Mohini Vanam Ch 21 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 21 கொடி வீட்டு நிகழ்ச்சிகள்
Mohini Vanam Ch 21 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
இரவு முற்றிவிட்ட அந்த நேரத்தில், எங்கும் வெண்ணிலவு பரந்து நந்தவனத்தை அழகுப்படுத்திய இரண்டாவது ஜாமத்தின் இடையில், நேரம் ஏறிவிட்டதால் அந்தப்புர சாளரங்கள் அனைத்தும் அடைபட்டிருந்த சமயத்தில், முதல்
நாளைப்போல் அன்று புஷ்பாவதியின் முகம் சாளரத்தின் மூலம் வெளியே தெரியாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தில், நந்தவனத்திலிருந்து அந்தப்புரக் கட்டிடத்தை நோக்கி நடக்க முற்பட்டான் தீப்சந்த். அந்நேரம் நந்தவனக் கொடி வீட்டுக்குள்
இருவர் உரையாடும் சத்தம் கேட்கவே சட்டென்று நின்றுவிட்ட தீப்சந்த், அந்த உரையாடலின் ஒரு பகுதி காதில் விழவே அதிர்ச்சியின் எல்லையை எய்தினான்.
“மகாராணா! இது உங்களுக்குத் தகுதியல்ல” என்ற புஷ்பாவதியின் சொற்கள் காதில் விழுந்ததும் அதிர்ச்சி நீங்கி சினத்தின் எல்லையை எய்தினான்.
இருப்பினும் உடனடியாகக் கொடி வீட்டுக்குள் நுழையாமல் மேலும் என்ன நடக்கிறது என்பதை அறிய மெதுவாக நடந்து கொடி வீட்டின் வாயிலில் கொடி அடர்த்தியாக இருந்த இடத்தில் சாய்ந்து நின்று லேசாகக் கொடி யைச் சிறிது
விலக்கி உள்ளே நடப்பதைக் கவனிக்கலானான்
உள்ளே மகாராணா புஷ்பாவதியிடம் இருந்து சற்று தள்ளியே நின்றிருந்தார். ஆனால் அவர் கண்களில் காமம் கொட்டி வழிந்துகொண்டிருந்தது. எதிரே நின்றிருந்த புஷ்பாவதியின் கண்கள் நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தன.
மகாராணாவின் நடத்தை தகுதியற்றது என்று புஷ்பாவதி சொன்னதற்கு மகாராணா காமப் புன்முறுவல் செய்தார். “புஷ்பாவதி! நீதானே என்னை நந்தவனத்தில் சந்திக்கச் சொன்னாய்? அப்படி அழைத்துவிட்டு இப் பொழுது இடக்கு
செய்வது சரியா?” என்று கேட்ட மகாராணா தமது உதடுகளை உள்ளே மடித்து சப்பிக் கொண்டார்.
புஷ்பாவதியின் கண்களில் அக்கினி அதிகமாகப் படிந்தது. “மகாராணா! உங்களை நந்தவனத்துக்கு வரச் சொன்னேனே தவிர, இந்தக் கொடி வீட்டில் பதுங்கி இருக்கச் சொல்லவில்லை. நான் சொல்லக்கூடியதை பகிரங்கமாக
அரண்மனையில் சொல்ல முடியாததால் இங்கு சந்திக்கச் சொன்னேன். கொடி வீட்டில் பதுங்கி என்னை அழைத்தீர்கள். உங்கள் பதவியை முன்னிட்டும் உங்கள் வம்சத்தை நினைத்தும் நீங்கள் இழிச் செயல்களில் ஈடுபடமாட்டீர்கள் என்று
நம்பி நான் இங்கு வந்தேன்…” என்று உணர்ச்சிப் பெருக்கால் வாசகத்தை முடிக்காமல் விட்டாள் புஷ்பாவதி.
அவள் மூச்சு பெருமூச்சாக வந்தது. முகம் கோபத்தால் சிவந்து கிடந்தது.
மகாராணா லேசாகப் புன்முறுவல் செய்தார். புஷ்பாவதி! என்ன இழிச்செயலை நான் செய்து விட்டேன். உன் அழகைப் பாராட்டினேன். அதில் என்ன தவறு இருக்கிறது? இதோ இந்தக் கொடி வீடு மல்லிகைச் செடியால்
மறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மலர் அழகு என்று சொன்னால் தவறா?” என்று மகாராணா கேட்டார்.
“மல்லிகைக்கு வாயில்லை மகாராணா! நீங்கள் அதைத் தொட்டாலும் பறித்தாலும் காலில் போட்டு நசுக்கினாலும் அது பேசாது, அலறாது. ஆனால், பெண்களுக்குப் பேச வரும். அவசியமானால் தொடும் கையை முறிக்கவும் தெரியும்.
தவிர மனிதன் பண்பாடு, முறை, என்பவை இருக்கின்றன. இன்னொருவனுக்குச் சொந்தமான பெண்ணை நீங்கள் வர்ணிப்பதும் தவறு, அவளைப் பற்றித் தவறாக நினைப்பதும் முறைகேடு.” என்று திட்டமாகச் சொன்ன புஷ்பாவதி,
வெளியே போக முயன்றாள்.
மகாராணா வழியில் குறுக்கே நின்று அவளைத் தடுத்தார். “புஷ்பாவதி! நீ என்னைப் பார்க்க வந்ததாகத் தானே சொன்னாய்?” என்று கேட்டார் குரலைச் சிறிது மாற்றிக்கொண்டு.
“ஆம், மகாராணா!”
“உன் தந்தை என்னைப் பார்க்கத்தானே அனுப்பினார்.’
“ஆம், மகாராணா!”
“ஏன் என்னைவிட்டு அந்த தீப்சந்திடம் போனாய்?”
“மகாராணா!” புஷ்பாவதியின் குரல் தடுத்து வந்தது.
“என்ன புஷ்பாவதி?” மகாராணா கொஞ்சினார்.
“மகாராணா! யோசித்துப் பேசுங்கள். தீப்சந்த் போன்ற ஒரு மகாவீரனைப்பற்றிப் பேசக்கூட உங்களுக்குத் தகுதியில்லை. என் தந்தை உங்களிடம் அனுப்பியது கொடி வீட்டில் சரசமாட அல்ல. உங்களிடம் சேதி சொல்ல.” என்றாள்
புஷ்பாவதி.
“என்ன சேதி?”
“உங்கள் ரகசிய ராணியைப்பற்றி.”
“ரகசிய ராணியா!” அதிர்ச்சி தெரிந்தது மகாராணா வின் குரலில்.
“ஆம், நாகராமக்ராவில் உங்களால் வேட்டையாடப் பட்டவள். பிறகு வழியில்லாமல் உங்களை மணந்து கொண்டவள். உங்களுக்கொரு மகளையும் பெற்றுக் கொடுத்தவள். அந்த மகளின் உச்சிப்பூ இதோ இருக் கிறது” என்று கூறி
மடியில் இருந்து உச்சிப்பூவை எடுத்து மகாராணாவின் மீது எறிந்தாள் புஷ்பாவதி.
“இந்த உச்சிப்பூ ராஜபுதனத்தை இரண்டு படுத்தும், முடிவில் அழிந்துவிடும். இதை அணிவது யாராயிருந்தாலும் அவளும் அழிந்துவிடுவாள். இப்படி சோதிடர்கள் கூறினார்களாம். இதை உங்கள் பூஜா தெய்வத்துக்குச் சாத்தினால்
மேவார் பிழைக்குமாம். அதைச் செய்யவிழா எடுக்கச் சொன்னார்களாம் சோதிடர்கள்” என்றும் சொன்னாள் புஷ்பாவதி.
புஷ்பாவதி எறிந்த அந்த உச்சிப்பூவை வெகு லாவகமாகக் கையில் பிடித்துக்கொண்ட மகாராணா அதை உற்றுப் பார்த்தார். “இவ்வளவு அழகான ஆபரணத்தால் என்ன ஆபத்து நேரிட்டுவிடும்? கேவலம் ஒரு ஆபரணம் நாட்டை
அழிக்குமா? இந்தச் சோதிட உளறல்களுக்கு மகாராணா மயங்கமாட்டான்.” என்று கூறினார், உச்சிப்பூவை உற்றுப் பார்த்துக்கொண்டே. பிறகு “ இதை அந்த ரகசிய ராணியிடமே கொடுத்து அவள் மகளின் தலையில் சூட்டச் சொல்.” என்று
அதை புஷ்பாவதியின் கையில் திணிக்க எண்ணி, “புஷ்பாவதி! உன் மலர்க் கையைக் காட்டு. இதை வாங்கிக்கொள்” என்று உட்புறமாக ஒரு அடி எடுத்து வைக்க முற்பட்டார்.
“மகாராணா! நெருங்க வேண்டாம். அப்படியே நில்லுங்கள். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் உங்களைக் கொன்றுவிடுவேன்” என்று சீறிய புஷ்பாவதி தனது இடையில் மறைத்து வைத்திருந்த சின்னஞ்சிறிய குறுவாளை
எடுத்துக்கொண்டாள். “மகாராணா! இந்தக் கத்தியைப் பாருங்கள், எத்தனை அழகாயிருக்கிறது. உங்கள் இதயத்துடன் இது இணைய ஆசைப்படுகிறது.” என்றும் கூறினாள். “
மகாராணா அவள் கோப விழிகளையும் துடிக்கும் உதடுகளையும், அவள் கையில் பளபளத்த மெல்லிய குறுவாளையும் கண்டு திகிலடைந்தார். அதன் விளைவாக இரண்டடி பின்னால் நகர்ந்தார். பின்னால் நகர்ந்து நகர்ந்து கொடி
வீட்டு வாயிலுக்கு வந்ததும் சற்றே நிமிர்ந்த அவர் திகிலின் எல்லையை எய்தினார். தன் உடல் யார் மீதோ சாய்வதையும் கையொன்று எழுந்து தமது கழுத்தைக் தடவி வளைப்பதையும் உணர்ந்து திரும்ப முயன்றார். பிடித்த கை இரும்புக்
கையாயிருந்த படியால் அவரால் திரும்ப முடியவில்லை. “யாரது மகாரணாவைத் தொடும் துணிச்சல் உள்ளவன்?” என்று சீறித் திமிற முயன்றார்.
மகாராணாவின் ஆட்டம் எதுவும் பலிக்கவில்லை. அவர் கழுத்தைச் சுற்றிய கை மேலும் இறுகியது. மகாராணாவுக்கு மூச்சு விடுவது சிரமமாயிருந்ததால் “உம்… உம்…” என்று வேதனையுடன் முனகினார்.
கொடி வீட்டுக்குள் இருந்த புஷ்பாவதியின் கண்கள் கொடி வீட்டு வாயிலை பிரமிப்புடனும் அச்சத்துடனும் நோக்கின.
தீப்சந்தின் இடதுகை மகாராணாவின் கழுத்தை இறுக்கிப் பின்னால் அவரை இழுத்துக் கொண்டிருந்தது. “விடுங்கள் அவரை. செத்துவிடுவார் போலிருக்கிறது” என்று அச்சத்துடன் சொற்களை உதிர்த்தாள் புஷ்பாவதி.
“அதனால் நஷ்டம் ஏதுமில்லை மேவாருக்கு வீரனான மன்னன் கிடைப்பான்.” என்று சொன்ன தீப்சந்த் அவர் கழுத்தை மேலும் இறுக்கினான்.
“வேண்டாம் விட்டுவிடுங்கள். அடுத்த மகாராணா யாரும் கிடையாது இங்கே. இதுவரை இவருக்கு மூன்றும் பெண்கள். ஆண் வாரிசு யாரும் இல்லை.” என்றாள் புஷ்பாவதி.
“இவருக்குப் பெண்களை அதிகமாகப் பிடிக்கும். ஆகையால் பெண்கள் பிறந்திருக்கின்றன. இவரைவிட அந்தப் பெண்களில் ஒருத்தியை ஆளச்செய்வது நல்லது” என்ற தீப்சந்த் மகாராணாவைத் தனது பிடியிலிருந்து விடுவித்து
“மகாராணா! உங்களை நான் உயிருடன் விடுவது பிசகு. ஆனால் உங்கள் மெய்க்காவலனாக, உங்கள் பண்பாடற்ற தண்ட உடலையும் உயிரையும் பாதுகாக்க மகாராணியிடம் ஒப்புக்கொண்டதால் உங்களை விடுகிறேன். செல்லுங்கள்.”
என்று கூற மகாராணா வெகு வேகமாக அந்தப்புரத்தை நோக்கி நடையைக் கட்டினார்.
அவர் போவதைப் பார்த்துக்கொண்டே நின்ற தீப்சந்த், கொடி வீட்டிற்குள் நின்ற புஷ்பாவதியை நோக்கினான்.
- புஷ்பாவதி உணர்ச்சி மிகுதியால் தள்ளாடி நின்றாள். தீப்சந்த் உள்ளே சென்று அவள் அழகிய உடலை அணைத்தான். அச்சத்தால் வேகமாக அடித்துக்கொண்ட அவள் இதயத்தின்மீது கையை வைத்து, “பயப்பட ஏதுமில்லை. வா, நாம்
உன் அறைக்குச் செல்வோம்” என்று கூறி அவளை அணைத்தவண்ணம் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றான் தீப்சந்த். அறையை அடைந்ததும் “புஷ்பா வதி! நாம் இப்பொழுதே புறப்படுகிறோம். தயாராக இரு” என்றான்.
“எங்கே?” என்று புஷ்பாவதி கேட்டாள்.
“நாகராமக்ராவுக்கு.” என்றான் தீப்சந்த்.
“என் தந்தையின் இருப்பிடத்திற்கா!” புஷ்பாவதியின் குரலில் அச்சம் தொனித்தது.
“ஆம்.”
“அங்கு எதற்கு?”
“ரகசிய ராணியைச் சந்திக்க.”
“எதற்கு?”
“காரணம் இருக்கிறது.”
“இங்கு மகாராஜாவைக் காப்பது யார்?”
“இந்த நடத்தைக் கெட்ட மகாராஜாவைக் காப்பாற்ற அவசியம் இல்லை “ என்ற தீப்சந்த் “உம்… கிளம்பு” என்று புஷ்பாவதியைத் துரிதப்படுத்தினான்.
புஷ்பாவதியின் முகத்தில் திடீரென குழப்பம் தெரிந்தது. அவள் பார்வையைத் தொடர்ந்து வாயிலை நோக்கினான் தீப்சந்த்.
அறை வாயிலில் ராஜமாதா ராம்பியாரி நின்றிருந்தாள். அவள் முகம் சோக பிம்பமாகக் காட்சி அளித்தது.