Mohini Vanam Ch 43 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 43 தீப்சந்த் விரும்பிய பட்டம்
Mohini Vanam Ch 43 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மண்டலக் கோட்டையில் புஷ்பாவதியுடன் தீப்சந்த் உல்லாச வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த முதல் எட்டு மாதங்களுக்குள்ளாகவே சக்தாவதர் சந்தாவதர் கட்சிப் போரில் மேவார் ராஜ்ஜியம் பெரும் நாசமடைந்து கொண்டிருந்தது.
வெகு சீக்கிரம் அந்த ராஜ்ஜியம் பாலைவன மாகும் நிலையை எட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்க அரசுகள், அப்படியே நிலைமை நீடித்தால் ராஜஸ்தானம் சரித்திரத்தில் அடைந்துள்ள பெரிய பெயர், அதன் வீர சரித்திரம்
அடியோடு அழிந்துவிடும் என்று ஏங்க முற்பட்டன.
இந்த நிலையிலும் மகாராணா மோகினிவனத்தில் காம சுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
மகாராணாவின் நிலையையும் அவர் கையாலாகாத தன்மையால் ராஜ்ஜியம் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருந்ததையும் இருவர் கவனித்து மனம் நொந்து கொண்டிருந்தார்கள்.
ஒருத்தி ராஜமாதா ராம்பியாரி.
இன்னொருவன் கோட்டா சமஸ்தான மன்னனான ஜலீம்சிங்.
ராம்பியாரி தனது மகன் இப்படிச் சீர்கெட்டு விட்டானே, அரசு நாசமாகி விட்டதே என்று ஏங்கினாள்.
மேவார் அழிந்தால் மற்ற அரசுகளும் பலவீனப்படும். ஆகையால் அதன் நிர்வாகத்தை சலூம்பிராக்களிடம் இருந்து தனது வசப்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ணினான் ஜலீம்சிங். பலவீனனான மகாராணா எதற்கும் ஒப்புக்
கொள்வார் என்பதில் ஜலீம்சிங்கிற்குச் சிறிதும் சந்தேகமில்லாததால் அதைப் பற்றி அவனே முயற்சி எடுத்து ராஜமாதாவுக்குக் கடிதம் எழுதினான்.
ராஜமாதா மிகுந்த சோகத்துடன் தனது அரண்மனையில் இருந்த சமயத்தில் அந்த ஓலை வந்தது. அதைப் படித்த ராஜமாதாவுக்கு இது பெரிய வரப்பிரசாதம் போலிருந்ததாலும், அதற்கு உடனடியாக என்ன பதில் எழுதுவது என்று
தெரியாததால் ஒருநாள் கழித்துப் பதில் எழுதுவதாக ஓலை கொண்டுவந்த தூதனிடம் தெரிவித்தாள். ஜலீம்சிங்கின் திறமையைப் பற்றி அவளுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. ஏற்கெனவே அவன் உதவியை நாடலாம் என்று தீப்சந்த்
சொல்லியிருந்தான். ஆனால் ஜெய்ப்பூருக்கும் கோட்டாவுக்கும் நடந்த போரில் ஜெய்ப்பூரின் ராணுவத்தை ஜலீம்சிங் அனாவசியமாகத் தோற்கடித்து விட்டதை நினைத்து, ஜலீம்சிங்கின் கை. மேவாரில் ஓங்கி விட்டால் என்ன செய்வது
என்று சிந்தித்தாள். எதற்கும் தீப்சந்தைக் கலந்து கொண்டு ஒரு முடிவுக்கு வர தீர்மானித்து அவனுக்கும் ஓலை அனுப்பினாள். தீப்சந்தை வெகு சீக்கிரம் கோட்டாவுக்கு அனுப்புவதாக ஜலீம் சிங்குக்குப் பதிலும் அனுப்பினாள்.
மண்டலக் கோட்டையின் வெளியேயிருந்த சிறு தோப்பு ஒன்றில் தீப்சந்த் புஷ்பாவதியுடன் சுகமாகக் காலம் கழித்துக் கொண்டிருக்கையில் ராஜமாதாவின் கடிதம் கிடைத்தது. தானும் புஷ்பாவதியும் தங்குவதற்காக அந்தத் தோப்பில்
தனது கைகளாலேயே கூடாரம் ஒன்றை நிர்மாணித்திருந்தான் தீப்சந்த். ராஜமாதாவின் தூதன் வந்தபோது புஷ்பாவதியின் மடியில் தலை வைத்துக் கூடாரத்துக்குள் படுத்துக் கொண்டிருந்த தீப்சந்த் வெளியே ஒரு புரவி வந்து நின்ற
சத்தம் கேட்டு “யாரது?” என்று வினவினான் மடியில் இருந்து தலையை எடுக்காமலேயே.
ராஜமாதாவின் தூதன் வெளியிலிருந்தே மிகுந்த பணிவுடன் பதில் கொடுத்தான். “மேவாரில் இருந்து தூதன் வந்திருக்கிறேன்.” என்று.
“மகாராணாவிடம் இருந்தா?’ என்று தீப்சந்த் சயன நிலையிலேயை வினவினான்.
“இல்லை, ராஜமாதாவிடம் இருந்து.” என்று தூதன் உரக்கப் பேசினான்.
“படுக்கை என்ன வேண்டியிருக்கிறது இப்பொழுது? வெளியில் போய் பதில் சொல்லுங்கள்.” என்று கடிந்து கொண்டாள் புஷ்பாவதி.
“முடியாது. அவனை இங்கு வரச்சொல்.” என்றான் தீப்சந்த்.
“வெட்கக்கேடு. இந்த நிலையில் உங்களை அவன் பார்த்தால் என்ன நினைப்பான்?” வெட்கம் கலந்த எரிச்சலுடன் கேட்டாள் புஷ்பாவதி.
“மகாராணா என்று நினைப்பான்.”
“நீங்கள் மகாராணாவா?”
இல்லாவிட்டால், இப்படி என்னைப் பார்த்தால் அவனுக்கு மகாராணாவின் நினைப்பு வரும். பாதி நேரம் மகாராணா இப்படித்தான் இருக்கிறார்.”
“போதும் போதும், எழுந்திருங்கள்.” என்று கணவன் தலையைத் தனது கைகளால் தூக்க முயன்றாள் புஷ்பாவதி.
ஆனால், தீப்சந்த் இறுகப் படுத்துவிட்டதாலும் இடி போல் அவள் மடியில் தனது தலையை அழுத்திவிட்டதாலும் அவள் அவனைத் தூக்கமுடியாமல் முனகினாள். பிறகு சற்று தனது கால்களை அகற்றி அவனை மண்ணில் தள்ளிவிட
முயன்று, அது பெரிய அனர்த்தத்தில் கொண்டு விடவே. “தூதனே! உள்ளே வா!” என்று அவளே கூவினாள்.
இதன் விளைவாக அலட்டிப் புரண்டு தீப்சந்த் எழுந்திருப்பதற்கும் ராஜமாதாவின் தூதன் உள்ளே நுழைவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
அவசர அவசரமாக புஷ்பாவதி தனது சேலையைச் சரிப்படுத்திக்கொண்டு தலையில் முக்காடும் போட்டுக் கொண்டாள். உள்ள நிலையை ஊகித்துவிட்ட தூதனும் வணக்கம் தெரிவிக்கும் முறையில் தலையைக் குனிந்தவன்
நிமிராமல் குனிந்தபடியே தனது மடியிலிருந்த கடிதத்தை எடுத்து தீப்சந்திடம் நீட்டினான்.
தீப்சந்த் அந்தக் கடிதத்தின் முத்திரைகளை உடைத்துப் படித்துவிட்டு புஷ்பாவதியிடம் கடிதத்தைக் கொடுத்தான். “நீ போய் கோட்டையில் இரு. நாளைக்குப் பதில் சொல்லுகிறேன்” என்று தூதனிடம் சொல்லி அனுப்பிவிட்டான்.
ராஜமாதாவின் ஓலையைப் படித்த புஷ்பாவதியின் கண்களில் சீற்றம் மிதமிஞ்சித் தெரிந்தது. “ராஜமாதா தங்களை உதவிக்கு அழைக்கிறார்” என்ற அவள் குரலில் சீற்றம் இருந்தது
தீப்சந்த் அவள் சீற்றத்தைக் கண்டு புன்முறுவல் கொண்டான். “உன்னிடம் எத்தனை மதிப்பு வைத்திருக்கிறார் ராஜமாதா!” என்று கூறவும் செய்தான் புன்முறு வலின் ஊடே.
“எல்லாம் சுய நலம்” இதைப் புஷ்பாவதி எரிச்சலுடன் சொன்னாள்.
“அந்தச் சுயநலத்தில் என்ன தவறு? தனது மகனைக் காப்பாற்ற தாய் முயல்வது நியாயந்தானே? நாளைக்கே உனக்கு ஒரு மகன் பிறந்து அவன் கஷ்டத்திலிருந்தால் நீயும் இப்படித்தானே சொல்வாய்?” என்று தீப்சந்த் கேட்டான்.
“எனக்குப் பிள்ளை மகாராணாவைப் போல் பிறப்பதானால் எனக்குப் பிள்ளையே வேண்டாம்.” என்றாள் புஷ்பாவதி.
“உனக்கு எப்படி மகாராணாவைப் போல் பிள்ளைப் பிறக்க முடியும்?” என்று கேட்டு நகைத்தான் தீப்சந்த்.
புஷ்பாவதியின் கோபம் தலைக்கேறியது. அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளினாள். “உங்கள் பல்லை உடைத்துவிடுவேன்.” என்றும் சீறினாள்.
தன்மீது பாய்ந்த அந்த புஷ்பக் கொடியை, மலர்க் கொத்துகளுடன் தன் மேலேயே இருத்தி இறுக நொறுக்கிய தீப்சந்த், அவள் இதழ்களைத் தன் இதழ்களால் மூடினான். அவள் மார்பு அவன் மார்புமீது அழுந்திக் கிடந்தது. கால்களும்
அவன் கால்களில் சிக்கிக் கிடந்தன. “இன்னும் ஒரு நாள்” என்று சோகப் பெருமூச்சுவிட்டு அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்தாள்.
அன்று முழுவதும் புஷ்பாவதியின் மையலில் சிக்கி மண்ணில் புரண்டு கிடந்த தீப்சந்த், மறுநாள் காலையில் புஷ்பாவதியை நோக்கி, “புஷ்பாவதி! ராஜபுதனத்தில் இந்த மண் எத்தனை சுகமாயிருக்கிறது? இது எத்தனை இன்பத்தை
நமக்கு அளித்திருக்கிறது? இதை நாம் காக்க வேண்டாமா?” என்று வினவினான்.
அவள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. பிரிவினை ஏக்கத்தால் துன்பச் சாயை முகத்தில் படர நிலத்தில் உடகார்ந்திருந்தாள். “உம் எழுந்திரு, கோட்டைக்குப் போவோம்” என்று கூறிய தீப்சந்த் அவளை எழுப்பிக் கோட்டைக்குச்
சென்று அங்கிருந்து தனது காவலனை நோக்கி, “இரண்டு புரவிகள் தயாராகட்டும், நானும் புஷ்பாவதியும் உதயபூர் போகிறோம்.” என்றான்.
புரவிகளைக் காவலன் தயார் செய்யச் சென்றதும், தீப்சந்தை இறுக அணைத்து இதழ்களுடன் இதழ் சேர்த்துக் கொண்ட புஷ்பாவதி “இதை ஏன் முன்னமே சொல்லவில்லை?’ என்று வினவினாள்.
“சொல்வானேன்? உன்னைவிட்டுத் தனியாக நான் எப்படிப் போக முடியும்?” என்று கேட்டான். அது மட்டுமல்ல புஷ்பாவதி! ஒரு பட்டமும் பெற நான் ஆசைப்படுகிறேன்.” என்றான் தீப்சந்த்.
“என்ன பட்டமோ?” என்று புஷ்பாவதி கேட்டாள்
“மனைவிதாசன் என்ற பட்டம்.” என்று கூறிய தீப்சந்த் மிகுந்த மகிழ்ச்சியுடன் நகைத்தான் அந்த நகைப்பு மேவார் வரைக்குமே நிலைத்தது.
மேவாரில் நுழைந்ததும் அது அடியோடு அகன்றது முதல் அனுபவமே அவனுக்குப் பெரும் வெறுப்பை ஊட்டியது. மேவார் எல்லைக்குள் நுழைந்ததும் வேல்களை ஏந்திய இரு வீரர்கள் அவனை மறித்தார்கள். “அந்தப் பெண்ணை
இறங்கச் சொல்.” என்றான் ஒரு வீரன். அவள் நகைகளைக் கழற்றச் சொல்” என்றான் இன்னொருவன்.
“நாமே கழற்றுவோம். மயிலே மயிலே என்றால் இறகு போடாது.” என்று கூறிய முதல் வீரன் புஷ்பாவதியின் புரவியை நெருங்கினான், வேலை அவள் கழுத்துக்குக் குறி வைத்த வண்ணம்.