Jala Deepam Part 3 Ch47 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
ஜல தீபம் மூன்றாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 47 சுவாமியின் கடிதம்
Jala Deepam Part 3 Ch47 | Read Jala Deepam | TamilNovel.in
மரணத்தைப் பற்றியோ மறுநாள் தீர்ப்பைப் பற்றியோ தனக்கேதும் கவலையில்லையென்பதை. மறைமுகமாக உணர்த்திவிட்டு மிகுந்த கம்பீரத்துடன் தலை வணங்கி நீதி மண்டபத்திலிருந்தே இதயசந்திரன் வெளியேறிய பல வினாடிகளுக்குப் பிறகும் பேஷ்வா பாலாஜி விசுவநாத்தின் முகம் அடியோடு உணர்ச்சியற்ற கல்லாகவே காட்சியளித்தது. பிறகு, அவர் கையசைத்துப் பக்கத்திலிருந்த சிட்னியையும் நீதிமண்டபக் காவலரையும் வெளியே செல்லச் சைகை செய்தபோது கூட அந்த முகம் சிலை முகமாகவே இருந்தது. எல்லோரும் மண்டபத்தை விட்டு அகன்று தாமும் கனோஜி ஆங்கரேயும் தனித்திருந்த சமயத்தில்தான் அவர் கண்கள் சற்றே எழுந்து ஸார்கேலின் கண்களைச் சந்தித்தன. அந்தக் கண்களிலிருந்து பேஷ்வாவின் உள்ளத்திலோடிய எண்ணங்களை அடியோடு புரிந்துகொள்ள முடியாத ஸார்கேல், தமது ஆசனத்தி லிருந்து எழுந்து மேடைக்கருகில் வந்து. அதன் முனையில் ஒரு காலை மடித்து மேலிட்டும் இன்னொன்றைத் தொங்க விட்டும் அரைகுறையாக உட்கார்ந்து கொண்டார். அப்பொழுதும் பாலாஜி ஏதும் பேசாததால், “என்ன யோசிக்கிறீர்கள் பேஷ்வா?” என்று வினவினார் மெல்ல.
பாலாஜி விசுவநாத் தமது தலைப்பாகையை எடுத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பின்னாலிருந்த நீண்ட உச்சிக் குடுமியையும் ஒருமுறை சீர்படுத்தி முடிந்து கொண்டார். அவரது சாம்பல்நிறக் கண்கள் கனோஜியின் மீது நன்றாகப் பதிந்தன. “நான் யோசிப்பது என்னவென்று உண்மையில் உனக்குத் தெரியாதா.
கனோஜி?” என்று மென்மையான, ஆனால் உறுதியான குரலில் வினவவும் செய்தார்.
கனோஜியின் ராட்சத விழிகள் பேஷ்வாவை நோக்கின. ‘பேஷ்வாஜி…” என்று அவரது பெருத்த உதடுகள் அசைந்து வார்த்தையை உதிர்க்கத் துவங்கின.
பேஷ்வா அவரைச் சற்றே தடுத்து, ‘பேஷ்வாஜி… எல்லாமிருக்கட்டும். நாமிருவரும் பழைய நண்பர்கள். அப்பொழுது பேசியதுபோல் பேசுவோம்” என்று பாலாஜி விசுவநாத் கூறவே, சற்றுச் சங்கடப்பட்ட கனோஜி கூறினார். ”என்னால் முடியாது பாலாஜி. அந்த நிலையில் என்னால் பேச முடியாது. நீங்கள் இப்பொழுது சத்ரபதியின் பேஷ்வா. இந்நாட்டின் தலைவிதி உங்கள் கைகளில் இருக்கிறது” என்று.
”அன்று?” என்று மெல்லக் கேட்டார் பாலாஜி.
“என் கதி உங்கள் கையிலிருந்தது. அது தனிமனிதன் கதி. இன்று நாம் நாட்டின் கதியைப் பற்றிப் பேசுகிறோம்” என்று கனோஜி சுட்டிக் காட்டினார்.
பாலாஜி அப்பொழுது தான் உணர்ச்சியைச் சிறிது காட்டினார். “நீ நாட்டைப் பற்றி நினைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார் மெல்லப் புன்முறுவல் கோட்டி.
கனோஜியின் பெரிய புருவங்கள் மேலே ஒரு முறை ஏறி இறங்கின. “இதற்கு முன்பு?” என்ற அவர் கேள்வியிலும் வியப்பிருந்தது.
“உன் நலனைக் கவனித்து வந்தாய்?” என்றார் பேஷ்வா.
“அரபுக் கடல் மூலம் பிரிட்டிஷாரோ, போர்ச்சுக்கீஸி யரோ, ஸித்திகளோ மகாராஷ்டிர நாட்டை ஆக்கிரமிக்காமல் பாதுகாத்தது சுயநலனா?” என்று கேட்டார்ங்கரே.
“வெளிநாட்டார் கப்பல்களைக் கொள்ளையடிப்பது, கொள்ளையடித்த பொருள்களை விஜயதுர்க்கத்திலும், சுவர்ண துர்க்கத்திலும் கொண்டு சேர்த்துக்கொள்வது இவை நாட்டு நலனுக்கான செய்கையல்லவென்று நினைக்கிறேன்” என்று பேஷ்வா விஷமமாகச் சொன்னார்.
“விஜயதுர்க்கமும் சுவர்ண துர்க்கமும் மற்றும் பல துறைமுகக் கோட்டைகளும் ராணி தாராபாய்க்குச் சொந்தமானவை. ராணியின் ஸார்கேல் கடல்யுத்தப் பொருள்களை அங்கு சேர்க்காமல் எங்கு சேர்க்க முடியும்?” என்று கேட்டார் லார்கேல்.
“வெள்ளைக்காரர்களைச் சிறைப்பிடித்து, உதாரண மாக அந்தக் காதரைனைச் சிறைப்பிடித்து, முப்பதினாயிரம் ஈடு வாங்கிய பணம் உன் கஜானாவிலிருக்கிறதா? தாராபாயிடம் போய்ச் சேர்ந்ததா?”
”அந்தச் சமயத்தில் ராணி தாராபாய் சிறைப்பட்டு விட்டார்கள். ஆகவே அவர் சார்பாக அவருடைய ஸார்கேல் அந்தப் பணத்தைப் பத்திரமாக வைத்திருக் கிறார்.”
பாலாஜியின் கண்களில் விஷமம் தெரிந்தது. “இப்பொழுது அதே ஸார்கேல் சத்ரபதி ஷாஹுவின் ஸார்கேலாக மாறிவிட்டாதால் அந்தப் பணம் ஸதாராலிலுள்ள கஜானாவுக்கு வந்து சேருமா?”
கனோஜியின் கண்களில் மிதமிஞ்சிய விஷமம் தாண்டவமாடியது. அடுத்த வினாடி அவற்றில் போலிப் பொறுப்புணர்ச்சி தெரிந்தது. “கப்பல்களில் வசூலாகும் பணத்தை ஸதாராவுக்கு அனுப்புவதால் அரபிக் கடல் பகுதியில் சத்ரபதியின் நலன்கள் பாதிக்கப்படும். இங்கிருக் கும் பெரும் கடற்படையைச் சரியான நிலையில் வைத்திருக்க, அவற்றை ஒழுங்கான முறையில் பராமரிக்க, மேலும் கடற்படையை விஸ்தரிக்க, பெரும் பணம் செலவாகும். அந்தச் செலவைக் குறைத்தால், கடற்படையின் திறமை பாதிக்கப்படும். கடற்படையின் திறமை குறைந்தால் சத்ரபதியின் நலன் பாதிக்கப்படும். இப்பொழுது மகாராஷ்டிரமிருக்கும் நிலையில் நான் கடற் படைக்கு மன்னரிடம் பணம் கேட்பது தவறு. இங்கு கிடைப்பதை வைத்துக்கொண்டே நிர்வகிக்கப் பார்க்கி றேன். தவிர, நாமிருவரும் குலாபி முன்பு கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி கொங்கணியின் வருவாயெல்லாம் எனக்கென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. குலாபி முன்பு செய்யப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நாம் மீற முடியாது” என்ற கனோஜி, சொற்களிலும் பொறுப்பைக் காட்டினார்.
முகத்தில் அவர் பொறுப்புணர்ச்சியைக் காட்டினாலும் உள்ளூர அவர் தம்மைப் பார்த்து நகைக்கிறாரென்பதைப் புரிந்து கொண்ட பேஷ்வா மெல்லப் புன்முறுவல் கோட்டினார். கனோஜியின் சட்ட திட்டப் பேச்செல்லாம் ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கபளீகரம் செய்வதற்கே என்பதைப் புரிந்துகொள்ள பேஷ்வாவுக்கு அரை வினாடிகூடப் பிடிக்கவில்லை. ஆகவே கேட்டார் பேஷ்வா, “குலாபி முன்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீற மாட்டாய்?” என்று.
“கண்டிப்பாக மாட்டேன்” என்றார் கனோஜி. ”இதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது” என்றார் பாலாஜி.
“இதிலென்ன மகிழ்ச்சி?’ என்று கேட்டார் கனோஜி, பாலாஜியின் சொல்லில் உள்ளர்த்தம் இருப்பதை ஊகித்து.
“நாளை தமிழனைப்பற்றித் தீர்ப்புக் கூறப் போகிறேன்” என்று துவங்கினார் பாலாஜி.
“ஆம்.”
“அந்தத் தீர்ப்பை அமுலுக்கு வராமல் உடைக்கக் கூடியது நீதான்.”
“நானா!”
“ஆம். உன்னிடம் இங்கு படை வலுவிருக்கிறது. ஆனால் தீர்ப்புக்கு விரோதமாக நீ எதுவும் செய்ய முடியாது.”
“ஏன் செய்ய முடியாது?” “குலாபி முன் ஒப்பந்தம் செய்திருக்கிறாய் சத்ரபதி ஷாஹுவின் கட்டளைகளை நிறைவேற்றுவதாக, அவரது நியாயத்தை இந்தப் பகுதியில் அமுல் நடத்துவதாக. ஆகவே நாளை தீர்ப்பை எதிர்த்துத் தமிழனைத் தப்புவிக்கவோ, ரகசியமாக விடுதலை செய்யவோ நீ முயல முடியாது. அப்படிச் செய்யப்படும் எதுவும் ராஜத் துரோகமாகும். அது மட்டுமல்ல, குலாபியின் முன் செய்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். தெய்வக் குற்றமாகும்.” இதைச் சொன்ன பாலாஜி எழுந்து, மேடையை விட்டுக் கீழே இறங்கினார்.
கனோஜியின் முகம் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது. “இதை எதற்காகக் கூறுகின்றீர்கள் என்னிடம்?” என்று கேட்டார் கனோஜி உஷ்ணத்துடன்.
பாலாஜி அவரை நோக்கிச் சாவதானமாகப் பதில் சொன்னார்: “தமிழனைப் பிடித்து வந்தபோது, அவன் கொலாபாவில் வந்திறங்கிய போது உன் முகத்தில் மிகுந்த கவலையைக் கண்டேன். என்னையும் மீறி, கப்பல்கள் தரையை அணுகாதிருக்க வெடிக்கப்படும் இரு எச்சரிக்கை பீரங்கிகளையும் நீ இருமுறை பிரயோகித்து ஜல தீபத்தை அப்படியே திருப்பிவிட முயன்றாய். கடல் கொந்தளிப்போ, வேறு அபாயமோ இல்லாததால் அவர்கள் அந்தப் பீரங்கி வீச்சுக்குக் காரணம் தெரியாமல் குழம்பி வந்தார்கள் கொலாபாவுக்கு. அன்று உன் முகத்தில் கவலை மிதமிஞ்சிக் கிடந்ததை நான் கவனித்தேன். ஆனால், நேற்று முதல் திடீரென அந்தக் கவலை முகத்திலிருந்து அகன்றுவிட்டது. நீ ஏதோ முடிவுக்கு வந்து விட்டாயென்பதைப் புரிந்து கொண்டேன். உன் கடமையை உனக்கு வலியுறுத்தவே உன் வாயிலிருந்து குலாபியின் சன்னிதான ஒப்பந்தத்தின் புனிதத்தைப்பற்றி வரவழைத்தேன். ஆகவே தெரிந்து கொள் கனோஜி. நாளை தீர்ப்பு எதுவாயிருந்தாலும் உன்னையும் அது கட்டுப்படுத்தும். அதை மீறி நீ எந்த நடவடிக்கை எடுத்தாலும் அரச விரோதமாகும்; தமிழனைத் தப்புவிக்கவோ வேறுவிதத்தில் அவனுக்கு உதவவோ முயலாதே.”
இப்படிச் சொல்லிவிட்டு பாலாஜி மெல்ல நீதி மண்டபத்தை விட்டு வெளியே நடந்தார். தமது வாழ்க்கை யில் முதன் முதலாகக் கனோஜி ஆங்கரே கல்லெனச் சமைந்து நின்றார். வெகு தந்திரமாக பாலாஜி விசுவநாத் தமது கைகளை அடியோடு கட்டிவிட்டதை உணர்ந்தார். இதயசந்திரனுக்குத் தான் உதவாவிட்டால் அவன் கதி அதோ கதிதானென்பதை உணர்ந்ததாலும், அதன் விளைவாகத் தமது மகளின் வாழ்க்கையும் அடியோடு அழிந்துவிடுமென்பதையும் உணர்ந்ததாலும், அடியோடு செயலற்று நேரம் போவது தெரியாமல் நின்றுகொண்டிருந்துவிட்டுக் கடைசியாகத் தடதடவென அசுர நடை நடந்து படிகளில் இறங்கித் தமது அறைக்கு வந்து சேர்ந்தார். அங்கு தமது ஆசனத்திலமர்ந்தவண்ணம் கொலாபா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டாலென்ன என்று நினைத்தார். சுதந்திரக் கடல் பறவையாக இருந்த தம்மை இந்த சித்பவன் பிராம்மணன் ராஜீய சிக்கல் களிலும் அதன் சம்பிரதாயச் சுழலிலும் சிக்க வைத்து விட்டதை எண்ணிப் பெருமூச்சு விட்டார். அவர் பெரிய கைகள் ஒருமுறை பேஷ்வாவின் மென்னியைப் பிடிப்பது போல் ஒன்றுசேர்ந்து விரல்கள் நெரித்தன. ஆனால், குலாபி முன்பு செய்த ஒப்பந்தத்தைத் தாம் எந்தவிதத்திலும் மீற முடியாதாகையால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கண்டுபிடிக்கக் கூடியவர் பிரும்மேந்திர சுவாமி என்பதை உணர்ந்தார். அந்த உணர்ச்சி இன்னொரு வியப்பைத் தந்தது அவருக்கு. தம்மிடம் இதயசந்திரனை ஒப்படைத்த பிறகு பிரும்மேந்திர சுவாமி காணப்படவில்லையென்பதை யும், நீதி மண்டபத்துக்குக்கூட அவர் வரவில்லை யென்பதையும் எண்ணிப் பார்த்தார். அந்த எண்ணத்தின் விளைவாக ஒரு காவலனை விளித்து பிரும்மேந்திர சுவாமி எங்கிருக்கிறாரென்பதைப் பார்த்து வரும்படி உத்தர விட்டார்.
ஆனால், கனோஜியின் வீரர்கள் என்ன சல்லடை போட்டுச் சலித்தும் பிரும்மேந்திர சுவாமி அகப்படவில்லை. பிற்பகல் வரையில் தேடிவிட்டு சுவாமி அகப்பட வில்லையென்பதைத் தெரிவித்த காவலரிடம், ”எங்கு போயிருக்கிறாரென்பதையாவது கண்டுபிடியுங்கள்” என்று உத்தரவிட்டார் கனோஜி.
கொலாபாவிலிருந்து ஆலிபாக் கரைக்குச் செல்லும் படகொன்றில் சுவாமி காலையில் சென்றதாகவும், அங்கிருந்து ஒரு புரவியில் அவர் மலைக்காட்டை நோக்கி வேகமாகப் போனதாகவும் தகவல் கிடைத்தது. அவர் போவதைப்பற்றி ஏதாது சொன்னாரா என்பதை மஞ்சு விடமும், இதயசந்திரனிடமும் விசாரித்தார் கனோஜி. அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை. எக்காரணத்தாலோ சுவாமி அடியோடு மறைந்துவிட்டார் என்பது தான் தெரிந்தது. பிறகு சுவாமியைப்பற்றி நினைப்பதைக் கை விட்ட ஆங்கரே அடுத்த நாள் தீர்ப்பைப் பற்றிக் கவலைப் படலானார். அந்தக் கவலையை அன்றிரவு குலாபி கோயில் அர்ச்சகர் அகற்ற முயன்றார். “மஞ்சுவுக்குக் குலாபியின் சிரசின் சிவப்பு மலர் கிடைத்திருக்கிறது. அவளுக்கு எந்தவிதக் கெடுதலையும் யாரும் செய்ய முடியாது. ஆயிரம் பேஷ்வாக்கள் சேர்ந்தாலும் அவள் வாழ்வின் வளத்தைத் தடுக்க முடியாது” என்று கூறினார்
அது சற்று ஆறுதலாயிருந்தது ஆங்கரேக்கு. “எல்லாம் உன் செயல்” என்று குலாபியை வணங்கிவிட்டுத் தோர்லா வாடாவுக்கு வந்தார் கனோஜி. அவர் வருமுன்பே பேஷ்வா பாலாஜிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது சுவாமியிடமிருந்து. அக்கடிதத்தில் இதயசந்திரன் வழக்குத் தீர்ப்பைத் தாம் வரும் வரை ஒத்திப் போடும்படி பிரும்மேந்திர சுவாமி பாலாஜிக்குத் தெரிவித்திருந்தார்.