Jala Deepam Part 3 Ch40 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 40 காந்தமும் இரும்பும்
Jala Deepam Part 3 Ch40 | Read Jala Deepam | TamilNovel.in
மஞ்சுவின் செவ்விய உதடுகளிலிருந்து உதிர்ந்த சொற்களைக் கேட்டதும் பெரும் பிரமிப்பையும் ஓரளவு அச்சத்தையும் கூட அடைந்த இதயசந்திரன், ”பேஷ்வா பாலாஜி விசுவநாத், பேஷ்வா பாலாஜி விசுவநாத்” என்று சந்தை சொல்லிக்கொள்ளும் வைதிக மாணவனைப்போல அந்தப் பெயரை இருமுறை உச்சரிக்கவே செய்தான். பேஷ்வா பாலாஜி விசுவநாத்தை அவன் பார்த்ததில்லை யென்றாலும் அவரைப் பற்றித் தரைப்படை வீரரும், கொங்கணி மக்களும், கடல் மாலுமிகளும் சொல்லிய விந்தைக் கதைகளையெல்லாம் நிரம்பக் கேட்டிருந்தான். அவர் சிப்ளன் உப்பளத்தில் சின்னஞ்சிறு குமாஸ்தாவாயிருந்தது, மெள்ள அந்த அலுவலிலிருந்து கொண்டே மகாராஷ்டிரர்களுக்காக வேவு பார்க்கத் தொடங்கியது, பிறகு மொகலாயர் அவரை சிறை பிடிக்க முயன்றபோது தப்பியோடிவிட்டது, கனோஜியை ஸித்திகளிடமிருந்து தப்ப வைத்தது, கடைசியாக அவர் மகாராஷ்டிர மன்னர் அரண்மனையில் கணக்காயராக அமர்ந்தது முதலிய பல சம்பவங்களை, படிப்படியாக அவர் வாழ்க்கையில் முன்னேறிய விந்தைக் கதைகளை அவன் கேட்டிருந்தான். அவர் நுண்ணிய அறிவும் முன்னோக்கிப் பார்க்கும் சக்தியும் மகாராஷ்டிரத்தில் வீட்டுக்கு வீடு தெரியுமாகையால் மூன்றாண்டுகள் அங்கு அரும்பெரும் செயல்களைப் புரிந்த இதயசந்திரனுக்கு அவரைப்பற்றிய விவரங்கள் தெரிந் திருந்ததில் வியப்பென்ன இருக்கிறது? அவர் தான் தன்னைப் பிடிக்க ஏற்பாடு செய்தார் என்பதைக் கேட்ட வுடன் அவன் இதயத்தில் பிரமிப்பும் அச்சமும் உதயமான தில்தான் என்ன வியப்பிருக்க முடியும்?
இதயத்தில் ஏற்பட்ட பல உணர்ச்சிகளின் காரணமாகவும், தமிழகம் செல்லவும், தான் மகாராஷ்டிரம் வந்த காரியத்தை ஒரு வழியாக முடித்துக்கொள்ளவும், தான் போட்ட திட்டம் படு தூளாகிவிட்டதன் காரணமாகவும், நெஞ்சத்தில் பெரும் குமுறலை அடைந்த இதயசந்திரன், சுடும் கண்களை எதிரேயிருந்த மஞ்சுவின்மீது திருப்பி னான். மாலுமி உடையிலும் மஞ்சு அன்று மிக மனோகரமாயிருந்தாள். இப்படித்தான் இதயசந்திரன் அவளை முதன் முதலாகப் பரசுராமபுரம் மலைப்பாறையின் மறைவில் சந்தித்தான். அதே சராய், அதே சட்டை, அதே தலைக்கட்டு! இப்படித்தான் மறைந்து தன்னுடன் அமர்ந்து தனக்கு உதவி, படகில் அழைத்துச் சென்றாள் அவள் என்பதை எண்ணமிட்டான். அப்பொழுதைவிட இப்பொழுது அவள் அழகு சற்று அதிகப்பட்டிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. கண்களில் அன்றிருந்த துணிவு சற்று குறைந்து வெட்கம் ஏறியிருந்தது. உடலும் சற்றுச் சதை பிடித்து, மார்பும் முன்னைவிடச் சற்று அதிகமாக விம்மியிருப்பதாகத் தோன்றியது. அப்படி முழுப் புஷ்ப மாகப் புஷ்பித்துவிட்ட அவள் தேகத்தின் பொலிவு பன்மடங்கு அதிகப்பட்டு விட்டதை முகத்திலிருந்த தனி மெருகு துலங்க வைத்தது. சராய் நன்றாகப் பிடித்திருந்ததால் இடைக்குக் கீழிருந்த பரிமாணங்களும் செழித்திருந்ததை நிரூபித்தன. இத்தனைக்கும் காரணமும் அவனுக்குப் புரிந்துதானிருந்தது. அந்தக் காரணமும் அவள் கழுத்தில் மங்கல சூத்திரமாகத் துலங்கிக் கொண்டிருந்தது.
அந்த மங்கலக் கயிற்றில் அவன் கண்கள் நிலைத்ததும், அவற்றிலிருந்து சீற்றம் மறைந்து, சிறிது கனிவும் தெரிந்தது. ‘என்ன இருந்தாலும், மஞ்சு என் மனைவி. என்னை விட்டால் இவளுக்கு யாரிருக்கிறார்கள்?’ என்று உள்ளூரக் கேட்டுக் கொண்டான். ஒரு பெண் தனக்குச் சொந்தம் என்று ஏற்பட்டதும் ஆண்கள் கேட்டுக் கொள்ளும் அசட்டுக் கேள்வி அது. அதுவரை வளர்த்த தாய் தந்தையர், சகோதர சகோதரிகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் அசட்டை செய்கிறது ஆண் மனம்; தனக்குத்தான் பொறுப்பிருப்பதாகத் துள்ளுகிறது. மண மான மறுகணம் இந்த விசித்திரம் ஏற்படுகிறது. காரணம் சமூக சம்பிரதாயமா? அல்லது இயற்கை விளைவிக்கும் விந்தையா? பதிலில்லாத புதிர், அவிழ்க்க முடியாத விந்தை! ஆனால் இது ஏற்படுகிறது ஆண் பெண் உறவில்!
இதன் விளைவாக, இதயசந்திரன் மனம் மஞ்சுவை நினைத்துக் கவனித்தாலும் அவள் தன்னைப் பிடிக்க வந்தவள். பாலாஜியிடம் ஒப்படைக்கப் பிடிக்க வந்தவள் என்ற எண்ணம் அவன் உள்ளேயிருந்த ஆத்திரத்தை முழுதும் அணைக்காததால் கடைசியாகக் கேட்டான், “இப்பொழுது நீ பேஷ்வாவிடம் அலுவல் புரிகிறாயா?” என்று .
மஞ்சுவின் விழிகள் அவன் முகத்தில் நிலைத்தன. “இல்லை” என்ற பதில் சுருக்கமாக உதிர்ந்தது அவள் உதடுகளிலிருந்து.
“பின் யாரிடம் பணி புரிகிறாய்?” என்று அடுத்த கேள்வியும் பிறந்தது அவனிடமிருந்து.
“யாரிடமுமில்லை.”
“பின் எதற்காக என்னைப் பிடிக்க வந்தாய்?”
“என்னைவிட்டு ஓடாமல் தடுக்க.”
”அதற்காக?”
“பேஷ்வாவின் கட்டளையை நிறைவேற்ற ஒப்புக் கொண்டேன்.”
அவன் கேள்வியும் திட்டமாயிருந்தது, அவள் பதிலும் திட்டமாயிருந்தது. இருவர் சொற்களிலும் சூடும் இருந்தது. தான் சூட்டுடன் கேள்விகளைப் பிறப்பித்தது தவறாகப் படவில்லை தமிழனுக்கு. மஞ்சு சூடாகப் பதில் சொன்னது கோபத்தையே அளித்தது. ஆகவே இரைந் தான், “கணவனிடம் பேசுகிறபடி நீ பேசவில்லை ” என்று.
“மனைவியிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைப் படி நீங்களும் நடந்து கொள்ளவில்லை’ என்றாள் அவளும் பதிலுக்கு.
இதயசந்திரன் அவள் மீது வெறுப்புத் ததும்பும் விழிகளை நாட்டினான். ”என்னை நீ கைப்பற்றியது திருட்டுத் தனத்தினால்” என்றான்.
“நீங்கள் தமிழகம் ஓட முயன்ற முறைக்கு என்ன பெயர் சூட்டலாம்?” என்று அவளும் கேட்டாள்.
இதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு. மெள்ள மெள்ள அவன் குரலில் சுரம் இறங்கியது. “காணாமற் போன மகனை நினைத்துத் தவிக்கும் ஒரு தாய்க்கு எனது கடமையைச் செய்ய நினைத்தேன்” என்றான் சற்றுச் சினம் அடங்கிய குரலில்.
அதுவரை எட்ட நின்றிருந்த மஞ்சு மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். அவன் கையிலொன்றை எடுத்துத் தன் கையில் வைத்து இறுகப் பற்றிக்கொண்டாள். “குலாபி முன்பாகக் கைப்பிடித்த ஓர் அபலைக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கடமை ஏதுமில்லையா?” என்று வினவினாள்.
அவள் கையின் ஸ்பரிசம் அவன் மனத்தை மேலும் இளக்கியது.
“மஞ்சு! உன்னைக் கைவிடும் நோக்கம் எனக்கு என்றும் இல்லை. இந்த முகவெட்டுக்காரனைத் தமிழகம் கொண்டு சென்று உண்மையைக் கக்கவைத்த பிறகு மீண்டும் உன்னிடம் வந்து விடத்தான் நினைத்தேன். ஆனால் நீ போக விடவில்லை” என்று இப்படிச் சொல்லிக் கொண்டு சென்றவன், திடீரெனப் பேச்சை நிறுத்தி,
“ஆமாம் மஞ்சு! நீ என்னைப் பிடித்தவிதம் மிக விசித்திரமா யிருக்கிறது. நீ எப்பொழுது குர்லா வந்தாய்? எப்படி என்னைத் தூக்கிக் கொணர்ந்தாய்?” என்று வினவினான்.
மஞ்சு அவனை நோக்கிக் குனிந்து, “சொன்னால் மறுபடியும் சீறமாட்டீர்களே?” என்றாள். அவன் பதில் சொல்லவில்லையானாலும் பதில் கிடைத்தது அவளுக்கு. அவள் வலது கன்னத்தில் அவன் இதழ்கள் ஆழப் புதைந்ததால், அந்த இன்ப நிலையில் அவள் பல வினாடிகள் இருந்தாள். பிறகு, அவள் அவனை நோக்கி நகைத்தாள். “இப்படி நீங்கள் என்னை ஏமாற்றி விடுவீர்கள் என்று தான் அவர் உங்கள் உதடுகளில் துளிகளை விடக் குப்பியைத் தந்தார்” என்றாள்.
இதயசந்திரன் பிரமித்தான். “என்ன! குப்பியா? துளிகளா?” என்று கேட்டான்.
“ஆமாம்” என்றாள் அவள் அவனை நோக்கிக் குனிந்த நிலையைச் சற்று அதிகப்படுத்திக்கொண்டு.
அவன் நகைத்தான். “ஏன் நகைக்கிறீர்கள்?” “என்னை வீழ்த்த இத்தனை ஆயுதங்கள் உன்னிடம் இருக்க துளிகளை ஏன் வாங்கி வந்தாய்?” என்று கேட்டான். அத்துடன் சொன்னான், “துளிகளைக் கொடுத்தவர் யாராயிருந்தாலும் உன் வல்லமை அவர்களுக்குத் தெரியாது” என்று.
மஞ்சுவின் கண்களில் காமம் சொட்டியது. அவள் உடல் அவன் மீது தவழ்ந்தது புஷ்பச் சரம்போல. பெண்களை ஜெயிக்க உங்களைவிட வல்லவர் கிடையாது” என்றாள்.
இதயசந்திரன் அவள் முதுகை மெல்ல வருடினான். ‘என்னை வெற்றி கொள்ள உன்னைப்போன்ற கள்ளி யாரும் கிடையாது” என்றான்.
“கள்ளனுக்கேற்ற கள்ளி” என்று அவள் முணுமுணுத்தாள்’’.
“கள்ளன் யார்?”
“நீங்கள் தான்.”
“எப்படி நான் கள்ளன்?”
“தந்தையில்லாத சமயம் பார்த்துக் குலாபி கோயிலில் திருட்டுத் தாலி கட்டுவதும்…”
“பிறகு…”
“பாறைக்கு அழைத்துப் போவதும்… கள்ளன் செயல் அல்லாமல்…” மேலே வெட்கத்தால் அவள் பேசவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் பிரிந்துவிட்ட தால் ஏற்பட்ட வேகம் அவ்விருவரையும் ஆட்கொண்டதால் இருவரும் பேசவில்லை. கடைசியில் அவன் அழைத்தான், ” அடி கள்ளி” என்று.
“ஏன் கள்ளா” என்ற அவள் நகைத்தாள், இன்பத்துக்குப் பின்விளைவாக.
“நான் பார்த்தபோது குர்லாவில் யாருமில்லையே? நிர்க்கதியாயிருந்ததே?” என்றான் மெதுவாக இதய சந்திரன்.
“நிர்க்கதியான கோட்டைகளில் தானே நீங்கள் நுழைந்து பழக்கம்?” மஞ்சு மேலும் நகைத்தாள்.
இதயசந்திரன் ஓரளவு சுயநிலையடைந்ததால் நகைக்க வில்லை. “மஞ்சு! அங்கிருந்த காலிவாத்துகள், படகுகள் யாதாயின? காவல் வீரர்கள் என்ன ஆனார்கள்?” என்றான்.
மஞ்சு நன்றாக எழுந்து ஆடையைத் திருத்திக் கொண்டே கட்டிலின் முனையில் உட்கார்ந்து கொண்டாள். “பாலாஜி விசுவநாத்துடன் லோஹ்காட்டில் சமரசம் ஏற்பட்டதும் படைத் தலைவர்களையெல்லாம் அங்கு வரச்சொல்லித் தந்தை உத்தரவு அனுப்பினா ரல்லவா?” என்று துவங்கினாள் மஞ்சு.
“ஆம். நான் போகவில்லை” என்றான் இதயசந்திரன். “நீங்கள் மட்டும் தான் போகவில்லை. மற்றப் படைத் தலைவர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஆனால் நீங்கள் வராததைப் பாலாஜி கவனித்துக் கேட்கவும் செய்தாராம் தந்தையிடம். நீங்களாக வராவிட்டால் சிறை செய்து அழைத்து வரச் சொன்னாராம். ஆனால், தந்தை ஏதும் செய்யவில்லை. பிறகு பேஷ்வாவும் தந்தையும் கொலாபா வந்தார்கள்.”
“கேள்விப்பட்டேன், ஒப்பந்தம் ஏற்பட்டதும் எனக்குத் தெரியும்.”
“அங்கும் உங்களைப்பற்றி பேஷ்வா விசாரித்தார். பிறகு உங்களைச் சிறை செய்து கொலாபாவுக்கு. அனுப்பும்படி சுகாஜிக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. உத்தரவைக் கொண்டு சென்ற தூதன் திரும்ப வந்தான். உத்தரவு வருவதற்கு முன்னால் நீங்கள் இந்த வீரனுடன் கொலாபாவுக்குக் கிளம்பிவிட்டதாகச் செய்தியும் கொண்டு வந்தான்…”
இந்த இடத்தில் மஞ்சு அவனை உற்று நோக்கி, “இங்குதான் பாலாஜி தமது பிடிவாதத்தைக் காட்டினார். நீங்கள் நிச்சயமாகக் கொலாபாவுக்கு வரமாட்டீர்கள் எனக் கூறினார். வேறு எந்தத் துறைமுகத்திலும் உங்களை அடையாளம் கண்டுகொண்டு விடுவார்களாதலால் நீங்கள் ஜன்ஜீரா சென்று அங்கிருந்து மாறு உடையில் தமிழகம் செல்வீர்களென்று கூறினார். ‘நிம்கர் உண்மையைக் கக்கும் வரையில் தமிழன் அவனை விட மாட்டான்’ என்றும் திடவட்டமாகக் கூறினார் தந்தை யிடம். உங்களைக் கண்காணிக்க ஜன்ஜீரா மலைப்பாதை வழிக்கு ஒற்றர்கள் அனுப்பப்பட்டார்கள். இரண்டு நாட்களுக்கெல்லாம் உங்கள் இருப்பிடம் கொலாபாவுக்கு.
அறிவிக்கப்பட்டது. ஜன்ஜீரா சேருமுன்பு உங்களை மடக்கிவிட பேஷ்வா தீர்மானித்தார். மடக்கக்கூடிய இடம் குர்லாதானென்பதையும் சுட்டிக் காட்டினார்” என்று கூறினாள்.
இந்த விவரங்களை இதயசந்திரன் பிரமிப்புடன் கேட்டான். இத்தனையும் கொலாபாவிலிருந்தா பேஷ்வாவால் முடிவு செய்யப்பட்டது?” என்றும் கேட்டான்.
“ஆம், பேஷ்வா தோர்லாவாடாவை விட்டு நகர வில்லை. எனது தந்தை போர் முறைகளைத் தோர்லாவாடாவின் பெரிய அறையில் தேசப்படத்தை விரித்து நிர்ணயிப்பதைப் பார்த்திருக்கிறீர்களல்லவா? அதே இடத்தில் அதே படத்தை வைத்துக்கொண்டுதான் நீங்கள் செல்லும் பாதையை, தங்கக்கூடிய இடங்களைச் சுட்டிக் காட்டினார்.”
இந்த இடத்தில் நகைத்தான் இதயசந்திரன். ”உன் தந்தைக்குக் கொங்கணிப் பகுதியில் ஒவ்வொரு பகுதியும் தெரியும். அவருக்குச் சொல்லிக் கொடுத்தாரா பேஷ்வா?” என்றும் கேட்டான் நகைப்பின் ஊடே.
மஞ்சு புன்முறுவல் கொண்டாள். “என் தந்தைக்கும் பேஷ்வாவுக்கும் ஒரு வித்தியாசமிருக்கிறது” என்றும் கூறினாள்.
“என்ன வித்தியாசம் மஞ்சு?” என்று வினவினான் இதயசந்திரன்.
“உங்களைச் சிறை செய்ய தந்தைக்கு இஷ்டமில்லை. தெரிந்ததையெல்லாம் தெரியாதது மாதிரி நடித்தார். பேஷ்வா உங்களைப் பிடிக்க உறுதிகொண்டார். ஆகவே, முழுமூச்சோடு தூதுவர்களைக் கொண்டு உங்கள் பயணத்தைக் கவனித்தார்” என்றாள் மஞ்சு.
“அப்படியா?”
“ஆம். அது தவிர, உங்களைப் பிடிக்க என்னை அனுப்பத் தீர்மானித்ததும் பேஷ்வாதான்.”
“ஏன் உன்னை அனுப்பினார்கள்?” “பேஷ்வா உத்தரவிட்டபோது அவர் சாம்பல்நிறக் கண்கள் மின்னியதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். தோர்லாவாடாவின் மந்திராலோசனை அறையில் என்னையும் நோக்கி என் தந்தையையும் நோக்கிய பேஷ்வா, ‘இவளை அனுப்பு கனோஜி, தமிழனைப் பிடிக்க’ என்றார். ‘இவளையா அனுப்ப வேண்டும்’ என்று கேட்டார் தந்தை. பாலாஜி பதில் சொன்னார். பதிலைக்: கேட்ட தந்தை தோர்லாவாடாவே அதிரும்படியாக நகைத்தார். தந்தை எப்படி நகைப்பாரென்பது தான் உங்களுக்குத் தெரியுமே.”
இதயசந்திரனின் விழிகள் அவளை வியப்புடன் நோக்கின. “அப்படி என்ன பதிலைச் சொல்லிவிட்டார் பேஷ்வா?” என்றும் வினவினான்.
மஞ்சுவின் விழிகளில் வெட்கச் சாயை படர்ந்தது. “காந்தத்தைக் காட்டித்தான் இரும்பை இழுக்க வேண்டும் என்றார்” என்றாள் மஞ்சு மெல்ல.
இருவர் கண்களும் கலந்தன. சிறிது நேரம் மௌனம். பிறகு இருவரும் சற்றுப் பெரிதாகவே நகைத்தார்கள்.