Raja Muthirai Part 1 Ch66 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 66 தெற்கு வாயில் போர்
Raja Muthirai Part 1 Ch66 | Raja Muthirai | TamilNovel.in
அவள் கண்களுக்கெதிரே விரிந்த நிலை சூன்யநிலை. சிறிதளவும் சத்தமின்றி வெகு லாகவமாகத் திறக்கப்பட்ட தெற்கு வாயில் கதவுகளுக்கப்பால் சம்பிரதாயத்துக்குக்கூட எதிரிப் படைகள் இல்லை. பூமியை அத்தனை தூரம் நட்சத்திர கிரணங்களுக்குக் கிழிக்க முடியாததால் பெரும் இருளே சூழ்ந்து நின்றது வெளிப்பகுதியை.
நீர் வற்றிக் கிடந்ததால் நல்ல வெளுப்பாகத் தெரிய வேண்டிய கோட்டாற்று மடிகூட இருட்டில் வெண்மை ‘மங்கிக் கிடந்ததால் அதிகமாக எதுவும் புலப்படவில்லை வெளியில். மலைகள் கிழக்குப் பகுதியில் இருந்ததன் விளைவாக உச்சிகளேதும் இளநங்கையின் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும், மலைச்சரிவின் ஒரு முனை மட்டும் ஆற்றுக்கு அக்கரையில் இறங்கி அடர்த்தியான தோப்பு ஒன்றையும் அங்கு சிருஷ்டித்திருந்தபடியால் ஆற்றுக்கு அக்கரையிலும் எதுவுமே தெரியவில்லை.
தெற்கு வாயிற் பகுதியின் இத்தகைய சூழ்நிலையை சூன்யநிலையே என்று கருதிய இளநங்கை அதைக் கண்டு வியந்ததன்றித் தன் உள்ளே அதன் காரணத்தை அலசவும் ‘முயன்றாள். ‘முப்புறமும் படைகளைக்கொண்டு வளைத்து நின்ற சேரர்படை தெற்குப் பகுதியிலிருந்து திடீரென மறைந்துவிட்டதன் காரணம் என்ன? வடக்கு வாயிலில் நுழையும்படி வீரபாண்டியன் சிங்கணனுக்குக் கூறியிருந்து *தால், அந்தப்பக்கம் செல்லப் படைகளை இழுத்து விட்டானா போசளத் தளபதி? இருப்பினும் சில காவலரை யாவது விட்டுவைக்காமல் அடியோடு அத்தனை வீரர்களையும் வேறுபுறம் இழுத்துவிடுவானேன்? தவிர, யாருமில்லாத இந்த வாயிலுக்கு வெளியே நான் சென்று செய்வதுதான் என்ன? என்று தன்னைத்தானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டு, அவற்றில் எதற்குமே விடை காணாதவளாய், திக்பிரமை பிடித்துச் சில வினாடிகள் நின்றாள். பிறகு வாளை உருவிக்கொண்டு சிறிதும் சத்தம் செய்யாமல் முந்நூறு காலாட் படைகளின் முகப்பில் நடந்தாள். இந்தச் சிறு படை நகர முற்பட்ட சில வினாடிகளுக்குள் தன்னைத் தொடர்ந்து வரும் வீரர்களுக்கும் ஏற்கனவே கட்டளை திட்டமாகக் கிடைத்திருப்பதை உணர்ந்தாள் இளநங்கை. வில்லும் அம்பறாத் தூணியும் கத்தியும் தாங்கிப் பின்வந்த முந்நூறு வீரர்களும் சிறிதளவும் சத்தம் செய்யாமலும், சத்தமேற்படுத்தக் கூடிய வாள் உறைகளையும் கையிற்பிடித்து அடக்கிக்கொண்டும் நடந்து வருவதைப் புரிந்து கொண்ட இளநங்கைக்கு. அந்தச் சில விநாடிகளில் வீரபாண்டியன் மீது பெரும் மதிப்பும் கோபமும் ஒருங்கே உண்டாயின.
இருந்த இடத்திலிருந்தே எதிரியின் யோசனையைப் புரிந்துகொண்டு படைகளை நடத்தும் ஆற்றல் அவனுக்கு இருந்ததைப்பற்றி மதிப்பும், அந்த விஷயங்கள் எதையுமே தன்னிடம் பகிர்ந்து கொள்ளாதது பற்றிக் கோபமும் ஏற்பட்டது அவளுக்கு.
தெற்கு வாயிலிலிருந்து வெகு தூரம் தள்ளிக் கிழக்கு வாயிற்புறத்தில் எதிரி வீரர்களின் படையொன்று திரண்டு நின்றது. தவிர, மேற்கு வாயிலை ஒட்டியும் சில வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். இரண்டு படையும் மதில் ஓரங்களில் நீண்ட தூரம் தள்ளி நின்றதாலும், கோட்டை மதிலிலிருந்த பாண்டியப் படையின் விளக்குகளும் பந்தங்களும் அணைந்துகிடந்ததாலும், கிழக்குப் பகுதிகளிலிருந்த எதிரியின் படைக்கும் மேற்குப் பகுதியிலிருந்த எதிரி வீரர்களுக்கும் இடையே இருந்த நீண்ட நிலப்பரப்பு ஆற்றுப் பகுதி உட்பட மையிருட்டில் மூழ்கிக் கிடந்ததை உணர்ந்தாள், இளநங்கை.
கிழக்கு, மேற்குக் கோடிகளில் உள்ள எதிரிகளிடம் சொற்ப பந்தங்களிருந்ததாலும், வெளிச்சத்தில் இருப்பவர்கள் கண்களுக்கு இருளிலிருப்பவர்கள் தெரியமாட்டார் களாதலாலும், தானும் தனது படையும் எதிரி கண்ணில் படாமல் ஆற்றுக்கு அக்கரை சென்றுவிட முடியும் என்பதை அறிந்த இளநங்கை, பின்வந்த படையினரைத் தலைகுனித்து அடங்கி வரும்படி சைகை செய்து, தானும் தலைகுனிந்து ஒடுங்கி மிக மெதுவாக நடந்து சென்றாள்.
கோட்டை மதிலிலிருந்து கோட்டாற்றின் மணல் மடி சில அடி தூரமே இருந்ததால் கிட்டதட்டக் கோட்டையை அணைத்தே ஆறு ஓடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தியிலிருந்து. தவிர, சற்றே எழும்பியிருந்த ஆற்றங்கரைகூட அதிக உயரமில்லாதிருந்தாலும், ஏறி இறங்கிவிட்டால் அந்தக் கரையே தனது படைகளை எதிரிகளிடமிருந்து மறைத்து விடுமென்பதை உணர்ந்தாள் இளநங்கை. அந்த உணர்விலும் பெரும் வியப்பு ஏற்பட் டிருந்தது அவளுக்கு.
அத்தனையும் எத்தனை உன்னிப்பாகக் கவனித்திருக் கிறான், இளவரசன் என்ற வியப்பு அவள் இதயத்தைப் பூரணமாக ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. இளவரசன் கோட்டையை விட்டு வேவுபார்க்கச் சென்ற நாட்களில் கோட்டையின் சுற்றுப்புறத்தைக் கவனித்து அதன் உபயோகத்தையும் நிர்ணயித்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தாள் இளநங்கை.
அடிமேலடி வைத்துச்சென்ற அவளை நெருங்கிப் பின் தொடர்ந்த வீரர்கள் சிறிதளவும் சத்தம் செய்யாததால் யாருக்கும் அந்தப் பகுதியில் விவரமே புரியவில்லை. வேல் பொறிகளுக்குப் பொறுப்புள்ள வீரர்கள் தரையில் அதை வைத்து உருளைகளைக்கொண்டு நகர்த்தாமல் கைகளில் தூக்கிக்கொண்டு வந்ததால் பெரும் பொறிகளிரண்டு வெளியே செல்வது யாருக்கும் புரியவில்லை. சற்றுச் சத்தம் செய்தாலும் படை நகருவது எதிரிக்கு லேசாகப் புரிந்தாலும், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள எதிரிப் படைகள் கண்ணிமைக்கும் மாத்திரத்தில் இருபுறத்திலும் நெருங்கி முந்நூறு பேரை மூன்று வினாடிகளில் நொறுக்கி அழித்துவிட முடியுமென்பதையும் உணர்ந்திருந்த இளநங்கை வெகுலாகவமாகப் படையை நடத்திச் சென்றாள். ஆற்றங்கரை மேட்டின்மேல் தவழ்ந்து ஏறி மறுபுறம் இறங்கினாள், பின் வந்த முந்நூறு பேரும் மண்டியிட்டுப் ஊர்ந்தும், முன்புறத்தில் கைளை ஊன்றி வளைந்து தாவியும் கரையைத் தாண்டியதும், ஆற்றுக்குள் இறங்கியபின் சற்று துரிதமாகப் பயணம் நடந்தது.
ஆற்றில் மணலே முக்கால்வாசி இருந்தது. எதிர்க் கரையை அணைத்து மட்டும் சிறு வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது. அறு மிகவும் சிறியதாகையால் அதை வெகு எளிதில் கடக்க முடியுமென்றாலும் மணலில் முந்நூறு பேர் அதிக வேகமாக நடந்தால் மணலின் சரக் சரக்கென்ற சத்தம் கேட்குமாதலால் அதிகத் துரிதமில்லாமலும் அதிகத் தாமதமில்லாமலும் இளநங்கை தன் வீரர்களை அழைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்து எதிர்க்கரையை அடைந்தாள். அங்கிருந்து கோட்டையையும் சுற்றுப்புறத்தையும் எடை போட்ட இளநங்கை வேல்பொறிகளைத் தான் இயக்க வேண்டிய வகையை நிர்ணயித்துக் கொண்டாள்.
தவிர, ஆற்றின் அக்கரை வேறு அவளுக்கு ஒருவித வியப்பைத் தந்தது. ஆறு நகரத்திற்குத் தெற்கில் ஓடினாலும் அதன் இரு முனைகள் சற்று உள் நெருங்கி இரண்டு இடங்களில் கோட்டை மதிலுக்கருகில் மூக்குகள் போல் நீட்டிக்கொண்டிருந்ததையும், அந்த மூக்குகளில் காடு மிக அடர்த்தியாக இருந்ததையும் கவனித்தாள் கொற்கைக் காவலன் மகள். அந்த மூக்குகளிரண்டும் சற்று மேட்டுப் பகுதியான மலைச் சரிவிலிருந்ததையும் கவனித்து, தன் வேல் பொறிகளை அமர்த்த அந்த இடங்களே சரியானவை என்பதை உணர்ந்தாள். ஆகவே, வீரனொருவனை அழைத்து வேல் பொறி இயக்குபவர்களில் ஐவரை ஒரு மூக்கிலும், மற்றும் ஐவரை இன்னொரு மூக்கிலும் பொறிகளைக் கொண்டு தயாராக இருக்குமாறும் தான் சைகை செய்ததும், பொறிகளை இயக்குமாறும் பணிக்க உத்தரவிட்டாள். அவள் உத்தரவுப்படி மேட்டுக் காட்டு மூக்குகளிரண்டையும் நோக்கி இரு வேல் பொறிகள் தூக்கிச் செல்லப்பட்டன. மீதி வீரர்களை இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்குமாறு உத்தரவிட்டுத் தான் நடுவில், அதாவது தெற்கு வாயிலுக்கு நேர் எதிரில் உருவிய வாளுடன் நின்று கொண்டாள்.
அவள் அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிப்பதற்கும் தெற்கு வாயில் கதவுகள் மீண்டும் சத்தமின்றிச் சாத்தப் படுவதற்கும் நேரம் சரியாயிருந்தது. நடுநிசி வரக் கிட்டத் தட்ட ஒரு நாழிகை இருந்ததால் அவள் தனது வீரர்களுடன் காத்து நின்றாள், கோட்டைக் கதவுகளின் மீதும், எதிரிப் படைகளின் மீதும் கண்களை மாறிமாறி ஓட்டிக் கொண்டு அப்பொழுதும் எதிரிப்படை நடமாட்டம் ஏதுமில்லை. கோட்டையின் பிரதான வாயிலான கிழக்கு வாயிற்பகுதியிலும், கடல் வாயிலான மேற்கு வாயிற்பகுதியிலும் இருந்த இரண்டொரு பந்தங்களின் வெளிச்சம் லேசாகத் தெரிந்ததால், அங்கு படைகள் தயாராயிருந்தும் அவை அசையாததைக் கவனித்தாள். இப்படி இருபுறமும் படைகளை ஸ்தம்பிக்கச் செய்யவேண்டிய அவசியமென்ன வென்று இளநங்கைக்கு லவலேசமும் புரியாததால் அவள் பெருமூச்சு விட்டாள்.
அந்தச் சமயத்தில் அவள் தோள் மீது யாரோ கையைப் பின்புறத்திலிருந்து வைத்தார்கள். “யாரது?” என்று சீறித் திரும்பிய இளநங்கையின் எதிரே புன்முறுவலுடன் நின்றிருந்தாள் பணிப்பெண் குறிஞ்சி.
அவளைக் கண்டதும் இளநங்கையின் இதயத்தில் கோபம் பொங்கி வந்தது. “நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று வினவினாள் உபதளபதி.
“நான் அடிக்கடி இங்கு வருவது வழக்கம்,” என்றாள் பணிப்பெண்.
“உன்னை எப்படி வீரர்கள் வெளியே விடுகிறார்கள்? என்று வினவினாள் இளநங்கை ஆத்திரத்துடன்.
“உத்தரவிருக்கிறது, விடுகிறார்கள்.”
“இளவரசர் சலுகையோ?”
“சலுகையல்ல தேவி, உரிமை.”
“உரிமையா! என்ன உரிமை?”
“மலைவாசிகளுக்குள்ள உரிமை. மலைவாசிகள் எப்பொழுதும் நகரங்களுக்குள் போகலாம், வரலாம். இதை யாரும் தடுக்க முடியாது. நாங்கள் தான் நகர வைத்தியர்களுக்கு மலையிலிருந்து மூலிகைகள் கொண்டு வந்து தருகிறோம். எதிரி மருத்துவர்களுக்கு மூலிகைகள் தருவதும் நாங்கள்தான். ஆகவே எங்களை யாரும் தடுப்பதில்லை. இது நீண்ட நாள் வழக்கம்.”
“உன்னை மருத்துவப் பெண் என்று இருபுறத்தாரும் எப்படி அறிவார்கள்?” என்று வினவினாள் இளநங்கை.
“அறிய வேண்டிய அவசியமில்லை,” என்றாள் பணிப் பெண் குறிஞ்சி.
“ஏன்?” என்று ஏதும் விளங்காமல் கேட்டாள் நங்கை.
பதிலுக்கு, “இதோ பாருங்கள் ‘ என்று இரண்டு முத்திரை மோதிரங்களை எடுத்துக் காட்டிய பணிப் பெண் கூறினாள், “இது பாண்டிய நாட்டு ராஜமுத்திரை. இது போசள நாட்டு ராஜமுத்திரை. பாண்டிய நாட்டு ராஜ முத்திரை எனக்குக் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிடும். போசள நாட்டு ராஜமுத்திரை எதிரிப் படைகள் என்னைத் தொடராதபடி செய்யும்,” என்று.
ஆச்சரியத்துடன் குறிஞ்சியையும் நோக்கி முத்திரை மோதிரங்களையும் நோக்கிய இளநங்கை, பணிப்பெண் அடிக்கடி கோட்டையைவிட்டு வெளியே சென்று திரும்ப முயன்ற காரணங்களை உணர்ந்து கொண்டாலும், அதைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்கத் துடித்தாள். ஆனால் பணிப்பெண் அவளை அதிகம் பேசவிடாமல், “அம்மணி தர்க்கத்துக்கும் விளக்கத்துக்கும் இதுவல்ல சமயம். அதோ பாருங்கள்,” என்று ஆகாயத்தைச் சுட்டிக் காட்டினாள்.
ஆகாயத்தில் கண்களை உயர்த்திய இளநங்கை நள்ளிரவு நெருங்கி விட்டதை உணர்ந்தாள். அதுதான் சிங்கணன் வடக்கு வாயிலைத் தாக்கி உள் நுழைய வேண்டிய சமய மென்பதை அறிந்தாள். அதை அறிந்து தலைதாழ்த்து முன்பே பணிப்பெண் அவளைத் தொட்டு அசக்கி, “இப்பொழுது இப்படிப் பாருங்கள்,” என்று கிழக்கு வாயிலைச் சுட்டிக் காட்டினாள்.
கிழக்கு வாயிலுக்கெதிரேயிருந்த சேரப் படையின் ஒரு பகுதி மெள்ள வடக்கு வாயிலை நோக்கி நகர்ந்தது. ஒப்புக்கொண்ட ஏற்பாட்டின்படி சிங்கணன் நடக்கிறா னென்பதை உணர்ந்த இளநங்கை பணிப்பெண்ணை நோக்கிக் கேட்டாள். “எதிரிப்படை வடபுற்ம் செல்கிறது. இந்தத் தென்புறத்தில் எனக்கென்ன வேலை?” என்று.
“சற்றுப் பொறுங்கள் அம்மணி,” என்றாள் பணிப்பெண்.
“எதற்குப் பொறுக்க வேண்டும்?” சீற்றமிருந்தது இளநங்கையின் குரலில்.
“அம்மணி !”
“என்ன குறிஞ்சி?”
“உங்களுக்குத் திறமையிருக்கிறது. ஆனால் பொறுமை யில்லை.”
“என்ன?”
“ஆம், அம்மணி, அது மட்டுமல்ல, உங்களுக்குச் சக்தி யிருக்கிறது; படைத் தலைவரிடம் பக்தியில்லை.”
“குறிஞ்சி!” ஆத்திரத்துடன் வெளிவந்தது இளநங் கையின் குரல்.
பணிப்பெண் சிறிதும் அதற்கஞ்சவில்லை. “அம்மணி! வீரபாண்டியர் காரணமின்றி உங்களைத் தெற்கு வாயிலுக்கு வரச் சொல்லமாட்டார். இங்கு காத்திருக்கவும் பணிக்க மாட்டார். அவரிடம் நம்பிக்கை வைத்து எதிரிகளின் அசைவைக் கவனியுங்கள்.”
மிதமிஞ்சி இதயத்தில் எழுந்த கோபத்தால் இளநங்கை பணிப்பெண்ணுக்குப் பதில் சொல்லவில்லை. ‘இவள் யார் வீரபாண்டியரைப் பற்றி எனக்குச் சொல்ல?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
நிமிடங்கள் நகர்ந்தன. அந்த வேகத்தில் எதிரிப்படை களின் கதியும் மெல்ல மெல்ல மாறத் துவங்கியது. கிழக்கு வாயிலிலிருந்து வடக்கு வாயிலை நோக்கி நகர்ந்த எதிரிப் படை மிகச் சிறியது. அதன் பின்னாலிருந்த பெரும் அணி வகுப்பொன்று தெற்கு வாயிலை நோக்கி நகர்ந்தது. பந்தங் களை அணைத்துவிட்டு இருளில் வந்த அந்தப் படையின் முகப்பில் பத்து யானைகள் சென்றன. பின்னால் விற்களையும் வாட்களையும் தாங்கிய காலாட்படையும், அதற்குப் பின்னால் சிறிய புரவிப் படையும் வந்தன. அதே சமயத்தில் மேற்கு வாயிலிலிருந்த படையின் ஒரு பகுதியும் தெற்கு வாயிலை நோக்கி நடந்தது.
உண்மை மெள்ள மெள்ள விளங்கலாயிற்று இள நங்கைக்கு. ‘சிங்கணன் எத்தனை அயோக்கியன?” என்று ஒரு முறை நினைத்தாள். சே சே! இப்படி நடப்பது அவன் கடமை. எத்தனை சிறந்த படைத்தலைவன் அவன்’ என்று மறுகணம் எண்ணினாள். சிங்கணனின் பயங்கர யுக்தி அவளுக்குப் புரிந்தது. வீரபாண்டியன் ஓருவனைத் தவிர வேறு யாராயிருந்தாலும் அந்தப் பயங்கரப் யுக்திக்குப் பலியாகி விடுவார்கள் என்பதை அவள் அறிந்து கொண்டாள். அதற்கு மேல் எண்ணங்களை ஓட்டாமல் பணிப்பெண் குறிஞ்சியை விளித்து, “வந்தது வந்தாய்! இந்த உத்தரவுகளை வீரர்களிடம் பரப்பு,” எனச் சில உத்தரவு களைக்காதோடு காதாகச் சொன்னாள்.
அந்த உத்தரவுகள் வீரர்களுக்கு உணர்த்தப்படு வதற்கும் எதிரிப் படைகள் தெற்கு வாயிலைத் தாக்குவதற்கும் நேரம் சரியாயிருந்தது அடுத்த வினாடி சிங்கணன் யானைகள் தெற்கு வாயிற் கதவுகள் மீது தடால் தடாலென மோதின. பெரும் வாரைகளிரண்டும் கதவுகளை உடைக்க முற்பட்டன. அமைதியாயிருந்த தெற்கு வாயிலில் திடீரெனப் பேரொலிகள் கிளம்பின. அமைதியுற்றிருந்த அந்தப் பகுதியில் அமைதி உடைந்தது. சூன்ய நிலை சூறாவளி நிலைக்கிடங் கொடுத்தது. மும்முரமான போர் வெகு துரிதத்தில் மூண்டுவிட்டது