Mohini Vanam Ch 49 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
மோகினி வனம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 49 மேவாரின் தலையெழுத்து
Mohini Vanam Ch 49 | Mohini Vanam Sandilyan | TamilNovel.in
இரும்பு மனதை உடையவரும் எதற்கும் கண் கலங்காதவருமான சிந்தியா முதலில் மனைவி கங்கா பாய் இறந்தபோது கண்ணீர் விட்டார். அடுத்து அவர் கண்ணீர்விட்டது புஷ்பாவதி தன்னைவிட்டுப் பிரிந்து செல்லப்போகிறாள் என்ற நினைப்பினால் தான்.
அவர் கண்ணீரைப் பார்த்த புஷ்பாவதி. “அப்பா! கலங்கா தீர்கள். நாங்கள் இப்பொழுது ஊருக்குப் போனாலும் திரும்பத் திரும்ப உங்களை வந்து பார்த்துக் கொண்டு தான் இருப்போம்” என்று ஆறுதல் சொன்னாள்.
தீப்சந்த் மட்டும் பதில் சொல்வில்லை. ராணா பீம்சிங்கின் ஆட்சியில் ராஜபுதனம் நாளுக்கு நாள் பலவீனப்பட்டு வருவதை உணர்ந்தான். ராணா கோழை யாக இருந்தாலும் வீரனான சலூம்பிரா தலைவணங்க மாட்டார் என்று திட்டமாக நம்பியிருந்த தீப்சந்துக்கு
அவரும் சரணடைய ஒப்புக் கொண்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தவிர சமயத்தில் ஜலீம்சிங் சொந்த ஊருக்குக் கிளம்பியதை நினைத்தும் மனம் நொந்தான். இத்தனையிலும் மராட்டியர் ராஜதந்திரம் வென்றதே யொழிய ராஜபுதன வீரம் அழிந்து விட்டதை
எண்ணி ராஜஸ்தானத்தை வெறுத்தான்.
இதன் விளைவாக இருமுறை அம்பாஜி இங்ளேயை சந்திக்க முயன்றான். தீப்சந்தின் உள்ளத்தை நன்றாக அறிந்திருந்த அம்பாஜி அவனைச் சந்திக்காமல் சாக்கு போக்கு சொல்லித் தப்பித்துக் கொண்டார். கடைசியாக அவர் கூடாரத்திலேயே அன்றிரவு அவரைச்
சந்தித்த தீப்சந்த் “அம்பாஜி! தங்களை ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்” என்று தொடங்கினான் உரையாடலை.
அம்பாஜி இங்ளே அப்பொழுது தமது திண்டுதிவாசுகளில் ஒரு கையை ஊன்றிக் கொண்டும் இன்னொரு கையால் எதிரே இருந்த சாய்வு எழுது பலகை மீதிருந்த கணக்குகளைப் பார்த்துக் கொண்டும் எழுதிக் கொண்டு மிருந்தார். தீப்சந்த் கூடாரத்துக்குள்
வருவதைப் பார்த்தாலும் பார்க்காதது போல கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பாஜி, தீப்சந்த் வாய் திறந்து கேள்வி கேட்ட பின்பு தலையைத் தூக்கி, “யார் தீப்சந்தா! மகா வீரனே வா” என்று மரியாதையும் அன்பும் நிறைந்த குரலில் அழைத்தார்.
அவரது பேச்சு நடத்தை எல்லாமே போலி என்பதை தீப்சந்த் உணர்ந்திருந்ததால் தனது இதழ்களில் புன்முறுவலைத் தோற்றுவித்து, “அம்பாஜி! சலூம்பிராவின் சரணாகதியைத் தடுக்க முடியாதா?” என்று வினவினான்.
“இதென்ன கேள்வி தீப்சந்த்? மேவாரின் இந்த வீண் புரட்சி நல்லபடியாக முடிவதை நீ விரும்பவில்லையா?” என்று வினவினார்.
“அம்பாஜி! புரட்சி வீண் புரட்சிதான். ஆனால் முடிவு நல்லபடியானது இல்லை.” என்று தீப்சந்த் சுட்டிக் காட்டினான்.
“ஏன் சரியல்ல? சக்தாவதர்களுக்குத் தலைமை வகித்த ஜலீம்சிங் நாட்டு நன்மையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லவில்லை. தங்கள் தந்திரத்தால் விலக்கப்பட்டார் இந்தப் போர் முனையிலிருந்து. பீம்சிங் சலூம்பிரா ராணாவுக்கு எதிராகப் புரட்சி செய்தது
ராஜதுரோகம். அதற்கு ஈடு அவர் உயிர் தான். சுயமானத்துக்காக உயிர்விட்ட ராஜ புத்திரர்கள் தான் அதிகம். அந்தச் சுரணையையும் தங்கள் தந்திரம் உடைத்து விட்டது. இனி ராஜ புதனத்தில் என்ன இருக்கிறது சிறப்பாக? எதைச் சொல்லி ராஜபுத்திரர் தலை நிமிர்ந்து
நிற்பார்கள்?” என்று தீப்சந்த் சினத்துடன் வினவிக் கொண்டே அம்பாஜியின் கணக்குப் பெட்டியிடம் வந்து நின்றான்.
அம்பாஜி நீண்டநேரம் சிந்தனையில் இறங்கினார். பேச ஆரம்பித்தபோது யாரும் பதில் சொல்ல முடியாத தர்க்க ரீதியில் பேசினார். “தீப்சந்த்! இதே பிரச்சினைகளை இன்னொரு கோணத்தில் பார். மேவாரில் தலையிட மராட்டியர் தாங்களாக வரவில்லை. தலையிட
அழைக்கப்பட்டோம். மகாராணியின் தூதனாக நீயே வந்தாய் சிந்தியாவிடம். அவருக்கு இந்தச் சதிப்புற்றில் காலை விட விருப்பமில்லை என்றாலும் உன் மனைவி புஷ்பாவதியிடம் உள்ள பாசத்தில் இந்த மகா உபத்திரவத்துக்கு ஒப்புக் கொண்டார். இந்த மேவாரில்
என்ன இருக்கிறது. நாங்கள் எடுத்துச் செல்ல? கிராமங்கள் வறண்டு கிடக்கின்றன. செல்வம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை, இருபது லட்சம் முப்பது லட்சம் என்று இதோ கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தக் கணக்கை வைத்துக் கொண்டு என்ன
செய்வது?” என்று கேட்டார் அம்பாஜி இங்ளே. தமது கூரிய மூக்கை ஒருமுறை தடவி விட்டுக் கொண்டார். தீட்சண்யமான அவர் கண்கள் வெறுப்பைக் கக்கின.
அம்பாஜி சொன்னதில் அநேகமாக எல்லாமே சரிதான் என்று தீப்சந்துக்குத் தெரிந்திருந்தும் அவன் வீரமனம் அவர் விளக்கிய காரணங்களை ஒப்புக் கொள்ள மறுத்தது. “அம்பாஜி! இன்று ராஜபுதன கிராமங்கள் வறண்டு கிடக்கலாம், ஆனால் நாளையே உயிர்
பெற்று முளைக்கும். நீங்கள் பிடிக்கும் நகரங்களில் பணம் வசூலிக்கலாம். நீங்கள் விதிக்கும் அபராதம் மக்கள் வீடுகளில் இருந்து நகைகளாகவும் வெள்ளிப் பேழைகளாகவும் வந்து குவியும். வசூலிக்கும் முறையை நான் உங்களுக்குச் சொல்லித் தர
வேண்டியதில்லை. நாங்களாகத்தான் உங்களை அழைத்தோம். கையாலாகாத மகாராணாவைக் காப்பாற்ற வந்த நீங்கள் மகாராணாவின் கவுர வத்தைக் காப்பதைவிட நஷ்டஈடு வசூலிப்பதில் முனைந்தீர்கள்.” என்றான் உணர்ச்சியுடன்.
இதைக் கேட்ட பின்பும் அம்பாஜியின் கழுகுக் கண்கள் தீப்சந்தை தைரியத்துடன் ஏறெடுத்து நோக்கின. அவர் பேசியபோது சொற்களும் சந்தேகத்துக்கு இடமின்றி வந்தன. “தீப்சந்த்! முதலில் நான் கேட்கும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்” என்று கூறிவிட்டு
“மகாராணாவைக் கோழையாகப் பிறப்பித்தது நாங்களா?” என்று வினவினார்.
“இல்லை.” திட்டமாக வந்தது தீப்சந்தின் பதில்.
“சலூம்பிராவைப் புரட்சி செய்ய நாங்கள் தூண்டினோமா?”
“இல்லை.”
“உதவிக்கு வந்த ஜலீம்சிங் போனால் தான் தான் சரணடைவேன் என்று சலூம்பிரா சொன்னார். அதை ஜலீம்சிங்கிடம் சொன்னேன். தன்னை விட்டால் போது வென்று அவர் போக ஒப்புக் கொண்டார். அது எங்கள் தவறா?”
“இல்லை “
இதற்குப் பிறகு கேள்வி கேட்கவில்லை அம்பாஜி. “தீப்சந்த்! இங்குள்ள சீர்கேட்டுக்கு மராட்டியர் பொறுப் பாளிகள் அல்ல. பாரதத்தில் இருவர் சண்டையிடுவதும் வெளி ஆட்களை உதவிக்கு அழைப்பதும் இன்று புதிதல்ல. அக்பர் வந்தபோது இதே சித்தூர்
சரணடையவில்லை. வீரர்கள் வீர மரணமடைந்தார்கள். போரில் அக்பர் வெற்றி கொண்டார். ஏராளமான ராஜபுதன வீரர்களின் சடலங்கள் மீது அவர் நடந்தார். அப்பேர்ப்பட்ட வீரர் களை இன்று ராஜபுதனத்தில் காணோம். சிந்தியாவுக்குப் பதில் வேறு யாராவது இங்கு
வந்திருந்தால், இந்த மேவாரின் கதி என்னவாயிருக்கும்?” இந்தக் கேள்விகளை மிகுந்த உக்கிரத்துடன் கேட்டார் அம்பாஜி. “இங்கு நான் கணக்கு எழுதுகிறேன் தீப்சந்த். இது பலமற்ற வெட்டிக் கணக்கு. என் தலையெழுத்தை எழுதுகிறேன் இந்த ஏடுகளில்.” என்று
வெறுப்புடன் சொன்னார்.
தீப்சந்தின் உள்ளம் வெட்கத்தால் வெடித்துக்கொண்டிருந்தது. “அம்பாஜி! நீங்கள் எழுதுவது உங்கள் தலை யெழுத்தையல்ல. ராஜபுதனத்தின் தலையெழுத்து அந்தக் கணக்கு ஏடுகளில் இருக்கிறது.” என்று கூறிவிட்டுத் தலை வணங்கிச் செல்ல முயன்றான்.
கூடாரத்து வாயிற்படி வரையில் சென்றுவிட்ட அவனை “தீப்சந்த்!” என்று குரல் கொடுத்தார் அம்பாஜி.
தீப்சந்த் தலையை மட்டும் திருப்பி அம்பாஜியைப் பார்த்தான். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை.
அம்பாஜி சொன்னார். “தீப்சந்த்! இந்த ஏற்பாட்டில், சலூம்பிராவின் சரணாகதியில், நீ தலையிடாதே.” என்று.
பதிலேதும் சொல்லாமலே தீப்சந்த் வெளியே சென்று விட்டான். அன்று மாலையும் இரவும் அவன் அந்த வட்டாரத்திலேயே காணப்படவில்லை. அவன் வராது போகவே புஷ்பாவதி மனம் கலங்கி, “அப்பா! இன்னும் அவர் வரக் காணோமே?” என்று வினவினாள்
துன்பத்துடன்,
“எப்படியும் காலையில் வந்துதான் ஆகவேண்டும்.” என்றார் சிந்தியா.
“ஏன் வரவேண்டும் அவர்?”
“நாளை சலூம்பிரா சரணடைகிறார். உடனடியாக மகாராணா சித்தூருக்குள் பட்டணப் பிரவேசம் செய்வார். அதை தீப்சந்த் காண வேண்டாமா? கண்டிப்பாய் வருவான் ; கவலைப்படாதே.” என்றார் சிந்தியா.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தீப்சந்த் வரவில்லை குறித்த சமயத்தில் சலூம்பிரா சித்தூர் கோட்டை வாசல்களைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். மாதாஜி சிந்தியா அவரை வரவேற்று மகாராணாவிடம் அழைத்துப் போனார். மகாராணாவின் பாதங்களைத்
தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார் சலூம்பிரா. பிறகு சலூம்பிராவின் வலது கையைப் பிடித்து ராணாவின் வலது கையில் “இனி இவர் உங்கள் அபயம்” என்று கூறிக் கொடுத்தார். சலூம்பிராவிது பாணிக்கிரணத்தில் சரணாகதிப் படலம் முடிந்தது. அந்தச்
சமாதானத்தில் மேவார் பிழைத்தது என்று எல்லாரும் நம்பினார்கள். நம்பாத ஒருவன் அந்த விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. ராணா பீம்சிங் தனது மூதாதைகளின் தலை நகரான சித்தூருக்குள் நுழைந்ததும் சலூம்பிராவிடம் ஒரு ஓலை
கொடுக்கப்பட்டது.
அதைப் பிரித்துப் படித்த சலூம்பிரா திக்பிரமை அடைந்தார். அவர் முகத்தைப் பேரதிர்ச்சி ஆட் கொண்டது.