Mohini Vanam Ch 30 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 30 வரலாற்றை மாற்றும் வரிகள்
Mohini Vanam Ch 30 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
நள்ளிரவில் தனது பணைத்த மார்பில் பட்ட கையை தனது இன்னொரு கையால் பிடித்த புஷ்பாவதி, அந்த ஆடவனின் கையை நன்றாக உள்ளுக்கு இழுத்துக் கொண்டாள். அந்தக் கையைத் தனது கையைக் கொண்டே இரு
மார்புகளிலும் துளைய துணை செய்தாள்.
அந்தச் சமயத்தில் அவள் தன்னைப் புரிந்து கொண்டு விட்டாள் என்பதை உணர்ந்து கொண்ட தீப்சந்த், நன்றாகக் குனிந்து அவள் காதுக்கருகில் உதடுகளைக் கொண்டு போய் “எப்படி அடையாளம் கண்டு கொண்டாய் என்னை?”
என்று வினவினான்.
“உங்கள் கண்களைக் கொண்டு” என்ற புஷ்பாவதி லேசாக நகைத்தாள்.
“ஆம், ஆம், கண்களை என்னால் மாற்ற முடிய வில்லை.” என்றான் தீப்சந்த்.
“எப்படி முடியும்? மற்ற இடங்களில் ஒட்டிய தோல்களைக் கண்களில் ஒட்ட முடியாது. நீங்கள் கன்னங்களில் பூசியுள்ள களிம்புகளையும் கண்ணில் பூச முடியாது. கண்ணை மறைக்க எதைச் செய்தாலும் கண் கெட்டுவிடும்.
அப்புறம் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது.” என்ற புஷ்பாவதி இள நகை கொண்டாள்.
பதிலுக்கு அவன் தனது இதழ்களை அவளது கன்னங்களில் புரட்டினான். பிறகு கேட்டான் “சந்திர நமஸ்காரம் செய்யலாம் அல்லவா?” என்று.
“என்ன? சந்திர நமஸ்காரமா?”
“ஆம்.”
“அப்படியொன்று உண்டா என்ன?”
“உண்டு.” “
கண் கெட்டால் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாதென்று சொன்னாய். சந்திர நமஸ்காரத்துக்கு என்ன இடைஞ்சல்?”
“என்ன உளறுகிறீர்கள்?”
“உன் முக சந்திரனை நான் நமஸ்காரம் செய்வதை யார் தடுக்க முடியும்?”
இதைத் கேட்டதும் அவன் கழுத்தைத் தனது இடது கையால் வளைத்த புஷ்பாவதி, “சாமர்த்தியமாகப் பேசுகிறீர்கள்…” என்றாள்.
“சொல்லில்தான் சாமர்த்தியம். செயலில் சாமர்த்தியம் இல்லை என்கிறாய்?” என்று கேட்ட தீப்சந்த், அவளைத் தனது இரு கைகளாலும் தூக்கி உட்கார வைத்தான். அவளை மேலும் சற்று தூக்க முயன்ற சமயத்தில் அவள் கேட்டாள், “நீங்கள்
இருக்கிற இடம் சிந்தியாவின் மாளிகை தெரியும் அல்லவா?” என்று.
“அதனாலென்ன?” என்று வினவினான் தீப்சந்த்.
“எந்த நிமிடத்திலும் நீங்கள் கைது செய்யப்படலாம்.” என்று சுட்டிக் காட்டினாள் புஷ்பாவதி.
“யாரும் என்னைக் கைது செய்ய முடியாது.”
“ஏன்?”
“என்னிடம் ஒரு கவசம் இருக்கிறது.”
“என்ன கவசம்?”
“நீ உடுத்தியிருக்கும் சேலை. அது இருக்கும் வரையில் என்னை யாரும் அணுக முடியாது.”
“ஏனாம்?”
“நீ இந்த வீட்டுப் பெண்ணாகிவிட்டாய். உனக்கு சிந்தியாவின் மனைவி தனது திருமணச் சேலையைக் கொடுத்திருக்கிறார். இந்தச் சேலைக்குக் கணவன் மனைவி சேரும் பாக்கியம் இருக்கிறதென்றும், இன்றிரவே உனது கணவன்
வரலாமென்றும் சிந்தியாவும் அவர் மனைவியும் பேசியதை நானே கேட்டேன்” என்ற தீப்சந்த், “ஒன்று புரிந்து கொள். யாரும் சிந்தியாவின் கண்களை ஏமாற்ற முடியாது.” என்றும் கூறினான்.
“அப்படியானால் உங்கள் வேடம் புரிந்திருக்குமோ அவருக்கு?” என்று புஷ்பாவதி கவலையுடன் கேட்டாள்.
“புரிந்திருக்கும் என்றுதான் நம்புகிறேன். அவர் பேசிய சொற்களிலும் ஒலியிலும் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கிக் கிடந்தன” என்ற தீப்சந்த், “புஷ்பாவதி! எனக்கு யாரிடமும் அச்சம் கிடையாது. மேவார் ராஜ்ஜியமோ சலூம்பிராவோ
என்னை அச்சுறுத்த முடியவில்லை. ஆனால் இந்த சிந்தியா பெரிய குள்ள நரி. மிக அறிவாளி. எதையும் ஊகிக்கும் திறனுள்ளவர். என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டாரோ என்ற பயம் எனக்கு இருக்கிறது” என்று
சொன்னான். “இனி நாம் சீக்கிரம் கிளம்ப வேண்டும்.” என்று துரிதப்படுத்தவும் செய்தான்.
புஷ்பாவதி உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள்.” இங்கிருந்து தப்பிச் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?” என்றும் வினவினாள்.
“செய்திருக்கிறேன்” என்ற அவனும் எழுந்திருந்து அவளை இறுகத் தழுவினான்.
“இருங்கள். இந்தச் சேலையை அவிழ்த்துவிட்டு வருகிறேன்.” என்று புஷ்பாவதி மெள்ள சேலையின் இடை முடிச்சை அவிழ்க்க முற்பட்டாள்.
தீப்சந்த் பிரமை தட்டி அவளைத் தடுத்து. “சே, சே இப்பொழுது எதுவும் முடியாது, அப்படியே வா. பின்னால் பார்த்துக் கொள்வோம்” என்று கூறினான்.
அவன் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதை உணர்ந்த புஷ்பாவதி’ சே சே! உங்கள் கெட்ட புத்தி போகவில்லையே, இந்தச் சேலை சிந்தியாவின் மனைவியுடையது.” என்றாள்.
“அது தெரியும் எனக்கு. ஏற்கெனவே நானே சொல்லவில்லையா?” என்றான் தீப்சந்த்.
“இதை அவிழ்த்து அவர்களிடம் கொடுக்க வேண்டும். வேறு சேலை அணிந்து வருகிறேன்” என்றாள் புஷ்பாவதி.
“நீ வேறு சேலை அணிந்து வந்தால் நாம் இங்கிருந்து வெளியேற முடியாது” என்றான் தீப்சந்த். “உனக்குப் புரியவில்லையா புஷ்பாவதி? இந்தச் சேலை தான் உனக்குப் பாதுகாப்பு ; எனக்கும் அதுதான் பாதுகாப்பு. இதை நீ அணிந்து
வந்தால் சிந்தியாவின் மகள் என்று உன்னை யாரும் தடுக்கமாட்டார்கள் நான் உடன் வந்தால் செவிடனை சிந்தியா உனக்குக் காவலாளியாக அனுப்பியிருக்கிறார் என்று நினைப்பார்கள். ஆகையால் தடையிருக்காது.” என்று தீப்சந்த்
விளக்கவே இருவரும் புறப் படத் தயாரானார்கள்.
தீப்சந்த் மெதுவாக அடி மேலடி எடுத்து வைத்துக் கதவண்டை சென்று அதைத் திறக்க முயன்றவன் அதிர்ச்சியுற்றான். “கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருக்கிறது!” என்று குரலிலும் அதிர்ச்சி துலங்கப் பேசினான்,
மெதுவாக நடந்து கதவை அடைந்த புஷ்பாவதியும் அதை இழுத்துப் பார்த்தாள். அவனைத் திரும்பி நோக்கி னாள். திகில் விளையாடிய கண்களுடன் வெளியே பூட்டியிருக்கிறது” என்று சொன்னாள்.
தாங்கள் சிக்கிக் கொண்டதை உணர்ந்ததும் தீப்சந்த் சொன்னான், “இனி ஏதும் செய்வதற்கில்லை. வா, படுத்துக்கொள்வோம்” என்று சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் அறையின் மற்றொரு மூலையில் விளக்கொளியொன்று
சிறிதாகத் தெரிந்தது. இதைக் கண்டு அவர்கள் முன்னேறத் துவங்கியதும் அது நகர்ந்து சென்றது.
அதை யாரும் ஏந்தியதாகத் தெரியாததால், அதைத் தொடர்ந்து இருவரும் சென்றாலும் அந்த விந்தைக்குக் காரணம் இருவருக்கும் புரியவில்லை. அந்த விளக்கு நகர்ந்த வழியே இருவரும் நடக்கவே, விளக்கு நேராகச் செல்லாமல் அரைச்
சக்கிரமாக அசைந்ததையும் அது காட்டிய வழியில் படிகளும் இருப்பதைக் கண்டதும் அவ்வழியே இருவரும் இறங்கிச் சென்றனர். அவர்கள் பத்து படிகளில் இறங்கியதும் அந்த விளக்கு சட்டென்று அணைந்தது.
பிறகு இருட்டிலேயே இறங்கிச் சென்ற அந்த இருவரும் முடிவில் வீதிக்கு வந்தார்கள். வீதியை அவர்கள் அடைவதற்கும் பின்னால் ஒரு கதவு சாத்தப்படுவதற்கும் நேரம் சரியாயிருந்தது. அவர்கள் வெளியே வந்ததும் அங்கு இரண்டுப்
புரவிகளைப் பிடித்துக்கொண்டு ஒரு வீரன் நின்று கொண்டிருந்தான்.
“இந்தப் புரவிகள்…” என்று ஏதோ கேட்கத் துவங்கினான் தீப்சந்த்.
“உங்களுக்குத்தான்” என்று கூறித் தலைவணங்கிய வீரன், தீப்சந்திடம் ஒரு ஓலையையும் கொடுத்தான். “இதை நகரைத் தாண்டிய பிறகு நீங்கள் பிரிக்கலாம்” என்று கூறி விட்டு நடந்துவிட்டான் அந்த வீரன்.
ஒரு புரவியில் புஷ்பாவதியை ஏற்றி உட்கார வைத்து விட்டு, இன்னொரு புரவியில் தான் ஏறிச் சுற்றுமுற்றும் பார்த்த தீப்சந்த், தாங்கள் சிந்தியாவின் மாளிகையின் பின்புறத்திலிருப்பதைப் புரிந்துகொண்டான். காவல் எங்கும்
கடுமையாக இருப்பதையும் புஷ்கரத்தின் பிரதான வாயிலில் இரு புரவி வீரர் காவல் புரிவதையும் கண்டதாலும் இதை எப்படித் தாண்டுவது என்று எண்ணிய வண்ணம் தனது புரவியை நடத்தினான்,
புஷ்பாவதியின் புரவியும் அவன் புரவியுடன் இணைந்து சென்றது.
காவலர் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை. தங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாததுபோலவே நடந்து கொண்டனர். அப்படியே புரவிகளை நடத்தி, எந்தத் தங்குதடையும் இல்லாமல் நகருக்கு வெளியே வந்த அந்த இருவரில்
முதன் முதலில் தீப்சந்த் பேசினான். “இப்பொழுது மூன்றாம் ஜாமம் முடியப் போகிறது. இன்னும் ஒரு ஜாமத்திற்குள் இந்த எல்லையைவிட்டு நாம் தாண்டிவிட வேண்டும்” என்று கூறிப் புரவியையும் தட்டி விட்டான்.
இப்படி வேகமாக ஒரு ஜாமம் பயணம் செய்து புரவியை நிறுத்திய தீப்சந்த், அதிலிருந்து கீழே இறங்கி புஷ்பாவதியையும் இறக்கிவிட்டு, அங்கிருந்த பெரிய மரத்தடியில் உட்கார்ந்து தனக்கு அளிக்கப்பட்ட கடிதத் தைத் பிரித்துப் படித்தான்.
அவன் முகத்தில் மிதமிஞ்சிய வியப்பு கலந்த அதிர்ச்சி தெரிந்தது.
கடிதத்தில் இருந்தவை இரண்டே வரிகள் தான். ஆனால் வரலாற்றை மாற்றும் வரிகள் அவை.