Mohini Vanam Ch 35 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 35 காதலும் கடமையும்!
Mohini Vanam Ch 35 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
ஜாவுத் கோட்டையின் சிறு வீட்டுக் கட்டாந்தரையில் காதலன் பிடியில் சிக்கிக் கிடந்த புஷ்பாவதியின் உணர்ச்சிகள் பெரிதும் திரண்டெழுந்தது என்றாலும், அவள் சிறிது அச்சமே அடைந்தாள். தமது மனம், வாக்கு, காயம் மூன்றையும்
அவள் தீப்சந்திடம் ஒப்படைத்திருந் தாலும் எதிலுமே ஒரு முறை இருக்க வேண்டுமென்று அவள் நினைத்தாள். அந்த எண்ணத்தால் அவள் தீப்சத்தின் அசுரத் தழுவலில் இருந்து சிறிது விடுபட முயன்றாள். அதை முன்னிட்டுத் தனது
பூவுடலைச் சிறிது அசைக்கவும் செய்தாள். அந்த அசைவின் விளைவாக அவள் எழில்கள் அந்தக் காமுகன் உடலில் உராய்ந்து அவன் வெறியை அதிகப்படுத்தினவே தவிர, குறைக்காததால் அவன் கைகள் அவள் உடல் பூராவும்
அலைந்தன. பிறகு அவளைத் தனது பக்கத்தில் இறக்கிவிட்டு அவள் காதுக்கு அருகில் தனது உதடுகளைக் கொண்டு சென்று “பயமாக இருக்கிறதா புஷ்பாவதி?” என்று வினவினான்.
“ஆம்.” என்று மெதுவாகச் சொன்னாள் புஷ்பாவதி.
அந்தப் பதிலைச் சொன்ன அவள் இதழ்களைச் சுவைத்து கழுத்திலும் உதடுகளை அழுத்திய தீப்சந்த் “எதற்கு பயம் புஷ்பாவதி?” என்று வினவினான்.
அவன் உதடுகள் கழுத்தில் ஆழப் புதைந்ததால் இன்பப் பெருமூச்சு விட்ட புஷ்பாவதி “எதற்கும் ஒரு முறை உண்டு அல்லவா?” என்று கேட்டாள்.
“முறைகேடாக நாம் என்ன செய்கிறோம்?” என்று கேட்டான் அவன், அவள் பக்கத்தில் எழுந்து உட்கார்ந்து அவன் கண்கள் அவள் கண்களைக் கவர்ந்து நின்றன.
அந்தக் கண்களைச் சந்திக்க முடியாமல் பக்கவாட்டில் பார்வையைச் செலுத்திய புஷ்பாவதி “திருமணம் என்று ஒரு முறை உண்டு. பெரியவர்கள் செய்து வைப்பது…” என்று முணுமுணுத்தாள்.
“உண்டு. பெரியவர்கள் உண்டு. மேளதாளங்கள் உண்டு ; ஊர்வலம் உண்டு; வாணவேடிக்கை உண்டு ; இங்கு எதுவும் குறையவில்லை. ராஜபுத்திரர் வழக்கப்படி நான் இங்கு புரவியில்தான் வந்தேன். அனுப்பி வைத்த வரும் உனது தாய்
தந்தையர்கள் தான். சிந்தியாவும் கங்காபாயும் யார்? இங்கு வாணவேடிக்கை தினம் நடக்கிறது. டீ பாயின் குண்டு வீசுகிறான். போதாக் குறைக்கு அவன் வீரர்கள் நடைபோட ராணுவ பாண்டும் முழங்குகிறது. எந்தக் குறையும்
இங்கில்லை. ஆனால்…” வாசகத்தை முடிக்காமல் விட்டான் தீப்சந்த்.
“ஆனால்?” என்று கேட்டாள் புஷ்பாவதி.
“பெண்களுக்கு ஏற்படும் ஆரம்ப மணவறை அச்சம் உனக்கும் இருக்கிறது, அதற்குக் காரணமும் இல்லை” என்று விளக்கினான் தீப்சந்த். மேலும் சொன்னான் : “புஷ்பாவதி, நாம் ராஜபுத்திர வம்சம். க்ஷத்திரியர்களுக்கு காந்தர்வ மணம்
சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.” என்று.
அவள் தனது கண்களால் அவனை நன்றாகவே ஏறெடுத்துப் பார்த்தாள். “சாஸ்திரம் வேறு படித்திருக்கிறீர்களா?” என்று வினவினான்.
அவன் அவளை அப்படியே அள்ளித் தூக்கினான். “படித்திருக்கிறேன்” என்று கூறி அவள் கன்னம் ஒன்றில் தனது இதழ்களைப் புதைத்து மீண்டான்.
“எந்த சாஸ்திரம்?” என்று அவள் மெதுவாக வினவி, தனது கைகளால் அவன் கழுத்தைச் சுற்றினாள்.
“இந்த சாஸ்திரந்தான்…”
“இது என்றால்…?”
“சொல்லத் தெரியாத சாஸ்திரம்.”
“ஓகோ!”
“என்ன ஓகோ?”
“ஆம்.”
“எனக்குச் சொல்லிக் கொடுங்களேன்?”
“அதற்குத்தானே இவ்வளவும்” என்று கூறினான் தீப்சந்த். அவளை அணைத்தவண்ணம். பிறகு இருவரும் பேசவில்லை. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நால்வகைக் கதவுகளும் திறந்தன.
அவள் பாதுகாப்பு மூன்றும் உடைந்துகொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் சீறிவந்த பெரும் குண்டு ஒன்று கோட்டைக்குள் விழுந்து பெரிதாக வெடிக்கவே புஷ்பாவதியின் அணைப்பைப் பிரித்துக் கொண்டு எழுந்தான் தீப்சந்த்.
“டீ பாயின், மீண்டும் பீரங்கிகளை இயக்குகிறான்” என்றாள் புஷ்பாவதி.
‘சந்தர்ப்பம் தெரியாதவன்” என்று அலுத்துக் கொண்டு எழுந்த தீப்சந்த், தனது ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு “புஷ்பாவதி! நீயும் வா,’ என்றான்.
“நான் இப்படியே வரமுடியாது.” என்றாள் அவள்.
“சரி ; நீ படுத்திரு. நான் போய் அவனுக்குப் பாடம் கற்பித்து விட்டு வருகிறேன், “ என்று கிளம்ப முற்பட்டவன் “புஷ்பாவதி! டீ பாயின் இங்கு குண்டு வீசுவதுபோல் பாசாங்கு செய்து நாம் இதைச் சமாளிக்கும் சமயத்தில் சுரங்க வழியாக
தனது படையின் ஒரு சிறு பிரிவை அனுப்புவான். நீ அந்த ரகசிய வழியில் இரண்டு பீரங்கிகளை நகர்த்தச் சொல்லி யார் வந்தாலும் குண்டு வீசச் சொல். சில வீரர்களைத் துப்பாக்கியுடனும் நிறுத்திவை. மகாராஷ்டிரர்களின் மாட்சுலாக்
துப்பாக்கி கள் கோட்டையின் கோடி அறையில் இருக்கின்றன.” என்று உத்தரவிட்டு வெளியே விரைந்தான்.
கடமை என்று வந்ததும் காதலை உதறி விட்டுச் செல்லும் அந்தக் கர்ம வீரனைப் பார்த்துப் பெருமையைத் தனது முகத்தில் விரியவிட்டுக் கொண்ட புஷ்பாவதி’ மெள்ள எழுந்து உட்கார்ந்து தனது அலங்கோல நிலையைக் கவனித்தாள்.
கவனித்ததால் வெட்கம் துலங்கிய புன்முறுவலைப் படரவிட்டாள் தனது இதழ்களில். “இந்த லட்சணத்தில் சுரங்கப் பாதுகாப்புக்கு எனக்கு உத்தரவு வேறு போட்டு விட்டுப் போகிறார்!” என்று தீப்சந்தை பரிகாசமும் செய்தாள். “அவர்
நினைத்த போது காதலி உத்தியோகம். நினைத்தபோது உபதளபதி உத்தியோகம்! நல்ல அழகு!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து உடையைச் சரிப்படுத்திக் கொண்டு வெளியே நடந்தாள்.
உதயகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது. சுற்றுப்புறக் காடுகளில் உள்ள புள்ளினங்களின் அழகிய கூவல்களை எதிரியின் பீரங்கிகள் மறைத்து விபரீத சத்தங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தன. தொடர்ச்சியாகக் குண்டுகளை
டீபாயின் வீசிக் கொண்டிருந்தது ஏதோ பெரிய திட்டத்தை முன்னிட்டுத்தான் என்று தீர்மானித்த தீப்சந்த், கோட்டை மதிலைச் சுற்றிலும் எரி அடுப்புகளை மூட்டச் சொல்லி, எண்ணெயைக் காய்ச்சி சிறுசிறு கங்காளங்களில் ஊற்றி
அவற்றைச் சுவரின் உச்சிக்கு சற்றுக் கீழே இருக்கும்படி கட்டைகளைக் கட்டி நிறுத்தி வைத்தான். ஒவ்வொரு கங்காளத்துக்குமருகே இரண்டும் இரண்டு வீரர்கள் கங்காளத்தைத் தூக்கும் வாரைகளுடன் நின்றிருந்தார்கள்.
அன்று டீபாயின் எப்படியும் கோட்டையைத் தகர்த்து விடுவது என்ற தீர்மானத்துடன் ஏணிகளை மதில்மேல் சார்த்த உத்தர விட்டான். அதில் ஏறுபவர்களை கொப்பரைகளின் சுடு எண்ணெயை முழுவதும் கொட்டி நரக வேதனையில்
சாகும்படி விடவேண்டாம் என்று உத்தரவிட்டு ஏணிகள் மீது ஏறி வருபவர்கள் மீது அகப்பைகளால் தீயெண்ணெயை வாரி கொஞ்சமாக வீசும்படியும் கட்டளையிட்டான் தீப்சந்த்.
டீ பாயின் முதலில் தனது வீரர்களை அனுப்பவில்லை. மகாராஷ்டிர சிப்பாய்களை மட்டும் அனுப்பி ஏணிகளில் ஏறச்செய்தான்.சுமார் ஐந்நூறு மகாராஷ்டிர சிப்பாய்கள் ஏணியில் ஏற முயன்று காய்ச்சின எண்ணெய் வீசப்பட்டதால் அலறி
ஏணிகளைச் சாய்த்துக் கொண்டு கீழே விழுந்து ஓடுவதைப் பார்த்து சினந்த டீ பாயின், அந்த ஓட்டத்திற்குக் காரணம் என்னவென்று அறிய சதர்லண்டை அனுப்பினான்.
சதர்லண்ட் திரும்பி வந்து “நாம் மதில்கள் மேல் ஏற முடியாது.” என்று அறிவித்தான்.
“ஏன்?” சினத்துடன் வந்தது டீ பாயின் கேள்வி.
“கோட்டை மதிலுக்குப் பின்னிருந்து சுடு எண்ணெய் வீசப்படுகிறது. சிப்பாய்களின் முகங்களும் கை கால்களும் சில இடங்களில் கொப்பளித்திருக்கின்றன.” என்று சதர்லண்ட் அறிவித்தான்.
“அவர்களைத் திரும்ப ஏற கட்டளையிடு. இம்முறை அவர்களுக்கு நமது பீரங்கி வீச்சு திரையிடும்.” என்று டீ பாயின் கூறினான்.
“அப்படியும் அவர்கள் போக மாட்டார்கள்” என்றான் சதர்லண்ட்.
“ஏன்?”
“கோட்டைச் சுவர்களுக்கு வெகு அருகில் தீப்சந்த் தனது வீரர்களை நிறுத்தியிருக்கிறான். கோட்டைக்குள் விழும் குண்டுகள் அவர்களைப் பாதிக்காது.
டீ பாயினுக்கும் அது புரிந்துதான் இருந்தது. ஆகவே பதிலேதும் சொல்லாமல் தலையை அசைத்தான். ஆனால் அன்று பகலில் தீப்சந்த் தனது பீரங்கிகளை நாலா பக்கத்தில் இருந்தும் இயக்கினான்.
இதனால் டீ பாயின் படைக்குச் சிறிது சேதம் ஏற்பட்டாலும் அவன் தனது படையைச் சிறிது பின்னுக்கு வாங்கி சுற்றுக் காட்டுப் பகுதியில் ஒரு பிரிவை அனுப்பினான். “இந்தப் படைப் பிரிவு சுரங்க வழியாகப் போகட்டும்.” என்று
உத்தரவிட்டான்.
அன்று இரவில் சுரங்க வழியாகக் கோட்டைக்குள் ரகசியமாக நுழைந்த படைப் பிரிவுக்கு சில யோசனைகளைக் கூறினான் டீ பாயின். “சுரங்க வழியைச் சிறிது அடைத்திருப்பார்கள். அவற்றை நீக்கிவிட்டு உள்ளே நுழையுங்கள்.
நீங்கள் கோட்டைக்குள் வந்ததும் ஆகாயத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்குள்ள ராஜபுத்திரர்களுடன் கை கலந்து போரிடுங்கள். அதே சமயத்தில் நான் இங்குள்ள படைகளுடன் கோட்டையைத் தாக்குகிறேன். இரண்டு
படைப்பிரிவுகளுக்கு இடையில் எதிரியை நசுக்கி விடுவோம்” என்று தனது திட்டத்தை டீ பாயின் அறிவித்தான்.
இந்தத் திட்டத்திலும் டீ பாயின் ஏமாந்தான். சுரங்க வழியாக முன்னேற்றம் சாத்தியமில்லாது இருந்தது. மணல் மூட்டைகளை நீக்கி நீக்கி வேறு மணல் மூட்டைகள் சுவரைப் போல் காட்சியளித்தன. அவற்றுக்கு அடுத்தபடி இருந்தவை
கனமற்ற மூட்டைகளாக இருந்ததால் முன்னேறமுடியும் என்று நினைத்த சமயத்தில் திடீரென்று ஒரு குண்டு வெடித்தது. பல துப்பாக்கிகள் சுட்டன அந்த மூட்டைகளை. அந்த மூட்டைகளில் இருந்து வாண மருந்துகள் தீப்பிடிக்கவே
பெரும் தீ எதிரிப் படையை நோக்கிப் பறந்தது. அந்த சிறிய வழியில் அந்தத் தீ துரத்தியதால் ஊதப்பட்ட கன்னான் உலையைப் போல் சீறிச் சீறி வந்து கொண்டிருந்தது. திடீரென மேலிருந்து சுரங்கக் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது.
சிறிது தாமதித்தாலும் தங்கள் அழிவு நிச்சயம் என்பதை உணர்ந்த மகாராஷ்டிரரும் வெள்ளையரும் பின்வாங்கினர்.
இந்தத் தோல்வியைக் கேட்ட டீ பாயின் சினமிகுதியால் “தீப்சந்த்! இன்னும் இரண்டு மூன்று நாளைக்குள் கோட்டையைத் தரைமட்டமாக்கி விடுகிறேன் பார்!” என்று கர்ஜித்தான்.
மறு நாள் முதல், எதிரியின் குண்டு வீச்சு அதிகப்பட்டது. நாலைந்து நாட்களாக தொடர்ந்து குண்டு வீசினான் டீபாயின். ஏழாவது நாள் தீப்சந்த் ஒரு முடிவுக்கு வந்தான். அதை புஷ்பாவதியிடமும் சொன்னான். “இன்று இரவு
மூன்றாம் ஜாமத்தில் இந்தக் கோட்டையிலிருந்து நாம் வெளியேறுகிறோம். அதற்கு நமது படையை திட்டம் செய்.” என்று உத்தரவிட்டான்.
டீ பாயின் முற்றும் எதிர்பாராத அதிசயம் அன்றிரவு மூன்றாம் ஜாமத்தில் நிகழ்ந்தது. முற்றுகைக்கு அத்தகைய விபரீத முடிவு இருக்கும் என்று டீ பாயின் கனவில் கூட எண்ணவில்லை.