Raja Muthirai Part 1 Ch27 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 27 பொன்னிறக் கால்கள், பொலிவுற்ற முகம்
Raja Muthirai Part 1 Ch27 |Raja Muthirai Part1|TamilNovel.in
மன்னனின் சாம்பல் நிறப் புரவியால் மிக முரட்டுத் தனமாக வீசியெறியப்பட்ட முத்துக்குமரியைத் தனது இரு மக்களிலும் தாங்கிப் பிடித்துக்கொண்டு, மன்னரைச் சேர்ந்த யாரையும் சோதிக்க முயல்வதில் ஆபத்து இருக்கிறதென்று உணர்த்திக்கொண்டும், கேவலம் சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியைத் தூக்குவதுபோல் தூக்கிக்கொண்டும் எதிரேயிருந்த விடுதியை நோக்கி நடந்த இந்திரபானு, விடுதியின் படிகளில் அவளைக் கீழே போடாத குறையாகச் சரேலென்று இறக்கிவிட்டான். அவன் அப்படி இறக்கு முன்பாகவே விடுதித்தாழ்வரையிலிருந்து கீழே இறங்கி ஓடி வந்த இளநங்கை முத்துக்குமரியைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். “வா குமரி! தாழ்வரைக்கு வந்து சற்று பட்கார்ந்து கொள்!” என்று அன்புடன் ஆறுதல் கூறிப் படிகளின்மீது ஏற்றி அழைத்தும் சென்றான் கோட்டைக் காவலன் மகள். அப்படிச் சென்ற அந்த இருவரையும் போகவிட்ட இந்திரபானுவும் சிறிது நேரம் கழித்து அவர் களைத் தொடர்ந்து சென்றான்.
அவன் தொடர்ந்து வருவதை முத்துக்குமரி நாலைந்து படிகள் ஏறியதுமே உணர்த்தவளானாலும் அவள் தலையைத் திருப்பிப் பார்க்கக்கூடச் சக்தியற்றவளானாள். பகிரங்கமாகப் பல வீரர்களுக்கு முன்னால் தன் வீரத்தைக் காட்ட முயன்று அவமானப்பட்டதை நினைத்து, அவள் மனம் குன்றிப் போயிருந்தது. அத்துடன் விளையாட்டுப் பின்ளை போலவும், அதிக பலமில்லாதவனைப் போலவும் மேலுக்குத் தோற்றமளித்த இந்திரபானுவின் புஜபலம் அவளுக்கு ஆச்சரியத்தையும் அளித்திருந்தது, புரவி தன்னை வீசியெறிந்ததும், விநாடி மாத்திரத்தில் அவன் தன்னை அப்படியே தாங்கிக்கொண்டது, கோட்டையில் வீரர்களுக்கு முன்பாகத் தான் என்ன திமிறியும் விடாமல் சிறு குழந்தையைப் போலத் தன்னைத் தூக்கி வந்தது இவற்றை நினைத்துப் பார்க்கப் பார்க்க வியப்பு மட்டுமின்றி இன்பம் கலந்த வேதனையும் அவன் இதயத்தைச் சூழ்ந்து கொண்டதால், அவள் தலையைச் சிறிதும் நிமிர்த்தாமலே படிகளில் ஏறித் தாழ்வரைக் கைப்பிடிப்பில் உட்கார்ந்து கொண்டான். அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்ட இளநங்கைக்கு அவள் இதய வேதனை புரிந்திருந்தபடியால் இளநங்கையும் மௌனமே சாதித்தால் பல வினாடிகள். அந்த மௌனத்திலும் கூடக் கோட்டையின் நடுவெளியில் நடந்த நாடகம் அவன் மனக்கண் முன்பு தோன்றவே, அதைத் திரும்பப் புத்தியில் புரட்டிப் பார்த்து பெரும் பிரமிப்படைந்தாள். விடுதித் தாழ்வரையிலிருந்து கீழேயிருந்த நடுவெளிக்கு முத்துக்குமார் ஆத்திரத்துடன் படிகளில் இறங்கி ஓடியது, அவள் புரவியை அவிழ்த்ததும் வீரர் சிலர் பிரமித்து நின்றது. அதே சமயத்தில் மன்னர் தங்கியிருந்த விடுதி முனைப்பிலிருந்த இந்திரபானு அம்புபோல் பாய்ந்து வந்தது, புரவி பேயாட்டம் ஆடுகையில் அவன் புரவியை உற்றுப் பார்த்துக்கொண்டே சென்றது, புரவி பாண்டியன் மகனை விசிறியதும் வெகு வேகமாகப் பாய்ந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து அவளைப் பற்றிக்கொண்டு எழுத்தது – இவையனைத்தையும் சொப்பனத்தில் பார்ப்பது போல் பார்த்த இளநங்கையும் ஏதும் பேசாமலே உட்கார்ந் திருந்தாள். அந்த இரு மங்கையரின் மனக் கிளர்ச்சிகளையும் உளைச்சல்களையும் உணர்ந்துகொண்டு அவர்கள் எதிரில் நின்ற இந்திரபானுவே பேச்சுக்கொடுக்கத் தொடங்கி “கொற்கைக் கோட்டைக் காவலரின் செல்வி கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்டால் அடிமை பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன்” என்றான் உணர்ச்சி ஏதுமற்ற வறண்ட குரலில்.
விளையாட்டுப் பிள்ளையெனத் தான் அதுவரை நினைத்து வந்த இந்திரபானுவின் குரல் அந்தச் சமயத்தில் கடினமாயிருந்ததையும், பெரும் படைத்தலைவன் சாதாரண வீரனை நோக்கிக் கட்டளையிடும் முறையில் அவன் கேள்வியும் அமைத்திருந்ததையும் அவன் பயோகித்த அடிமையென்ற சொல்லில் பணிவுக்குப் பதில் கேலித்தனமே இருந்ததையும் கவனித்த இளநங்கை, கேட்பதற்கு ஏதுமில்லை வீரரே! நீங்கள் அரசகுமாரியைக் காத்ததற்கு நன்றி” என்று மட்டும் கூறினாள்.
இந்திரபானுவின் உணர்ச்சியற்ற குரல் மீண்டும் ஒலித்தது. “அரசகுமாரியைக் காப்பாற்றியது என் கடமை, அதற்கு நன்றி தேவையில்லை. நீங்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள விரும்புவதாக மன்னர் என்னிடம் சொன்னார். உங்களுக்கு விளக்கம் தரும்படியாய் உத்தரவாகியிருக்கிறது,” என்று உதிர்ந்தன உணர்ச்சியற்ற சொற்கள் அவன் உதடுகளிலிருந்து.
இளநங்கை பதிலேதும் சொல்லாததால், இந்திரபானு படிகளை நோக்கிச் செல்லத் துவங்கினான். “இருங்கள் வீரரே!” என்ற இளதங்கையின் சொற்கள் அவனை மீண்டும் திரும்ப வைத்தன. “கேளுங்கள் தேவி!” என்று ஊக்கினான் அவன்.
இளநங்கை தன் பக்கத்திலிருந்த முத்துக்குமரியை ஒரு விநாடி நோக்கினாள். முத்துக்குமரி குனிந்த தலை நிமிராமல், உட்கார்ந்திருக்கவே. இளநங்கையே இந்திர பானுவை நோக்கிச் சொன்னாள், “கொற்கையிலிருந்து பறப்பட்ட நாளாக உங்கள் போக்குப் புரியாத புதிராயிருக்கிறது வீரரே!” என்று. அதற்குமேல் சொல்ல அவள் தயங்கினாள்.
இந்திரபானு அவளுக்கு உடனே பதில் சொல்ல வில்லை. தாழ்வரைக் கோடிக்குச் சென்று அகத்தியர் பேருச்சியை உற்று நோக்கினான். பிறகு அங்கிருந்தே அதைக் கையால் சுட்டிக் காட்டி, “தேவி! பொதியமலைக் கூட்டத்தின் அந்தப் பேருச்சியைப் பார்த்தீர்களா?” என்று வினவினான்.
இளநங்கை தான் இருந்த இடத்திலிருந்தே கடுமையாகவும் கம்பீரமாகவும் எழுந்து நின்ற அந்த மலையுச்சியைக் கவனித்தாள். “ஆம், பார்த்தேன்,” என்றும் சொன்னாள் சற்றுப் பயத்துடன்.
அவள் குரலில் இருந்த பயத்தை இத்திரபானு கவனிக்கவே செய்தான். அவளை மெல்ல அணுகி சொன்னான், “அந்த உச்சிக்கு அகத்தியர் உச்சி என்று பெயர்” என்று.
“அது தெரியும் எனக்கு” என்றாள் இளநங்கை, தெரிந்த விஷயத்தை எதற்காக அவன் திரும்பச் சொல்கிறானென்பதை அறியாமல்.
இந்திரபானு விளக்கினான், “தேவி! அந்த உச்சி தமக்கு நன்றாகத் தெரிகிறது இங்கிருந்து. அருகிலிருப்பது போலும் தோன்றுகிறது. ஆனால் அது அருகிலில்லை தேவி அது இருப்பது தொலைதூரம். அதில் என்ன இருக்கிறது. எப்படி இருக்கிறது என்பதையும் இங்கிருக்கும் நாம் அளவிட முடியாது,” என்று கூறிய இந்திரபானுவின் சொற்களில் பெரும் பணிவு நிரம்பிய உணர்ச்சி ஊடுருவி நின்றது.
“ஆம் வீரரே,” என்றான், இளநங்கை அவனை மேலும் பேச்சுக்குத் தூண்ட.
“அந்த உச்சியைப் போலத்தான் பாண்டிய மன்னரும் நமக்கு அருகிலிருப்பது போலிருக்கிறார். சர்வ சாதாரணமாக நம்முடன் அளவளாவுகிறார். ஆனால் அவரை நாம் புரிந்து கொள்ள முடியாது தேவி! அருகிலிருப்பது போலிருந்தாலும் தூரத்தேயிருப்பதும், பார்வைக்குச் சாதாரணமாக இருந்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாததும், பெரும் கம்பீரத்துடன் நிற்பதுமான அகத்தியர் மலையுச்சி எப்படியோ அப்படித்தான் மன்னர்; அவர் எண்ணங்களை அளவிட நம்மால் முடியாது, அதோ, அந்த உச்சி நெடுந்தூரம் பல விஷயங்களைப் பார்ப்பது போல் மன்னரும் பார்க்கிறார். அந்த நோக்குடன் நாமும் பார்த்தால்தான் அவர்போக்கு புரியும்” என்ற இந்திரபானுவின் குரலில் உணர்ச்சி அலைகள் பெரிதும் புரண்டன. தேவி! மன்னரை, மன்னர் செயல்களை, அவரை அண்டியவர்களின் போக்கைப் புரிந்துகொள்ள முயலாதீர்கள். புரிந்து கொள்ள முயன்றால் புரவிமீது ஏறிய பாண்டிய ராஜபுத்திரியின் கதிதான் அனைவருக்கும் ஏற்படும். மன்னரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட விஷயங்கள் ஏன் நடக்கின்றனவென்று கேட்பது கிடையாது. வீரபாண்டியரே இதுவரை கேட்டதில்லை. மற்றவர் யார் கேட்க?” என்னும் சொற்களை உதிர்த்த இந்திரபானு, சில விநாடிகள் நிதானித்து மீண்டும் உணர்ச்சி எழுச்சி பெற்றதால் சற்று இரைந்தே ஒலித்த குரலில் சொன்னான்.
“தேவி! தமிழகத்தின் வரலாற்றில் முக்கியப் பகுதி யொன்றில் நாம் இன்று வாழ்கிறோம். வரலாறு மாறப் போகிறது தேவி. அந்த மாற்றத்தைச் சிருஷ்டிக்க இதுவரை வரலாறு காணாத பெரும் லட்சிய புருஷர் தோன்றியிருக்கிறார். இன்னும் சில வருஷங்களில் தமிழகம் பெரும் வீரச் செயல்களைக் காணப்போகிறது. அதன் பூர்வாங்க நிலையில் இன்று நாமிருக்கிறோம். ஒரு மகாவீரன் தலைமையில் இன்று வீரபாண்டியரும், நானும், இன்னும் பல வீரரும் தமிழக வரலாற்றுக்குப் புதுப்பாதையை அமைத்து வருகிறோம். அந்தப் பாதையை அந்த மகாவீரர் ஏன் அமைக்கச் சொல்கிறார், எந்த முறையில் அமைக்கச் சொல்கிறார். எந்த வழியில் அமைக்கச் சொல்கிறார் என்று கேட்பதில் அர்த்தமில்லை. நம் அறிவையும் மீறியவர் மன்னர் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. நாங்கள் அவரைப் புரிந்து கொள்ளக் கூட முயல்வதில்லை. பணி புரிகிறோம்; அவ்வளவுதான். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். வீரபாண்டியரை, தனக்குப் பின்பு அரியணையில் ஏறக்கூடிய இளவரசரை, “கொற்கைக்குப் போய் முத்துக் களவைக் கண்டுபிடி’ என்று உத்தர விடுகிறார் பாண்டிய மன்னர். அவர் பதில் பேசாமல் பணியாற்றச் செல்கிறார். சொந்த மகளை முத்துக் கடை வணிகத் தொழிலுக்கு ஏவுகிறார். பிறகு என்னைத் திடீரெனக் கொட்டுந்தளத்தில் சந்தித்து, “பெண்களிருவரும் அகத்தியர் குடிலில் இருக்கட்டும். கொட்டுந்தளம் கைமாறி விட்டது. திடீரென வீரரவி இங்கு தோன்றி, கொட்டுந்தளத்தை வசப்படுத்திக் கொண்டு விட்டான், நீ அவனுடன் சேருவதாகப் பாசாங்கு செய்,” என்று உத்தரவிடுகிறார். உங்களை இருக்கச் சொல்லி நிலைமையறிந்து வரச்சென்றவன் எதிரியிடம் போகிறேன். கொட்டுத் தளத்துக்கு வணிகர்களாக வந்தவர்கள் பாண்டிய வீரர்கள் என்பதை அறியாத வீரரவி உங்களைச் சேரநாடு கடத்திச் செல்ல முயல்கிறான். நானே அதற்கு உதவுகிறேன் மன்னர் உத்தரவுப்படி. ஆனால் சேர வீரர்களை உங்களுக்குத் துணை அனுப்புகிறேன். புரிகிறதா தேவி,”
இளநங்கைக்குச் சகலமும் புரிந்தது. கொட்டுத் தளத்தின் நிலை சாசுவதமில்லாமல் கைமாறுவதையும் சேரரும் பாண்டியரும் அதைப் பிடித்துத் தங்கள் வசமிருத்த முயன்றிருக்கிறார்களென்றும், அந்தச் சிக்கலில் தாங்களும் சிக்கிக் கொண்டதாகவும் புரிந்து கொண்டாள்.
இந்திரபானு மேலும் சொன்னான்; “வீரபாண்டியர் உங்களைக் கொட்டுந்தளத்துக்கு அனுப்பிய போது, அது நமது கையில் இருப்பதாக நினைத்தே அனுப்பினார். ஆனால் அது தமது சேரநாட்டுக்கு அருகிலிருப்பதால் ஆபத்து நேரக் கூடும் என்பதையும் அறிந்தே அனுப்பினார். அவர் கோடரிவீச்சுக்கு இலக்கான வீரரவி வெகு துரிதமாகக் காயத்துடன் கொட்டுந்தளம் கிளம்பு வானென்றோ, நமக்கு முன்னர் அதைப் பிடித்திருப்பானென்றோ அவருக்குத் தெரியாது, அதில் ஏமாந்தோம். ஆனால் வீரரவி எதைச் செய்வான், எப்படிச் செய்வான் என்பதை நிர்ணயிப்பது கஷ்டம் தேவி. எதற்கும் துணிந்தவன் சேரமன்னன். யாரும் அறிய முடியாத வித்தகன். இல்லையேல், மன்னனிடமிருந்து தப்ப முடியுமா அவனால்?”
“தப்பிவிட்டானா சேர மன்னன்?” என்று கேட்டான் இளநக்கை.
“ஆம் தேவி! நேற்றிரவு மன்னர் திடீரென இங்கிருந்து வந்து சேர மன்னர் இருப்பிடத்தையே முப்பது வீரர்களுடன் சூழ்ந்துகொண்டார். சேரமன்னன் போரிடுவா னென்று நினைத்தார். ஆனால் போர் ஏதும் நடக்கவில்லை. அவன் இருப்பிடத்திலிருந்து எப்படியோ தப்பிச் சென்று விட்டான். கொட்டுத்தளத்திலிருந்து அவன் வீரர் இருநூறு பேரும் மறைந்துவிட்டார்கள். சேரர் மலை நாட்டவர் மலைகளில் போவதும் வருவதும் அவர்களுக்குச் சகஜம். நம் வீரர்களால் அது முடிவதில்லை. கொட்டுத்தளத்தை இப்பொழுது கைப்பற்றிவிட்டோம். முரசுகள் உங்கள் காதில் விழுந்திருக்குமே?” என்றான். இந்திரபானு சற்று நிதானித்துவிட்டு “தேவி பாண்டிய மன்னர் சிறுபடையுடன் பெரும் காரியங்களைச் சாதிக்க முயல்கிறார். ஆகையால் இடையே சிறிது கஷ்டங்கள் ஏற்படுகின்றன. இன்னும் ஒரு சந்தேகம் ஏற்படலாம் உங்களுக்கு, அதையும் தீர்த்துக் கொள்ளுங்கள்,” என்று தனது இடது கையை நீட்டினான் அவள் முன்பு.
அந்தக் கையில், அவள் கொட்டுந்தளத்தில் கண்ட ராஜமுத்திரை மோதிரம் பளபளத்தது.
இளநங்கை அவனை ஏறிட்டு நோக்கினாள். “பாண்டிய ராஜகுமாரியும், நானும் உங்களைச் சந்தேகித்தோம்”, என்று மன்னிப்புக் கோரும் பாவனையில் கூறினாள்.
“உங்கள் நிலையில் நானிருந்தாலும் சந்தேகித்திருப் பேன் தேவி. நீங்களும் நானும், ஏன் வீரபாண்டியரும் கூடப் பாண்டிய மன்னரின் ஆயுதங்கள். நம்மை மன்னர் உபயோகிக்கிறார். பாண்டிய அரசைப் பேரரசாக்க. அதற்குப்பணிவதும், காரணம் கேட்காமல் நடப்பதும் நமது கடமை, தேவி,” என்று கூறிவிட்டு, இந்திரபானு விடுவிடு வென்று சென்றுவிட்டான்.
இளதங்கை முத்துக்குமரியைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கினாள். “என்ன அப்படியே பிரமித்து உட்கார்ந்து விட்டாய்?” என்றும் கேட்டாள்.
முத்துக்குமரி தலை நிமிர்த்து அவளை நோக்கினாள் ‘பிரமித்தது நானல்ல. அந்த அதிகப் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த நீதான் பிரமித்தாய்,” என்றும் கூறி உள்ளே எழுந்து சென்றாள், பாண்டியன் மகள்.
அன்றிரவு முத்துக்குமரிக்கு உறக்கம் சிறிதும் பிடிக்க வில்லை. படுக்கையில் நீண்ட நேரம் சிந்தனை வசப்பட்டுக் கிடந்தவளின் காதுகளில் விடுதிக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்த மலையருவியின் சத்தம் சலசலவெனச் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்பைப் போலவே சலனப்பட்டுக் கிடந்த தன் மனத்தைத் திருப்பித் திடப் படுத்திக்கொள்ள எழுந்து மெல்ல மெல்ல விடுதியின் படிகளில் இறங்கி விடுதியைச் சுற்றிச் சென்று, பின்னா லிருந்த மலைச்சரிவுக்கு வந்தாள். தூரத்தே எரிந்து கொண்டிருந்த கோட்டைப் பந்தம் ஒன்றில் அருவி நீர் பளபளத்துக் கொண்டிருந்தது. அதனருகிலிருந்த பாதையில் உட்கார்ந்து கொண்ட முத்துக்குமரி தன் கால்களை அருவியில் அனையவிட்டுக்கொண்டாள். சீலை, அருவி நீரில் நனையாதிருக்கக் கால்களுக்குமேலே சீலையை நன்றாக இழுத்துக்கொண்டாள். பந்தத்தின் வெளிச்சத்தில் அவள் கால்கள் பொற்கால்களாகப் பொலிவுற்றன. சற்றுத் தூரத்தில் நின்ற ஓர் உருவம் கண்கொட்டாமல் தன்னைப் பார்ப்பதை அறிந்திருந்தால், சீலையை அப்படி எடுத்து மடித்திருக்கமாட்டாள் அவள். தனது பொன்னிறக் கால்களைக் கண்டு அந்த உருவத்தின் முகம் பொலிவுற்றதைக் கண்டிருந்தால் வெட்கத்தால் அவள் பிராணனே போயிருக்கும். ஆனால் அதற்கெல்லாம் இடங்கொடுக்காத அந்த உருவம் மெள்ள மெள்ள அவளை அணுகிவந்தது.