Jala Deepam Part 3 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 26 பழைய கதை; புதிய நிலை
Jala Deepam Part 3 Ch26 | Jala Deepam | TamilNovel.in
அந்தப் பயங்கரத் தலையீடு இதயசந்திரன் இன்பத்தைத் தகர்த்தது. இணையிலா வெறியை ஊட்டியது. கல்யாண் நகரத்திலிருந்து தொலை தூரத்திலிருந்த வேறிடங்களுக்கு அவனை அப்படியே அள்ளிச் சென்றது! பழைய இடங்கள், பழைய முகங்கள், பழைய நிகழ்ச்சிகள் ஆகிய பலவற்றுக்கு அவனை அழைத்துச் சென்றது. ‘உபதளபதி!’ என்ற ஒரு கரகரத்த கடுமையான குரல் இத்தனையையும் செய்தது. அந்தக் குரலைக் கேட்டதும் எமிலியின் இடையிலிருந்த கையை எடுக்காமலே குரல் . வந்த திசையை நோக்கியதும் அசைவற்றுப் .பல வினாடிகள் நின்றுவிட்டான் கனோஜியின் உபதளபதி.
அந்த அறைக்கு வெளியே மிக ஒல்லியும் உயரமுமான வீரன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் இடைக் கச்சையிலிருந்து மிகவும் அகலமுள்ள பட்டாக்கத்தி யொன்று தொங்கிக் கொண்டிருந்தது. அவன் முகத்தின் குறுக்கே ஆழமான வெட்டு காயமொன்று பளீரெனத் தெரிந்தது அறையிலிருந்து திறந்த கதவின் வழியாக வந்த விளக்கு வெளிச்சத்தில்!
அன்று அந்த இரவில் அழகிய மங்கையொருத்தி தனது உடலில் சாய்ந்திருந்த நிலையையும் தனது இடது கை அவளுடைய வழவழத்த இடையை இறுக அணைத்திருந்த இன்பத்தையும் அடியோடு மறந்தான் இதயசந்திரன், அந்த மனிதனை நோக்கிய வினாடியில். அவன் மனத்திலிருந்த கல்யாண் நகரம் மறைந்தது. அவன் தங்கியுள்ள மாளிகையும் மறைந்தது. தஞ்சை தோன்றியது. தஞ்சை அரண்மனையும் தோன்றியது. அந்த அரண்மனை அறையில் நின்றிருந்தாள் சத்ரபதியின் இளைய மகன் ராஜாராமின் ரகசிய ராணி. அவள் கூறினாள் இதய’ சந்திரனை நோக்கி: “வீரனே! என் செல்வனை எடுத்துச் சென்றவன் இடுப்பில் அகலமான வாள் தொங்கிக் கொண் டிருக்கும். அதைவிட அகலமான வாளை நீ பார்த்திருக்க மாட்டாய். அவன் முகத்தின் நடுவில் குறுக்கே ஆழமான வெட்டுக் காயமிருக்கும். முகத்தில் கொலைக்களை சுடர் விடும். மிக மெல்லிய தேகமுள்ளவன். அவனை வாட் போரில் சமாளிக்க முடியாது. அவனைக் கண்டுபிடித்தால் என் மகனிருக்கும் இடம் தெரியும். அவன் பெயர் தெரியாது’ என்று அவள் கூறினாள். தொடர்ந்து.. “மகனைக் கண்டுபிடித்தால் அவனை அழைத்துவா, முடியாவிட்டால் அழித்துவிட்டு வா! ஹிந்து சாம்ராஜ்யம் எப்பொழுதோ ஒரு தலைமுறையில் ஏற்படுகிறது. அது என் மகனால் அழிய வேண்டாம்’ என்றும் சொன்னாள். முகத்திரையின்றி முதன் முதல் பார்த்தான் அவன் அவளை . அந்தச் சுந்தர சோக முகம், அவள் உதிர்த்த துன்பச் சொற்கள் அனைத்தும் கண்முன் எழுந்தன உபதளபதிக்கு.. அப்பொழுதும் ராணி அவன் கண்முன்பு நின்றாள்.
அந்தக் காட்சி அகன்று அஞ்சன்வேல் கோட்டை எழுந்தது அவன் கண் முன்பாக. அந்தக் கோட்டையில் தளையிலிருந்த அவனை நோக்கித் திரை முகப் பெண் ஒருத்தி வருகிறாள். அவளைத் தொடர்ந்து முகவெட்டுக் காயமுள்ள ஒரு மனிதனும் வருகிறான். பிறகு கழுகுப் பாறையில் தான் கிடக்கிறான். அங்கு ஏதேதோ முகங்கள்! ஏதேதோ பேச்சுக்கள் ! பிறகு ஜல தீபத்தில் மஞ்சுவின் அருகில் இருக்கிறான் இதயசந்திரன். இப்படியாகப் பழைய இடங்களும், பழைய காட்சிகளும் தோன்றிய அந்த நிலை களில் கூட முகவெட்டுக் காயமுள்ள மனிதனை மட்டும் அவன் மறக்கவில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளில் அவன் மயங்கியது உண்டு மங்கையரிடம், பார்த்தது உண்டு பெரும் போர்களை. ஆனால் உள்ளூர அவன்: வந்த பணி மட்டும் இதயத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டிருந்தது. அந்த முகவெட்டு வீரனைக் கண்டு பிடிக்கும் வேட்கை மட்டும் தமிழக வீரனுக்கு இடைவிடாமல் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்தச் சந்திப்பு இந்த நிலையில், இந்த இடத்தில் கல்யாண் அரண்மனையில் போருக்குச் சற்று முன்பு ஏற்படும் என்று மட்டும் இதயசந்திரன் இதயம் சொப்பனத்திலும் எண்ணிப் பார்க்கவில்லை. ஆகவே, ‘உபதளபதி’ என்று விளித்த அந்த வீரனை அவன் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான் நீண்டநேரம். அவனைப் பார்க்கப் பார்க்க அவன் ரத்தம் கொதித்தது. வாளிருக்க வேண்டிய இடத்திற்குச் சென்ற கையும் துடித்தது. ஆனால் கை சென்ற இடத்தில் வாளில்லாததால் கையைக் கீழே தொங்கப்போட்டான். பிறகு எமிலியை நோக்கி, “நீ படுத்துக்கொள்” என்று கூறிவிட்டு அறைக் கதவைச் சாத்திக்கொண்டு வெளியே வந்து, “டேய்! யாரங்கே?” என்று கூவிக் காவலரை விளித்தான்.
அந்தக் கூவல் பயனளிக்கவில்லை. அழைப்புக்கு யாரும் வரவில்லை. இன்னொரு முறை குரல் கொடுக்க இதயசந்திரன் முயன்றதும், “யாரையும் அழைத்துப் பயனில்லை. வெளிக் கட்டிலிருந்த வீரர்களை நான் அனுப்பிவிட்டேன்” என்று மீண்டும் ஒலித்தது கரகரத்த கடுமையான குரல்.
இதயசந்திரனின் கோபம் எல்லை கடந்தது. ”யார் நீ?” என்ற கேள்வியும் எழுந்தது உக்கிரத்துடன்.
இதயசந்திரன் தான் பதட்டத்தையும் கோபத்தையும் காட்டினானேயொழிய, அந்த மனிதன் எந்தவிதப் பதட்டத்தையும் காட்டவில்லை. “ஸார்கேலின் தூதுவன்” என்றான் அடக்கத்துடன்.
“என் காவல் வீரர்களை அனுப்ப உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று சீறினான் இதயசந்திரன்.. பதிலுக்குத் தன் மடியிலிருந்த புலி நக ஆபரண மொன்றை எடுத்து அந்த மனிதன் நீட்டினான் இதய சந்திரனிடம். “நீங்கள் தற்காப்புக்காகவும், என்னைக் கண்டுபிடிக்கவும் தஞ்சையிலிருந்து கொண்டு வந்த ஆபரணத்தின் இன்னொரு பகுதி இது” என்று சர்வ சாதாரணமாக அறிவிக்கவும் செய்தான்.
இதயசந்திரன் அந்த ஆபரணத்தை வாங்கி நீண்ட நேரம் கவனித்தான். தான் கொண்டு வந்த ஆபரணத் துக்கும் அதற்கும் எந்தவித வித்தியாசமுமில்லையென்பதை உணர்ந்து பிரமித்தான். அது போலி ஆபரணமல்ல, தன்னிடம் தஞ்சை ராணி கொடுத்ததுபோல் இன்னோர் ஆபரணம் என்பதை புரிந்துகொண்டதால் பெரும் குழப்பத்துக்கும் உள்ளானான். “இது ஏது உனக்கு?” என்று குழப்பத்தின் ஊடே கேட்கவும் செய்தான்.
அந்த மனிதன் நின்ற இடத்தைவிட்டு அசையாமலே கூறினான்: ”சிவாஜி மகாராஜா ஒரு புலி நக ஆபரணத்தை மட்டும் தரிக்கவில்லை. இரண்டு தரித்திருந்தார், ஒன்று ராஜாராமின் கிளையிலும் இன்னொன்று ஸாம்பாஜியின் கிளையிலும் இருந்தது. பின்னால் அதுவும் ராஜாராமிடம் வந்து சேர்ந்தது. ஒன்று நேர்கிளைக்கு- தாராபாயிடம் கொடுக்கப்பட்டது. இன்னொன்று ரகசிய ராணிக்குக் கொடுக்கப்பட்டது. ஒன்றை ரகசிய ராணி உனக்குக் கொடுத்தாள். ரகசிய ராணிக்கு மகனொருவன் இருப்பதை ராஜாராம் மரணத் தறுவாயில் தனது மந்திரியிடம் அறிவித்தார். மந்திரி தாராபாயிடம் கூறினார். தாராபாய் பதக்கத்தை எனக்கு அனுப்பி அதன் ஆணையாக அரச குமாரனை அபகரித்து வர எனக்குக் கட்டளை அனுப்பி னார். கட்டளை திடீரென்று வந்தது பன்ஹாலாவிலிருந்து ஓர் ஒற்றன் மூலம். அரச மகனை அபகரித்துக் கிளம்பினேன். இன்னொரு வீரன் அதைத் தடுத்தான். அவனைக் கோடரி கொண்டு குத்திவிட்டு வந்தேன்.”
சிறிதும் பதற்றமில்லாமலும் சர்வ சகஜமாகவும் பழைய வரலாறு கூறிய அந்த வீரனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை இதயசந்திரனுக்கு. பதக்கத்தைக் காட்டியதும் அவன் வீரர்கள் அகன்றதில் வியப்பேதுமில்லை இதயசந்திரனுக்கு. சிவாஜி மகாராஜாவின் புலி நக ஆபரணத்துக்கு அடிபணியாதவனைச் சிரச்சேதம் செய்ய கட்டளையிருந்தது ‘மகாராஷ்டிரத்தில். பதக்கத்தைக் கொண்டு வந்திருப்பதால் அவனைச் சிறை செய்யவோ கொலை செய்யவோ அதிகாரமும் தனக்கில்லை யென்பதைப் புரிந்து கொண்டான் இதயசந்திரன். ‘இவனை எதற்காக இந்தச் சமயத்தில் கனோஜி அனுப்பினார் இங்கே?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு விடை காணாமல் தவிக்கவும் செய்தான். கடைசியாக அந்த வீரனை ஏறெடுத்து நோக்கினான். தஞ்சை அரண்மனையிலிருந்த ராஜாராமின் ரகசிய மனைவி கூறியதுபோல் அவன் முகத்தில் கொலைக்களை சுடர் விட்டதாகத் தோன்றியது தமிழனுக்கு. மெள்ளச் சமாளித்துக் கொண்டு கேட்டான் தமிழன், “அரசமகன் என்ன ஆனான்?” என்று.
முகவெட்டுக் காயமிருந்த வீரன் பதில் பட்டென்று வந்தது, “சொல்ல எனக்குக் கட்டளையில்லை” என்று.
“யார் கட்டளை வேண்டும் அதற்கு?” என்று கேட்டான் இதயசந்திரன்.
“அதைச் சொல்லவும் உரிமையில்லை எனக்கு?” என்றான் அவன்.
அவன் திமிர் இதயசந்திரனை அசர வைத்தது. “இப்பொழுது எதற்காக வந்தாய்?” என்று வினவினான் கடைசியில்.
பதிலுக்குத் தனது அருகிலிருந்த ஒரு நீண்ட செய்திச் சீலையை எடுத்து நீட்டினான் அந்த வீரன் இதயசந்திர னிடம்… பிறகு கை நீட்டிப் பதக்கத்தைக் திரும்ப பெற்றுக் கொண்டான். செய்திச் சீலையை விளக்கிருந்த இடம் கொண்டு சென்று பிரித்துப் படித்தான் தமிழன். அதில் கனோஜி கையொப்பம், முத்திரை, அவற்றுடன் செய்தியிருந்தது. “இதை நீ எந்த நேரத்தில் பெறுகிறாயோ அந்த நேரத்திலிருந்து பன்னிரண்டு நாழிகைக்குள் பிங்களேயால் தாக்கப்படுவாய். ஆகவே, இதைக் கண்டதும் நீயே புறப்பட்டுக் கல்யாண் நகருக்கு வெளியில் அவரைச் சந்தித்து விடு செய்தி சுருக்கமாயிருந்தது. கட்டளை திட்டமா (யிருந்தது. இந்தத் திட்டத்தில் வந்துள்ள தூதனின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளத் துடித்த இதய சந்திரன் கேட்டான், “ கடிதத்தைத் தவிர வேறு ஏதாவது செய்தி உண்டா ?” என்று.
“உண்டு.”
“என்ன?”
“உங்களுக்கும் பேஷ்வாவுக்கும் ஏற்படும் இந்தப் போர் மகாராஷ்டிரத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்று சொல்லச் சொன்னார் ஸார்கேல்.’’
“உம்.”
“தவிர, கல்யாணுக்கு உங்களை அனுப்பியதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லச் சொன்னார்.”
“என்ன காரணம்?”
“கல்யாண், உலகம் கொண்டாடும் ஒரு தமிழனின் ஜன்ம பூமி.”
”என்ன? இது தமிழனின் ஜன்ம பூமியா?”
“ஆம்.”
“யார் அவன்?”
பதில் சொல்லுமுன்பு தலை தாழ்த்தினான் அந்த வீரன். பிறகு மந்திரம் உதிர்ப்பதுபோல் சொல்லை உதிர்த்தான். “சாணக்கியர்” என்று.
இதயசந்திரன் பிரமை பிடித்து நின்றான் பல வினாடிகள். ”எந்தச் சாணக்கியர்? சந்திரகுப்தனின் அமாத்யரா! அர்த்த சாஸ்திரத்தின் ஆசிரியரா!” என்று வினவினான் பிரமிப்புடனும் வியப்புடனும்.
கல்யாண் நகரைப்பற்றி நினைத்ததும் கொலைக்களை சொட்டிய அந்த வீரன் முகத்திலும் உணர்ச்சி பெருகியது. “ஆம், உபதளபதி! அதே சாணக்கியர் தான். கல்யாண் ஒரு அற்புத நகரம். பழம்பெருமை பெற்றது. ஒரு காலத்தில் இது சோளங்கி ராஜபுத்திரர்களின் தலைநகராயிருந்தது. இந்த நகரத்தில் அந்தக் காலத்தில் ஜெயிக்கப் பட்ட எதிரிகளின் ரத்தினங்கள் இறைந்து கிடந்ததாகக் கவி கிருஷ்ணராஜி ‘ரத்னமாலா’ என்ற கிரந்தத்தில் வர்ணிக்கிறார். அத்தகைய சிறப்புடைய நகரத்தில், சோளங்கி ராஜபுத்திரர் தலைநகரத்தில் இணையிலா ராஜதந்திரியும் தமிழருமான சாணக்கியரின் சொந்த நகரத்தில் தமிழனான நீங்களும் இருக்கிறீர்கள். ஆகவே, போருக்குப் புறப்படுங்கள். தமிழனான சாணக்கியர் காட்டிய திறமையை நீங்கள் காட்ட முடியுமென்று ஸார்கேல் நம்புகிறார். அந்த நம்பிக்கைக்குப் பாத்திர மாகுங்கள்” என்று கூறினான் அவன் உணர்ச்சியுடன்..
இதயசந்திரன் உள்ளத்தில் பெருமிதம் எழுந்தது. வந்த வீரனிடம் பகையும் எழுந்தது. ஆகவே கூறினான்.
அந்த வீரனை நோக்கி, ”சாணக்கியன் தமிழனென்பதை அறியப் பெருமிதமடைகிறேன். ஆனால் சாணக்கியன் பகையை மறக்கவில்லை. பகைவரைப் பூண்டோடு அழித்தான். இந்தப் போர் முடிந்ததும் நீ எங்கிருந்தாலும் தேடி வருவேன். என் வாள் உன் உயிரையோ அல்லது உன் வாள் என் உயிரையோ குடிக்கும் வரையில் நான் உறங்க மாட்டேன்” என்றான் உணர்ச்சி பொங்கிய குரலில். மேலும் இரைந்தே சொன்னான் : “ஒரு பேதையிட மிருந்து, பாலகனைப் பிரித்தாய். அவன் கதியையும் சொல்ல மறுக்கிறாய். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றுக்கே உன்னைக் கொல்லலாம். ஆனால் நிச்சயமாக நம்பு. இதயசந்திரன் அந்த அரசகுமாரனின் கதியை அறியாமல் மகாராஷ்டிரத்திலிருந்து அகலமாட்டான்” என்று .
பிறகு அந்த வீரனையும் அழைத்துக்கொண்டு மாளிகை யிலிருந்து வெளியே சுகாஜியை அழைத்து, “சீக்கிரம் படையைச் சன்னத்தம் செய். கால்பகுதி கல்யாண் நகரைக் காக்கும். முக்கால் படை வெளியே நகரும். முரசு ஏதும் கொட்டவேண்டாம். வீரர்களைக் கொண்டு ரகசிய மாக உத்தரவைப் பரப்பு. இன்னும் இரண்டு நாழிகைக்குள் படை நகர வேண்டும்” என்று உத்தரவிட்டான். தானும் போருடை அணிந்து மிஸ் எமிலியிடம் விடைபெற்றுப் புறப்பட்டான். இரண்டே நாழிகை! படை ஊர்ந்தது நகருக்கு வெளியே.