Jala Deepam Part 3 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 35 நினைப்பும் பதிலும்
Jala Deepam Part 3 Ch35 | Read Jala Deepam | TamilNovel.in
அழுத்தமான எண்ணங்களை உள்ளவரும், எந்த உணர்ச்சியையும் வெளிக்குக் காட்டாதவருமான பேஷ்வா பாலாஜி விசுவநாத்தே தமிழனைப்பற்றி ‘அந்தத் தமிழனா!” என்று வினவியதும், குரலில் ஆவலைக் காட்டியதும் சாதாரணமாகக் கனோஜிக்கு வியப்பைத் தந்திருக்குமாயினும் அந்தத் தருணத்தில் அவருக்கு அக் கேள்வி எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகப் பிரும்மேந்திர ஸ்வாமியால் கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தமிழன், மகாராஷ்டிர சரித்திரத்தில் ஒரு குறிப்பிடக் கூடிய பாத்திரமாகப் புகுந்து விட்டதாலும், மகா ராஷ்டிரப் பெரும் தலைகளோடு மோதி விட்டதாலும், பேஷ்வா பாலாஜி அவனைப்பற்றி அறிந்திருந்ததில் வியப் பில்லை கனோஜிக்கு. ஆனால் எந்த விஷயத்திலும் ஆவலைக் காட்டாத பேஷ்வா தமிழன் பெயரைக் கேட்டதும் அத்தனை ஆவலைக் காட்டுவானேன் என்று எண்ணினார். ஆகவே கேட்டார் பேஷ்வாவை நோக்கி, “தமிழனைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும் ‘போலிருக்கிறது” என்று.
“ஆம் தெரியும்’ என்றார் பாலாஜி விசுவநாத், வெகு துரிதமாக உணர்ச்சிகளை உள்ளடக்கி, வெகு சாதாரணக் குரலில்.
“எவ்வளவு தூரம் தெரியும்?” என்று வினவினார் கனோஜி சிரிப்புடன்.
பாலாஜி வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லை. ”’எவ்வளவு தூரம் தெரியவேண்டுமோ அவ்வளவு தூரம் தெரியும்” என்றார் பதிலுக்கு கனோஜி அதற்கு மேல் கேள்வி ஏதும் கேட்கவில்லை யென்றாலும் பாலாஜி விசுவநாத்தே கூறினார், “எதற்கும் அந்தத் தமிழனையும் கொலாபாவிற்கு வரச்சொல்லி உத்தரவு அனுப்பு” என்று.
”கொலாபாவில் அவனுக்கு என்ன வேலை? மஹிஷேச்வரி முன்பு கையெழுத்திடப் போவது நீங்களும் நானும் தானே?” என்று கேட்டார் கனோஜி.
பாலாஜி விசுவநாத் தமது சாம்பல் நிற விழிகளை மெல்ல உயர்த்தினார் கனோஜியை நோக்கி. “அவனை சீக்கிரம் தமிழகத்துக்கு அனுப்பிட வேண்டும்” என்றார் சற்று யோசித்த பிறகு.
“ஏன் பேஷ்வா?” என்ற கனோஜியின் கேள்வியில் வியப்பு அதிகமாக ஒலித்தது.
”அவன் இங்கிருந்தால் மகாராஷ்டிர அரசியலை இன்னும் குட்டை குழப்புவான்” என்ற பேஷ்வாவின் பதிலில் கவலை ஒலித்தது.
கனோஜியின் பயங்கர விழிகள் நன்றாக மலர்ந்தன.. “இவனா! இந்தச் சாதாரண உபதளபதியா மகாராஷ்டிர அரசியலைக் குழப்புவான்?” என்று வினவிய அவர் சொற்களில் அதிக வியப்பிருந்தது.
பாலாஜியின் முகத்தில் தீர்க்காலோசனை படர்ந்தது…. “கனோஜி….” என்று மெல்லத் துவங்கிய பாலாஜி சற்று நிதானித்துவிட்டுக் கூறினார். ”தனி மனிதர்கள் வாழ்வைப் போலத்தான் அரசுகளின் வாழ்வும் யாருக்கும் புரியாத சக்திகளால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. எப்படி உணவில் அகப்படும் சிறு துரும்பும் உள்ளே சென்றால் மனிதனைச் சித்திரவதை செய்துவிட முடியுமோ அப்படியே நாம் நினைக்கும் சர்வ சாதாரண மனிதர்களும் அரசியலில் நுழைந்து அரசுகளைத் திக்குமுக்காட வைத்துவிட முடியும். அத்தகைய மனிதர்கள் ஏன்
வருகிறார்கள். ஏன் அரசியலில் புகுந்து விடுகிறார்கள், எப்படி விடுபடுகிறார்கள் என்பது யாருக்கும் புரிவதில்லை. மகாராஷ்டிர வாரிசுப் போருக்கும் இந்த மனிதனுக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை. இருப்பினும் ஒரு சம்பந்தம் ஏற்பட்டு இவன் இங்கு வந்திருக்கிறான். இவன் வரவால் பிரும்மேந்திர சுவாமியிலிருந்து, ராணி தாராபாய், ஷாஹு அனைவருக்கும் கவலை ஏற்பட்டிருக்கிறது. இவன் காலம் அனுப்பிய தூதன். அதுவும் மிக வைராக்கிய முள்ளவன் என்றும் கேள்வி. மகாராஷ்டிரத்தின் கடைசி வாரிசைக் காணாமல் போகாமாட்டான். ஆகையால் அவனை சாதாரண உபதளபதி என்று புறக்கணிப்பதற்கில்லை .”
பாலாஜி இந்த இடத்தில் தமது பேச்சை சற்று நிறுத்தினார். கனோஜி தீவிர சிந்தனையின் வசப்பட்டார். கடைசியாக மெல்லச் சொன்னார், “தஞ்சையிலிருந்து மகாராஜா ராஜாராமின் செல்வனைக் கொண்டு வந்தவன் இப்பொழுது தமிழனிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்” என்று.
பாலாஜியின் கவலை அதிகமாயிற்று. “அவன் ஒரு வேளை உண்மையை உளறி விடுவானோ?” என்று வினவினார் குரலில் கவலை தெரிய.
“மாட்டான்.”
“ஏன்?”
“கல்யாண் போரில் அவன் பெருங் காயங்களடைந்து மரணப் படுக்கையிலிருக்கிறான்.”
“மயக்கமடைந்த நிலையில் ஏதாவது அவன் உளறலாம்.”
“முடியாது.”
“ஏன்?”
“அவன் பக்கத்தில் ஒரு பிரிட்டிஷ் நர்ஸ் இருக்கிறாள். யாரையும் அவன் பக்கத்தில் அண்டவிட மாட்டாள்.”
இதைக் கேட்டதும் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பேஷ்வா. “சரி, எதற்கும் தமிழனைக் கொலாபாவுக்கு வரச்சொல்லி உத்தரவு அனுப்புங்கள்” என்றார். ” அவன் வர மறுத்தால்?” என்று கேட்டார் கனோஜி.
“கைது செய்து அழைத்து வரச் செய்யுங்கள்” என்றார் பாலாஜி.
கனோஜி ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலை யசைத்தார். அவர் இதழ்களில் குறு நகை படர்ந்தது. அதற்குக் காரணம் பாலாஜி விசுவநாத்துக்குப் புரிந்திருந்தாலும் அதை அவர் வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இதயசந்திரனையாவது கைது செய்வதாவது? கல்யாண் நகரில் பிங்களேயை வெற்றி கொண்டவனைச் சிறை செய்தால் படைவீரர் நகைப்பார்கள். மகாராஷ்டிரமும் நகைக்கும்’ என்று உள்ளூர நகைத்துக் கொண்டார் கனோஜி.
இந்த உரையாடல் நடந்த பதினைந்தாவது நாள் அதாவது 1714-வது ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி கொலாபா வில் மகாராஷ்டிர மன்னர் ஷாஹுவுக்கும் கனோஜி ஆங்கரேக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மன்னர் சார்பில் பேஷ்வாவும், ஆங்கரே தனது சார்பிலும் கையெழுத்துப் பொறித்த பிறகு அந்த ஒப்பந்தம் மஹிஷேச்வரியான குலாபியின் பாதங்களில் வைக்கப் பட்டது. கொலாபாவே அன்று மங்கலக் கோலம் பூண்டிருந்தது.
ஒப்பந்தத்தின் விளைவாகச் சிறைப்பட்டிருந்த மன்னர் வீரர்களும் விடுதலை செய்யப்பட்டிருந்தபடியாலும், அந்தப் படை வீரரில் ஆயிரம் பேரை பேஷ்வா அழைத்து வீந்திருந்த படியாலும், அந்த வீரர்களுடன் கனோஜியின் வரர்களும் மாலுமிகளும் கலந்து கொண்டு பலபடி அணிவகுப்பைச் செய்திருந்தபடியாலும், பெரிய போர் அரணாகக் காட்சியளித்தது கொலாபா. எங்கும் வீரர்கள் ஆயுதங்களைத் தாங்கிக் காவல் புரிந்தனர். மாலுமிகள் படகுகளில் தங்கள் மரக் கலங்களுக்குப் போய்க் கொண்டும் வந்துகொண்டுமிருந்தார்கள்.
கொலாபாவில் கனோஜியின் இருப்பிடமான தோர்லா வாடாவில் அலங்காரம் மிகப் பலமாயிருந்தது. பெரிய மாவிலைத் தோரணங்களும் நவ்ரங் கோலங்களும் தோர்லா வாடாவின் வாயிற்புரத்தை அலங்கரித்தன. வாயிலில் நின்றிருந்த மாலுமிகளும், வீரர்களும் புத்தாடையணிந்து உருவிய வாள்களுடன் நின்றிருந்தார்கள். தோர்லாவாடா விலிருந்து குலாபி கோயிலுக்குப் போகும் வழியில் நீள வண்ணக் கோலங்கள் போடப்பட்டிருந்தன. அந்த வழியின் முடிவிலிருந்த குலாபியின் கோயிலுக்கு லட்ச தீபம் போட்டிருந்தார்கள். கையெழுத்தான ஒப்பந்தம் குலாபியின் காலடியில் வைக்கப்பட்டது. காலை வேளை யாகையால் தீபங்கள் எரியாவிட்டாலும் அவை வைக்கப் பட்டிருந்ததே பேரழகைக் கொடுத்தது பராசக்தியின் கோயிலுக்கு. கோயிலின் வாயிற்படியிலிருந்து உள்ளே கர்ப்பக்கிரகம்வரை கனோஜியின் உத்தரவின் மேல், முத்தினாலும் பவளத்தினாலும் கோலங்களைப் போட் டிருந்தார்கள். காலை மஞ்சள் வெயிலில் பிரகாசித்த அந்த முத்து பவள கோலத்தின் ஒளி அம்பாளின் அருள் விழி களின் நோக்கினால் யாரும் காணற்கரிய ஒரு புதுச் சோபையையும் அன்று பெற்றிருந்தது. கோலந் தீட்டிய பருவப் பெண்கள் கோலத்தின் இருபுறங்களிலும் அதைக் காத்து நின்றனர்.
அன்று அந்தப் பெரும் நிகழ்ச்சியின் காரணமாக கொலாபாவிலிருந்த பந்தய ஆடுகள், கோழிகள் இவற்றுக்கும் ஸ்நானம் செய்வித்து மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு இருந்தார்கள். காலை ஆரம்ப ஜாமத்திலேயே அபிஷேக ஆராதனை துவங்கிவிட்டதன் காரணமாக எழுந்த சங்குகள் ஒலிகளாலும் இதர வாத்திய ஒலிகளாலும் கொலாபா பரிசுத்தப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கடைசித் திருமஞ்சனம் சரியாக உச்சி வேளைக்கு நடக்கு. மென்று அர்ச்சகர் செய்தி அனுப்பியிருந்ததால் அந்த வேளைக்கு ஒரு நாழிகை முன்னதாக கனோஜி பேஷ்வா வுடன் தோர்லாவாடாவிலிருந்து புறப்பட்டார். வீரர்கள் முன்னும் பின்னும் உருவிய வாட்களுடன் அணிவகுத்து வர பேஷ்வாவுடன் அம்பாள் கோயிலை அடைந்த. கனோஜி பேஷ்வாவை முன்னால் விட்டுத் தாம் பின்னால் சென்றார்.
வாயிலிலிருந்தபடியே பேஷ்வா பாலாஜி விசுவநாத் கண்களைச் சிறிது நேரம் மூடிப் பராசக்தியைத் தியானித் தார். பிறகு முத்து பவள கோலத்தைக் காத்திருந்த யுவதி களைச் சுற்றிச் சென்று கர்ப்பக்கிரகத்தை அடைந்தார்.. குலாபியை அவரது சாம்பல்நிறக் கண்கள் ஏறெடுத்து நோக்கின. அன்று குலாபியின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. சிவந்த ஆடையும் சிவந்த புஷ்பங்களும் பரா சக்தியின் தேகத்தை மறைத்திருந்தன. கழுத்திலிருந்த ஓர் ஆபரணத்தின் சிவப்புக்கல் கர்ப்பக்கிரக விளக்கில் நெருப்புத் துண்டம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவள் மூக்கிலிருந்த வைரத்தில் யாரோ சுடர் ஏற்றி வைத்திருந்தார்கள்! இல்லையில்லை, சுடர் இல்லை அது. அந்த மூக்குத்தியின் ஒற்றை வைரம் விளக்கொளியில் அளிக்கும் பிரமை அது! அவள் கிரீடம்? அது கிரீடமா, ஆகாயமா? அதிலிருப்பவை நட்சத்திரங்களா, வைரக்கற்களா?
பிரமிப்பாயிருந்த இந்த அலங்காரத்தில் மனத்தைப் பறிகொடுத்த பேஷ்வா , மெல்ல மெல்ல சியாமளா தண்ட கத்தை முணுமுணுக்கலானார். அர்ச்சகர் சற்றே திரை யிட்டு அம்பாள் கிரீடத்தை மட்டும் எடுத்துவிட்டு அபிஷேக ஆடை அணிவகுத்துத் திரையைத் திறந்து அபிஷேகத்தைத் துவங்கினார்.
தைலகாப்பு, சந்தனக் காப்புகளுக்குப் பிறகு பால், தேன் அபிஷேகங்கள் நடந்தன. சுமார் அரை ஜாமம் அபிஷேகம் நடந்து மீண்டும் திரையிடப்பட்டு அலங்காரம் முடிந்தபின் அர்ச்சகர் திரையை விலக்கி ஆரத்தி எடுத்தார். தூர்ய வாத்தியங்கள் முழங்கின! சங்குகள் ஒலித்தன. பேஷ்வாவும் கனோஜியும் ஆரத்தியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். பிறகு கனோஜி ஒப்பந்தத்தை ஒரு வெள்ளிப் பேழையில் வைத்து பேஷ்வாலிடம் கொடுக்க பேஷ்வா அதை வாங்கி அர்ச்சகரிடம் நீட்டினார். அர்ச்சகர் அந்த ஒப்பந்தப் பேழையை அம்பாளின் அடிகளில் வைத்து அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்தார். முடிவில் கற்பூர ஆரத்திக்குப் பின் தேவி பிரசாதத்துடன் பேழை பேஷ்வாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
குலாபியின் அருளால் மகாராஷ்டிரம் பலனடையட்டும் என்றும் ஆசி கூறி அர்ச்சகர் பேழையை நீட்டினார் பேஷ்வாவிடம். பேஷ்வா பேழையை வாங்கிக்கொண்டு கனோஜியுடன் தோர்லாவாடா திரும்பினார். அவ் விருவருக்கும் மங்கள ஆரத்தி தயாராயிருந்தது தோர்லாவாடாவின் வாயிலில். ஆரத்தித் தட்டை இரு பெண்கள் ஏந்தி வந்தார்கள். அதிலொருத்தியைப் பார்த்ததும் கனோஜிக்கு அதுவரை இருந்த ஆனந்தமெல்லாம் எங்கோ பறந்தது. இரு பெண்களில் ஒருத்தி மஞ்சு. அவள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. காரணம் கனோஜிக்குப் புரிந்ததால் அவர் முகத்திலும் மகிழ்ச்சி மடிந்தது. குலாபியை நினைத்தார் மனத்தில் . ” குலாபி! இவள் கதி என்ன?” என்றும் வினவினார் உள்ளூர. பதில் அங்கு விளையவில்லை. விளைந்த இடம் கல்யாண்! விளைந்த முறை விசித்திரம்.