Mohini Vanam Ch 31 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 31 டீ பாயின் வணக்கம்!
Mohini Vanam Ch 31 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
புஷ்கரத்திலிருந்து வேகமாக ஒரு ஜாமம் பயணம் செய்த பிறகு நன்றாகப் பொழுது புலர்ந்து விட்ட சமயத்தில் புரவியிலிருந்து தானும் இறங்கி புஷ்பாவதியையும் இறக்கிவிட்டு, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சிந்தியாவின் மாளிகைக்
காவலன் கொடுத்த கடிதத்தை மடியிலிருந்து எடுத்துப் பிரித்துப் படித்த தீப்சந்தின் முகத்தில் வியப்பு கலந்த அதிர்ச்சி தெரிந்ததென்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. அந்தக் கடிதத்தை சிந்தியா தனது கைப்படவே
எழுதியிருந்தார்.
“தீப்சந்த்! மாப்பிள்ளை! இம்முறை ஜாவுத் கோட்டையிலிருந்து தப்பமுடியாது. உங்களை டீ பாயின் சந்திப்பார்-சிந்தியா” என்ற வரிகள் தான் அந்தக் கடிதத்தில் இருந்தன என்றாலும் அவைக்கண்டிப்பாக ராஜஸ்தானத்தின் வரலாற்றை
அடியோடு மாற்றும் என்பதை உணர்ந்ததால் தீப்சந்த் ஓரளவு அச்சத்தின் வசப்படவே செய்தான்.
“எதற்கும் துணிந்த தீப்சந்தையே திகைக்க வைக்கும் அந்தக் கடிதத்தில் என்ன தான் இருக்கும்?” என்று நினைத்த புஷ்பாவதி அந்தக் கடிதத்தை எட்டிப் பார்த்தாள். அப்படிக் கழுத்து உடைய அவள் திரும்ப அவசிய மில்லாதபடி தீப்சந்த்
“இதை நீயே படி” என்று அவளிடம் ஓலையைக் கொடுத்தான்.
அதைக் கையில் வாங்கிக்கொண்டும் மரத்தடியில் அவனுடன் இணைந்து உட்கார்ந்துகொண்டும் கடிதத்தைப் படித்த புஷ்பாவதி, “எனது தந்தை எத்தனை கொடியவர்” என்று சொல்லிப் பெருமூச்சும் விட்டாள், உள்ளிருந்த
துன்பத்தின் விளைவாக.
“யாரைச் சொல்கிறாய்? நாகராமக்ராவிலுள்ள தந்தையையா?” என்று வினவினான் தீப்சந்த்.
“அவரைப்பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை. அவர் மனம் கருங்கல். இல்லை, இல்லை. அவரைப்பற்றி நினைப்புகூட இல்லை எனக்கு. நான் எனது புதிய தந்தையைச் சொல்கிறேன்” என்ற புஷ்பாவதியின் சொற்களில் பாசம்
ஒலித்தது.
யார்? சிந்தியாவைச் சொல்கிறாயா?” என்று வினவினான் தீப்சந்த்.
“ஆம். எனது தாய் சீக்கிரம் இறந்துவிட்டாள். அவள் பாசத்தை நான் அனுபவிக்கவில்லை. ஆனால் சிந்தியா, எனது புதுத்தந்தை. அவர் பாசம் அளவற்றது. அதுவும் தாய் கங்காபாய், அவள் அன்புக்கு இணை ஏது?” என்று கூறினாள்
வருத்தத்துடன்,
“இரண்டே நாட்களில் ஒரு தாயைக் கண்டுபிடித்து விட்டாய்?” என்று சற்று இகழ்ச்சியுடன் வினவினான் தீப்சந்த்.
“அன்புக்கு நிமிடங்கள் போதும். சிலருக்கு வருடங்கள் ஆனாலும் அன்பு வராது. சிலருக்கு அன்பை வளர்த்துக் கொள்ள விநாடிகள் போதும். அதுவும் பெண்களுக்குத் தாயன்புக்கு இணை வேறு எதுவும் கிடையாது.” இதை
மிகுந்த திட்டத்துடன் சொன்னாள் புஷ்பாவதி.
“ஆம் உண்மை. இன்று பக்கவாட்டிலிருந்து விளக்கு காட்டியது உன் தாயின் கைதான். அந்தக் கையிலிருந்த வளையலில் இருந்து நான் கண்டுகொண்டேன். பக்கத்துச் சாளரத்திலிருந்து படிகளுக்கு விளக்கைக் காட்டியிருக்கிறாள்.
நம்மைத் தப்ப வைத்த அந்தத் தம்பதிகளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்ற தீப்சந்த். “இப்பொழுது எனக்குப் புரிகிறது அவர்கள் ஏன் அறைக் கதவைப் பூட்டினார்கள் என்பது” என்று கூறினான்,
“ஏன்?”
“பொது வழியாக அனுப்பினால் காவலருக்குத் தெரியும். யாராவது ஒரு தளபதி நம்மைப் பார்த்தாலும் பார்க்கலாம். அப்படிப் பகிரங்கமாக அவர் நம்மை தப்ப விட்டால் பூனாவுக்குச் செய்தி போகும். அங்கிருந்து பேஷ்வா காரணம்
கேட்டாலும் கேட்பார். இந்தத் தொந்தரவுகளை விலக்கத்தான் சிந்தியா நம்மை மர்மமாக அனுப்பியிருக்கிறார். நம்மை வழியனுப்பி ஓலை கொடுத்தவன் அவருடைய அந்தரங்க வீரர்களில் ஒருவனாயிருக்க வேண்டும்” என்று தனது
ஊகத்தைத் தெரிவித்தான் தீப்சந்த்.
பிறகு இருவரும் ஏதும் பேசவில்லை. கடைசியாக தீப்சந்தே பேசினான். “புஷ்பாவதி! நம்மை சிந்தியா தப்பவைத்தார். ஆனால் அதற்கு ஈடு செய்ய டீ பாயின் படைகளையும் நம்மீது ஏவியிருக்கிறார். ஆகையால் அவரை நாட்டுப்பற்று
அற்றவரென்று யாரும் பழி சொல்ல முடியாது, டீ பாயின் நம்மை எதிர்க்க வருவதால் ஏதோ காரணமாகவே சிந்தியா நம்மைத் தப்பவிட்டார் என்று சிந்தியாவின் மேலதிகாரிகள் நினைப்பார்கள்” என்று கூறினான்.
டீ பாயின் பிரான் என்ற பிரெஞ்சு தளபதியின் போர்த் திறமையைப்பற்றி புஷ்பாவதி கேள்விப்பட்டிருந்ததால், அந்த இரும்புப் படைக்கு முன்பு எந்தப் படையும் நிற்க முடியாதென்பதை உணர்ந்துகொண்டதால் கேட்டாள். “நீங்கள்
மகாராணாவுக்கு உதவத்தான் வேண்டுமா?” என்று.
“என்ன கேள்வி இது புஷ்பாவதி? ஒரு ராஜபுத்திரப் பெண் கேட்கும் கேள்வியாக இல்லையே!” என்ற தீப்சந்தின் குரலில் சிறிது கோபமும் ஒலித்தது.
“அந்தக் காமுக மகாராணா ஒரு மனிதனா?” என்று சீறினாள் புஷ்பாவதி.
“மனிதனோ இல்லையோ, ராஜபுதனத்துக்கு ஒரு கவுரவத்தையும் மானத்தையும் தேடிக் கொடுத்த ராணா பிரதாப், ராணா ராஜசிம்மன் வம்சத்தவன்…” என்றான் தீப்சந்த்.
“பழைய பெருமையைச் சொல்லியே ஒரு நாடு எத்தனை நாள் வாழ முடியும்?” என்று கேட்டாள் புஷ்பாவதி.
“அந்தப் பெருமையை நினைக்கும் வீரர்கள் இருக்கும் வரை” என்று தீப்சந்தும் சொன்னான்.
அந்த வீரர்களில் தீப்சந்த் ஒருவன் என்பதை நினைத்து உள்ளூர மகிழ்ச்சி கொண்டாலும், அதை வெளிக்குக் காட்டவில்லை புஷ்பாவதி. ஆனால் தலை போனாலும் தீப்சந்த் தனது தேசபக்தியை விடமாட்டான் என்பதைப் புரிந்து
கொண்டதால் மவுனமே சாதித்தாள்.
புஷ்பாவதிக்கு மகாராணா மீதிருந்த வெறுப்புக்குக் காரணம் புரிந்திருந்தாலும், அது நியாயம் என்பதை உணர்ந்திருந்தாலும், ராணாவைவிட மேவார் முக்கியமானது என்பதைத் திட்டமாக நினைத்த தீப்சந்த், மேற்கொண்டு பேச்சை
வளர்க்க இஷ்டப்படாமல் மறுபடியும் பயணத்தைத் துவக்கினான். வழிநெடுக மகாராஷ்டிரப் படைகளின் நடமாட்டமும் மேவார் இருந்த நிலையில் ஆங்காங்கிருந்த ராஜபுத்திர உபதளபதிகள் எல்லாம் தங்கள் பிராந்தியங்களுக்குத்
தங்களையே தலைவர்களாகத் தாங்களே நியமித்துக் கொண்டு ஆங்காங்கு வரிகளை வாங்கிக்கொண்டு, அரசாங்க வரிப்பணத்தை விழுங்கிக் கொண்டிருந்ததால் எங்கும் வறட்சி நிரம்பிக் கிடந்தது. மக்கள் வறுமையும் சொல்லத் தரம்
அல்லாத தாய் இருந்தது. ஆகவே வழியில் திருட்டு ஆபத்து அதிகம் இருந்தாலும் தீப்சந்தைப் பார்த்ததும் திருடர்களும் ஒதுங்கிவிட்டதால் பயணத்தை அதிகத் தடங்கல் இல்லாமலேயே நடத்தி புஷ்பாவதியுடன் ஜாவுத் கோட்டையின்
எல்லைக் காட்டுக்கு வந்து சேர்ந்தான் தீப்சந்த்.
அந்த மலைக்காடு மிக அடர்த்தியாயிருந்ததையும், அங்கிருந்து கோட்டையின் பகுதிகள் எதுவுமே தெரியாததையும் கண்ட புஷ்பாவதி, “இங்கு எதற்கு வந்தோம்?” என்று வினவினாள்.
“ஜாவுத் கோட்டைக்கு நாம் நேராகச் செல்ல முடியாது. மகாராஷ்டிரர் படைகள் அதை முற்றுகையிட்டு நிற்கின்றன. இங்கிருந்து ரகசிய வழியாகத்தான் நாம் போகவேண்டும்” என்றான் தீப்சந்த்.
“எந்த இடத்திலும் ரகசிய வழிகள் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.” என்று கூறி நகைத்தாள் புஷ்பாவதி.
“நம் நாட்டில் கட்டப்பட்டுள்ள எல்லா கோட்டைகளிலும் ரகசிய வழிகள் உண்டு. மன்னர்கள் தப்புவதற்காக இப்படி வழிகளை அமைத்திருக்கிறார்கள்” என்று விளக்கினான் தீப்சந்த்.
“அப்படியானால் நம் மன்னர்கள் எல்லாம் தப்புவதில் தான் மும்முரமாயிருந்தார்களேயொழிய, போர் புரிவதில் இல்லை” என்று இகழ்ச்சியுடன் கேட்டாள் புஷ்பாவதி.
“புஷ்பாவதி! இந்த நாடு அனுபவித்திருக்கும் கேடுகளை நீ அறிந்தால் மன்னர் குலம் தப்புவதும் அவசியம் என்பதை உணர்ந்துகொள்வாய்” என்று கூறினான்.
“புரிகிறது. தப்புவதையே ஒரு கலையாகச் செய்திருக்கிறார்கள் நமது மன்னர்கள். அதை நாமும் பின்பற்றினால் என்ன?” என்று விசாரித்தாள்.
“பின்பற்றலாம், ஆனால் வரலாறு அவர்களை நிந்திப்பதுபோல் நம்மையும் நிந்திக்கும். சரி சரி இரு; இன்றிரவு மூண்டதும் நாம் கோட்டைக்குள் போவோம்” என்று கூறிய தீப்சந்த், மரங்களின் ஊடே சென்று மறைந்தான்.
சுமார் அரைநாழிகைக்குப் பிறகு திரும்பிவந்து அவளை அழைத்துக் கொண்டு ஒரு சிற்றருவி இருந்த இடம் சென்று அங்கிருந்த மரங்களிலிருந்து சில பழங்களைப் பறித்துக் கொடுத்து அவளைச் சாப்பிடச் சொல்லி தானும்
சாப்பிட்டான். அருவியின் நீரை இருவரும் அருந்திய பிறகு புரவிகளுக்கும் தண்ணீர் காட்டி அவற்றைப் புல்வெளியில் மேயவிட்டான்.
இரவும் மெல்ல மூண்டது. தனது முகத்திலிருந்த மாறுவேடப் படைகளைக் கிழித்தெறிந்துவிட்டு, “புஷ்பாவதி! இரவு மூண்டுவிட்டது. நாம் கோட்டைக்குள் செல்வோம். என்னைப் பின்பற்றி வா, எதுவுமே பேசாதே.” என்றான்.
“இந்த எச்சரிக்கை எனக்குத் தேவையில்லை” என்றாள் புஷ்பாவதி.
“பெண்ணாயிற்றே என்று சொன்னேன்.”
“அதனால் என்ன?”
“பெண்களால் பேசாதிருக்க முடியாதே.”
இதைக் கேட்டதும் சீற்றமடைந்த புஷ்பாவதி வேகமாக புரவிகளிடம் சென்று அவற்றை இழுத்து வந்தாள்.
“புஷ்பாவதி!” என்று ஏதோ சொல்லத் துவங்கினான் தீப்சந்த்.
அவள் பதில் சொல்லவில்லை. “நான் கூறுவதைக் கவனமாகக் கேள்” என்றான் தீப்சந்த்.
அதற்கும் பதில் இல்லாது போகவே, தீப்சந்த் மேலே நடக்க முற்பட்டான். புஷ்பாவதி மவுனமாகவே நடந்தாள். சிறிது தூரம் சென்றதும் கோட்டையின் விளக்குகள் ஒவ்வொன்று தெரியவே கோட்டையை அணுகிக் கொண்டிருப்பது
புரிந்தது புஷ்பாவதிக்கு.
தீப்சந்த் ஏதும் போசாமலே மரங்களின் மிக அடர்ந்த பகுதிக்கு வந்து ஒரு குறிப்பிட்ட மரத்தடியின் கீழிருந்த சருகுகளை அகற்றிவிட்டு அங்கிருந்த தரையைச் சிரமப்பட்டு நகர்த்தவே கீழே வழியொன்று தெரிந்தது. அந்த வழி நல்ல
விசாலமாக, ஒரே சமயத்தில் நாலைந்துபேர் செல்லக்கூடிய அளவுக்கு இருந்ததைப் பார்த்த புஷ்பாவதி வியப்படைந்தாள். அவள் வியப்பைக் கவனிக்காமலும் ஏதும் கேட்காமலும் அவளையும் இரண்டு புரவிகளையும் முன் செல்லவிட்டு
மேலிருந்த கதவுமீது சருகுகளை வாரி விட்டு அதைத் திரும்பவும் மூடினான். அடுத்து புஷ்பாவதியைத் தொடர்ந்தான். வழி தாராளமாக இருந்ததன்றி ஆங்காங்கு தங்கும் இடங்களும் அறைகளும்கூட இருந்தன, அவற்றையெல்லாம்
தாண்டி ஒரு பெரிய இரும்புக் கதவுக்கு அருகில் வந்ததும் அதை மும்முறை தட்டியதும் மேலே இரும்புக் கதவு அகற்றப்பட்டது. அந்தக் கதவுக்கு அருகில் படிகள் இருப்பதைக்கண்ட புஷ்பாவதி வியப்படைந்தாள். அந்தப் படிகளின்
உச்சியிலிருந்து மேலே ஏறிக் குதித்த தீப்சந்த் அவளையும் கைலாகு கொடுத்து மேலே தூக்கி விட்டான்.
அந்தப் படிகளில் புரவிகள் ஒவ்வொன்றாக ஏறி வெளியே குதித்தன. அவற்றை இரண்டு வீரர்கள் பிடித்து அழைத்துச் சென்றார்கள். வந்த வழியை நோக்கியவள், அது பெரிய வீதிபோல் தெரிந்ததைக் கவனித்தாள். தாங்கள் ஏறிய இடம்
அந்தக் கோட்டையின் ஆயுத சாலை என்பதையும் புரிந்துகொண்டாள். அங்கிருந்தே துப்பாக்கிகளைக் கொண்டு சுட பல சாளரங்களும் பெரிய ஆயுத சாலையில் இருந்தன.
அவள் ஆயுத சாலையை ஆராய்வதைக் கண்ட தீப்சந்த் “புஷ்பாவதி! இந்த ஆயுதங்களைப் பிறகு பார்க்கலாம். உனக்கு விவரமாக இதைப்பற்றிச் சொல்கிறேன். இதற்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது.” என்று
அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில் பெரிய பீரங்கி ஒன்று கோட்டைக்கு வெளியே சப்தித்தது. அதைத் தொடர்ந்து ஒரு குண்டு ஒன்றும் கோட்டைக்குள் வந்து விழுந்தது. அதைப் பார்க்க ஓடினான் தீப்சந்த். அவனுடன்
புஷ்பாவதியும் ஓடினாள். கோட்டையின் நட்ட நடுவில் இரும்பு குண்டு ஒன்று கிடந்தது. அதன்மீது “டீ பாயின் வணங்குகிறான்” என்று வெட்டப்பட்டிருந்தது.
அத்தனை துரிதத்தில் டீ பாயின் அங்கு வருவார் என்று எதிர்பாராத தீப்சந்த் கோட்டைப் பாதுகாப்பில் மிக துரிதமாக இறங்கினான். “புஷ்பாவதி! நீ போ உள்ளே. யாரங்கே சுபேதார்! நமது பீரங்கிகள் திரும் பட்டும் எதிரிகளை நோக்கி”
என்று உத்தரவிட்ட வண்ணம் துரிதமாக ஓடினான் கோட்டை வாயிலை நோக்கி. அங்கு அவனைச் சந்திக்க டீ பாயின் சித்தமாக இருந்தான்.