Jala Deepam Part 1 Ch16 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 16 தூது
Jala Deepam Part 1 Ch16 | Jala Deepam | TamilNovel.in
இதயசந்திரன் திடீரெனக் கதவைத் திறந்ததற்குக் காரணமே, கதவுக்கு வெளியிலிருந்தது யாராயிருந்தாலும் அவரை நிலைகுலையச் செய்து தனது கைத்துப்பாக்கியின் குறியில் அவரை நிறுத்தவேண்டுமென்பதுதான். ஆனால் கதவுக்கு வெளியிலிருந்தவர் கதவை ஒட்டி நின்றிருந்த படியாலும் கதவைத் திறந்தவுடன் தடாலென்று அவன் மீது விழுந்து அவனையும் பூமியில் தள்ளி தரையில் கிடந்ததாலும், இதயசந்திரன் எச்சரிக்கையும் முன்னேற்பாடும் தளர்ந்து போனதன்றி, பாதுகாப்புக்கான கைத்துப்பாக்கியும் எட்ட விழுந்துவிடவே அவன் ஒரு விநாடி திணறவே செய்தான். அந்தத் திணறல் மட்டும் கோபத்தின் விளைவாகவோ எதிரியைச் சமாளிக்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்தின் விளைவாகவோ இருந்தால், தன்னைத் தள்ளியவரை ஒதுக்கித் தள்ளி, கைத்தப்பாக்கியிருந்த இடத்தை நோக்கித் தாவவோ கைநீட்டி அதைப் பற்றவோ முயன்றிருப்பான். அத்தகைய முயற்சி எதையும் செய்யும் நிலையில் அவன் இல்லை. அவனிடமிருந்து கிளம்பிய திணறலின் ‘ஊம்’ காரம்கூட அச்சம் கலந்த வியப்பின் காரணமாக ஏற்பட்டதால் தன்னைத் தள்ளிய வரை நோக்கிக் கோபிப்பதற்குப் பதில் ‘மன்னிக்க வேண்டும்… மன்னிக்கவேண்டும்” என்ற சொற்களே அவனிடமிருந்து வெளிவந்தன.
தள்ளப்பட்ட அவன் கோபிப்பதற்குப் பதில் தள்ளிய வரே சினத்தைக் காட்டி, ”உங்களுக்குப் புத்தி இருக் கிறதா?” என்று சீறினார்.
தன்னை மோதித் தள்ளிச் சற்று அப்பால் விழுந்து விட்ட பானுதேவி ஆடைகளைச் சரி செய்துகொண்டு தன்னை நோக்கிச் சீறியதைக் கண்ட இதயசந்திரன் பதில் ஏதும் சொல்லத் தெரியாமல் விழித்தான். பிறகு மெல்ல எழுந்திருந்து நின்று கொண்டு, ”கதவைத் தட்டியது நீங்களென்று தெரியாது. ஒரு குரல் கொடுத்திருந்தால்…..’ என்று சொற்களை மென்று விழுங்கினான்.
பானு தேவி அவனைப்போல் எழுந்திருக்கவுமில்லை. பணிவுடன் பேசவும் இல்லை. விழுந்த இடத்தில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து முழந்தாள்களைத் தனது இரு கைகளாலும் கட்டிக்கொண்டு அவனை நோக்கி வெகு அலட்சியமாகப் பார்த்து. ”உங்களுக்குப் புத்தியில்லை யென்பது தெளிவாகத் தெரிகிறது” என்று வெறுப்பு மண்டிய குரலில் கூறினாள்.
இதயசந்திரன் அவளோடு அந்தச் சமயத்தில் வாதாட இஷ்டமில்லை. ஆதலால் மௌனமாகவே நின்றான் அவள் எதிரே. அவள் அந்த இரவில் தனது அறைக்கு வந்ததற்கும் கீழே விழுந்து விட்டதற்கும் தானே காரணமென்று நினைத்ததால் ஏதோ பெரும் தவறைச் செய்துவிட்ட எண்ணம் அவன் மனத்தை அரித்துக்கொண்டிருந்தது. அத்துடன் அவள் அங்கிருப்பதை யாராவது அறிந்து விட்டால் என்ன செய்வதென்ற பீதியும் அவன் உள்ளத்தைப் பீடித்தது.
ஆனால் அத்தகைய உணர்ச்சிகளால் பாதிக்கப்படாத பானுதேவியோ அவனை உஷ்ணத்துடன் நோக்கி, “இந்த இரவில் நான் உங்கள் அறைக்கு வந்து கதவைத் தட்டு வதை யாராவது பார்த்தாலே விகற்பமாக அர்த்தம் செய்து கொள்வார்கள். நான் குரல் கொடுத்தால் விஷயம் திவ்வியமாயிருக்கும். இதுகூடப் புரியவில்லையா உங்களுக்கு?” என்று வினவினான்.
அதுவரை மௌனமாயிருந்த இதயசந்திரன். ”ஷாஹு மகாராஜாவின் மருமகள் ஓர் அற்ப வீரனின் அறைக் கதவை இரவில் தட்டுவாரென்று ஊகிக்கும் அளவுக்கு என் புத்தி வேலை செய்யவில்லை. கதவைத் தட்டிய பிறகு. குரல் கொடுப்பதால் மட்டும் எதுவும் முழுகிப் போய்விடாது” என்று பணிவுடன் கூறினான்.
அவன் சொற்களில் உறைந்து கிடந்த பொருளை ஊகிப்பது பானுதேவிக்குச் சிறிதும் கஷ்டமாயில்லை. அந்த ஊகத்தின் விளைவாக அவள் வெட்கப்படவோ சங்கடப்படவோ இல்லை. லேசாகச் சிரிக்கவே செய்தாள். சிரித்து அவள் சொன்ன சொற்கள் இதயசந்திரனுக்கே சங்கடத்தை விளைவித்தன. “வீரரே! நான் உங்களைக் காதல் புரிய வரவில்லை. அப்படிப் பிறர் நினைத்து விட்டால் என்ன செய்வது என்பதைத்தான் சுட்டிக் காட்டினேன்” என்றாள் ஷாஹுவின் மருமகள்.
இதயசந்திரன் சங்கடத்தால் தனது உடலை மெல்ல அசைத்தான் நின்ற நிலையில். அவள் சொற்கள் அவனை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டன. அவன் அவளை நன்றாக உற்று நோக்கினான். அந்த அறை விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவள் நாசியின் ஒரு பக்கத்திலிருந்த நத்தின் வைரங்களிரண்டு பளபளத்து. அவள் கண்கள் மீது தனி ஒளி பாய்ச்சியதால், சாதாரணமாகவே ஒளி பெற்ற அவள் கருவிழிகள் அதிக அழகாகப் பளிச்சிட்டன. அவள் முகத்திலும் பரவி உதட்டிலும் துளிர்த்திருந்த ஏளனப் புன்முறுவல் முகப்பொலிவை ஆயிரம் மடங்கு அதிகப் படுத்தியது. நடு வகுடெடுத்து வாரிப் பின்பகுதி அடியில் மட்டும் கட்டி அதன் கீழ் அவிழ்ந்தவண்ணம் தொங்கிக் கொண்டிருந்த நீள் குழல் .அவளும் நீராடியிருக்கிறாள் என்பதை அறிவுறுத்தியது. கீழே விழுந்த நிலையிலும் சற்றும் அகலாத மேலாடை எந்த அசந்தர்ப்பத்திலும் அவள் நிலை குலையாதவள் என்பதை அறிவுறுத்தியது. கழுத்திலிருந்த அந்தப் புலிநகம் பதிக்கப் பெற்ற ஆபரணங்கூட இடமகலாதிருந்தது, விழுந்தபோதும் அவன் எத்தனை லாவகமாக விழுந்திருக்கிறாள் என்பதை உணர்த்தியது. நள்ளிரவு மோகினிபோல் அவள் உட்கார்ந்திருந்ததைக் கண்ட இதயசந்திரன் நீண்ட நேரம் மவுனமே சாதித்தான். அவன் உள்ளத்தில் ஓடிய உணர்ச்சிகளை அவன் மௌனத்திலிருந்தும் அவன் தன்னைப் பார்த்த தினுசிலிருந்தும் புரிந்து கொண்ட பானுதேவி அவன் மேலும் பீதியடையக் கூடிய அலுவலில் இறங்கினாள். உட்கார்ந்த நிலையிலிருந்து மெள்ள எழுந்திருந்து கதவை நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்தாள். பிறகு. உள்ளே இதயசந்திரனை நன்றாகச் சாத்தித் தாழிட்டாள்! பிறகு இதயசந்திரனை நோக்கி வந்து, ”வீரரே! மஞ்சத்தில் உட்காருங்கள். நான் உங்களிடம் பேச வேண்டியிருக்கிறது” என்றாள்.
“கதவு” என்று ஆரம்பித்த இதயசந்திரனை. “காரணமாகத்தான் சாத்தினேன்” என்று இடையிலேயே மறித்து. “வீரரே! அசாதாரணமான காலங்களில் சாதாரண சட்டதிட்டங்களை, ஒழுக்க முறைகளை, சமூக விதிகளை நாம் கடைப்பிடிக்க முடியாது. மகாராஷ்டிரத் தின் நிலை இன்று அசாதாரண நிலை. சதா பிறர் பொருள்களைச் சூறையாடுவதும் பெண்களைத் தூக்கிச் செல்வதும் ஆண்களைக் கொன்று குவிப்பதுமான சூழ்நிலையில் இன்று மகாராஷ்டிரம் இருக்கிறது. தவிர மகாராஷ்டிரர்களே இருகூறாகப் பிரிந்து ஒரு கூறு இன்னொரு கூறை அழிக்கும் விபரீத நிலையிலும் இருக்கிறது. நாட்டு நிலை ஒருபுறமிருக்க, நம்மிருவர் நிலையும் சாதாரண விதிகளை மீறியிருக்கிறது. அரச மாளிகையில் இருக்க வேண்டியவள் துறவி ஆசிரமத்துக்கு வந்திருக்கிறேன். மகாராஷ்டிர அரச குடும்பத்துடன் எந்தச் சம்பந்தமுமில்லாத உங்களுக்கும் ஒரு சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மற்றொரு வாரிசைத் தேடி நீங்கள் வந்திருக்கிறீர்கள். போதாக்குறைக்கு ஸாத் ஸித்தியோடும் மோதிவிட்டீர்கள். நம் இருவர் மீது சதா பிறர் கண்கள் இருந்து கொண்டிருக்கும். மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது கதவை மூடியதன் காரணத்தை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?” என்று வினவினாள்.
புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த இதய சந்திரன். “தேவி, நீங்கள் வரவேண்டிய அவசியமில்லை.
எனக்குச் சொல்லியனுப்பியிருக்கலாமே!” என்றான் உபசாரத்துக்கு.
”சொல்லியனுப்புவதானால் என் தோழிகளில் ஒருத்தியை அனுப்ப வேண்டும். அவர்களால் சாமர்த்தியமாக வந்துபோக முடியாது. ஆனால் பயப்பட வேண்டாம். நான் உங்களை நாடி வந்திருப்பது என் தோழிகளுக்குத் தெரியும்” என்று விளக்கினாள் பானுதேவி.
‘தோழிகளுக்குத் தெரியுமா?” என்று வினவினான் இதயசந்திரன் வியப்புடன்.
”தெரியும். தவிர தோழிகளும் அதிக தூரத்தில் இல்லை” என்று மேலும் சொன்னாள் பானுதேவி.
” அதிக தூரத்திலில்லையா!”
“இல்லை.”
”அப்படியானால் நீங்கள்…”
“இந்த விடுதியின் இடது. பக்கத்தில் தங்கியிருக்கிறோம். உங்களுக்கு வலது பக்கத்தை ஒழித்து விட்டிருக்கிறார்கள்.”
“இது யார் ஏற்பாடு?”
“சுவாமியின் ஏற்பாடு.’’
“துறவி ஆசிரமத்தில் பெண்கள் தங்கலாமா?”
”துறவி நான்கைந்து பெண்களைத் தனித்துத் தம்முடன் அழைத்து வரும்போது ஆசிரமத்திலேயே அவர்களுக்கு இடம் கொடுத்தால் என்ன முழுகிப் போய்விடும்?”
இதற்குப் பதில் சொல்ல இதயசந்திரனால் முடிய வில்லை. ஆகவே, கேள்வியை மாற்றி, ”நீங்கள் எதற்கு வந்தீர்கள் இப்பொழுது?” என்று வினவினான்.
பானுதேவியின் பதில் அவனுக்கு ஏற்கனவேயிருந்த சங்கடத்தையும் அதிர்ச்சியையும் ஆயிரமடங்கு அதிகப் படுத்தியது. “உங்களை அழைத்துப் போக” என்றாள் பானுதேவி.
“எங்கு?” என்று வினவினான் இதயசந்திரன்.
“இந்த ஆசிரமத்துக்கு வெளியே” என்று கூறினாள்.
“எதற்கு?”
“உங்களிடம் பேச வேண்டிய முக்கிய விஷயம் இருக்கிறது.”
“என்ன பேச வேண்டும்?”
“தனிமையில் சொல்லுகிறேன்.”
“இங்கு தனிமையில்லையா?”
”இருக்கிறது. ஆனால் உங்கள் அறைக்குள் நான் அதிக நேரமிருப்பது என் தோழிகளுக்குச் சந்தேகத்தை. விளைவிக்கும்.”
”வெளியே சென்றால் தோழிகள் சந்தேகப்பட மாட்டார்களா?”
“மாட்டார்கள். நான் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் திரிவது மகாராஷ்டிரத்தில் பிரசித்தம். அந்த விஷயத்தில் என்மீது யாருக்கும் சந்தேகம் வராது. புரவி மீது நேரம் காலம் இல்லாமல் நான் திரிவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பரபுருஷன் அறைக்கு நேரம் காலமில்லாமல் போவது சகஜமாயிருக்காது” என்ற பானுதேவி மெள்ள நகைத்துவிட்டு, ”வீரரே! நான் என் அறைக்குச் சென்று மாற்றுடை அணிந்து வருகிறேன். இந்த விடுதிக்குப் பின்புறம் என் காவலர் புரவிகள் கட்டப் பட்டிருக்கின்றன. பின்புறமிருக்கும் வழியும் கோவில் மதிளுக்குச் செல்கிறது. இன்னும் சற்று நேரத்திற்குள் அங்கு வந்து ஒரு புரவியை அவிழ்த்துக்கொண்டு வெளியே சென்று கோவில் தென்புற மதிள் சுவருக்கருகில் வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றுவிட்டாள் ஷாஹுவின் மருமகள்.
இதயசந்திரனுக்கு எல்லாமே சொப்பனம் போலிருந்தது. இப்படியொரு அரச குலமகள் இருக்க முடியுமென்று அவன் நினைத்துப் பார்க்கவும் முடியாதிருந்தது. அவள் துணிவும் அரசியலில் அவளுக்கிருந்த அபார சிரத்தையும் உற்சாகமும் அவன் உணர்ச்சிகளை உலுக்கியிருந்தன. மகாராணி தாராபாயின் துணிவைப்பற்றி அவன் கேட்டிருந்தான். ஆனால் அவளுக்கு ஒரு ஜோடி மகாராஷ்டிரத்தில் இருக்க முடியும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தவிர அவள் அழைப்புக்கு இணங்குவதா அல்லவாவென்ற சந்தேகமும் அவனை வாட்டி வதைத்தது. ‘முடியாதென்றால் அவள் அழைத்தவுடனல்லவா கூறியிருக்க வேண்டும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு பெருமூச்செறிந்தான். ஸாத் ஸித்தியிருக்கும் தருணத்தில் அந்தப் பரசுராம் பட்டணங்கூடத் தனக்கோ ஷாஹுவின் மருமகளுக்கோ பாதுகாப்பளிப்பது கஷ்டம் என்பதை இதயசந்திரன் நன்றாக உணர்ந்திருந்தான். பானுதேவியை அழைத்துக் கொண்டு அந்த இரவில் தனியே செல்வது’ பேராபத்து என்பதை அவன் மனம் சுட்டிக்காட்டியது. ”பெண் அழைக்கும்போது பேராபத் தைப் பற்றியோ வேறு விளைவுகளைப் பற்றியோ யார் கவனிக்க முடியும்! மாயமானைப் பிடிக்கப் பிராட்டி கட்டளையிட்டபோது பரந்தாமன் கவனித்தானா?” என்று புராண உவமை கூறி, தன் நடவடிக்கைகளுக்குச் சான்றையும் காட்டிக்கொண்டு வெளியே கிளம்ப வேண்டிய முஸ்தீப்புக்களைச் செய்து கொண்டான் அவன். மஞ்சத்தில் கிடந்த வாளை இடுப்புக் கச்சையில் கட்டிக் கொண்டு தரையில் கிடந்த கைத்துப்பாக்கியையும் சரி பார்த்துக் கச்சையில் செருகிக் கொண்டான். பிறகு மெள்ள கதவைத் திறந்து லேசாக வெளியில் மூடிவிட்டு அந்த விடுதியைச் சுற்றிப் பின்புறம் சென்றான்.
பானுதேவி கூறியதுபோல் அங்கு புரவிகள் நாலைந்து கட்டப்பட்டிருந்தன. அவள் கூறியதுபோல் பின்புறத்தில் நேர் வழியும் இருந்தது பரசுராமர் கோவில் மதிள் நோக்கி. மெள்ளப் புரவியொன்றை அவிழ்த்துச் சிறிது தூரம் அதன் மீது ஏறாமலே மெதுவாக அழைத்துச் சென்ற இதய சந்திரன் வெகு லாவகமாக அதன் மேல் தாவி மிக மெதுவாகவும் புரவிக் காலடி ஓசை அதிகமாகக் கேட்காமலும் மதினை நோக்கி நடத்தினான்.
பரசுராமன் கோவில் மதிளை அணுகியதும் பானுதேவி குறிப்பிட்ட இடத்தில் நின்று மலைச்சரிவை நோக்கினான். இருள் கவிந்து நின்ற நேரத்திலும் பரசுராம மலை மிகக் கவர்ச்சியுடன் காட்சியளித்தது. மலைக்குக் கீழே தெரிந்த வாசிஷ்டி நதியின் பிரவாகம் சற்றுச் சத்தத்துடனேயே ஓடிக்கொண்டிருந்தது! கிருஷ்ணபட்ச நிலவு தலை தூக்க வில்லையானாலும் நதி ஓரத்தில் தெரிந்த படகுத் துறையிலும், அதற்கப்பால் ஆடி நின்ற மரக்கலங்களிலும் ஒளி விட்டு விளக்குகள் அவசியமான வெளிச்சத்தைக் கொடுத்திருந்தன. ஆனால் வடபுறத்திலிருந்த தாமினிக் காட்டுப் பகுதி மட்டும் இருட்டில் கருமை தட்டிக் கிடந்தது. ஒரு பாதி இருளும் ஒரு பாதி ஒளியும் பெற்ற அந்த மலை வாழ்வின் இரவையும் பகலையும் போலவும், சுகதுக்கங்களைப் போலவும் இணைந்து கிடந்ததைக் கண்ட இதய சந்திரன் இயற்கையின் கம்பீரத்தையும் நியதியையும் எண்ணிப் பெரிதும் வியந்தான். அப்படி அவன் சூழ்நிலையைக் கண்டு வியந்திருந்த சமயத்தில் பானுதேவியும் ஒரு புரவியின் மீதமர்ந்து அவனிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள். வந்ததும் ஏதும் பேசாமல் தன்னைத் தொடரும்படி சைகை செய்து மலைச்சரிவில் புரவியைச் செலுத்தினாள். இதயசந்திரனும் ஏதும் கேட்காமல் அவளைத் தொடர்ந்து சென்றான்.
அந்த மலைச்சரிவு சில இடங்களில் சின்னஞ்சிறு புதர் களை உடையதாகவும் சில இடங்களில் வழுக்கைப் பாறை களை உடையதாகவும் இருந்தது. இன்னும் சில இடங்களில் உயர்ந்த மரக்கூட்டங்களும் இருந்தன. செப்பனிடப்பட்ட பாதைகூட அவர்கள் சென்ற பகுதியில் கரடுமுரடாயிருந்ததால் அந்தப் பாதையில் செல்லுவதே கஷ்டமாயிருந்தது இதயசந்திரனுக்கு. போதாக் குறைக்குப் பானுதேவி திடீரெனத் தனது புரவியைச் செப்பனிடாத குறுக்கு வழிகளில் செலுத்தினாள். குத்துக்குத்தான பாறைகளையும் சின்னஞ்சிறு புதர்களையும் அலட்சியமாகத் தாண்டித் தாண்டிச் சென்றாள். இதய சந்திரன் மலைச்சரிவுகளில் புரவிகளை நடத்திப் பழக்கமில்லாத காரணத்தால் சற்று சிரமப்பட்டே அந்தப் பாறைகளையும் புதர்களையும் தாண்டினான்.
அவன் சங்கடத்தைப் பார்த்த அவன் மெல்ல நகைத்தாள். புரவி ஏற்றத்தில் அவளுக்கிருந்த உற்சாகம் அதிகமாகவே மலைச்சரிவில் கண்மண் தெரியாமல் கனவேகத்தில் புரவியைச் செலுத்தினாள் பானுதேவி. எந்த நிமிஷத்தில் அவள் விழுந்துவிடப் போகிறாளோ என்ற திகிலில் அபாயத்தையும் மறந்து தனது புரவியையும் ஓரளவு வேகமாகச் செலுத்திய இதயசந்திரன் சிறிது தூரத்திற்குப் பிறகு அவள் புரவியிலிருந்து கீழே குதித்து உட்கார்ந்த இடத்திற்குச் சற்றுத் தாமதித்தே வந்து அவளுக்குச் சற்று எட்ட உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்துக்கு வந்தாள் ஷாஹுவின் மருமகள். “வீரரே! உமது உதவி எனக்கு அவசரமாகத் தேவை’ என்று துவங்கினாள் அவள்.
”உத்தரவிடுங்கள் தேவி” என்றான் இதயசந்திரன் பணிவுடன்.
”எதுவாயிருந்தாலும் காரணம் கேட்காமல் செய்வீர்களா?”
”செய்வேன்.” உறுதியுடன் வந்தது இதயசந்திரன் பதில்.
“தூது செல்ல வேண்டும்” என்றாள் தேவி, அவன் மீது தன் கண்களை நிலைக்கவிட்டு.
”செல்கிறேன்” என்றான் இதயசந்திரன்.
‘யாரிடமென்று கேட்கவில்லையே” என்றாள் தேவி.
“சொல்லுங்கள்” என்றான் இதயசந்திரன்.
”ஸாத் ஸித்தியிடம்’ என்ற தேவியின் குரல் திடமாக ஒலித்தது.