால் அந்த
அழகியின் தலைக்காயத்தைத் துடைத்தான். பிறகு சிறிது மது கொண்டுவரச் சொல்லி அதையும் புகட்டினான் அவள் வாய்க்குள். அவள் மதுவை மெதுவாக உறிஞ்சினாள். பிறகு லேசாகக் கண் விழித்தபோது மிரள மிரள விழித்தாள்.
பிறகு முனகினாள்…” நான் எங்கிருக்கிறேன்” என்றும் வினவினாள் மிக தீனமான குரலில்.
“மகாராணியின் அறையில் இருக்கிறீர்கள். கவலை வேண்டாம்” என்றான் தீப்சந்த்.
அதற்குள் மகாராணியும் அவளை நோக்கி குனிந்து, “அஞ்ச வேண்டாம். நீ தகுந்த பாதுகாப்பில் இருக்கிறாய். மருத்துவர் இப்பொழுது வந்துவிடுவார்” என்றாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் வந்த மருத்துவர் பெண்ணின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். தலைக் காயத்தையும் சோதித்தார். “இந்த அடியின் அதிர்ச்சி தான் சிறிது பலவீனத்தை அளித்திருக்கிறது. நாளைக்கு. சரியாகிவிடும். தலைக்கு
மட்டும் சிறிது களிம்பு தருகிறேன்” என்று கூறி அதற்கான களிம்பு ஒன்றையும் அவரே தலையில் தடவி விட்டுச் சென்றார்.
“தீப்சந்த்! இவள் ஒருநாள் இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு நீ வந்து அழைத்துச் செல்” என்ற மகாராணி, “அவள் யார்? பெயரென்ன?” என்று வினவினாள்.
“எனக்குத் தெரியாது!” என்றான் தீப்சந்த்.
அந்தப் பெண்ணே மெதுவாகப் பேசினாள். “மகாராணி! என் பெயர் புஷ்பாவதி” என்றாள்.
இதைக் கேட்ட மகாராணி, “எந்த புஷ்பாவதி! சக்தாவதர்களின் வம்சத்தைச் சேர்ந்தவளா?” என்று திகைப்புடன் கேட்டாள்.
“ஆமாம். அவளேதான் நான்.” என்றாள் புஷ்பாவதி.
“இது சலூம்பிராவுக்குத் தெரிந்தால் உதயபூர் இரண்டு படுமே” என்று அச்சத்துடன் சொன்னாள் மகாராணி. பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு, “சரி, தீப்சந்த்! நீ போய் நாளை வா.” என்றாள்.
புஷ்பாவதி மகாராணியை நோக்கி, “அவர் என்னுடனேயே இருக்கட்டும்” என்றாள்.
மகாராணி வியப்பின் எல்லையை அடைந்தாள். “உன்னுடன் தனியாகவா! இந்த அறையிலா!” என்று வினவினாள் வியப்புக் குரலிலும் ஒலிக்க.
“ஆம் மகாராணி! அவரை நீங்கள் அறியமாட்டீர்கள். சத்தியசந்தர். எந்தப் பெண்ணையும் அவரிடம் நம்பி ஒப்படைக்கலாம்.” என்றாள் புஷ்பாவதி.
“இவரை உனக்கு முன்னமே தெரியுமா?” என்று மகாராணி கேட்டாள்.
“எனக்குத் தெரியும், அவருக்கு என்னைத் தெரியாது. தீப்சந்த் பெண்களை வெறுப்பவர். திரும்பியும் பாராதவர். திருமணம் செய்து கொள்வதில்லையென சத்தியமும் செய்திருக்கிறார். ஆயுள் பிரமசாரி விரதம் ஏற்றிருப்பவர்” என்றாள்
புஷ்பாவதி.
மகாராணி வியப்புடன் நோக்கினாள் தீப்சந்தை. “அப்படியானால் நீ இவளுடன் இரு” என்று கூறி விட்டு அவர்களைத் தனிமையில் விட்டுச் சென்றாள். அறைக்கு வெளியே சென்றதும் பணிமகள் ஒருத்தியை விளித்து, “இவர்களை
எதற்கும் அடிக்கடிக் கண்காணித்து வா” என்று உத்தரவிட்டுச் சென்றாள்.