Jala Deepam Part 2 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் –27 அசரீரி
Jala Deepam Part 2 Ch27 | Jala Deepam | TamilNovel.in
ஆசை அறுபடும்போது விரக்தி உதயமாகிறது. மன உறுதியால் ஆசை அறுபட்டால் விரக்தி நிச்சயமாகிறது. நிலைத்து நிற்கிறது. ஏமாற்றத்தால் ஆசை அறுபடுமானால் விரக்தி அர்த்தமற்றதாகிறது. நிலைத்து நிற்ப தில்லை. விரக்தியின் விளைவு விளக்கத்தையும் ஆனந்த நிலையையும் தருவதற்குப் பதில் குழப்பத்தையும் துன்பத்தையுமே தருகிறது. அத்தகைய குழப்பத்திலும் துன்பத்திலுமே அடுத்த ஒரு மாதத்தைக் கழித்தான் இதய சந்திரன். மும்முறை கண்ட ஏமாற்றத்தின் விளைவு அவன் இதயத்தில் அர்த்தமில்லாத விரக்தியை ஏற்படுத்தியிருந்ததால் அர்த்தமில்லாத பல காரியங்களையும் செய்து வந்தான் தமிழக வீரன். கனோஜி ஆங்கரேயால் கட்டு திட்டம் செய்து வைக்கப்பட்டிருந்த பிழையேதுமற்ற கொலாபா கோட்டைக் காவலை அடிக்கடி அனாவசியமாக மாற்றவும் முற்பட்டான். அந்த மாறுதல்களால் ஏற்படக் கூடிய தீமைகளைக் கோட்டைக் காவலன் விளக்கியபோது “சொல்வதைச் செய்” என்று அவன்மீது எரிந்து விழுந்தான். திடீரெனக் காரணமில்லாமல் இரவிலும் பகலிலும் படகை எடுத்துக்கொண்டு ஜல தீபத்திற்குச் சென்று அங்கேயே ஒரு பகலோ இரவோ தங்கிவிடும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டான். ஜல தீபத்தி லிருந்த அவனது உபதளபதிகளும் சரி, மற்ற மாலுமிகளும் சரி இதயசந்திரன் குணம் அடியோடு மாறிவிட்டதை உணர்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்குப் புரிந்திருந்ததால், அவர்கள் அவனை ஏதும் கேள்விகள் கேட்காவிட்டாலும் தங்கள் வெறுப்பை மறைமுகமாகக் காட்ட முற்பட்டார்கள். இதயசந்திரனும் காரணமில்லா மல் அவர்கள் மீது எரிந்து விழுவதையும் குற்றம் கண்டு பிடிப்பதையும் தொழிலாகக் கொண்டான்.
திடீரென அவன் ஒரு நாள் ஜலதீபத்திற்கு வந்தபோது தனது அறை திறந்திருப்பதைக் கவனித்து, “ஹர்கோவிந்த்! ஹர்கோவிந்த்!” என்று கூவி ஹர்கோவிந்த் வந்ததும், “இந்த அறை ஏன் திறந்திருக்கிறது?” என்று வினவினான்.
ஹர்கோவிந்தின் பதில் சட்டென்று வந்தது, ”பூட்ட அவசியமில்லை ” என்று .
அந்தப் பதிலின் உட்பொருள் புரிந்தது இதய சந்திரனுக்கு. தன்னிடமிருந்து காதரைனையோ அல்லது காதரைனிடமிருந்து தன்னையோ பாதுகாக்கும் உத்தேசத் துடன் அவன் முன்பு அறையைப் பூட்டியிருந்தது நினைவுக்கு வரவே, “என்னைப் பரிகசிக்கிறாயா ஹர்கோவிந்த்?” என்று வினவினான் சீற்றத்துடன் தமிழன்.
“பரிகசிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று வினவினான் ஹர்கோவிந்தும் லேசாகக் குரலில் உஷ்ணத்தைக் காட்டி.
“என்ன இருக்கிறது? அதைத்தான் நானும் கேட் கிறேன்” என்றான் இதயசந்திரன் அதிகச் சீற்றத்துடன்.
“கேட்க ஏதுமில்லை.” இம்முறை ஹர்கோவிந்த் குரலில் உஷ்ணமில்லை, இகழ்ச்சியிருந்தது.
“யாரைக் கேட்க?” “என்னையோ உங்களையோ கேட்க.” “இதற்கு முன் என்ன இருந்தது?” “இருந்தது ஒரு வெள்ளைச் சிலை.” “காதரைனை அவதூறு கூறுகிறாயா?”
“அவதூறு கூறவோ அன்பொழுகப் பேசவோ எனக்கேதுமில்லை.”
“எனக்கு இருந்தது என்கிறாயா?”
”அதற்கு நீங்கள் தான் பதில் சொல்லவேண்டும்?”
ஹர்கோவிந்தின் கடைசிப் பதிலுக்குப் பிறகு அவனைச் சினத்துடன் பார்த்த இதயசந்திரன், தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி இப்ரஹீமும் பர்னாண்டோ வும் நிற்பதைக் கவனித்தான். அவர்கள் முகங்களிலும் வெறுப்பு மண்டிக் கிடப்பதைக் கவனித்துவிட்டு வேகமாக அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். அன்று பகல் உணவைத் தனிமையில் தனது அறையிலேயே உண்டான். பிறகு நன்றாகத் தூங்கினான். மாலை வரையில் உறங்கிய இதயசந்திரன் மீண்டும் கப்பலிலிருந்து நூலேணியில் இறங்கிப்படகொன்றைத் தானே செலுத்திக் கொண்டு கோட்டைக்குச் சென்றான். கோட்டையிலிருந்த தோர்லாவாடாவின் பிரதான அறைக்குச் சென்று மாலுமி உடையைக் கழற்றி எறிந்து தமிழகத்து வேட்டியை எடுத்து மராட்டியக் கச்சம் கட்டிக்கொண்டு வெள்ளையர் சட்டையொன்று போட்டுக்கொண்டு விபூதி அணிந்து கொண்டு குலாபியின் கோயிலுக்குச் சென்றான்.
அந்திகால பூஜை நடந்துகொண்டிருந்தது குலாபிக்கு. அன்று கோயில் அர்ச்சகர் மகிஷாசுரமர்த்தினியான குலாபிக்கு திவ்யமாக அலங்காரம் செய்திருந்தார். விளக்கு களையும் ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி வைத்திருந்தார். பூசையின்போது நீறு அணிந்து வந்த இதயசந்திரனை வரவேற்று, ”இப்படி வாருங்கள்” என்று அழைத்தார்.
“பூசையின்போது இடையில் பேசவேண்டாம் நடக்கட்டும் அர்ச்சனை” என்றான் இதயசந்திரன் இரைந்து.
அர்ச்சகர் ஏதும் புரியாமல் அவனை ஊன்றிப் பார்த்தார். ‘என்ன பார்க்கிறீர்?” என்று மிரட்டினான் இதய சந்திரன்.
அவன் மிரட்டலுக்குச் சிறிதும் மசியவில்லை அந்த மகாராஷ்டிர சாஸ்திரி. “தங்களை குலாபிக்கு அருகில் அழைக்கிறேன்” என்று கட்டளையிடுவதுபோல் கூறினார்.
“நான் எட்ட நிற்க ஆசைப்படுகிறேன்” என்றான் இதயசந்திரன்.
“ஆசை ஒழுங்கான ஆசை அல்ல.”
”எது?”
“ஈசுவரியிடமிருந்து எட்ட நிற்பது.”
“ஏன்?”
“குலாபியிடமிருந்து விலகி நிற்க ஆசைப்படுபவன் ஒன்று நாஸ்திகன், அல்லது புத்தியில் தெளிவில்லாதவன். அருகில் வாருங்கள் தளபதி” என்ற சாஸ்திரி சற்று அதிகாரத்துடனேயே கூறவே மெள்ள இதயசந்திரன் சந்நிதியை அணுகினான்.
குலாபியின்மீது அவன் கண்கள் நிலைத்தன. குலாபி யின் உக்ரமும் அருளும் கலந்த கண்கள் தன்னைக் கூர்ந்து நோக்குவதாகத் தோன்றியது தமிழனுக்கு. கீழே கிடந்த மகிஷாசுரனை வாள் கொண்டு அடக்கும் தோரணைய லிருந்த கீழ் வலது கரம் தன்னையே அடித்துவிடும் போலிருந்தது. மேல் இடது கையில் ஈசுவரி தாங்கி நின்ற சக்ராயுதம் தன்னை நோக்கி வருவதுபோல் தோன்றியது தளபதிக்கு. இந்த உணர்ச்சிகள் புத்தியில் உ.ராய, உராய நெஞ்சம் நெகிழ நெகிழ, வைத்த கண்கள் வாங்காதபடி தலாபியைப் பார்த்துக்கொண்டே இருந்த இதயசந்திரன் காதில் அர்ச்சகர் உச்சரித்த அஷ்டோத்திர மந்திரங்களும் புகுந்து உள்ளேயிருந்த இருட்டை மெள்ள மெள்ளக் கிழித்தன. அர்ச்சனை முடிந்ததும் குலாபியின் கால்களில் விழுந்தெழுந்த இதயசந்திரனை சாஸ்திரி பரிதாபத்துடன் பார்த்தார். பிறகு மெள்ளச் சொன்னார், “தளபதி, நீங்கள் காலங் கடந்து வந்திருக்கிறீர்கள். கனோஜியாயிருந்தால் முன்பே வந்திருப்பார்” என்று.
இதயசந்திரன் சாஸ்திரிகளை ஏறெடுத்து நோக்கி விட்டுக் கேட்டான், “ஸார்கேலா?” என்று.
“ஆம் தளபதி! ஸார்கேல்தான். குழப்பமோ சந்தேகமோ ஏற்பட்டால் குலாபியிடம் தான் வருவார் ஸார்கேல். குலாபி குழப்பத்தை அகற்றுவாள். சந்தேகத் தைத் தீர்ப்பாள்” என்றார் சாஸ்திரி.
”குழப்பத்தை அகற்றுவாளா? சந்தேகத்தைத் தீர்ப்பாளா?” என்று வினவினான் வியப்புடன் இதயசந்திரன்.
“ஆம். வெற்றியையும் சம்பாதித்துக் கொடுப்பாள்! கனோஜியின் வெற்றிக்கெல்லாம் குலாபிதான் காரணம்” என்றார் சாஸ்திரி திட்டவட்டமாக.
இதயசந்திரன் சிந்தனையில் இறங்கினான். “போரில் வெற்றி தோல்வி, வாழ்வில் வெற்றி தோல்வி இவை லௌகீக விஷயங்கள். இவற்றில் தெய்வம் தலையிடுமா?” என்றும் வினவினான் கடைசியில்.
“தெய்வத்தின் தலையீடு இல்லாமல் எதுவும் நடப்ப தில்லை தளபதி. சகலமும் தெய்வத்தின் சிருஷ்டி. அதன் இஷ்டப்படி சகலமும் இயங்குகின்றன. ஆகவே அதன் இஷ்டத்தை நாம் பெற்றால் நமக்கு அனுகூலமாக இயங்கும்” என்றார் சாஸ்திரி.
“எது உலகமா?”
“ஆம்.”
“காற்று நமது இஷ்டப்படி அடிக்குமா குலாபியை வேண்டினால்?”
”அடிக்கும். சந்தேகமிருந்தால் ஸார்கேலைக் கேளுங்கள்.”
இதயசந்திரன் பிரமித்தான். காற்றும் கடலும் ஆண்டவன் இஷ்டப்படி இயங்கினாலும் அதைத் தனி மனிதன் தேவியிடம் விண்ணப்பித்து மாற்றிவிடுவது என்பது நடவாத காரியம் என்று நினைத்தான் தமிழன். புராணக் கதைகளில் அவை நடந்திருந்தாலும் 1813-வது ஆண்டில் நடக்க முடியாதென்று நினைத்தான். அவன் நினைப்பை சாஸ்திரி புரிந்து கொண்டதால் கூறினார், “தமிழா! நடக்குமா? நடக்காதா? என்று நினைப்பவனுக்கு எதுவும் நடப்பதில்லை. தெய்வம் உண்டா ? இல்லையா? என்று நினைப்பவனுக்குத் தெய்வம் கிடையாது. வீரம் தனக்கு உண்டா? இல்லையா? என்று சந்தேகிப்பவனுக்கு வீரம் கிடையாது. சந்தேகம் அலட்சியம் இந்த இரண்டும் சிந்தனையின் பலவீனங்கள். நம்பிக்கை, லட்சியம் இரண்டும் ஆத்மாவின் சக்திகள். சக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையுமிருக்கிறது. கனோஜி ஆங்கரேக்கு இரண்டும் உண்டு. சக்தி இருக்கிறது, பெரிய சாதனைகளைப் புரிகிறார். நம்பிக்கையிருக்கிறது, குலாபியிடம் அனுமதி பெற்றுப் பெரிய அலுவல்களில் இறங்குகிறார்” என்று.
சாஸ்திரியன் சொற்கள் மெள்ள மெள்ள உறைந்தன இதயசந்திரன் உள்ளத்திலே. கனோஜி ஆங்கரேயைப் போன்ற செயல் வீரர் பெரிய காரியங்களுக்கெல்லாம் குலாபியைக் கேட்கிறாரென்றால் குலாபியிடம் பெரும் சக்தியிருக்க வேண்டும் என்று நினைத்தான். சாஸ்திரி சொல்லச் சொல்ல குலாபியின் முகத்தில் பேரொளி உதயமாவது போல் தோன்றியது அவனுக்கு.
அவன் திரும்பிச் சென்றபோது குலாபி கோயிலின் பக்க விளக்குகளும் தூரத்தே தெரிந்த கோட்டைவாயிலின் பந்தங்களும், அலையில் ஆடிக்கொண்டிருந்த ஜலதீபத்தின் பந்தங்களும், விளக்குகளும், எல்லாத் தீபங்களும் வழக்கத்தைவிட அதிக ஜோதியாகப் பளிச்சிட்டதாகத் தோன்றியது அவனுக்கு. ஆங்கரேயின் அரண்மனைப் பிரதான அறையில் அவன் உட்கார்ந்து உணவருந்தத் தொடங்கிய போது ஒரு மாதமாக இல்லாத பசி அன்று இருப்பதாகத் தோன்றியது அவன் புத்திக்கு. அறுசுவை உண்டியை அளவுக்கு அதிகமாகவே உண்டு அவன் பஞ்சணையில் படுத்தபோது பஞ்சணையும் அதிக சுகமாகப்பட்டது அவன் உ.டலுக்கு. எதிலும் ஒரு தெளிவு இருந்தது. எதிலும் ஒரு சுகமிருந்தது! அத்தனையும் குலாபியின் தரிசனத்தால் தானா என்ற சந்தேகமும் லேசாக இருந்தது. எப்பேர்ப் பட்ட மனிதனையும் சந்தேகம் மட்டும் லேசில் விடுவதில்லையெனத் தீர்மானித்த இதயசந்திரன் அதை அகற்றிக்கொள்ள அன்று முதல் முயற்சியில் இறங்கினான். அந்த முயற்சி தனக்குப் பெரும் பலனை மூன்றே நாட்களில் கொடுத்ததையும் உணர்ந்தான். தனக்கு ஏற்பட்ட விரக்தி மெள்ள மெள்ள விலகி வாழ்க்கை மீண்டும் அர்த்தமுள்ள தாக மாறுவதை உணர்ந்தான். நடுவில் ஏற்பட்ட மனச்சோர்வு மெள்ள மெள்ள விலகுவதையும் மனச் சோர்வால் ஏற்பட்ட உடற்சோர்வும் நீங்கி, பழைய சக்தி ஏற்படுவதையும் புரிந்து கொண்டான். மாலை கோயிலுக்குப் போவதோடு காலையும் மாலையும் போகத் துவங்கினான். அப்படிப் போகத் துவங்கியதால் சாஸ்திரியிடம் பல விஷயங்களைப் பற்றியும் தர்க்கித்தான்; கனோஜி குலாபியிடம் எப்படி உத்தரவு கேட்பது வழக்கம் என்று வினவினான்.
“கனோஜி முன்னதாக பூஜைக்குச் சொல்லியனுப்பு வார். பூஜை ஆரம்பம் முதல் கடைசி வரையில் தியானத்தி லிருப்பார்…” என்று துவங்கிய சாஸ்திரியை இடைமறித்த இதயசந்திரன், “என்ன? கனோஜியா! தியானத்திலிருப்பாரா!” என்று வினவினான் வியப்புடன். சதா எதிலும் ஓர் அலட்சியத்தைக் காட்டுபவரும், மாமிசம் சாப்பிட்டு மதோன்மத்தராக இருப்பவருமான ஸார்கேல் எப்படித் தியானத்திலிருக்க முடியும் என்ற கேள்வி அவன் கண்களில் திட்டமாகத் தெரிந்தது.
அந்தக் கேள்வியைப் புரிந்துகொண்ட சாஸ்திரி கூறினார்: “கனோஜியின் முரட்டுத்தனம் வேறு, பக்தி வேறு. நல்ல முரடர்கள் நல்ல பக்திமான்களாயிருந்திருக் கிறார்கள்” என்று. அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த இதயசந்திரன், “தியானத்திலிருந்துவிட்டு உத்தரவு கேட்பாரா?” என்று வினவினான்.
“ஆம். கேட்பார்.”
“எப்படி?”
“வரும்போது இரண்டு ஓலை நறுக்குகளைக் கொண்டு வந்து குலாபியின் காலடியில் போடுவார். சிறிது நேரத்தில் இரண்டில் ஒன்று முன்னால் உருளும், அதைப் பிரித்துப் பார்ப்பார்.”
“ஓலை நறுக்குகளா! உருளுமா!”
“ஆம்.”
“எப்படி உருளும்?”
“குலாபியின் சந்நிதிக்குள் கடற்காற்று வருகிறது. அது ஓலை நறுக்கைத் தள்ளும்.”
“அது குலாபி தள்ளுவதாக அர்த்தமா?”
“ஆம். கடற்காற்றே குலாபியின் சக்தியால் இயங்கு கிறது. அவள் இஷ்டப்பட்டதைத்தான் உருட்டும் காற்று.”
இதயசந்திரனுக்கு இந்தப் பதில் வேதாந்த ரீதியில் சரியாயிருந்தாலும், கடற்காற்று உருட்டும் ஓலையைக் குலாபி உருட்டுவதாக எப்படி வைத்துக் கொள்கிறது என்று சந்தேகித்தான்.
சாஸ்திரியின் குரல் கம்பீரமாக ஒலித்தது அப்பொழுது, “தமிழா! மீண்டும் சந்தேகிக்கிறாய் நீ. காற்று தன்ளுவ தால் ஓர் ஓலையைத்தான் தள்ள வேண்டும் என்பதில்லை. இரண்டையும் தள்ளலாம். ஆனால் இங்கு எப்பொழுதும் ஓர் ஓலைதான் உருளுகிறது. அதுவும் ஒரே பக்கமுள்ள ஓலையல்ல உருளுவது. அக்கம் பக்கத்தில் வைக்கப்படும் போது சுருள்களில் இந்தப் பக்கமுள்ளதும் உருளும், அந்தப் பக்கம் உள்ளதும் உருளும். சமயம் வரும்போது நீயே பார்க்கலாம்” என்ற சாஸ்திரியின் குரல் குலாபியின் குரலைப் போலவே இருந்தது.
“எப்பொழுது பார்க்கலாம் குருஜி?” என்று வினவி னான், சாஸ்திரியின் குரலிலிருந்த உணர்ச்சிப் பெருக்கைக் கண்ட இதயசந்திரன்.
அடுத்து ஒலித்தது பதில், “நாளை” என்று. ஆனால் அது சாஸ்திரியின் குரலல்ல. வேறொரு குரல். மிகக் கம்பீரமாயும் கணீரென்று அசரீரி போல் ஒலித்தது அந்தக் குரல்! எந்த நாஸ்திகனையும் நம்பவைக்கும் அதிகார மிருந்தது அக்குரலில்.