Jala Deepam Part 2 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் –24 சிருஷ்டியும் அமைதியும்
Jala Deepam Part 2 Ch24 | Jala Deepam | TamilNovel.in
வேகமான உணர்ச்சியால் வெள்ளைக்கார வில்லியம் கிப்போர்ட் செய்துவிட்ட விவேகமற்ற அந்தச் செய்கையால் என்ன நேரிடுமோ என்ற எண்ணத்தாலும் திகிலா லும் பெரும் நிசப்தம் உலாவியது கனோஜியின் ஆஸ்தான மண்டபத்தில் ஒரு விநாடி. அடுத்துக் கிறீச்சென்று எழுந்த காதரைனின் குரல் ஆஸ்தான மண்டபத்தின் விபரீத அமைதியைக் கிழித்து விடவே, மண்டபத்துள் காவல் புரிந்த மகாராஷ்டிர வீரர்கள் வாளை உருவிக்கொண்டு வெள்ளையனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தனர். காதரைனும் மண்டபத்தின் கோடியிலிருந்த அறையின் முகப்பிலிருந்து விடுவிடுவென ஓடி வந்து இதயசந்திரன் ஆசனத்துக்கு எதிரே வந்ததும் மலைத்து நின்றாள். எதிரும் புதிருமாக இருந்த மகாராஷ்டிர உபதளபதியையும் கவர்னர் தூதுவனையும் மாறி மாறிப் பார்க்கவும் செய்தாள். ஒரு வினாடி. கிப்போர்ட்டுடன் வந்த வெள்ளைக் காவல் வீரர் இருவரும் கூட வாட்களை உருவிக் கொண்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துவிடக் கூடிய விபரீத நிலை அது. வில்லியம் கிப்போர்ட்டும் வெள்ளை வீரரும் அங்கேயே வெட்டப்பட்டு, சிரங்கள் மண்டபத்துள் உருளும் பயங்கர நிலை அது. எல்லோர் இதயங்களும் மிதமிஞ்சிய கிலியால் குதிரை போல் ஓடிக் கொண்டு அவரவர்களை சம்மட்டி போல் அடித்த நிலை அது. அத்தகைய பயங்கர நிலையைச் சிருஷ்டித்துவிட்டான் வில்லியம் கிப்போர்ட் உணர்ச்சி மிகுதியால். காதரைன் மணக்க இஷ்டப்படவில்லை. மருவ இஷ்டப்படுகிறாள் என்ற இதயசந்திரன் சொல்லைக் கேட்டதும் அதைவிட ஒரு பெரிய அவமானத்தை ஒரு பிரிட்டிஷ் பெண்மணிமீது யாரும் சுமத்த முடியாது என்ற நினைப்பாலும், அத்தகைய பேரவமானத்தை ஓர் இந்தியன் சுமத்திவிட்டானே என்ற ஆக்ரோஷத்தாலும், தனது கைகளில் அணிந்திருந்த, உறைகளிலொன்றை எடுத்து இதயசந்திரன் முகத்தில் சரேலென்று வீசிவிட்டான் வில்லியம் கிப்போர்ட்.
அந்தத் துணிவுக்கு அப்பொழுதே மரணப் பரிசு கிடைத்திருக்கும் கிப்போர்டுக்கு, இதயசந்திரன் மட்டும் வீரர்களை நோக்கிக் கண்களைக் காட்டாதிருந்தால் . அசாதாரண நிலைகளில் பெரும் நிதானத்தைக் காட்டுப் பயிற்சியைக் கனோஜியிடமிருந்து கற்றிருந்த தமிழன் தல் முகத்தில் எறியப்பட்டு மடியில் விழுந்து கிடந்த அந்த கையுறையைத் தனது ஒரு கையால் எடுத்துக் கொண் டான். பிறகு எதிரே தீவிழி விழித்துக் கொண்டிருந்த, தூதுவனைப் பார்த்து நிதானத்துடன் கூறினான்,, “கிப்போர்ட்! நீ மிகுந்த துணிவுள்ளவன்” என்று.
அந்த நிதானத்தைக் கண்ட கிப்போர்ட் பின்னுக்கு இரண்டடிகள் எடுத்து வைத்துக் கம்பீரமாக நின்றான். இதயசந்திரனை அச்சம் சிறிதுமில்லாத கண்களைக் கொண்டு நோக்கினான். “பிரிட்டிஷ் மக்கள் தங்கள் பெண்களின் மானத்தைப் பெரிதாக மதிக்கிறார்கள். அந்த மானத்திற்கு மாசு கற்பிக்கும்போது பிரிட்டிஷ் குடிமகன் எவனும் தனது உயிரைப் பெரிதாக நினைப்பதில்லை” என்றும் கூறினான்.
“எந்த பிரிட்டிஷ் பெண்ணின் மானத்துக்கு மாசு ஏற்பட்டுவிட்டது இப்பொழுது?” என்று உணர்ச்சி சிறிதுமற்ற குரலில் கேட்டான் இதயசந்திரன்.
கிப்போர்ட் காதரைனை நோக்கினான்… அவளும் அவனை நோக்கினாள். அவள் கண்களில் தெரிந்த கிலியைத் தவறாகப் பொருள் கொண்டான் கிப்போர்ட். அவள் கிலியெல்லாம் வலுவில் தமிழனைத்தான் சரசத்துக்கு அழைத்தது வெளியானால் தன் மானம் என்ன ஆவது என்பதால் ஏற்பட்டது. இதைப் புரிந்துகொள்ளாத கிப்போர்ட், கப்பலில் ஏதோ துராக்கிருதமாகத் தமிழன் நடந்து கொண்டிருக்கிறான் அவளிடம் என்றே நினைத்தான். கடற்போரில் இறந்து போன மிஸ்டர் சௌன் அவனுக்குச் சிறந்த நண்பனாதலாலும், காதரைனை மணப்பதில் பம்பாயில் சௌனிடம் போட்டி போட்டவ னாதலாலும், காதரைனிடம் அவனுக்கு முன்பு ஏற்பட்ட காதல் இப்பொழுதும் பூர்ணமாக இருந்ததாலும், இதய சந்திரன் சொன்ன பதில்களிலெல்லாம் பெரும் பிழைகளையும் காதரைன் நடத்தையிலெல்லாம் பெரும் கற்பையுமே கண்ட கிப்போர்ட் அவள் முகக்திலிருந்த உணர்ச்சிகளைப் பார்த்து, “இவளுக்குத்தான் மாசு, அதுவும் உன்னால் தான்” என்றான் காதரைனைச் சுட்டிக் காட்டி.
இதயசந்திரன் மஞ்சத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டு கிப்போர்ட்டின் கையுறையைத் தடவிக் கொடுத்தான். “கிப்போர்ட்! காதரைன் இதோ எதிரிலிருக்கிறாளே, என்னால் இவளுக்கு ஏதாவது களங்கம் உண்டா என்று நேரிடையாகவே கேட்டுப் பார்ப்பது தானே?” என்றான் நிதானத்துடன்.
“கேட்க வேண்டியதில்லை. அவள் முகம் சொல்கிறது” என்றான் கிப்போர்ட்.
“கிப்போர்ட்! தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது” என்றான் தமிழன்.
“பழமொழி எனக்குத் தேவையில்லை.”
“தேவை உண்டு. கேள். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.”
”விசாரணை தேவையில்லை. இவள் உன்னை மணக்க விரும்பவில்லை, ஆனால் அணைக்க விரும்புகிறாள் என்று சொல்கிறாய். அதுவே போதும் எனக்கு.”
இதயசந்திரன் இதைக் கேட்டதும் கிப்போர்ட்டின் மீதிருந்த கண்களைக் காதரைனை நோக்கித் திருப்பி “கேட்டி! நீ என்ன சொல்கிறாய் இதற்கு?” என்று வினவினான்.
காதரைன் விழிகள் கிலியால் பெரிதும் மலர்ந்தன. அவள் புத்தி வெகு துரிதமாக வேலை செய்தது. இதய சந்திரன் சொல்வதை அடியோடு மறுக்கவும் முடியாது. மறுத்தால் அவன் ஹர்கோவிந்த், இப்ரஹீம், பர்னாண்டோ மூவரையும் கொண்டு தான் சொல்வது சரியென்று நிரூபிப்பான். உண்மையை ஒப்புக் கொண்டால் கிப்போர்ட்டும் மற்ற வெள்ளையரும் தன்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆகவே மையமான ஒரு முறையைக் கையாண்டாள் காதரைன். பெண்ணின் சாகசத்துக்கு முன்னால் ஆணின் உண்மை எப்படிப் பயனற்றுப் போகும் என்பதைக் காட்டினாள். மெள்ள மரியாதையுடன் உரையாடலைத் தொடங்கி, “கனோஜியைப்பற்றி உலகமறியும். அவர் தளபதியின் முயற்சிகளைப்பற்றி ஏழை என் சொல்ல? அதுவும் நான் உங்களிடம் கைதி…” என்றாள் நிலத்தைப் பார்த்த வண்ண ம் பரிதாபக் குரலில்.
இதயசந்திரன் அவள் தந்திரத்தைப் புரிந்து கொண் டான். கனோஜியின் நடத்தையைப் பற்றிப் பயங்கர வதந்திகள் உலாவிய காலத்தில் தன்னைப்பற்றி எது சொன்னாலும் எதிரி வட்டாரங்களில் எடுபடும் என்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொண்டான் ஜல தீபத்தின் தளபதி.
“உன் மானத்திற்கு மாசு விளைவித்ததாக கிப்போர்ட் கூறுகிறான். அது உண்மையா?” என்று மீண்டும் வினவினான்.
“பெண்களைப்பற்றி புரட்டுகளைக் கிளப்புவதும், மாசு கற்பித்து மகிழ்ச்சி அடைவதும் புருஷர்களின் தனி உரிமை….” காதரைன் வாசகத்தை முடிக்காமல் மீதியை ஊகத்துக்கு விட்டாள். “நீ என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?” “முடியாதென்று முன்னமே சொல்லிவிட்டேன்.’ “ஏன்?” “காரணமும் சொல்லிவிட்டேன்.” ”என்னைக் காதலிக்கவில்லையா நீ”
காதரைன் இதயசந்திரனைப் பார்க்காமல் பதிலுக்குக் கிப்போர்ட்டை நோக்கினாள். “வில்லியம்! நான் இதற்குப் பதில் சொல்ல வேண்டுமா?” என்று வினவினாள் துக்கம் தொண்டையை அடைக்க.
வில்லியம் கிப்போர்ட் அந்த ஆஸ்தான மண்டபமே அதிரும்படியாகக் கூவினான், “வேண்டியதில்லை!” என்று. ஒரு தாண்டில் சென்று காதரைனுக்கு அருகில் நின்று கொண்டு அவளது இடுப்பைப் தனது கையால் இழுத்து அணைத்தும் கொண்டான். அத்துடன் கூறினான்: “இவளை காப்பாற்ற என் உயிரையும் விடுவேன்” என்று.
”அதற்கு அவசியமிருக்கும்” என்று பதில் கூறிய இதயசந்திரன் வெள்ளைக்காரனும் வெள்ளைக்காரியும் இணைந்து நின்ற காட்சியைப் பார்த்தான். அத்தகைய இருவர், மணம்புரிவதில் அர்த்தமிருக்கிறது என்று நினைக்கவும் செய்தான். இருப்பினும் இந்தச் சாகசக்காரியிடம் வீரனான கிப்போர்ட் அகப்பட்டுக் கொள்ளப் போகிறானே என்று பரிதாபமும் கொண்டான். தனது கையிலிருந்த வெள்ளையன் கையுறையையும் பார்த்தான். பிறகு கேட்டான், “கிப்போர்ட்! பிறரைச் சண்டைக்கு அழைக்க இப்படிக் கையுறையை முகத்திலெறிவது வெள்ளையர் வழக்கமா?” என்று.
“ஆம். தொன்றுதொட்ட பழக்கம். இதற்கு எங்கள் மொழியில் ‘சாலஞ்ச்’ என்று பெயர்” என்றான் கிப்போர்ட்.
“நான் உன்னிடம் சண்டையிட மறுத்தால்?” என்று வினவினான் தமிழன்.
“நீ கோழை என்று உலகம் தூற்றும்.”
“உலகமென்றால்?”
“வெள்ளையர் உலகம்.”
”சரி. வெள்ளையர் உலகத்தில் தூதுவனைக் கொல் வது சரியென்று மதிக்கப்படுகிறதா?” என்று மற்றுமொரு கேள்வியை வீசினான் தமிழன்.
இதைக் கேட்ட கிப்போர்ட் சிறிது சங்கடப்பட்டான்.. தூதுவரைக் கொல்லக் கூடாதென்ற சம்பிரதாயத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு தன்னுடன் போரிடத் தமிழன் மறுத்துவிட்டால் என்ன செய்வது என்றும் குழம்பினான். சிறிது சிந்தித்துவிட்டுக் கூறினான்: ” அதற்கு ஒரு வழி’ இருக்கிறது” என்று.
“என்ன வழி?’ என்று வினவினான் ஜல தீபத்தின் தளபதி.
“இந்தச் சண்டையை நானே வலுவில் வரவேற்றதாக வும், விளைவுக்கு நீங்கள் பொறுப்பாளியல்லவென்றும் ஒரு. கடிதம் எழுதிக் கொடுத்துவிடுகிறேன். அதை நீங்கள் கவர்னருக்கு அனுப்பினால் உங்கள் பெயருக்கு ஏதும் மாசு ஏற்படாது. ஆனால் அதற்கு அவசியமேது?” என்றான் கிப்போர்ட்.
“ஏன் அவசியமில்லை?”
“போரில் நான் உங்களைக் கொல்வது நிச்சயம். உங்களைக் கொன்றதற்காக உங்கள் மாலுமிகள் என்னைக் கொன்று விடுவார்கள். ஆகையால் கடிதம் பயனற்றுப் போய்விடும்.”
சிருஷ்டியும் அமைதியும் இதைக் கேட்ட இதயசந்திரன் வியப்பின் வசப் பட்டான். வெள்ளையனின் தன்னம்பிக்கையை நினைத்தும் போர்த் திறமையில் அவனுக்கு இருந்த அவநம்பிக்கையை நினைத்தும் புன்முறுவலும் கோட்டினான். அவன் வீரத்தையும் துணிவையும் எண்ணி மரியாதையும் காட்ட முடிவு செய்து கிப்போர்ட்டை நோக்கி, “கிப்போர்ட்! இரவு ஏறிவிட்டது! நன்றாக உண்டு படுத்துறங்குங்கள். நாளைக் காலையில் உங்களிஷ்டப்படி போரிடுவோம். உங்களுக்கு எந்த ஆயுதங்களில் நல்ல பயிற்சி உண்டோ அந்த ஆயுதங்களைக் கொண்டே போரிடுவோம்…” என்று சொல்லிக்கொண்டே போனவனைத் தடை செய்த கிப்போர்ட், “இல்லையில்லை. உங்கள் மீது கையுறை எறிந்தது நான். ஆகவே, உங்களுக்கிஷ்டமான ஆயுதங் களைக் கொண்டு போரிடுவது உங்கள் உரிமை” என்று கூறினான்.
இதயசந்திரன் ஆசனத்திலிருந்து எழுந்தான். “கிப்போர்ட்! அந்த உரிமையை நான் விட்டுக் கொடுக்கிறேன். நீங்கள் தூதுவர். என் கோட்டையில் இருக்கிறீர்கள். உங்களுக்கும் போரிடும் வசதியளிப்பது எனது கடமை” என்று மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் கூறிய இதயசந்திரன் வீரர்களை அழைத்து, “தூதுவருக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுங்கள்” என்று உத்தரவிட்டான். அத்துடன் காதரைனைச் சுட்டிக் காட்டி, “இந்தக் கைதியை அவள் அறைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றும் உத்தரவிட்டான். கடைசி உத்தர வில் காதல் மறைந்து கடுமை துவங்கியது.
வீரர்கள் இருவரையும் அணுகினர். கிப்போர்ட். மகாராஷ்டிர வீரர் வழிகாட்ட தனது மெய்க் காவலர் தொடர, ஆஸ்தான மண்டபத்திலிருந்து வெளியே சென்றான். காதரைனை இரு வீரர்கள் அந்த ஆஸ்தான மண்டபத்தில் ஒரு கோடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். மற்ற வீரர்களையும் போகச் சொன்ன இதய சந்திரன் நீண்ட நேரம் தனித்து மஞ்சத்தில் உட்கார்ந்திருந்தான் அந்தப் பெரும் ஆஸ்தான மண்டபத்தின் நடுவே, அன்றுவரை பெண்களிடமிருந்த மதிப்பெல்லாம் அவன் இதயத்திலிருந்து பறந்து கிடந்தது. காதரைனின் திடீர்த் திருப்பம் அவன் மனத்தை வெடிக்கச் செய்துவிடும் போலிருந்தது. ‘வாழ்வில் பானுதேவி வந்தாள்; அரசியல் வேலைக்கு என்னை உபயோகித்துக்கொள்ள என்னிடம் சரசமாடினாள். மஞ்சு வந்தாள்; மணக்கும் சமயத்தில் மறைந்தாள். காதரைன் வந்தாள்; வெள்ளைக்காரனைக் கண்டதும் காதலை மறுக்கிறாள், மறைக்கிறாள். காதலென்ன பூசணிக்காயா சோற்றில் மறைக்க? சே சே! பெண்கள் எத்தனை விபரீத ஜன்மங்கள்!’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். ‘கனோஜியின் வழிதான் சரி, அவருக்கு இன்றுவரை மூன்று மனைவிகள், எட்டு ஆசை நாயகிகள். அவர் என்ன கெட்டுவிட்டார்! நான் என்ன பயனடைந்துவிட்டேன்? ஆனால் கடமையிருக்கிறதே எனக்கு, மகாராஷ்டிரத்தின் மூன்றாவது வாரிசைக் கண்டு பிடிக்க?’ என்றும் நினைத்தான் அவன்.
நித்திரை வராதிருக்கவே, அரை ஜாமம் கழித்து, கடலிலிருந்து கோட்டைக்குள் வரும்படி வெட்டிவிடப் பட்டிருந்த கால்வாய்க்குச் சென்று அங்கிருந்த படகொன்றை அவிழ்த்துக் கொண்டு அதைத் துழாவச் செய்து தூரத்தே நின்ற ஜல தீபத்தை அடைந்தான். ஜல தீபத்தின் நூலேணியில் திடீரென ஏறிவந்த தளபதியைக் கண்ட வீரனொருவன் ஓடிச் சென்று ஹர்கோவிந்தை அழைத்தான். திகிலுடன் அடித்தளத்திலிருந்து இப்ரஹீமுடனும், பர்னாண்டோவுடனும் ஓடிவந்த ஹர்கோவிந்த், “தளபதி, என்ன இந்த நேரத்தில்…” என்று துவங்கி மேலே ஏதும் கேட்க முடியாமல் வார்த்தைகளை விழுங்கினான்.
“ஒன்றுமில்லை ஹர்கோவிந்த், இங்கு உறங்க ‘வந்தேன்” என்றான் தளபதி.
“கோட்டையில் சௌகரியமில்லையா!”
“அதிக சௌகரியமிருக்கிறது. கப்பலில் படுத்துப் பழகிவிட்டதால் அங்கு உறக்கம் பிடிக்கவில்லை. நான் படுத்துக் கொள்கிறேன். விடியற்காலையில் சுக்ரோதயத்தின் போது என்னை எழுப்பிவிடு. நீங்கள் மூவரும் என்னுடன் கோட்டைக்கு வர ஆயுதம் தரித்துத் தயாராயிருங்கள்” என்று உத்தரவிட்டுத் தனது அறையை நோக்கிச் சென்றான்.
அதுவரை அந்த அறை காதரைனுக்காக ஒழித்து விட்டிருந்த அறை. அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த விளக்கை ஏற்றினான் இதயசந்திரன். அறையில் அந்தப் பஞ்சணை அவனை நோக்கி நகைத்தது. நடந்த கதையெல் லாம் திரும்பச் சொல்லி நகைத்தது. அவனும் நகைத்தான் மெல்ல, தனது வாழ்வின் விசித்திரப் போக்கை நினைத்து. பிறகு படுத்தான் பஞ்சணையில். அந்த நிலையிலும் அது அவள் படுத்த பஞ்சணையென்ற நினைப்பு அவன் அமைதி யைக் குலைக்கவே செய்தது. “ஆண்களின் அமைதியைக் குலைக்கவே பெண்கள் பிறக்கிறார்கள். இதற்காக ஒரு. சிருஷ்டியா?” என்று அவன் வாய் முணுமுணுத்தது.