Mohini Vanam Ch 11 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 11 பிரம்மச்சாரிக்கு ஆபத்து!
Mohini Vanam Ch 11 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
அரண்மனை அந்தப்புரத்து நந்தவனம் வழியாக வந்த தீப்சந்த் அந்தப்புரத்து சாளரம் ஒன்று மேலே திறக்கும் சத்தம் கேட்டு அண்ணாந்து பார்த்தவன் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டான் பல விநாடிகள்.
சாளரத்தைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்த முகம் வெண்மதியின் அபாரமான மெருகைப் பெற்றிருந்த தால் இருந்த இடத்தில் இருந்து நகரவும் சக்தியற்றவன் ஆனான் தீப்சந்த். தனது தந்தையின் கோட்டைக்கு வந்த தமிழ் நாட்டுப்
புலவர் ஒருவர் தமிழகத்தில் இருந்த கம்பன் என்ற ஒரு கவியைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அந்த கவியின் வர்ணனைச் சிறப்பைப் பற்றிப் புகழ்ந்தது அவனது கவனத்துக்கு வரவே, ‘ஆம். அது உண்மைதான். அந்த வர்ணனைக்கு
புஷ்பாவதியும் நானுமே உதாரணங்கள்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
பயணம் வந்த புலவர் கம்பன் “விலங்கு மெல்லியல்” என்று பெண்களைப்பற்றிய கம்பன் இலக்கணத்தை எடுத்துரைத்து “சரியான அழகு. பார்ப்பவர் கால்களுக்கு விலங்கு போட்டு நிற்கச் செய்யும்” என்று விளக்கமும் தந்திருந்ததை
அந்தச் சமயத்தில் தீப்சந்த் நினைவுபடுத்திக் கொண்டான். “இவள் அழகு என் கால்களுக்கு விலங்கைத் தான் மாட்டியிருக்கிறது. இல்லாவிட்டால் நான் ஏன் இப்படி இங்கேயே நிற்கிறேன்!” என்று தன்னைக் கேட்டுக்கொள்ளவும் செய்தான்.
ஏதோ மலர்ச் செடியின் கிளையொன்று காற்றுக்கு வசப்பட்டு வெளியே மலர்க்கொத்தை நீட்டுவதுபோல் சாளரத்தின் வழியாக தலை நீட்டிய புஷ்பாவதி அவனைப் பார்த்து லேசாக நகைத்ததைப் பார்த்த தீப்சந்த் “என்ன அழகான
முல்லை மலர் வரிசை! எப்படித்தான் தொடுத் திருக்கிறது இயற்கை!” என்று உள்ளூர வியந்தான். “முல்லைப் பல் வரிசையின் வெண்மைக்கு வெண்மதிக் கிரணங்கள் காரணமா?” என்று வினாவையும் உள்ளே எழுப்பிக்கொண்ட அந்த
வாலிப வீரன், “இருக்காது, இருக்காது. வெண் மதி கிரணங்களுக்கு இத்தனை வெளுப்பேது?” என்று உவமைக்குச் சிறப்பு கொடுக்காமல் உவமையின் பொருளுக்கே சிறப்பைக் கொடுத்தான்.
அத்தனை சந்திர வெளிச்சத்திலும் அகல விழித்த… புஷ்பாவதியின் விழிகளில் கருமணிகள் சிறிதும் நிறம் மாறாததைக் கண்டு, “சந்திரனுக்கு மெருகு கொடுக்கும் சக்தியிருந்தால் இவள் கருவிழிகளை ஏன் வெளுப்பாக
அடிக்கவில்லை?” என்று கேட்டான். அத்துடன் புஷ்பாவதி யின் கருத்த தலைக்குழலின் ஒரு பகுதி அவள் தோளில் தவழ்ந்து முன்னால் தொங்கவே, “குழலை மட்டும் இவனால் என்ன செய்ய முடிந்தது!” என்று சந்திரன் தோல்வியை
உறுதி செய்தான்.
புஷ்பாவதி வெளியே நீட்டிய தனது கழுத்தை சாளரக் கட்டையில் பதித்திருந்ததால், அதுவும் கன்னங்களும் சிவந்து கிடந்ததைக் கண்டு, அவள் மோகனாகார வதனத்தின் அழகைப் பருகி நின்றுகொண்டே இருந்தான் தீப்சந்த்.
அந்தச் சமயத்தில் புஷ்பாவதி தனது உடலை இன்னும் சிறிது வெளியே நீட்டி மார்பகத்தைச் சாளரக் கட்டையில் பதிய வைக்கவே கூர்மையான இரட்டை எழில்கள் தன்னை உற்றுநோக்குவதைக் கண்ட தீப்சந்த் பிரமை பிடித்து நின்றான்.
அப்பொழுது அடித்த லேசான காற்று அவள் மேலாடையை சற்று விலக்கவே “காற்றுத் தேவன் சுத்த அயோக்கியன். அவள் மார்பைத் தொட இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று வினவினான், அந்த உரிமை தனக்குத்தான்
உண்டு என்ற நினைப்பால்.
இப்படி அந்த வாலிபன் அண்ணாந்த தலையை நிமிராமல் தன்னை உற்றுப் பார்ப்பதைக் கண்ட புஷ்பாவதி தனது அழகிய உதடுகளில் புன்முறுவல் ஒன்றைப் படர விட்டாள். பிறகு தீப்சந்தை அங்கேயே இருக்கும்படி சைகை
செய்துவிட்டு வேகமாகப் படிகளில் இறங்கி நந்தவனத்துக்கு வந்தாள்.
அந்தப்புரப் பகுதியின் நந்தவனப் பெரும் கதவு திறக்கப் பட்டதும், அதன்மூலம் வெளிவந்த புஷ்பாவதி வேகமாக நடந்து அவன் இருப்பிடத்தை அடைந்து, “எதற்காக இங்கேயே நின்றுகொண்டு என்னைப் பார்க்கிறீர்கள்? யாராவது
பார்த்தால் என்ன நினைப்பார்கள்?” என்று கேட்டாள். என்றாலும் அவனைச் சற்று அதிகமாக நெருங்கியே நின்றாள். அதனால் அவள் ஆடையின் நடுப்பகுதி அவனது ஆடையுடன் உராயவே உணர்ச்சிவசப் பட்ட தீப்சந்த் ஆடைக்கும் உயிர்
இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். அவள் கேட்ட கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். வண்டு விழிகள் அவன் கூரிய விழி களுடன் கலந்தன. சந்திர முகம் திடீரென மென்மை பெற்றுச்
சிவக்கவும் செய்தது. நீரோட்டம் பெற்ற மாணிக்க உதடுகள் ஒருமுறை உட்புறமாக மடிந்து வெளியே வந்ததால் புதிதாகச் செம்பருத்தி மொட் டொன்று மலர்வது போன்ற பிரமையை ஏற்படுத்தின.
அப்பொழுது புஷ்பாவதி சற்று முன்னுக்கு நகர்ந்தாள். அவளுடைய பருத்த புஷ்பத் தொடைகள், அந்த வீரனின் வலிய தொடைகளைத் தொடவே ஏதோ மின்னலின் வேகம் தனது உடலில் ஊடுருவுவது போன்ற -பிரமையை
அடைந்தான், தீப்சந்த்.
அவள் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் நிலையிலும் அவன் இல்லை. மேற்கொண்டு கேள்வி கேட்கும் நிலையை அவளும் இழந்து நின்றாள். வாய்ச்சொற்கள் யாதும் பயனிலாத நிலை அது. ஆனால்
உணர்ச்சிகள் இரைந்தே பேசின. உறுதியான வாள் பிடிக்கும் கை, சற்று முன்பு மகாவீரனான சலூம்பிராவையே பதம் பார்த்த அந்த இரும்புக் கை கூட அந்த அழகின் அருகாமையால் லேசாக நடுங்கியது.
அதைச் சமாளித்துக் கொள்ள, தீப்சந்த் இன்னொரு கையைக் கச்சையில் வைத்தான். அதன் விளைவாக திடீரென சுயநிலை அடையவும் செய்தான். கச்சையில் இருந்த ஜெபமாலை அவன் கையில் உறுத்தவே பெண் மாயையில் இருந்து
விடுபட்ட தீப்சந்த், “பெண்ணே! உன்னை யார் இங்கு வரச்சொன்னது?” என்று சற்றுக் கடுமையான குரலில் விசாரித்தான். அது போலிக் கடுமையென்பதையும், துள்ளும் உணர்ச்சிகளை மறைக்கவே அவன் சூடாகப் பேசுகிறான்
என்பதையும் புரிந்து கொண்ட புஷ்பாவதியும் “உங்களை யார் அண்ணாந்து என்னைப் பார்க்கச் சொன்னது?” என்று வினவினாள். “பெண்களை அண்ணாந்து பார்ப்பது யோக்கியத் தனமா?” என்று கேட்டாள்.
“அண்ணாந்து பார்த்தவுடன் பெண் ஓடிவருவது மட்டும் யோக்கியமோ?” என்று அவன் வினவினான்.
“நீங்கள் பேசுவது ஒழுங்காயில்லை.”
“நீ பேசுவது மட்டும் ஒழுங்காம்!”
“என் ஒழுக்கத்தைப்பற்றி யாரும் இதுவரை தவறு சொன்னதில்லை.”
“என்னைப் பற்றியும் சொன்னதில்லை.”
அதுவரையில் சாதாரணமாகப் பேசி வந்த தீப்சந்த் “நான் கிருஷ்ண பக்தன்” என்றான்.
“தெரிகிறது” என்றாள் புஷ்பாவதி. மெள்ள நகைக்கவும் செய்தாள்.
“என்ன தெரிகிறது?’ என்று அவன் சூடாகக் கேட்டான்.
“நீங்கள் கிருஷ்ண பக்தனென்று கிருஷ்ணன் செய்த வேலையெல்லாம் நீங்களும் செய்கிறீர்கள்.” என்றாள் புஷ்பாவதி.
“அபசாரம் அபசாரம். புஷ்பாவதி கிருஷ்ண தத்து வத்தை நீ அறியமாட்டாய். அவன் லீலை ஒவ்வொன்றிலும் தத்துவம் இருக்கிறது. ராதையுடன் அவன் நடத்தியது இகலோக லீலையல்ல.” என்றான் தீப்சந்த்.
“யமுனா நதிக்கரையில் குன்றுமணி மரங்களின் கீழ் அவன் செய்தது என்ன?”
இதை புஷ்பாவதி கேட்டதும் காதுகளைப் பொத்திக் கொண்ட. தீப்சந்த் “பெண்ணே! வீணான பாவச் சொற்களைப் பேசி மீளா நரகத்துக்குப் போகாதே!’ என்றவன், எதையோ நினைத்துக்கொண்டு சிறிது நேரம் திகைத்து நின்று
“அடடே! மறந்துவிட்டேனே” என்றான் குரலிலும் அதிர்ச்சியைக் காட்டி.
புஷ்பாவதிக்கு அவன் திடீர் அதிர்ச்சியும் பேச்சும் சலனத்தை அளிக்கவே, “எதை மறந்துவிட்டீர்கள்?” என்று கேட்டவள், ஒருவேளை அவன் சலூம்பிராவைக் கொன்றுவிட்டானோ என்று திகிலடைந்து, “நீங்கள் சலூம்பிராவை…” என்று
பேசினாள்.
அவள் மனப்போக்கைப் புரிந்துகொண்ட தீப்சந்த், “சே! சே! சலூம்பிராவை நான் கொல்லவில்லை. கொல்வதில்லையென்று சொல்லித்தானே சென்றேன்!” என்று கூறியவன், “நான் பேச முற்பட்டது வேறு விஷயம்” என்று கூறினான்.
“என்னவோ?” என்று வினவினாள் அவள்.
“அதோ அந்த மலர்ச்செடிகளின் மறைவுக்கு வா!” என்றான் தீப்சந்த்.
அவள் அச்சத்தின் வசப்பட்டாள். “ஐயையோ! அங்கு எதற்கு?” என்று வினவினாள்.
“இது நான் பகிரங்கமாகச் செய்யும் அலுவல் அல்ல.’ என்றான் தீப்சந்த்.
அவள் அச்சம் அதிகமாகவே, “என்ன உளறுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“உளறவில்லை வா” என்று கூறி அவள் கையைப் பிடித்து இழுத்தான் தீப்சந்த்.
அவள் திமிறினாள் அவன் கையில் இருந்து விடுபட… ஆனால் அவன் இரும்புப் பிடியிலிருந்து அவளால் தப்ப முடியவில்லை. அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு புஷ்பச் செடிகளின் மறைவுக்குச் சென்ற தீப்சந்த், அவள்
கைக்கு விடுதலை அளித்து “உனக்கு ஒரு. பொருளைக் காட்டப்போகிறேன்” என்றான்.
என்ன பொருள் என்று அவள் கேட்கவில்லை. மவுனமே சாதித்தாள். அவன் கச்சையிலிருந்து மெள்ள உச்சிப்பூவை எடுத்து அவள் கையில் திணித்து “பெண்ணே இதைப் பார்!” என்றான்.
புஷ்பாவதி அதைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாததால் “இது என்னுடைய உச்சிப்பூ. உங்களுக்கு எங்கு கிடைத்தது?” என்று வினவினாள்.
“நேற்று சந்தாவதர்கள் உன்னைத் தூக்கிச்செல்ல முயன்ற இடத்தில் கிடந்தது.” என்றான் தீப்சந்த்.
அதைக் கையில் வைத்துக் கொண்டபடி தரையில் உட்கார்ந்தாள் புஷ்பாவதி. “இப்படி நீங்களும் உட்காருங்கள்” என்று தனது பக்கத்தில் இடத்தைக் காட்டினாள் அவனுக்கு. அவன் உட்கார்ந்தவுடன் சொன்னாள் : “வீரரே! நீங்கள் இதை
எடுத்து வந்தது பிசகு. நீங்கள் இதைக் கண்ட இடத்திலேயே புதைத்திருக்க வேண்டும்?” என்றாள்.
“ஏன்?”
“இதில் ஒரு சாபம் இருக்கிறது.”
“என்ன சாபம்?”
“இதை உடையவளால் நாடு இரண்டு படும் என்று எங்கள் குடும்ப சோதிடர் கூறினார்.”
“அப்படியானால் ஏன் குடும்பத்தில் வைத்திருந்தீர்கள்? உதயசாகர ஏரியில் எறிந்து விடுவதுதானே.”
“அதற்கு மனம் வரவில்லை.”
“ஏனோ?”
“இது என் தாயாருடையது. என் தந்தை அதை விற்கவோ அழிக்கவோ விருப்பப்படவில்லை. எனக்குக் கொடுத்தார்.”
“நல்ல கதை.”
“என் தந்தையை தவறாக நினைக்க வேண்டாம். அவர் சோதிடத்தை நம்புவதில்லை. இந்தக் கல் எப்படி வாழ்க்கையைக் கெடுத்துவிடும்? நீ போட்டுக்கொள் என்று என் தலையில் அவரே சூட்டினார்? அடுத்த நாளே மோகினி வனம்
வந்தேன். நடந்தது உங்களுக்குத் தெரியும்.” என்றாள்.
“அப்படியானால் இது என்னிடம் இருக்கட்டும்.” என்ற தீப்சந்த், “இப்படி வா புஷ்பாவதி” என்று அவள் கழுத்தைத் தன்னை நோக்கி வளைத்து அவள் தலைக் குழலில் முன்னுச்சியில் அந்த ஆபரணத்தை வைத்துப் பார்த்தான். “உன்
தலையில் இது மிக அழகாயிருக்கிறது” என்று சொன்னான்.
அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள். அவள் உதடுகள் துடித்தன.
அந்தச் சமயத்தில் தீப்சந்துக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. துடித்த உதடுகளை அந்த பிரம்மச்சாரி தனது உதடுகளால் தீண்டினான். பிரம்மச்சரியத்துக்கு அந்த ஆபரணம் ஆபத்து விளைவித்து விட்டதை புஷ்பாவதி புரிந்து
கொண்டாள்.
.
விளைவு?
அவள் இதழ்கள் அவன் இதழ்களுடன் நன்றாகவே இழைந்தன.