Jala Deepam Part 3 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 18 போர்த் திட்டம்
Jala Deepam Part 3 Ch18 | Jala Deepam | TamilNovel.in
தோர்லாவாடாவின் மந்திராலோசனை அறையி’ லேயே உணவு உண்ட பிறகு தமது படையை மாற்றியமைத்த முறைபற்றி விவரிக்கத் துவங்குமுன்பு நீண்ட நேரம் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பவர் விளக்கை ஊன்றிக் கவனித்த வண்ணம் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தார் ஸார்கேல். பிறகு அவர் மௌன நிலையைக் கலைத்துப் பேசத் துவங்கிய பின்பும் மிகுந்த யோசனையுடன் மெள்ளவே பேசினார். அவர் பேச்சிலிருந்து மகாராஷ்டிரம் முழுவதுமே அவர் நினைப்பில் எழுந்து புரளுவது நன்றாகத் தெரியும் இதயசந்திரனுக்கு. “இதயசந்திரா! மகாராஷ்டிரம் பெரும்பாலும் மலைக. எடங்கிய பிரதேசம். அதன் ஒரு பகுதியான கொங்கணியில் முழுக்க முழுக்க பிரும்மாண்டமான மலைகள் தான். மலைகளுக்கும் கடலுக்கும் இடையிலுள்ள பிரதேசங்கள் மிகக் குறைவு… அவற்றின் அகலமும் அதிகமல்ல. இத்தகைய இடத்திலிருந்துகொண்டு சத்ரபதி சிவாஜி மகாராஷ்டிர ராஜ்யத்தை நிறுவினார். அவர் எப்பொழுதும் மலைகளிலும் மலைக் காடுகளிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். திடீரென மலைகளிலிருந்து சின்னஞ்சிறு படைகளுடன் இறங்கி மொகலாயர் படைகளைத் தாக்கித் தாக்கி மீண்டும் மலைக்காட்டுக்குள் போய்விட வேண்டிய அவசியம் அவருக்கிருந்தது.. காட்மாதாவின் கடினமான மலைச்சரிவுகள், குகைகள்,. யாரும் அணுகமுடியாத கோட்டைகள் இவை அவர் இருப்பிடங்களாயின. ஆகவே, அவர் ஆரம்பத்தில் பல இடங்களில் படைப் பிரிவுகள் வைத்திருந்தார். அப்படைகள் சின்னஞ்சிறு படைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
பெரும் போர்களில் அவர் ஈடுபட்டிருந்த காலம் தவிர மற்றக் காலங்களில் சிறு படைகளே அவர் இயக்கிய ஆயுதங்களாயின. ஒரு மொகலாயப் படை சுமார் ஆயிரம் பேர் கொண்டதென்று வைத்துக் கொள், அது பம்பாய் நோக்கிச் செல்கிறதென்று வைத்துக்கொள், அதைத் திடீரென்று தாக்க வேண்டும், என்ன செய்வாய்? அதே ஆயிரம் படை வீரர்களைக் கொண்டு அதை நேருக்கு நேர் எதிர்க்கலாம். அல்லது முன்னும் பின்னும் எதிர்க்கலாம். சிவாஜி மகாராஜா சுதந்திர: தீவர்த்தியைக் கையிலேந்திய போது ஏது அவ்வளவு பயிற்சி பெற்ற வீரர்கள் மகாராஷ்டிரத்தில்? கிடையாது, இருந்தவர்கள் மலைவாசிகள், காட்டுமிராண்டிகள். அந்தக் காட்டு மிராண்டிகளிலிருந்து, மலைவாசிகளிலிருந்து இருநூறு முந்நூறு என்று ஆங்காங்கு பொறுக்கிப் பயிற்சி அளித்தவர் சத்ரபதி. அப்படிப்பயிற்சி அளிக்கப் பெற்றவர்கள் முந்நூறு, ஐந்நூறு என்று பலப் பல மலைகளில் பிரிந்து கிடந்தார்கள். அந்தப் பலவகைப் படைகளெனும் மலர்களுக்குச் சத்ரபதிதான் தொடு நூல். எந்தப் பகுதியில் மொகலாயர் படைப் பிரிவு இயங்குகிறதோ அந்தப் பகுதிக்குச் சிவாஜி மகாராஜா செல்வார். அங்குள்ள இருநூற்று ஐம்பது அல்லது முந்நூறு படை வீரர்களுடன் எதிரிப் படைப் பிரிவு மீது மலையிலிருந்து இறங்குவார்…” என்று சொல்லிக் கொண்டு போன கனோஜி, சற்றுப் பேச்சை நிறுத்திக் கனவில் பேசுவது போல் பேச்சைத் தொடர்ந்து, ‘ஆயிரம் பேர் கொண்ட மொகலாயர் படைப் பிரிவு மலைப் பகுதிக்குள் கீழுள்ள பாதையில் அணிவகுத்து, ஆயுதமேந்தி, சரியான ராணுவ நடை போட்டுச் செல்கிறது. மலை மேலிருந்து திடீரென ஒருவன் அதைப் பார்த்துக் குதிரை மேல் ஓடுகிறான். சிறிது நேரத்திற்கெல்லாம் சிவாஜி மகாராஜா சுமார் முன்னூறு வீரர்களுடன் மலைச் சரிவில் நிற்கிறார். பிறகு கத்தியை உயர்த்தி; ‘ஹரஹர மகாதேவ் ஜெய்பவானி!” என்று கூவிக் கொண்டு புரவியைத் தட்டி விடுகிறார்.
புரவி காற்றுபோல் இறங்கி வருகிறது மலைச்சரிவில். அதேபோல் காற்று வேகத்தில் அவரைத் தொடர்ந்து வருகிற இருநூறு அல்லது முந்நூறு புரவிகளின் தடதட வென்ற குளம்பொலிகள் எதிர்ப்படைப் பிரிவின் காது களில் விழுகின்றன. சட்டென்று திரும்பிப் போருக்குத் தயாராகிறது படை, ஆனால் அது அணிவகுத்துத் திரும்பு முன்பு அதன் இடையில் சிவாஜி மகாராஜாவின் சிறு படை ஊடுருவிச் சென்று விடுகிறது. துப்பாக்கிகளை எடுக்கக் கூட அவகாசமில்லாத நிலையில் கத்திப் போர் நடக்கிறது. படை நிர்மூலமாகிறது. சரணடைந்தவர்: காப்பாற்றப்படு கிறார்கள். அப்படைகளிலிருந்த பொருள்கள் கைப்பற்றப் படுகின்றன. இப்படி நடந்தது போர்முறை. இந்தப் படைக்கும் சின்னஞ்சிறு பிரிவுகள் இருந்தமையால், 25 பேருக்கு ஒரு சுபேதாரும், 125 பேருக்கு ஒரு ஜும்லாதாரும் தேவையாயிருந்தது. சிவாஜி மகாராஜா இறக்கும் தருணத்தில் விரிந்து கிடந்தது சாம்ராஜ்யம். விரிந்து கிடந்தது பெரும் படை நீரிலும் நிலத்திலும். ஆகவே, அவருக்குப் பின்பு படைகளை மாற்றி அமைக்க அவசிய மிருந்தது. ஸம்பாஜி மாற்றவில்லை. ஷாஹு மன்னர் மாற்றவில்லை. நான் மாற்றி விட்டேன்” என்று. இதைச் சொல்லி விளக்கையே உற்றுப் பார்த்தார் கனோஜி.
இதயசந்திரன் அவர் விவரத்தைக் கேட்டு அசந்து போனான். அவர் கண்ட அந்தப் பழைய படைத் தாக்கு தலின் கனவில் அவனும் நீண்ட நேரம் சிக்கியிருந்தானாகையால் அவனும் உடனடியாகப் பேசவில்லை. பிறகு கேட்டான், “ஷாஹு மன்னர் மாற்றவில்லையா?” என்று.
கனவிலிருந்து விழித்துக் கொண்டவர் போல் சொன்னார் கனோஜி, “இல்லை” என்று.
“ஏன்?” என்று வினவினான் இதயசந்திரன்.
“ஷாஹு மன்னர் மொகலாயர் அரண்மனையிலேயே நீண்டகாலம் வளர்ந்தவர், அவர்களால் ஆதரிக்கப்பட்டு மகாராஷ்டிர அரியணை ஏறியவர். அவர்கள் படைவகுப்பு முறைதான் ஷாஹு மன்னராலும் பின்பற்றப்படுகிறது. சிவாஜி மகாராஜா சின்னஞ்சிறு பிரிவுகளைப் படையில் அவசியத்தால் வைத்தார். ஆனால், மொகலாயர் தங்கள் படைகளில் பலருக்குப் பதவி கொடுப்பதற்காக வைத்திருந்தார்கள். அதனால் தலைவர்கள் அதிகமாகி, படை துரிதமாக இயங்க முடியவில்லை. காலத்துக்குத் தகுந்தபடி ஷாஹு மன்னர் படை முறையை மாற்றியமைக்கவில்லை, நான் மாற்றியமைத்திருக்கிறேன் பிரிட்டிஷ் முறையில்” என்றார் கனோஜி.
“பிரிட்டிஷ் முறையிலா?”
“ஆம்.”
“ஏன்? அது மிகவும் சிலாக்கியமா?”
“சிலாக்கியம்தான். தவிர, இனி உண்மையான எதிரி பிரிட்டிஷ் வர்க்கந்தான்.”
“அதெப்படிச் சொல்கிறீர்கள்?’,
கனோஜி விளக்கிலிருந்து கண்களை அகற்றி இதய சந்திரனை நோக்கினார். “நாம் நமது நாட்டிலிருக்கிறோம்” என்று கூறினார்.
அதை எதற்காக கனோஜி சொல்கிறாரென்பதைப் புரிந்து கொள்ளாத இதயசந்திரன், “ஆம்’ என்றான்.
“அவர்கள் தொலை தூரத்திலிருந்து, பல காதங்களுக்கு அப்புறமிருந்து வந்திருக்கிறார்கள்.”
“ஆம்.”
”அவர்களது ராணுவ உதவியை நாம் நாடுகிறோம்,” என்ற கனோஜி சற்றுச் சீற்றத்துடன் பேசினார். “பம்பாய், சூரத், சென்னை, கல்கத்தா, சந்திர நாகூர் சில இடங்களில் தான் இந்தப் பெரிய பாரத பூமியில் அவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் இங்குள்ள மொகலாய வல்லரசுகூட அவர்களைத் தொட முடியவில்லை. அவர்கள் புறக்கணிக்கத் தக்கவர்களல்ல. பெரும் பலமுடையவர்கள் தந்திரமுடையவர்கள். புதுவகை ஆயுதங்களையும் வைத் திருக்கிறார்கள். அவர்கள் படைகள் நமது படைகளை விடத் துரிதமாக இயங்குகின்றன. அவர்களிடம் முக்கிய மாக இரண்டே பிரிவுகள், புரவிப்படை, காலாட்படை.. காலாட்படைக்குள் ஒரு பிரிவு பீரங்கிப் படை. இந்த மூன்று பிரிவுகள் நமது ஆயிரம் பிரிவுகளுக்குச் சமானம். ஆகவே இப்பொழுது நாம் பிரிவினைகளைக் குறைக்க. வேண்டும். நானும் அப்படிப் பிரித்திருக்கிறேன்.”
இதயசந்திரன் தீர்க்காலோசனையில் இறங்கினான்.. “ஆம்; அது ஒரு விதத்தில் சௌகரியம் தான்” என்றும் கூறினான்.
“பல விதங்களிலும் சௌகரியம்” என்ற கனோஜி, “தமிழா! ஆலிபாக்கிலுள்ள படை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அதாவது புரவிப்படை பாதியாகவும், காலாட்படை பாதியாகவும் பிரிக்கப்படும். பீரங்கிகளையும் பாதியாகப் பிரிப்போம். இப்படிச் சரிபாதியாகப் பிரிக்கப்பட்ட பிரிவில் ஒரு பகுதியை அழைத்துக்கொண்டு நீ செல் கல்யாண் கோட்டையை நோக்கி நேர் வழியில்…” என்று கூறினார்.
இதயசந்திரன் பதில் சொல்லவில்லை. ஸார்கேல் கட்டளையிடுகிறார் என்பது அவனுக்குத் தெரிந்தேயிருந்தது. கனோஜி மேலும் சொன்னார், “இன்னொரு பகுதியை அழைத்துக் கொண்டு மலை வழியாகவும் காட்டு வழியாகவும் நான் வருகிறேன். இருவரும் கல்யாணியில் சந்திப்போம்.”
“இடையில் பிங்களே எதிர்ப்பட்டால்?” என்று வினவினான் இதயசந்திரன்.
“எதிர்ப்பட மாட்டார். இங்கிருந்து நீ கிளம்புவதற் குள் பிங்களே கல்யாணைத் தாண்டிவிடுவார். நீ கல்யாண் செல்வதை ஒற்றர்கள் மூலம் அறிந்ததும் திரும்புவார் உன்னை நோக்கி. அப்பொழுது…” என்று கூறிய ஆங்கரே புன்முறுவல் காட்டினார்.
“அப்பொழுது?” கேட்டான் இதயசந்திரன்.
“அவருக்குப் பின்புறத்தில் நான் இருப்பேன்” என்ற கனோஜி சற்று மெல்ல நகைக்கவும் செய்தார்.
திட்டம் மிகக் கச்சிதமாயிருந்ததை உணர்ந்தான் இதயசந்திரன். அந்தத் திட்டப்படி எல்லாம் நடந்தால் வெற்றி நிச்சயமென்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. இருப்பினும் ஒரு கேள்வி கேட்டான், “பிங்களே என்னை நோக்கித் திரும்பாமல் தனது திட்டப்படி பம்பாய் நோக்கிப் போனால் தாங்கள் எதிர்ப்படுவீர்கள். தங்களைத் தரைப்படை தாக்கினால் தங்கள் பாடு திண்டாட்டம். ஏனென்றால், பிங்களேயின் படை மிகப்பெரியது. தங்களை முறியடித்த பிறகு அவர் ஏன் திரும்பிவந்து என்னைக் கல்யாணியில் சந்திக்க முடியாது?” என்று வினவினான்.
கனோஜி வியப்புத் ததும்பிய விழிகளை அவன்மீது நிலை நாட்டினார். “என்னைப் பிடித்த நல்ல காலம் நீ பிங்களேயின் படையில் இல்லை” என்றும் கூறினார். “ஆனால் தமிழா! பிங்களேயை நீ அறியமாட்டாய். பிங்களேக்குப் போர் அனுபவம் அடியோடு கிடையாது; ராஜதந்திரத்தில் சூன்யம், ஷாஹுவுக்கு வேண்டியவர் என்பது தவிர மற்றபடி திறமை ஏதுமில்லாதவர். போர்களில் படைபலம் மட்டுமல்ல முடிவைத் தீர்மானிப் பது, படைத் தலைவனும் நிச்சயிக்கிறான். பிங்களே படைத் தலைவராயிருக்கும்வரை எந்தப் பயமும் இல்லை. நீ சொல்கிற திட்டத்தை அவர் கனவில் கூட நினைக்க மாட்டார்” என்று தெளிவாக்கினார்.
இதயசந்திரன் விடவில்லை. “அவருக்குத் தோன்ற வில்லை. அவர் உபதலைவன் ஒருவனுக்குத் தோன்றுகிறது?’ என்று கேட்டான்.
கனோஜி சிந்தித்தார். ”அதையும் நான் நினைத்துப் பார்த்ததில்லை தமிழா” என்றார் முடிவில். ”அதற்கும் வழி வைத்திருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
“என்ன வழி ஸார்கேல்?”
கனோஜி புன்முறுவல் காட்டிவிட்டுச் சொன்னார்: “தமிழா! பிங்களே என்னை நோக்கி வந்தால் நான் பின்னடைவேன். கொலாபாவுக்கருகிலோ காண்டேரிக் கருகிலோ அவர் படைகளை இழுத்துவிடுவேன். பிறகு. என் படை மலைக்காடுகளில் மறைந்துவிடும். கொலாபா வின் பீரங்கிகள் அப்படைகள் மீது சீறும். மலைக்காடுகளில் மறைந்த எனது படை சுற்றுவழிகளில் வந்து அவரைப் பின்புறம் தாக்கும். அப்பொழுதும் அவர் நிலை பெரும் சங்கடமானது. இருபுறமும் பீரங்கிகள் அவர் படைகளை நாசம் செய்யும்.”
“அப்பொழுது அவர் பீரங்கிகள் சும்மா இருக்குமா?”
“இருக்காது, ஆனால் நமது படையின் வேகம் அவர் படை வேகத்தைவிட அதிகம். நீ பார்த்தாயல்லவா இன்று புரவிப் படையின் ஒரு சிறு பிரிவு காற்றுபோல் வந்ததை?” என்று சுட்டிக் காட்டினார் ஸார்கேல். “தமிழா! போரில் முதலில் யார் தாக்குகிறார்கள், எப்படித் தாக்குகிறார்கள் என்பது முக்கியம். தவிர எதிரிப்படைத் தலைவனை எப்படிக் குழப்பலாம், திகைக்க வைக்கலாம் என்பதும் முக்கியம். இப்பொழுது நான் வகுத்திருக்கும் போர்த் திட்டத்தின் முக்கிய அம்சம் பிங்களேயைக் குழப்பித் திகைக்க வைப்பது தான். இதைத் தவிர, இன்னொரு யோசனையும் இருக்கிறது” என்றார்.
“அது என்ன?”
“பிங்களேயைச் சிறைப் பிடிப்பது.”
“எப்படி?”
“போர்க்களத்தில் நீ காண்பாய்” என்ற ஸார்கேல் அதுபற்றி மேற்கொண்டு சொல்லாமல், “நாளைக்குப் படைகளை இரண்டாகப் பிரிப்போம். ஒன்றை நீ நடத்திப் பயிற்சி அளித்துப் பழகிக்கொள். இன்னொன்றை நான் கவனித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு படைப் பிரிவுக்கும் மருத்துவரும் வேண்டும்” என்று விளக்கிய கனோஜி, திடீரென ஆசனத்தைவிட்டு எழுந்து, “அந்த விஷயத்தில் நீ அதிர்ஷ்டசாலி” என்றார்.
“என்ன அதிர்ஷ்ட ம் எனக்கு?” ”உன்னுடன வரப்போவது யார் தெரியுமா?” “சொல்லுங்கள்.”
கனோஜி அவன் அருகில் வந்து, “அந்த வெள்ளைக் காரி” என்றார்.
“யார்?”
“அதுதான் எமிலி.”
“எதற்காக?” இதயசந்திரன் சீறினான்.
பதில் கூறவில்லை ஸார்கேல். கடகடவெனப் பெரிதாக நகைத்தார்.