Mohini Vanam Ch 38 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 38 சதியும் விளைவும்!
Mohini Vanam Ch 38 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மன்னன் காமுகனாயிருந்தால் அரசாட்சி அழிந்து விடும் என்பதற்கு வரலாற்றுச் சான்றாக மேவார் ராணா பீம்சிங் இருந்தார் என்றால், தேச நலத்தைத் தவிர சுயநலத்தைச் சொப்பனத்திலும் எண்ணாமல் கர்மயோகி யாக இருந்த மந்திரியின்
அதோகதிக்கு சோம்ஜி உதாரணமானார்.
பீம்சிங் சலூம்பிராவை ராஜசேவைக்கு அழைக்க ராஜமாதா தீர்மானித்ததை அவர் ஆட்சேபிக்காததற்குக் காரணம், ஆட்சேபித்துப் பயனில்லை என்பதுதான் காமப்பித்தனாகத் திரியும், காமக்கிழத்திகளுடன் சரசமாடுவதையே வாழ்க்கை
லட்சியமாகக் கொண்ட மகனான மகாராணாவைத் திருத்தமுடியாத ராஜமாதா. மகாராணாவை அறவே மதிக்காதவரும் மேவாரின் புராதன தலைநகரான சித்தூரில் தனி அரசு செலுத்து பவருமான சலூம்பிராவை ராஜ சேவைக்கு அழைப்பது
எத்தனை கேவலமானது என்பதை உணர்ந்ததால் அன்றிரவு சிந்தை மிகுந்தவராய் தமது அறையில் உறக்கம் வராமல் புரண்டார்.
காலையில் எழுந்ததும் ஒரு கடிதம் எழுதி குழலில் போட்டு முத்திரையும் வைத்தார். “எனக்கு ஏதாவது நேர்ந்தால் இதை ராஜமாதாவிடம் கொடுத்து விடுங்கள்” என்று தமது தம்பிகளான சிவதாஸ், சதிதாஸ் இருவரிடமம் கூறிவிட்டு
எந்த நிலைக்கும் தயாராக இருந்தார். ஒற்றர்கள் நிரம்ப இருந்த காரணத்தால், சலூம்பிரா சரணாகதிக்கு ஒப்புக்கொண்ட விஷயமும் கோராபூர் அர்ஜுன் சிங்குடன் அவர் வந்துவிட்டதையும் அறிந்தார்.
சலூம்பிராவை மோகினிவன மாளிகையின் மகா மண்டபத்தில் மன்னர் வரவேற்க சித்தமாயிருந்த தினத்தில் விடியற்காலையிலேயே சோம்ஜி நீராடி தினசரி பூஜையை முடித்துக்கொண்டு தமது அலுவலக மண்டபத்துக்கு வந்து
அங்கிருந்த மேடையில் திண்டு திவாசுகளின் மீது சாய்ந்து கொண்டு அன்றாட வேலைகளைக் கவனிக்கலானார். மந்திரியின் அலுவலக மண்டபத்தில் காவலர் எப்பொழுதும் அதிகமாகக் கிடையாது. அத்தகைய பாதுகாப்பில் மந்திரி
சோம்ஜிக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் அவருக்கு அன்றிருந்த ஒரு யோசனை மேவார் உள் நாட்டுப் பூசலால் பாழாகிப் போகிறதே என்பதுதானே தவிர வேறில்லை.
இந்த நாடு என்றாவது தேறுமா என்று அவர் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில்தான் வெளியில் இருந்த காவலன் ஒருவன் வந்து ‘ கோராபூர் அர்ஜுன்சிங் அவரைப் பேட்டி காண வந்திருப்பதாக அறிவித்தான்.
சோம்ஜியின் கூரிய அறிவு துரிதமாக வேலை செய்யவே அவர் கேட்டார், “அர்ஜுன்சிங் எத்தனை பேருடன் வந்திருக்கிறான்?” என்று.
“இரண்டே வீரர்கள்.” என்றான் காவலன்.
“சரி, வரச்சொல்.” என்று சோம்ஜி உத்தரவிட்டார்.
அர்ஜுன்சிங் உள்ளே நுழையும் முன்பு, மந்திரி மாளிகைக் காவலர் முன்பாகவே தனது நீண்ட வாளைச் சுழற்றித் தன்னுடன் வந்த இரு வீரர்களிடம் கொடுத்து விட்டு கச்சையில் இருந்த பிச்சுவாவுடன் மட்டும் உள்ளே நுழைந்தான்.
மண்டபத்துக்குள் நுழைந்தவன் தலையை நன்றாக வணங்கினான் மந்திரிக்குத் தூரத்தில் இருந்த படியே.
சற்று எட்ட இருந்த ஆசனத்தில் அமரும்படி அர்ஜுன் சிங்குக்கு சோம்ஜி சைகை செய்தார். அர்ஜுன்சிங் நின்று கொண்டே அந்த மண்டபத்தை நோக்கினான். அங்கு இரண்டொரு காவலுக்குமேல் இல்லாததைக் கண்டு வியந்தான்.
ஒருவேளை மந்திரி அக்கம்பக்க அறைகளில் யாரையாவது மறைத்து வைத்திருப்பாரோ என்று சந்தேகித்தான். அவன் சந்தேகக் கண்களைப் பார்த்த மந்திரி புன்முறுவல் கொண்டு, “இங்கு எப்பொழுதும் அனாவசிய காவல் கிடையாது.”
என்றார்.
மீண்டும் நின்றவண்ணம் வணங்கினான் அர்ஜுன்சிங். “இன்று மோகினி வன மண்டபத்தில் மகாராணாவை சலூம்பிரா சந்திக்கிறார்.” என்று கூறினான்.
“கேள்விப்பட்டேன்.” என்றார் மகாமந்திரி.
“சலூம்பிரா அதிக வீரரை உடன் அழைத்து வர வில்லை, மன்னரை சரணடைய வந்திருப்பதால்.” என்று பேச்சை வளர்த்தான் அர்ஜுன் சிங்.
“நூறுபேர் தான் வந்திருக்கிறார்கள்.” என்று சோம்ஜி புன்முறுவல் செய்தார்.
“எங்களை வேவு பார்க்க ஆட்களை வைத்திருக்கிறீரா?” என்று கேட்டான் அர்ஜுன்சிங் புன்முறுவலுடன்.
“சில பேரைப் பற்றி அறிய ஒற்றர் அவசியம் இல்லை” என்றார் சோம்ஜி.
இரண்டடி முன்னே எடுத்து வைத்தான் அர்ஜுன்சிங், மந்திரி அவன் ஒவ்வொரு அசைவையும் கவனித்தார். சட்டென்று தமது பக்கப் பெட்டியில் இருந்து ஒரு துணிச் சுருளைப் பிரித்து, “அர்ஜுன்சிங் இதைப் பார்” என்று
அர்ஜுன்சிங் மெள்ள மெள்ள மந்திரியின் மேடை அருகில் வந்து அந்தச் சுருளைப் படித்தான். “அதில் இருப்பது சரியா?” என்று கேட்டார் மந்திரி.
“சரிதான்.” என்று கூறி அந்த மேடைக்கு அருகில் மிகவும் குனிந்து வணங்கினான் அர்ஜுன்சிங்.
“சித்தூருக்கு அருகில் உள்ள மகாராணாவுக்குச் சொந்தமான நிலங்களை நீ விற்றதற்கான பத்திரம்” என்றார் மந்திரி.
“ஆம்.” என்றான் அதஜுன்சிங்.
“எப்படி விற்றாய்? யார் அனுமதியின்மீது விற்றாய்? எப்படித் திரும்ப எடுத்துக்கொண்டாய்? சமாதானம் சொல்.” இம்முறை கடுமையாகவே இருந்தது சோம்ஜியின் குரல்.
“சமாதானமா?” என்று கேட்டுக்கொண்டே மேடைக்கு அருகிலிருந்த சோம்ஜியை நோக்கித் தாவிய அர்ஜுன்சிங் தனது கச்சையில் இருந்த குறுவாளை எடுத்து வேகமாக அவர் மார்பில் குத்தினான்.
மந்திரியின் கண்கள் அவனை வெறுப்புடன் ஒருமுறை நோக்கின. பிறகு கண்கள் பஞ்சடைய அவர் திண்டின் மீது சாய்ந்தார்.
அக்கம் பக்கமிருந்த காவலர் “ஐயோ” என்று அவலக் குரல் கொடுத்தார்கள்.
அடுத்த விநாடி- அந்த மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது. சோம்ஜியின் சகோதரர்கள் சிவதாசும் சதிதாசும் வேகமாக ஓடிவந்தார்கள்.
சோம்ஜியின் புனிதமான ரத்தம் திண்டை நனைத்துக் கொண்டிருந்தது. மங்கலமாகத் துவங்கிய அந்தக் காலையில் அந்த மாளிகை அமங்கல ஒலிகளால் நிரம்பியது. –
மகாபாதகச் செயலைச் செய்துவிட்ட அர்ஜுன்சிங் மந்திரியைக் கொன்றதும், ரத்தம் தோய்ந்த தனது குறுவாளைப் பிடுங்கிக்கொண்டு வெளியில் ஓடிப் புரவியில் பறந்துவிட்டான்.
மகாராணாவின் நலனைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எதையும் அறியாத கர்மயோகியான சோம்சந்த் காந்தியின் ரத்தம் கொலைகாரச் செயலால் பெருகிக் கொண்டிருந்த அதே சமயத்தில் மோகினி வனத்தின் பெருமாளிகையின்
மகாமண்டபத்தில் சலூம் பிராவை வரவேற்க அமர்க்களமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஈட்டிகளுடன் நின்ற பத்துக் காவலர் சலூம்பிராவுக்கு வரவேற்பளிக்க நிறுத்தப்பட்டிருந்தனர். மகாமண்டபத்தின் சுவர்கள்
மோகினிவனத்தின் அழகிய புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மகாராணாவும் தம்மை நன்றாக அலங்கரித்துக்கொண்டு மெய்க்காவலர் சிலர் புடை சூழ மண்டபத்துக்கு வந்தார். தூரிய வாத்தியங்கள் முழங்கின. மன்னர் தமது
ஆசனத்தில் அமர்ந்ததும் அங்கு ஏற்கெனவே குழுமியிருந்த பெருமக்கள் மகாராணாவுக்கு வாழ்த்து ஒலி எழுப்பினார்கள். அடுத்து அங்கிருந்த நிர்வாகஸ்தர் பீம்சிங் சலூம்பிராவின் சிறப்புகளை எடுத்து ஓதினார். யாரையும்
உடனழைத்துக் கொள்ளாமலே சலூம்பிரா தனது நீண்ட வாளுடன் மண்டபத்துக்குள் நுழைந்ததும் மன்னரைத் தவிர மற்ற எல்லாரும் எழுந்து நின்றார்கள்.
கம்பீரமாக நடந்து வந்த சலூம்பிரா மன்னருக்கு முன் தலை வணங்கியதும், அருகேயிருந்த ஆசனத்தில் உட்காரும்படி மன்னர் சைகை செய்ய, சலூம்பிரா உட்கார்ந்தார். அவர் உட்கார்ந்ததும் மன்னர் மெதுவாகப் பேசினார். “மக்களே! இன்று
மேவாரின் சரிதத்தில் மகிழ்ச்சிமிக்க நன்னாள். இன்று சலூம்பிரா மேவாரின் சேவைக்குத் தமது வாளை அர்ப்பணித்திருக்கிறார். அவர் சேவையை நாம் ஏற்றுக்கொண்டோம்.” என்று கூறியதும் மக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள்.
அந்த ஆரவாரத்தை வெளியே எழுப்பிய கோஷம் சற்று தடை செய்தது. வேகமாக நான்குப் புரவிகள் வந்து மகாமண்டப வாயிலில் நின்றன. முதல் இரண்டு புரவிகளில் இருந்து கீழே குதித்த சிவதாசும், சதிதாசும் உள்ளே ஓடிவந்து,
“மகாராணா! காப்பாற்றுங்கள். சோம்ஜி கொல்லப்பட்டார். எங்களையும் கொல்லப்போகிறார்கள்” என்று கூவினார்கள்.
மகாமண்டபத்தில் பயங்கர நிசப்தம் நிலவியது.
மகாராணா தமது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று ‘கொன்ற பாதகன் யார்?” என்று கேட்டார்.
அப்பொழுது மந்திரியின் சகோதரர்களைத் துரத்திக் கொண்டும் ரத்தக்கறை படிந்த குறுவாளைக் கையில் ஏந்திக்கொண்டும் மகாமண்டபத்தில் – நுழைந்தான் அர்ஜுன்சிங்! அவன் துணிவைக் கண்டு சீற்றம் கொண்ட மகாராணா
ஏதோ சொல்ல முயலுமுன்பு சலூம்பிரா எழுந்து நின்று நிதானமாக ராணாவை நோக்கினார். “மகாராணா, என் வீரர்கள் நூறு பேர் வெளியில் நிற்கிறார்கள்” என்றார்.
மகாராணாவின் முகம் சிவந்தது. ஏதும் செய்ய சக்தியோ துணிவோ இல்லாத மகாராணா, “சலூம்பிரா! உன்னை வீரனென்று நம்பினேன். எந்த வம்சத்தில் பிறந்து எந்த ஈனச் செயலையும் செய்யும் நிலைக்கு வந்து விட்டாய்? சீ!
நிராயுதபாணியான ஒரு மந்திரியைக் கொல்ல உனக்கு வெட்கமாயில்லை? இந்த இடத்தை விட்டுப் போய்விடு. உன் கொலைக் கருவியான இந்தக் கயவனையும் அழைத்துச் செல். இனி என் கண் முன் வராதே” என்று சொற்களைக்
கொட்டினார். பிறகு அதிர்ச்சி மிகுதியால் தமது ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்.
சலூம்பிரா பேய்ச் சிரிப்பு சிரித்தான். பிறகு வெளியே சென்றான்.
அந்தச் சிரிப்பு மேவார் பூராவும் ஒலித்தது. அந்த ஒலி மண்டலக் கோட்டையில் திருமண மேடையில் இருந்த தீப்சந்தின் காதிலும் விழுந்தது.