Raja Muthirai Part 1 Ch41 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 41 வெற்றி அலைகள்
Raja Muthirai Part 1 Ch41 |Raja Muthirai Part1|TamilNovel.in
போசளத் தண்டநாயகனான சிங்கணன் வெளியே சென்றதும், வீரபாண்டியனிடமிருந்து இரண்டாவது ஓலையை வாங்கிப் பார்த்துக் குதூகலத்துடன் ஆமோதித்த ஜடாவர்மன், தம்பியுடன் கலந்து வாய்விட்டு நகைத்ததன்றி, திரும்பவும் இருமுறை அந்த ஓலையை ஊன்றிக் கவனிக்கவும் செய்தான். அதிலிருந்த கோடுகளும், குறிகளும், ஊர்ப் பெயர்களும் வீரபாண்டியன் திட்டத்தைச் சந்தேகமின்றி விளக்கவே, மன்னன் சற்றுக் குழப்பம் முகத்தில் படரக் கேட்டான்: “தம்பி! உன் திட்டம் இத்தனை சரியாக அப்பழுக்கில்லாமல் அமைந்திருக்க, என்னை எதற்காக ஓர் ஓலை தயாரிக்கச் சொன்னாய்?” என்று.
வீரபாண்டியன் மூத்தவனை ஏறெடுத்து நோக்கி விட்டு, “அண்ணா ! மூத்தவருக்கு மாற்றுத் திட்டம் தயாரிப்பது தம்பிக்கு அழகில்லை. தவிர, மன்னர் திட்டம் தயாரிப்பதால் அதற்கு பணியவேண்டிய ஒரு வேலைதான் குடிமகனுக்கு உண்டு. எந்தக் கொள்கையைக்கொண்டு பார்த்தாலும் நான் செய்தது சரியல்ல. இருப்பினும் உங்கள் ஓலையைக் கண்டபின் சில பலவீனங்கள் தெரிந்தன. திருத்தவேண்டியது இளவரசு பட்டத்தை ஏற்றுள்ள என் கடமையாகிவிட்டது.” என்று கூறினான்.
சுந்தரபாண்டியன் தன் கூரிய கண்களைத் தம்பி மீது நிலைக்கவிட்டான் சில விநாடிகள். பிறகு கேட்டான், “சரி தம்பி! அப்படியானால் என் ஓலையை நீ வெளியிலேயே எடுத்திருக்க வேண்டாமே?” என்று.
“அதற்கும் உபயோகமிருந்ததால் எடுத்தேன்,” என்று பதில் கூறினான் வீரபாண்டியன்.
“என்ன உபயோகம்?” சுந்தரபாண்டியன் குரலில் வியப்பு ஒலித்தது. “என் திட்டத்தை நீ புறக்கணித்து விட்டாய். பிறகு அந்த ஓலைக்கு என்ன உபயோகமிருக்க முடியும்?” என்று கேட்டான் மன்னன்.
“பயன்படாத திட்டம் எதிரியிடம் போவதில் நமக்கு அனுகூலமில்லையா?”
“எதிரியா?”
“ஆம். சேரமன்னன்.”
“சேரமன்னனுக்கா என் ஓலையை அனுப்பப் போகிறாய்?”
“நான் அனுப்பப்போவதில்லை. அதுவே போய்ச் சேரும்.”
சுந்தரபாண்டின் விழிகள் திடீரெனப் பளிச்சிட்டன “அப்படியா! அப்படியா நினைக்கிறாய் நீ?’ என்று வினவினான் வியப்புடன்.
“ஆம் அண்ணா: சிங்கணனுக்கு உயிர்பிச்சை கொடுத்துச் சேரர்பால் திருப்பி, பொதியமலையில் பொருநை உற்பத்தியாகும் இடத்திற்கு நேர் மேற்கில் உள்ள மலைச்சரிவுக்கு சேரனை அழைத்து வரும்படி சிங்கணனை இயக்க நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள். உங்கள் ஓலையிலுள்ள அம்புக்குறி இந்தக் கோட்டையிலிருந்து கிளம்பி, பொருநையின் உற்பத்தி நிலைக்குச் சென்று அதையும் தாண்டி, மேற்கில் நேராக சேரநாட்டில் இறங்கி தின்றுவிடுகிறது. சேரர்படை வரவேண்டிய இடத்தையும் சிங்கணன் செல்லவேண்டிய மார்க்கத்தையும்கூடக் குறிகள் போட்டுக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..” இதைச் சொன்ன வீரபாண்டியன் மன்னனை உற்று நோக்கினான்.
“ஆம் தம்பி, அதுதான் திட்டம் மலைச்சரிவின் கீழ் சேரப்படைகளும் மேலே என் புரவிப்படையும் தின்றால் என்புரவிப் படை அம்பு போல் இறங்கி சேரன் படைகளை ஊடுருவ முடியுமல்லவா?” என்று வினவினான் மன்னன்,
“முடியும், உங்கள் திட்டப்படி சேரன் நடந்தால்.”
“ஏன் நடக்க மாட்டான்?” அதை நடத்தி வைக்கச் சிங்கணன் இல்லையா?”
“உங்களிடமிருந்து தப்பிய பிறகு சிங்கணன் உங்களுக்கு அனுகூலமாக நடக்க வேண்டிய அவசிய மென்ன?”
“இதுவரை அவன் செய்ய ஒப்புக்கொண்டதெல்லாம்…”
“அவசியத்தை முன்னிட்டு, சிங்கணனை தான் சிறிதும் நம்பவில்லை. தவிர, சுதந்திரமாக நடக்க அவனுக்கு உரிமையும் இருக்கிறது. சிங்கணன் பெரிய தண்டநாயகன். அவன் ஏன் இங்கு வேவுகாரனாக வந்தான்? பெண்ணை என் களவாட உதவினான்? தன் கண்ணியத்தையும், பெயரையும் குறைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஏன் இறங்கினான்?”
“ஏன்?”
“பாண்டிய ராஜ்ய விஸ்தரிப்பைப்பற்றி நான் எத்தனை கனவு காண்கிறேனோ, நீங்கள் என்ன கனவு காண்கிறீர்களோ அத்தனை கனவைப் போசள சாம்ராஜ்ய விஸ்தரிப்பில் சிங்கணனும் காண்கிறான். ஆகவே, உங்கள் ஓலைத்திட்டத்தை அவன் நிறைவேற்ற மாட்டான். மாற்றுத் திட்டம் தயாரிப்பான். அப்படியே உங்கள் இட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் நீங்கள் எதிர்க்க முடியாத சேரர்படைபலம் மலையடிவாரத்துக்கு வரும்.”
இதைக்கேட்ட சுந்தரபாண்டியன், சிறிது சிந்தனையில் இறங்கினான். பிறகு தம்பியை நோக்கி, “ஆமாம் தம்பி! நான் சமாளிக்க முடியாத படை பலம் என்று ஒன்றிருக்கிறதா?” என்று வினவினான். அந்தக் கேள்வியை அவன் கேட்டபோது, பாண்டியன் குரலில் சிறிது வருத்தமும் தெரிந்தது இளவரசனுக்கு.
பெரும் சாம்ராஜ்யத்துக்கு அடிகோலிக் கொண் டிருந்தவனும், மகாவீரனுமான தன் அண்ணன் மனம் லேசாகப்புண் பட்டுவிட்டதை அறிந்த வீரபாண்டியன் மிகுந்த பணிவு தொனித்த குரலில் கூறினான். “அண்ணா போரில் ஆற்றல், தந்திரம் இரண்டும் முக்கியம்தான், அந்த இரண்டும் உங்களிடம் நிரம்ப உண்டு. ஆனால், நமது படைபலம் மிகக்குறைவு. இந்தப் பகுதியில் மூவாயிரம் வீரர்களுக்குமேல் திரட்ட முடியாது. எதிரி சுமார் பதினாயிரம் வீரர்கொண்ட படைபலத்துடன் வருவான் தாம் மலைப்பகுதியில் செல்வதால் புரவிப் படையும் காலாட் படையும்தான் கொண்டு செல்லமுடியும். ஆனால் எதிரி பானைப்படை, ரதப்படை, புரவிப்படை இத்தனை யுடன் வந்து மலையடிவாரச் சமவெளியில் நம்மை எதிர்கொள்வான். அந்த நிலையில் வீரமும், ஆற்றலும் போர்முடிவை நிர்ணயிக்காது. படைகளின் தொகை, வகை இரண்டும்தான் நிர்ணயிக்கும். தவிர, சேரரின் யானைப்படை, மிக வலுவுள்ளது,” என்று சுட்டிச் காட்டினான்.
சுந்தரபாண்டியன் மறுபடியும் சிந்தனையிலிறங்கனான். இத்தனையும் அவன் ஏற்கெனவே எதிர்பார்த்த, அம்சங்கள் தான். இருப்பினும் மலைச்சரிவில் வேகமாப் பாய்ந்து செல்லும் புரவிப்படை, எதிரியின் அணிவகுப்பை அம்பு போல் உட்புகுந்து கிழித்துவிட முடியுமென்றும், அப்படிக்கிழித்து, எதிரியின் படையை இரண்டாக்கி விட்டால் தனித்தனியாக இருகூறுகளையும் சமாளிக்க முடியுமென்றும் அவன் திட்டமிட்டிருந்தான், ஆகவே அதைப் பற்றி அவன் தம்பியைக் கேட்க முற்பட்டு “எதிரியின் படை இரண்டு கூறாக உடைக்கப்பட்டால், நாம் அந்த இரண்டு கூறுகளில் ஒன்றை முதலில் அழி முடியாதா?” என்றான்.
“அழிக்க முடியும். ஆனால் அந்த இரண்டு கூறுகளும் மீண்டும் ஒன்றுபட்டால் இடையே நாம் சிக்கிக்கொள்வோம்,” என்றான் வீரபாண்டியன், “புரவிப்படை வேகமாக இயங்கமுடியும். யானைப்படை ரதப்படைகளுக்கு அது சாத்தியமில்லை. யானைப்படை ஒருமுறை கலைத்த கலைந்ததுதான். திரும்பி அதைச் சேர்த்து அணிவகுப் நடவாத காரியம்,” என்று சுட்டிக் காட்டினான் மன்னன்.
“உண்மை. ஆனால் சேரன் யானைப்படையை முன்னணியில் நிறுத்தாது, பின்னணியில் நிறுத்தினால் என்ன ஆகும்? நீங்கள் எதிரியின் புரவிப்படை ஊடுருவியதும் உங்களை யானைப்படைச் சுவர் வழி மறைக்கும். அதைப் பினக்க முற்பட்டால் வெறி பிடித்த பானைகள் நமது புரவிப்படைமீது சீறிவரும்..” என்ற வீரபாண்டியன் வாசகத்தை முடிக்காமல் விட்டான்.
இளையவன் வாசகத்தை முடிக்கவில்லையே தவிர மூத்தவன் முடித்துக்கொண்டான் மீதியை. யானைச் சுவருக்கு முன்னால் புரவிப்படைத் தாக்குதல் நிற்கமுடியா தென்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. யானைகளை எப்பொழுதும் காலாட்படையைக் கொண்டுதான். சமாளிக்க வேண்டும். தூரத்திலுள்ள யானைகள் மீது எய்யப்படும் அம்புகள், எறியப்படும் வேல்கள், இவையே யானை அணிவகுப்பைக் கலைத்து வெறிபிடித்து ஓடச் செய்யும் என்பதை அவன் அறிந்திருந்ததால், தம்பிய ஆட்சேபணையில் பெரும் பொருள் இருப்பதை உணர்து கொண்டான். பிறகு மீண்டும் தம்பியின் கொடுத்த ஓலையைப் பார்த்தான். “எதிரி என்ன செய்வான் என்பதுபற்றி உன் ஊகம் சரியானால் உன் திட்டம் சரியானதுதான். இந்த முறையையே நாம் கடைப் பிடிப்போம்,” என்றுகூறி அந்த இரண்டாவது ஓலையைத் தன் விரலால் தட்டியும் காட்டினான்.
வீரபாண்டியன் தனது ஆசனத்திலிருந்து எழுந்து தலை தாழ்த்தினான். அண்ணனை நோக்கி, “அண்ணா! பாண்டியர் படைபலம் அதிகமாயிருந்தால், உங்கள் திட்டம் தான் சரியானது. துரிதமாக முடியக்கூடியதும்கூட. ஆனால் படை திரட்ட நமக்குச் செல்வமில்லை. இருந்த செல்வத்தைச் சேரன் களவாடி விட்டான். இருக்கும் படையோ மதுரையிலும், கொற்கையிலும், இந்தச் சிறு கோட்டையிலுமாகப் பிரிந்து கிடக்கிறது. இந்த நிலையில் சக்தியைவிட யுக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை,” என்று கூறினான்.
சுந்தரபாண்டியன் தம்பியின் மனத்திலுள்ளதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டதால் ஆமோதித்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். அத்துடன் சொன்னான்: “தம்பி! உன் நதியும், என் நதியும் நேர் எதிராக ஓடுகின்றனவே,” என்று.
ஆம் அண்ணா,” என்றான் வீரபாண்டியன், தன் ஓலையில் கீறப்பட்டிருந்த இரு நதிகளையும் நோக்கி.
“நான் பொருதையின் உற்பத்தி நிலையை வைத்துத் திட்டமிட்டேன்,” என்றான் வீரபாண்டியன்.
“நான் கோட்டாற்றின் உற்பத்தி நிலையை வைத்துத் திட்டமிட்டேன்,” என்றான் சுந்தரபாண்டியன்.
“எனது நதி கிழக்கே ஓடுகிறது.
“எனது மேற்கே ஓடுகிறது.”
“இப்படி நாம் மாறுபட்டு நிற்கலாமா?”
“மாறுபடவில்லையே.”
“எப்படி?”
வீரபாண்டியன் சொன்னான் மன்னனை நோக்கி, “அண்ணா! இரண்டு நதிகளின் உற்பத்தி ஸ்தானங்களுக்கும் இடையில் இந்தக் கோட்டையிருக்கிறது. இதில்தான் நாமிருக்கிறோம். இருவருக்கும் சேரநாடு புகுவதுதான் உத்தேசம். நீங்கள் பொருதை நதியின் ஆரம்ப இடத்திலிருந்து அப்புறம் சென்று சேர நாட்டிலிறங்கப் பார்க்கிறீர்கள். தான் கோட்டையாற்று ஆரம்பத்திலிருந்து அதன் கரையோரமே மேற்கே சென்று சேரநாட்டில் புகப் பார்க்கிறேன். இரண்டும் செய்யலாம்.”
“எப்படி இரண்டும் செய்வது?” மன்னன் குரல் சந்தேகத்துடன் ஒலித்தது.
“நீங்கள் உங்கள் திட்டப்படி பொருதைவின் ஆரம்ப இடத்தைத் தாண்டி மலைச்சரிவில் இறங்குங்கள்.”
“சரி.”
“ஆனால் சேரர் படையுடன் கைகலக்காதீர்கள்.” “கைகலக்காமல்?”
“மலைச் சரிவு ஓரமாக வடக்கு நோக்கிச் செல்லும் பாதையிருக்கிறது.”
“ஆம்.”
“அந்தப் பாதை. கோட்டையாற்றுக் கரையில் வந்து முடிகிறது.”
“ஆம். அங்கு வரச் சொல்கிறாயா?”
“இல்லை. பாதிதூரம் வந்ததும் திரும்பி மலைக்காடுகளில் மறைந்து பழைய இடத்துக்குச் சென்று விடுங்கள்”
“சென்று விட்டால்?”
“நான் சேரனைச் சந்திக்கிறேன்.”
“எங்கு ?
“கோட்டையாற்றுக் கரையில்,”
சுந்தரபாண்டியன் துள்ளி எழுந்தான் ஆசனத்திலிருந்து. “மிகத் துணிகரமான திட்டம் தம்பி! ஆனால் இது இலையில் இல்லையே. இரண்டு ஆறுகளையும், நமது படைகள் நிற்க வேண்டிய இடங்களையுந்தானே குறிப்பிட்டிருக்கிறாய்?” என்று உணர்ச்சியுடன் கேட்கவும் செய்தான்.
மன்னன் உணர்ச்சியும், குரலில் தொனித்த பாராட்டு தலும் வீரபாண்டியன் வதனத்தில் பெருமிதத்தைப் படர வைத்தன. “போரின் அரிச்சுவடியை உங்களிடம் கற்ற என் திட்டத்தை நீங்கள் பாராட்டுவது எனக்குப் பெருமையை அளிக்கிறது. நீங்கள் போர் முன்னணியில் ஒரே திசையில் ஒரே இடத்தில் இரண்டு வேல்களையும் ஊன்றி வைத்தீர்கள். நான் இரண்டு தனித்த இடங்களில் இரண்டு வேல்களையும் ஊன்றினேன். இதுதான் வித்தியாசம் இரண்டு வேல்களும் ஒன்றையொன்று நோக்கிய வண்ணம் தென்திசையிலும் வடதிசையிலும் நிற்கின்றன. இடையே நிற்கிறது சேரன் பெரும் சேனை. முடிவு…” என்று வாசகத்தை இடையில் நிறுத்தினாள் வீரபாண்டியன்.
“முடிவு?” சுந்தரபாண்டியன் கேள்வி கம்பீரத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒலித்தது.
“சேரர் அழிவு பாண்டிய சாம்ராஜ்ய ஸ்தாபனத்தின் முதல் படி,” என்று வீரபாண்டியன் குரல் கம்பீரத்துடனும் அமைதியுடனும் ஒலித்தது.
சுந்தரபாண்டியன் தம்பியை ஆவலுடன் தழுவிக் கொண்டான். அந்த மகாவீரன் தழுவலாலும் பாராட்டு தலாலும் பெருமிதத்துடன் சிறிது சங்கோஜமும் அடைந்த வீரபாண்டியன் மெள்ள தன்னை விடுவித்துக்கொண்டு “அண்ணா! இன்று சிங்கணன் செல்லட்டும். இன்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்து நாம் கிளம்புவோம்,” என்றான்.
“சரி தம்பி! அதற்கான ஏற்பாடுகளைச் செய்,” என்று மன்னன் உத்தரவிட வீரபாண்டியன் வெளியே சென்றான்.
வீரபாண்டியன் உள்ளூர வகுத்துக்கொண்ட திட்டப்படி சிங்கணனுக்கு எந்தவிதச் சந்தேகமும் ஏற்படாத முறையில் நடந்துகொண்டான். வேவுகாரனென்று பிடிக்கப்பட்டதால் மற்ற பாண்டிய வீரர்களின் தொல்லை ஏற்படாதிருக்கத் தானே அவனைக் கோட்டையிலிருந்து அழைத்துச் சென்று மலைப்பாதையிலிருந்து அந்தப் பழைய காட்டுப்பாதை பிரியும் இடம் வரையில் சென்று அவனிடமிருந்து விடை பெற்றான்.
இருவரும் பிரியும் தருவாயில் சிங்கணன், “வீர பாண்டியரே! எனக்கு உயிரை அளித்திருக்கிறீர்கள். இந்த உதவியை! தான் என்றும் மறக்கமாட்டேன். சமயம் வரும் போது அத்தகைய உதவியை நானும் புரிவேன்,” என்றான் நன்றி ததும்பும் கண்களுடன்.
வீரபாண்டியன் இதழ்களில் இளநகை அரும்பியது. “அந்தச் சமயம் வராதிருக்க ஆண்டவன் அருள் புரியட்டும் இப்பொழுது ஓலையில் கண்ட திட்டப்படி….” என்ற வீரபாண்டியன் நிதாளித்தான்.
“சேரனைத் தந்திரத்தால் மலையடிவாரத்துக்கு அழைத்து வருகிறேன்,” என்று கூறித் தனது புரவியை மலைப்பாதையில் திருப்பிக் கொண்டு சென்றான் சிங்கணன்.
அவன் உருவம் மேலேயிருந்த மரங்களுக்கிடையில் மறையுமட்டும் காத்திருந்த வீரபாண்டியன், கோட்டையின் மற்றொரு புறத்தே எழுந்த சைய பருவதத்தை ஏறெடுத்து நோக்கினான். “அங்கே இருக்கிறது எனது வெற்றி நதி,” என்று கூறி மகிழ்ச்சி முகத்தில் பெரிதும் நிலவத் தனது புரவியைக் கோட்டை நோக்கித் திருப்பினான். அவன் உள்ளத்தில் வெற்றியின் மகிழ்ச்சி அலைகள் எழுந்து எழுந்து மோதிக்கொண்டிருந்தன.