Raja Muthirai Part 1 Ch39 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 39 வீரபாண்டியனின் விவரணம்
Raja Muthirai Part 1 Ch39 |Raja Muthirai Part1|TamilNovel.in
சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து விளையாட முற்படுபவனைப்போல், பாண்டியன் கோட்டைக்கும்ளேயே வந்து வேவுத் தொழிலும், கன்னியைத் திருடும் கள்ளத் தொழிலும் புரிந்தவனும், நேருக்கு நேர் அகப்பட்டும் கொண்ட தருணத்திலும் அச்சத்தை உதறிவிட்டவனுமான சிங்கணனின் சித்தத்தையே உளைக்கும் சீரிய குரலில் சொன்னான் வீரபாண்டியன். “நான் சொல்வதை நன்றாய கேளுங்கள் சிங்கணரே! தவறு ஏதாவதிருக்கும் பட்சத்தில் சிறிதும் தயங்காமல் திருத்துங்கள். பாண்டியர் அரியனை யில் எனது சகோதரர் சுந்தரபாண்டியத்தேவர் ஏறிச் சில மாதங்களுக்குள்ளாகவே பெரும் வல்லரசுகள் பாண்டிய நாட்டின் மீது பார்வையைத் திருப்பலாயின. பாண்டிய நாட்டில் மன்னர் முடிசூடிய சில மாதங்களுக்குள்ளாக நடந்த வீர விளையாட்டுப் போட்டிகளும், அணி வகுப்புகளும் பாண்டியர் எழுச்சிக்கு அறிகுறிகள் எனத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டன. அவர் முடிசூடிய இரண்டாம் ஆண்டிலேயே பாண்டிய நாட்டுக்குப் படை திரட்டப் பயன்படும் ஒரே செல்வமான முத்து பெருமளவில் மறையவும் தொடங்கிற்று. முதலில் அது சாதாரணக் களவென்று தீர்மானித்தோம். பிறகுதான் அதில் அரசுகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பாண்டிய நாடு பிழைத்திருக்க வேண்டுமானால் கனவு போன முத்தைத் திரும்பப் பெறுவதும், மேற்கொண்டு முத்துக்களவைத் தடுப்பதும் அவசியமாயிற்று. அதை முன்னிட்டுப் புலன் விசாரிக்க என்னையும், தன் மகள் முத்துக்குமரியையும் பாண்டிய மன்னர் கொற்கைக்கு அனுப்பினார். அங்குதான் சேரன் முத்தைக் களவு செய்ததும், அவனுக்குச் சிங்களமன்னன் உதவியதும் தெரிந்தது. பாண்டியர்கனைத் தலையெடுக்காமல் அடிக்க இரண்டு நாடுகள் முயல்வதை அங்கு அறிந்தேன். இங்கு வந்தபின் சேரன் துவக்கியுள்ள சிறந்த பணியில் போசளரும் சேர்ந்திருப்பதை உணர்ந்தேன். அந்த உணர்வு முதலில் இல்லை எனக்கு. ஆனால் இது அறிவித்தது.”
இதைச் சொல்லி, கச்சையிலிருந்து முந்திய நள்ளிரவு காட்டுப் பாதையில் எடுத்த பதக்கத்தை நீட்டினான் சிங்கணனிடம். “இந்த வீரப் பதக்கத்தில் போசள மன்னன் முத்திரை இருந்ததைக் கவனித்ததும் தான் பிரமித்தேன். கன்னட நாட்டில் இருக்கவேண்டிய போசளரும், பாண்டிய நாட்டைச் சீரழிக்கப் புகுந்துவிட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். தவிர இத்தகைய வீரப்பதக்கம் எல்லோருக்கும் அளிக்கப்படுவதல்ல. சிறந்த வீரத்தொழில் புரிவதற்கே அளிக்கப்படுவதாதலால் பெருவீரன் யாரோ முத்துக்குமரியின் களவில் சம்பந்தப்பட்டிருக்கிறானென் பதை அறிந்துகொண்டேன்,” என்ற வீரபாண்டியனை இடைமறித்த சிங்கணன் கேட்டான். “பதக்கம் வழியில் கிடந்ததைக் கொண்டு பதக்கத்துக்குடையவன் களவில் சம்பந்தப்பட்டிருக்கிறானென்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று.
வீரபாண்டியனின் விழிகள் யோசனையுடன் தரையில் தாழ்ந்தன. அவன் முகத்திலிருந்த சீற்றங்கூட மறைந்து விட்டது. அடுத்த சில விநாடிகளில் அவன் சொற்கள் நிதானமாகவும் விஷயத்தைச் சர்ச்சை செய்யும் தர்க்க வித்வானின் குரலிலும் வெளிவந்தன. “பதக்கம் சாதாரண நிலையில் விழுந்திருந்தால் இத்தகைய அனுமானத்துக்கு இடமில்லை. ஆனால் பதக்கம் இரண்டு கற்களுக்கிடையில் அழுந்திக் கிடந்தது. அதன் கூரிய முனை என் புரவியில் காலில் இடதி, புரவி மலைப்பாதையைக் இறியிரா விட்டால் அதை தான் பார்த்தேவிருக்க மாட்டேன், ஏதோ சண்டை ஏற்பட்டு அதில் பதக்கம்
சிதறி நீண்டதூரம் போய் விழுந்திருக்கிறது. நடக்கும் போது கச்சையிலிருந்து தவறி விழும் பதக்கம் ஏதாவது ஒருபுறமாக விழுந்திருக்குமே தவிர வேகத்துடன் இருகற்களுக்கிடையில் வந்து சிக்கியிருக்காது. அதுமட்டுமல்ல. இந்தப் பதக்கத்தின் ஒரு புறம் நன்றாக வளைந்துமிருக்கிறது,” என்று சுட்டிக் காட்டினான் வீரபாண்டியன்.
“அதனால்?” சிங்கணன் குரலில் வியப்பு இருந்தது.
“புரவியின் குளம்புக்கடியிலும் இது சிக்கியிருக்கிறது அதுமட்டுமல்ல, முதல் நாள் குருதி பாய்ந்த என் கோடரி கிடந்த அதே இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே இதுவும் கிடந்தது. அதிலிருந்து உகித்துக்கொண்டேன் முத்தும் குமிரியை நீங்கள் சுலபமாகத் தூக்கிச் செல்ல முடிய வில்லை என்று. அதுமட்டுமல்ல, என்ன நடந்ததென்பதையும் நான் திட்டமாகச் சொல்லவும் முடியும், கேளுங்கள்,” என்ற வீரபாண்டியன் நேரில் பார்த்ததைப் போல் விஷயங்களை விவரிக்கவும் தொடங்கினான். “எந்த நிலைமையிலும் முன் கூட்டி ஆராயக்கூடிய சேரமன்னன் எப்படியோ உம்மைப் பாண்டியர் படையில் சேரவிட்டிருக்கிறான். பாண்டியர் உடையில் சேரரும், சேரர் வேஷத்தில் பாண்டியரும் ஒருவரையொருவர் வேவு பார்க்க முயலுவது இப்பொழுது சில நாட்களாகவே நடந்துவரும் விவகாரம் அந்த நல்ல முறையின் பயனாக நீர் கொட்டுந்தளத்திலேயே எங்கள் படையில் சேர்ந்திருக்கிறீர்.” என்ற வீரபாண்டியன் பேச்சில் மீண்டும் குறுக்கிட்ட சிங்கணன், “கொட்டுத் தளத்திலா?” என்று வினவினான்.
“ஆம். இது சிறு கோட்டை. இந்த இடத்தில் படை சேர்க்கும் முயற்சி ஏதும் நடக்கவில்லை. யாரும் சேர்க்கம் படவும் இல்லை. ஆகையால் நீங்கள் சேர்ந்திருந்தால் கொட்டுத்தளத்தில்தான் சேர்ந்திருக்கவேண்டும். அதுவும் சேரர் வேடத்தில் சிவிகைகளைக் கொண்டுவந்த கூட்டத்தில் நீரும் சேர்த்திருக வேண்டும்,” என்ற வீரபாண்டியன் சிங்கணனை ஏறெடுத்து நோக்கினான்.
சிங்கணன் உதடுகள் வியப்பால் விரிந்து கிடந்தன வீரபாண்டியன் சொன்னது முற்றிலும் சரியாயிருந்ததை கண்டு பிரமித்தான் அவன். வீரபாண்டியன் அந்தப் பிரமிப்பைக் கவனித்துவிட்டு, “இதில் பிரமிப்பதற்கு எதுவும் இல்லை. கொட்டுத்தனம் ஒன்றுதான் அடிக்கடி கை மாறியிருக்கிறது. அங்குதான் சேரமன்னனும், இந்திரபானுவும் ரகசியமாக ஆள் சேர்க்க முற்பட்டிருக்கிறார்கள். உளவு ஆன் பழைய வேண்டுமானால் இடம் அது ஒன்றுதான். ஆகவே வேவுகாரன் யாராயிருந்தாலும், அவன் அங்குதான் சேர்ந்திருக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அப்படிச் சேரனால் தூண்டப்பட்டுக் கொட்டுந்தளத்திலேயே இந்திரபானுவுடன் சேர்ந்துவிட்ட நீர் இங்கு வந்ததோ, மன்னர் விடுதிக்குக் காவலனாக மாறியதோ பெரும் வியப்பல்ல, அப்படி இங்கு வந்து புகுந்த பிறகு சேர மன்னன் கையிலிருந்து தப்பிவிட்ட முத்துக்குமாரியையும், இளநங்கையையும் சேரனிடம் திரும்பவும் சேர்க்க முற்பட்டீர். இந்த மலைப்பகுதிகள் சேரநாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் எல்லையாயிருப்பதாலும், இங்கு சேர வீரர்கள் நடமாட்டம் அதிகமாகையாலும், கோட்டை அவர்கள் பார்வையில் சதா இருப்பது சகஜமாகையாலும் இங்கிருந்து அவர் களுடன் தொடர்பு கொண்டீர். ஆனால் நீர் கையாண்ட முறை மிகப் பழைய முறை, விளக்கை அசைக்கும் முறை பழைய முறை, அதனால் வந்த விபரீதம் தான் உமது நிலை” என்று விளக்கிய வீரபாண்டியன், மேலும் சொன்னான்: “இங்கு வந்தது முதல் நீர் முத்துக்குமரியும், இளநங்கையும் தங்கிய விடுதி மேல் கண் வைத்திருக்கிறீர், இந்திரபானுவும் பாண்டிய குமரியும் அருவிக்கரை சென்றதைப் பார்த்திருக்கிறீர். இந்திரபானு அரசர் உத்தரவால் கோட்டையைவிட்டு வெளியே சென்ற தினம். இந்திரபானுவுக்கு பதில் நீர் அவளைச் சந்தித்து மறுநாள் அருவிக்கரை வரும்படி இந்திரபானு சொன்னதாகக் கூறியிருக்கிறீர். முத்துக் குமரியைக் கடத்த அருவிக்கரையே சிறந்த இடம் என்பதை நீர் அறிந்து கொண்டீர். காதலர்களுக்கு அது மறைவிடமானால், கள்வர்களுக்கும் அது தகுந்த இடமென்பதை உணர்ந்து கொண்டீர். முத்துக்குமரியை அங்கு சந்தித்து மறுநாள் இந்திரபானு அங்கு வருவதாகச் சொன்ன பிறகு அவள் விடுதிக்குச் சென்றாள். ஆனால் நீர் அந்த இடத்திலிருந்து மரத்தடியிலிருந்த விளக்கை எடுத்து ஏற்றி நேற்றுப் போல் அதற்கு முந்திய நாளுக்கு முந்திய நாளும் அடையாளம் காட்டி உமது நண்பர்களை அழைத்திருக்கிறீர். வந்த நண்பர்களிடம் முத்துக்குமரியை அபகரிக்கும் திட்டத்தை விளக்கியிருக்கிறீர். மறுநாளும் விளக்கசைத்து, சமயத்தை அறிவிப்பதாகக் கூறியிருக்கிறீர் திட்டப்படி காரியம் நடந்தது. உமது ஏற்பாட்டின்படி முத்துக்குமரி மறுநாள் அதே அருவிக்கரையில் இந்திரபானுவுக்காக் காத்திருக்கிறாள். அருவி மதகு மூலம் உள்வந்த கள்வனொருவன் அவளைப் பின்புறம் அணுகி வாயைப் பொத்தியிருக்கிறான். அதற்குமுன்பே அவளைத் தொடர்ந்து வந்து மரத்து நிழலில் நின்ற நீரும் அவளை அணுகி வாயில் துணியடைத்துத் தூக்க முற்பட்டிருக்கிறர். ஆனால் முத்துக்குமரியை அத்தனை எளிதில் தூக்கமுடிய வில்லை. அவள் திமிறியிருக்கிறாள். சண்டையிட்டிருக்கிறாள். அருவிக்கரை கூழாங்கற்கள் சண்டைக்கு அடையாளமாகச் சிததியிருக்கின்றன. இராக்காலமானதால் மதகில் மூழ்கி வந்தவன் உடையும் நிரம்ப நீரை மதில் பக்கத்தில் சொட்டியிருந்தது. ஆகவே சண்டை அருவிக்கரைப் பாறையருகிலிருந்து மதில் சுவர்வரை நடந்திருக்கிறது. முத்துக்குமரி கள்வனிடமிருந்தும் உம்மிடமிருந்தும் இருமுறை திமிறி ஓடியிருக்கிறாள் இருந்தும் இரு ஆடவர்கள், அவர்களிலொருவர் பெரும் படைத் தலைவர், இவர்களிடமிருந்து தப்ப அவளால் முடியவில்லை. ஆகவே தனது ஆபரணப் பெரு முத்தொன்றைக் கழற்றி வீசியெறிந்துவிட்டாள் முத்துக்குமரி. அத்த முத்தும், கிள்ளுக் கம்பியும் எனக்கு அகப்பட்டன. அவை விடுத்த செய்தியைப் புரிந்து கொண்டேன். பிறகுதான் கோட்டையில் இருந்தவர்களைக் கவனித்தேன். அப்பொழுதும் உம்மீது சந்தேகம் இல்லை எனக்கு, ஆகவே, நான் வந்தபோது வழியில் குருதி பாய்ந்த என் கோடரி கிடந்த இடத்துக்குச் சென்று ஆராய்ந்தேன் அந்த இடத்தில் நடந்தது என்னவென்பதும் எனக்குப் புரிந்தது..” இந்த இடத்தில் சிறிது நேரம் வீரபாண்டியன் பேச்சை நிறுத்தினான்.
சிங்கணன் முகத்தில் பயத்துக்குப் பதில் வியப்பு விரிந்து நின்றது. அவன் வாயிலிருந்து “உம்,” என்ற சொல் மட்டும் வெளிவந்தது.
வீரபாண்டியன் தீவிர சிந்தனையில் இறங்கி நடந்ததை நேரில் பார்த்தவன் போல் பேசினான். “அருவியிலிருந்து மதில்மேலாக முத்துக்குமரியைத் தூக்கிக் கொடுத்த பிறகு நீரும் காவலர் இல்லம் திரும்பவில்லை. திரும்பி வந்து உமது புரவியை எடுத்துக்கொண்டு மன்னர் ஆணையிட்டதாகச் சொல்லி, கோட்டையை விட்டு வெளியே சென்றிருக்கிறீர். மலைப்பாதையில் நீர் முத்துக்குமரியைத் தூக்கிச் சென்ற கள்வர்களைக் கலந்துகொண்டு, சேர வீரர்களிடம் முத்துக்குமரியைச் சேர்ப்பிக்க முற்பட்ட சமயத்தில் மீண்டும் சண்டை நடந்திருக்கிறது. முத்துக்குமரி எப்படியோ மறுபடியும் திமிறியிருக்கிறாள். இடையில் மறைத்து வைத்திருந்த எனது பொற்கோடரியை எடுத்து வீசியிருக்கிறாள். அந்த வீச்சில் ஒருவன் படுகாயப்பட்டிருக்கிறான். அவன் கோடரியைப் பிடுங்கி எறிந்துவிட்டு முத்துக்குமரியைத் தூக்கிச் சென்ற வீரர்களுடன் போயிருக்கிறான். அங்கிருந்த அவசரத்தில் எப்படியும் சீக்கிரம் கோட்டை திரும்ப வேண்டுமென்ற பயத்தில் நீர் அந்தக் கோடரியை எடுக்கக்கூட முயலவில்லை. வேகமாக உமது புரவியில் திரும்பிவிட்டீர். யாருக்கும் தெரியாமல் நீர் காரியத்தை முடித்துவிட்டதாக மனப்பால் குடித்தீர். இந்திரபானுவும் காணாமற் போய்விட்டதால் கோட்டையின் கவனமும் உம்மீது திரும்பவில்லை. உண்மையில் என் சகோதரரும் இந்திரபானுவையே சந்தேகித்தார்,” என்ற வீரபாண்டியன் “என்ன அண்ணா ?” என்று வினவினான்.
சுந்தரபாண்டியன் முகம் சர்வ சாதாரணமாயிருந்தது. பெண் அபகரிக்கப்பட்ட அந்த நிலையிலும், அபகரித்தவன் எதிரே உட்கார்ந்திருந்த அந்தச் சந்தர்ப்பத்திலும், மன்னன் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. “ஆம்,” என்று ஒரே வார்த்தையை மட்டுமே சொன்னான்.
“பார்த்தீர்களா சிங்கணரே! நீர் எல்லோரையும் ஏமாற்றிவிட்டீர். சந்தர்ப்பங்களும் உமக்கு அனுகூலமா யிருந்தன. ஆனால், இருவரை நீர் ஏமாற்ற முடியவில்லை,” என்றான் வீரபாண்டியன்.
“இருவர் யார்?” இக் கேள்வியைக் கேட்ட சிங்கணன் குரல் வறண்டு கிடந்தது.
“ஒருவன் இந்திரபானு; இன்னொருவன் நான்,” என்றான் வீரபாண்டியன்.
“இந்திரபானுவா!” சிங்கணன் வாயைப் பிளந்தான் வியப்பால்.
“ஆம். விளக்கு அசைத்து அடையாளம் காட்டுவது பழையமுறை என்று சொல்லவில்லையா? பழையதில் பலமும் இருக்கிறது பலவீனமும் இருக்கிறது. இது பலவீன முள்ளது. முத்துக்குமரியை அபகரித்த தினத்தில், உமது சகோதரக் கள்வர்களை அழைக்க நீர் விளக்கு அசைத்த சமயத்தில் வெளியே மன்னர் அலுவலாகச் சென்றிருந்த இந்திரபானு கோட்டையை நெருங்கி வருகிறான். விளக்கு அசைவைக் கண்டதும் அது அருவிக்கரைப்பகுதி என்பதை உணர்ந்து, கோட்டைக்குள் விரைந்து வந்து புரவியைக் கொட்டடியில் கட்டிவிட்டு அருவிக்கரைக்கு விரைகிறான் அங்கே எதுவும் தெரியாததால் மதில் கவர்ப்பக்கம் பார்க்கிறான். நனைந்த உடையிலிருந்து கொட்டிய நீரைப் பார்த்ததும் மதிலேறி அடிச்சுவடுகளைப் பின்பற்றிப் போகிறான். முத்துக்குமரி பத்துப் பதினைந்து சேர வீரர்களிடையே திமிறுவதை மலைப்பாதையில் பார்க்கிறான். சண்டை அங்கு பயனற்றது என்பதை அறிந்து, முத்துக்குமரியைச் சேரர்கள், தூக்கிச் சென்ற பக்கமே அவனும் தொடர்ந்து செல்கிறான். இப்பொழுது முத்துக் குமரி இருக்குமிடத்தில் இந்திரபானுவும் இருக்கிறான். ஆகவே முத்துக்குமரிக்கு எந்த ஆபத்துமில்லை. இனி அவளைவிட்டு இளநங்கையின் விவகாரத்துக்கு வருவோம் இங்கு நான் சொல்லவேண்டியது அதிகமில்லை. நான் உமது பதக்கத்தைப் பார்த்ததும் அங்கிருந்த அடிச் ஈவடுகளைக்கொண்டு பக்கப்பாதையில் சென்றேன. உமக்கும் கள்வர்களுக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்டேன். அங்கு ஒலித்த உமது குரலிலிருந்து உமது போலி வேடத்தைப் புரிந்து கொண்டேன். தவிர இளநங்கையை நீர் மயக்கமுறச் செய்து தூக்கிவரப் போட்ட திட்டத்தையும் கேட்டேன், என் வழி முறையை நான் வகுத்துக் கொண்டேன். நீர் திருப்தியுடன் உறங்கச் சென்றதும் எனது ஏற்பாட்டின்படி காரியங்கள் நடந்தன.” என்றான் வீரபாண்டியன்.
“என்ன ஏற்பாடு அது? என்னை ஏன் அருவிக் கரைவில் சிறை செய்யவில்லை?” என்றான் சிங்கணன்.
“உம்மைச் சிதை செய்திருந்தால் உமது தோழர்கள் என்னிடம் சிக்கியிருக்கமாட்டார்கள்.”
“கள்வர்களா?”
“இல்லை. பாண்டியர் பெண்களைச் சேரநாடு கொண்டு செல்ல சதா மலைப்பாதைக்கருகே காட்டுப் பகுதியில் மறைந்துறையும் சேரநாட்டுச் சிறுபடை”.
“என்ன?” சிங்கணன் குரலில் அச்சம் ஒலித்தது.
“நீர் கோட்டைக்குள் வந்ததும் இங்குள்ள ஐம்பது வீரர்களை நீர் நேற்று கள்வர்களைச் சந்தித்த இடத்துக்கு அனுப்பினேன். அங்கிருந்த சுமார் எழுபத்தைந்து சேர வீரர்கள் அணுகுவதுயாரென்பதை உணரு முன்பே வளைத்துக் கொல்லப்பட்டார்கள். இளநங்கையைக் கள்வர்களிடமிருந்து பெற சேர வீரர்களுக்குப் பதில் பாண்டியர் வீரர்கள் அங்கு காத்திருந்தார்கள். அதனால் இளநங்கையும் கிடைத்தாள். உமது ஏற்பாட்டின்படி கள்வர்களுக்காக சேரவீரர் கொண்டு வந்திருந்த பொன் முடிப்பும் கிடைத்தது.” என்ற வீரபாண்டியன், ஆனால் அந்த முடிப்பிலிருந்தது பொற்காசுகளல்ல; முத்துக்கள். அதுவும் எங்களிடமிருந்து திருடப்பட்ட முத்துக்களில் கடுகளவு,” என்று கூறினான்.
சிங்கணன் முகத்தில் கிலி படர்ந்தது. “அத்தனை சேர வீரர்களும் கொல்லப்பட்டார்களா?” என்றான்.
“ஆம்.”
“பயங்கரக் கொலை, சண்டையை எதிர்பாராத வீரர் களைச் சூழ்ந்து கொல்வது போருமல்ல, வீரமுமல்ல, என்றான் சிங்கணன்.
“திருடர்களிடம் மன்னர்கள் போரிடுவது தாம் சாத்திர வழக்கமல்ல. திருடர்களைப் பிடிப்பது, கொல்லுவது, இது தான் வழக்கம்!”
“அப்படியானால் எனக்கும் அந்தத் தண்டனை தானா?”
“அது உம்மைப் பொறுத்திருக்கிறது.”
“என்னைப் பொறுத்திருக்கிறதா?” என்று பிரமிப்புடன் கேட்டான் சிங்கணன்.
“ஆம்.”
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மீண்டும் சந்தேகத்துடன் வினவினான் சிங்கணன்.
செய்ய வேண்டியதைச் சொன்னான் வீரபாண்டியன், சிங்கணன் முகத்தில் திகில் பெரிதாகப் படர்ந்தது. “அதை விட என்னை நீங்களே கொன்றுவிடலாமே!” என்று வெறுப்பும் சோகமும் சொட்டிய குரலில் பதிலிறுத்தான்.