Jala Mohini Ch31 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
ஜலமோகினி – சாண்டில்யன்
அத்தியாயம் – 31. இரண்டாவது கண்டம் படிப்பது
Jala Mohini Ch31 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
காலைக் கதிரவன் சுடு கிரணங்கள் மேலைச் சமுத்திரத்தின் ஓரங்களைச் சற்றே தொட்ட நேரத்தில் தமானா நதிக்கரையில் மாலுமிகளின் பேரிரைச்சல் காதில் விழவே, மஞ்சத்திலிருந்து துள்ளி எழுந்த பத்மினி குடிசைத் திரையை விலக்கிக்
கொண்டு வாயிலில் வந்து சத்தம் வந்த திசையை நோக்கினாள். நதிக்கரையில் கூட்டமாக நின்றிருந்த மாலுமிகள் சமுத்திரத்துக்காகக் கைளை நீட்டி இரைந்து பேசுவதையும் பின்பு அக்கூட்டம் திரும்பித் தன் குடிசைக்காக
நகருவதையும் கவனித்த அவளுக்கு முந்திய இரவு ரகுதேவ் குறிப்பிட்ட இரண்டாம் ஆபத்து இதுதான் என்பதை ஊகிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. ஆகவே குடிசை வாயிலில் நின்றிருந்த ரகுதேவைக் கூப்பிட்டு, “இதுதான் நீங்கள்
குறிப்பிட்ட இரண்டாவது கண்டமா?” என்று வினவினான்.
தீவிர சிந்தனையிலிருந்த ரகுதேவ், “ஆமாம் பத்மினி!” என்று பதில் சொல்லிவிட்டுக் கடல் பிராந்தியத்தை உற்றுக் கவனித்து மெள்ளப் புன்முறுவலும் செய்தான்.
அந்த நேரத்தில் அவன் எதற்காகச் சிரிக்கிறானென்பதைப் பத்மினியால் புரிந்துகொள்ள முடியாததால், “எதைக் கண்டு சிரிக்கிறீர்கள்?” என்று சற்றுக் கோபமாகவே கேட்டாள்.
“ஆபத்தைக் கண்டு.”
“ஆபத்தைக் கண்டு சந்தோஷமா?”
ஆமாம்.”
“என்ன அப்பேர்ப்பட்ட சந்தோஷம்?”
“என் மனத்துக்குச் சாந்தியளிக்கக்கூடிய மகிழ்ச்சி இந்த ஆபத்தால் ஏற்பட்டிருக்கிறது பத்மினி.”
“எது உங்கள் மனத்துக்கு சாந்தியளிக்கக்கூடியது?”
“உன் விடுதலை.”
“என் விடுதலைக்கும் இந்த ஆபத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?”
“சீக்கிரம் நீயே புரிந்து கொள்வாய் பத்மினி. நம்மை நோக்கிவரும் ஆபத்து பிரும்மாண்டமானதுதான். ஆனால், அதிலும் ஒரு நன்மை கலந்திருப்பதால் நான் மகிழ்ச்சியே அடைகிறேன். மாலுமிகள் வந்ததும் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளால்
சிறிதும் கலங்காதே. நான் எதைச் சொன்னாலும் மறுக்காமல் செய்.”
“நான் மறுக்கும்படியாக என்ன சொல்வீர்கள்?”
“எதையும் சொல்வேன். என்மேல் உனக்கு அன்பிருந்தால் செய்” என்றான் ரகுதேவ்.
“ஏன் அதில் உங்களுக்குச் சந்தேகமா?” அவள் வினவினாள். அந்தக் கேள்வியைக் கேட்டபோது அவள் உதடுகள் துக்கத்தால் துடித்தன. ஏதோ பேராபத்திலிருந்து தன்னை விடுவிக்க ரகுதேவ் ஏற்பாடு செய்கிறான் என்பது மட்டும்
அவளுக்குத் திட்டமாகத் தெரிந்துவிட்டது. மேற்கொண்டு அவனை ஏதேதோ கேட்க வாயெடுத்தாள். ஆனால் அதற்குள்ளாக மாலுமிகள் கூட்டம் அவர்களை நெருங்கி வளைத்துக் கொண்டது.
கூட்டத்தின் முன்னணியில் வந்த ரஹீம் மிகுந்த கோபத்துடன், “வேலை முடியட்டும்” என்றான், தனது ஒற்றைக் கண்ணைப் பயங்கரமாகச் சுழற்றிக் கொண்டே. அடுத்த விநாடி பல வாட்கள் ஆகாயத்தில் எழுந்தன. எப்பொழுதும்
ரகுதேவின் பக்கம் பேசக்கூடிய கலிபுல்லா கூட ரஹீமின் உத்தரவை ஆட்சேபிக்காமல் பேசாமல் நின்றான். கல்லான அவன் முகத்தில் சுரணை அடியோடு வற்றிப் போயிருந்தது.
அத்தனை ஆபத்திலும் கண்ணெதிரே கத்திகள் எழுந்த அந்தச் சமயத்திலும் பலமாகச் சிரித்த ரகுதேவ், “ஒருவனைக் கொல்ல எத்தனைக் கத்திகள்? எத்தனை வீரர்கள்? ஏன் உங்கள் யாரிடமும் துப்பாக்கியில்லையா? கூட்டமாக வந்தீர்கள்?”
என்று வினவினான்.
“அவனைப் பேச விடாதீர்கள். பேசினால் நம்மை மீண்டும் ஏமாற்றிவிடுவான். இந்த முறை அவன் தப்பக் கூடாது” என்று கர்ஜித்தான் ரஹீம்.
“ரஹீம்! உன் அஜாக்கிரதையை மறைக்க என் வாயை மூடப் பார்க்கிறாயா? உன்னால் எதிரிக்குப் பலியாகப் போகும் இந்த மாலுமிகளிடமிருந்து உன் குற்றத்தை மறைப்பதற்காக என்னைப் பலி கொடுக்கப் பார்க்கிறாயா? அது நடவாது
ரஹீம்! என்னைக் கொல்ல அட்சேபணையில்லை. ஆனால் மாலுமிகளுக்கு யார் துரோகி என்பதை இங்கு நான் விளக்கிய பிறகே என்னைக் கொல்லவிடுவேன்” என்று நிதானமான ஆனால், உறுதியான குரலில் பேசிய ரகுதேவைப்
பார்த்துக் கலிபுல்லா கேட்டான், “ரகுதேவ்! உன்னால்தானே நாங்கள் தமானாவுக்கு வந்தோம்?” என்று.
“ஆமாம்” என்றான் ரகுதேவ்.
“அதோ தமானா முகத்துவாரத்தைக் கவனி” என்று முகத்துவாரத்துக்காகக் கையைச் சுட்டிக் காட்டினான், கலிபுல்லா.
அப்பொழுதுதான் ரகுதேவுக்குப் பின்னால் நின்றிருந்த பத்மினி, முகத்துவாரத்தைக் கவனித்தாள். மாலுமிகளின் கலவரத்துக்குக் காரணமும் அப்பொழுதுதான் அவளுக்குப் புரிந்தது. தமானா முகத்துவாரத்தை மறைத்து நின்ற
ஜலமோகினிக்கு அப்பால் அந்தக் கப்பலை வளைத்த வண்ணம் மூன்று கப்பல்கள்: நின்றிருந்தன. மத்தியிலிருந்த பெரிய கப்பலின் பாய்மரத்தின் உச்சியில் மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தது.
பத்மினி பயத்தால் மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டாள். சற்று முன்பாக ரகுதேவ் பேசிய பேச்சுக்களின் அர்த்தம் சிறிது சிறிதாக அவளுக்கு விளங்கத் தொடங்கியது.
கலிபுல்லா முகத்துவாரத்தைச் சுட்டிக் காட்டியபின்பும் அந்தப் பக்கத்தில் கண்களைச் செலுத்தாத ரகுதேவ், “கப்பல்களை நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன்” என்றான்.
“யார் கப்பல்கள்?”
“தெரியுமே, மகாராஷ்டிரக் கடற்படை. நடுவிலிருப்பது கனோஜி ஆங்கரேயின் சொந்தக் கப்பல். அவரிடம் உபதளபதியாகச் சேவை செய்திருக்கும் எனக்கு இதுகூடவா தெரியாது?”
“தெரிந்துமா சும்மாயிருக்கிறாய்?”
“சும்மா இல்லாமல் என்ன செய்வது? ஆங்கரே வந்ததால் என் கவலையெல்லாம் தீர்ந்துவிட்டது.”
“ஏன்?”
“இங்கிருந்தால் நீங்கள் கொல்வீர்கள். ஆங்கரேயிடம் அகப்பட்டால் அவர் தூக்கில் போடுவார். சாவதானால் எப்படிச் செத்தால் என்ன?”
“கனோஜி ஆங்கரே உன்னைத் தூக்கில் போடுவானேன்” கடுமையாகக் கேட்டான் ரஹீம்.
“காரணம் கலிபுல்லாவுக்குத் தெரியும். கடற்படை உத்தியோகத்தை விட்டுக் கொள்ளைக் கூட்டத்தோடு சேரும் உத்தியோகஸ்தனுக்குத் தண்டனை என்ன தெரியுமா உனக்கு? தெரியாவிட்டால் கலிபுல்லாவைக் கேள்” என்றான்
ரகுதேவ்.
ரகுதேவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மாலுமிகளிடம் சற்றுக் குழப்பமுண்டாகியது. சில மாலுமிகள் வாட்களை உறையில் போட்டார்கள். தன்னை விட்டு ஓடிப் போன உத்தியோகஸ்தனைத் தன் கப்பல் தளத்திலேயே ஆங்கரே
தூக்குப் போட்டு ஒழித்து விடுவாரென்பதை நன்றாக உணர்ந்திருந்த மாலுமிகள் ரகுதேவின் உயிரும் திண்டாட்டத்திலிருப்பதென்ற எண்ணத்தால் சற்றுச் சமாதானப்பட்டனர். ஆனால், ரஹீம் மட்டும் சந்தர்ப்பத்தை நழுவவிட
இஷ்டப்படாமல், “நீதானே எங்களை இங்கு அழைத்து வந்தாய்? ஆகையால் இந்த ஆபத்துக்கு நீதானே பொறுப்பாளி?” என்று வினவினான்.
பளீரென்று வந்தது ரகுதேவின் பதில்: “இங்கு அழைத்து வந்தது நான்தான். ஆனால், இந்த இக்கட்டுக்குப் பொறுப்பாளி நானல்ல. நீயும் உன் தோழன் ஸித்தி அஹமத்தும்தான்.”
“நாங்களா!” திகைத்துக் கேட்டான் ரஹீம்.
“ஆமாம்! உங்கள் கப்பல் பழுது பார்க்கப்படுவதால் ஜலமோகினியைப் பீரங்கிகளுடன் முகத்துவாரத்தில் நிறுத்தினேன். பீரங்கிகளை ஜலமோகினியிலிருந்து ஸித்தி அஹமத் ஏன் நீக்கினான்? பீரங்கிகள் அந்தக் கப்பலில் இருந்து,
கப்பலையும் கடல் முகத்துவாரத்துக்குள் நன்றாக இழுத்தால் முகத்துவார மரங்களின் மறைவிடத்திலிருந்து எதிரிக் கப்பல்களுக்குப் பதில் சொல்ல ஜலமோகினி ஒன்றே போதுமே! சரி, பீரங்கிகளைத்தான் நீக்கினீர்கள். அந்தப்
பீரங்கிகளை நதி முகத்துவாரத்தின் இரு கரைகளிலும் பொருத்தி எதிரி யாராவது வந்தால் தடுக்க ஏற்பாடாவது செய்தீர்களா? இதற்கெல்லாம் உங்களுக்கு அவகாசமேது? உன் தலைவன், என் மனைவி கிடைப்பாளா என்று பார்த்துக்
கொண்டிருந்தான். நான் ஓடிவிடாதிருக்க, கப்பல்களிலிருந்து பீரங்கிகளைக் கழற்றினான். அப்பொழுதெல்லாம் உபதலைவனான நீ ஏன் தடுக்கவில்லை?” என்று உக்கிரமாக வினவினான் ரகுதேவ்.
“ஏன் தடுக்கவில்லை? ஏன் தடுக்கவில்லை?” என்று மாலுமிகளும் கூவினார்கள். சிலர், “ரஹீமை வெட்டிப் போடு” என்று கத்தினார்கள்.
ரகுதேவ் பழியைத் தன்மீதே திருப்பி விட்டதைக் கண்ட ரஹீம் பயத்தால் வெலவெலத்துப் போனான். அதே சமயத்தில் கனோஜி ஆங்கரேயின் கப்பலில் சப்தித்த பீரங்கியிலிருந்து எழுந்த குண்டு ஒன்று பழுது பார்க்கப் பட்டுப் பாதி
நிலத்திலும் பாதி ஜலத்திலும் சாய்ந்து கிடந்த கொள்ளைக்காரர்களின் கப்பலைப் படு தூளாக்கியது. இதைத் தொடர்ந்து சில துப்பாக்கிகள் ஆகாய மார்க்கத்திலும் சுடப்பட்டன.
“பயப்படாதீர்கள். ஆங்கரே நம்மை ஒன்றும் செய்ய முடியாது. நம்மைச் சரணாகதியடையச் சொல்லவே துப்பாக்கிகள் ஆகாயத்தில் சுடப்பட்டன. சீக்கிரம் கரையோரம் சென்று நம் சம்மதத்தைத் தெரிவிக்க ஒரு வெள்ளைக் கொடியை
எடுத்து உயரத் தூக்கி ஆட்டுங்கள், இதோ நான் வருகிறேன்” என்று துரிதப்படுத்திய ரகுதேவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு மாலுமிகள் தமானாவின் நீர்க்கரைக்கு ஓடினார்கள்.
அவர்கள் போனதும் பத்மினியை நோக்கிய ரகுதேவ், “பத்மினி! நீ உன் சாமான்கள் ஏதாவதிருந்தால் கட்டி வைத்துக் கொள். பீம்ஸிங்கையும் ரஜனிகாந்தையும் புறப்படத் தயாராயிருக்கச் சொல்” என்று கூறினான்.
“எங்கு போவதற்கு?” என்றாள் பத்மினி.
“ஆங்கரேயின் கப்பலுக்கு” என்று கூறிய ரகுதேவ் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் கனவேகமாக நீர்க் கரைக்கு ஓடினான்.