Raja Muthirai Part 1 Ch67 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 67 தெற்கு வாயில் போர்
Raja Muthirai Part 1 Ch67 | Raja Muthirai | TamilNovel.in
நேரம் நடுநிசியாகி நகரம் அடங்கிக் கிடந்த காரணத்தாலும், எதிரிப் படைகள் சத்தம் ஏதுமின்றி நகர்ந்த காரணத்தாலும், பூர்ண அமைதி நிலவியிருந்த கோட்டாற்றுக் கரைப் பகுதி எதிரியின் திடீர் தாக்குதலால், அரவத்தின் சிகரமாக அரைக் கணத்தில் ஆகிவிடவே, பயங்கர ஒலிகள் வானைப் பிளந்தன. தெற்கும் பெரு வாயிலில் மோதிய பத்து யானைகளின் மத்தகங்களாலும் இடையே மோதிய மரத்தண்டுகளாலும் எழுப்பிய தடாலென்ற பேரொலி இரவின் நிம்மதியைத் திடீரென கிழித்துவிடவே, கோட்டாற்றுக் கரையெனும் மாநகர்ப் புறப்பகுதி போர்ப் பேயின் ஆட்டத்துக்கு இடம் கொடுத்தது. யானைகள் வாயிற் கதவுகளின் மேல் மோத ஆரம்பித்ததுமே எதிரிப் படையின் முன் பகுதியிலிருந்த வீரர் சிலர் கையில் பந்தங்களைக் கொளுத்திய பின்னாலிருந்தவர்களுக்கு வெளிச்சங்காட்டவே, பின்னா லிருந்த வீரர்கள் கோட்டைத் தளங்கள் மீது அம்புகளையும் வேல்களையும் வீசியதால், அவை மதிலின் மீது கணீர் கணீரென்று விழுந்த சத்தங்களும் எங்கும் கேட்டன.
ஆற்றின் அக்கரையிலிருந்து எதிரியின் போர் முறையைக் கவனித்த இளநங்கை பெரிதும் வியப்பின் வசப்பட்டாள். எதிரியின் படைவீரரில் கிட்டத்தட்ட நாலாயிரம் பேருக்கு மேல் தெற்கு வாயிலைத் தாக்க நின்றது திடீரெனக் கொளுத்தப்பட்ட பந்தங்களின் வெளிச்சத்தில் தெரிந்ததால் இத்தகைய பெரும் படையைத் தெற்கு வாயிலிலுள்ள சுமார் ஐந்நூறு பாண்டிய வீரர்கள். சமாளிப்பது கஷ்டமென்பதை உணர்ந்த இளநங்கை போரின் விளைவைப் பற்றிச் சிறிது அஞ்சினாலும், உபதளபதியென்ற முறையில் தனது கடமையைச் செலுத்த எண்ணி வீரனொருவனைப் பந்தமொன்று கொளுத்தச் சொல்லி, அதை எடுத்து ஒருமுறை கிழக்குப் புறமும், பிறகு மேற்குப்புறமும் ஆட்டினாள். அடுத்த விநாடி ஆற்றங்கரை கிழக்கு மூக்கின் காட்டிலிருந்த வேல் இயக்கப் பொறியிலிருந்தும், மேற்கு முகப்பிலிருந்த பொறியிலிருந்தும் வேல்கள் பரபரவென்று தெற்கு வாயிலை நோக்கிப் பறந்தன. எதிரிப் படையின் முகப்பில் யானைகள் சென்றதைப் பார்த்த உடனேயே அவற்றை நோக்கி வேலெய்யுமாறு வீரர்களுக்குப் பணிப்பெண் மூலம் இளநங்கை உத்தரவு அனுப்பியிருந்ததால் வேல்கள் யானைகளை நோக்கியே குறி வைக்கப்பட்டன. திடீர் திடீரென்று பக்கங்களிலும் முதுகுகளிலும் மத்தகங்களிலும் பாய்ந்துவிட்ட, கூரிய வேல்களால் யானைகள் பெரிதாக அலறின. அலறியது மட்டுமின்றி யானைகள் வெகுண்டு மறுபுறம் திரும்பவும் செய்தன. திரும்பிய யானைகளைப் பார்த்து மீண்டும் எறியப்பட்ட வேல்கள் இரண்டொரு யானைகளின் துதிக்கைகளிலும் கண்களிலும் பாய்ந்து விட்டமையால் யானைகள் பேரலறலாக அலறித் திரும்பி ஓடமுயன்றும், பிளிறியும் பின்னாலிருந்த வீரர்களைத் தாக்கின. சிலரைத் துதிக்கையால் எடுத்தெறிந்தன. சிலரைக் கால்களால் தாக்கின. சிலரைநோக்கித் தலைகுனிந்து பாய்ந்தன. சிலரைக் கால்களால் துவைக்கவும் செய்தன. எதிர்பாராது ஏற்பட்ட இந்த நிலை எதிரிப்படைகளில் சிறிதளவு குழப்பத்தையும், பெரிதளவு பிளவையும் விளைவிக்கவே, அணிவகுப்பு ஓரளவு கலையவே செய்தது. வரிசையைப் பிளந்த யானைகள் ஓட வழிவிட்ட படையினர், மீண்டும் கூடி வாரை களைக் கொண்டு கதவுகளை இடிக்கலாயினர். ஆனால் யானைகளின் இடிக்குத் திறக்காத அந்தப் பெருங்கதவுகள் வாரைகளின் இடிக்கு லேசில் இடங்கொடாதென இளநங்கை நினைத்தாள். அதிலும் வியக்கும் விளைவே ஏற்பட்டது. வாரைகளின் முதல் இடியிலேயே கதவுகள் திடீரென அகன்று தாங்களாகவே திறந்துவிட்டதால், எதிரிப்படை வெகு வேகத்துடன் உள்ளே நுழைந்தது.
ஆனால் படை முழுவதும் நுழையவில்லை. பாதிப் படையே நுழைந்தது. திடீரெனப் பாதிப்படை வெளியிலேயே ஸ்தம்பித்து நின்றது. வாயிலையே நோக்கிக் கொண்டிருந்த இளநங்கை உள்ளே கடுமையான போர் நிகழ்வதை உணர்ந்தாள். திடீரென அலறிய வீரர்களின் கோஷங்களும், பாய்ந்த புரவிகளும், பின் தங்கிவிட்ட படையின் குழப்பமும் கோட்டைக்குள்ளே எதிரி சற்றும் எதிர்பாராத நிலையில் சிக்கிக்கொண்டு விட்டதைக் குறிப்பிட்டதால், இளநங்கை தனது கடமையையும் மேற்கொண்டு செய்ய முற்பட்டாள். தனது முந்நூறு வீரர் களில் வேல் பொறி இயக்க வீரர்களைத் தவிர மற்றவர் களைச் சற்று ஆற்று மணலில் இறக்கி, வில் இயக்கும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி, அம்பெய்யுமாறு பந்த மாட்டிச் சைகை செய்யவே, எதிரிப்படையின் பின்பகுதி மீது அம்புகள் பறந்தன.
முதலில் பறந்த அம்புக் கூட்டத்தால் தாக்குண்ட வீரர்கள் அதிகமில்லையாயினும் எதிர்பாராமல் பின்னாலிருந்து தாக்குதல் வந்ததால், எதிரிப்படை சிறிது குழம்பவே செய்தது. அந்தப் படையின் நடுவிலிருந்த உபதலைவனொருவன் தனது படைப் பகுதியைப் பின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க நன்றாகப் பின்னடையச் செய்து, மீண்டும் கிழக்குப் புறமாக நகர உத்தரவிட்டான். அதனால் அம்பு வீச்சு எல்லையிலிருந்து படை நகர்ந்து விட்டாலும், அதில் ஓரளவு குழப்பம் இருக்கவே செய்தது. அந்தக் குழப்பத்தை அதிகமாக்கவோ என்னவோ பிரதான வாயிலான கிழக்கு வாயிலிலும் திடீரெனப் பேரரவம் கேட்டது. இந்த அரவம் எதிரியிடைப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். அந்தப் பகுதியை நோக்கித் தெற்கு வாசலைத் தாக்கி நின்ற படையின் பின் பகுதி நகர்ந்தது. அதே சமயத்தில் எதிர்பாராத மற்றொரு நிகழ்ச்சியும் ஏற்பட்டது.
தூரத்தே இருந்த சிங்கணன் துணிக்கூடாரமும் துணைத் தலைவர்களுக்கு அமைக்கப்பட்ட பாசறை ஓலை வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. அந்தத் தீயினால் ஏற்பட்ட வெளிச்சம் மலைச்சரிவு பூராவையும் தெளிவாக எடுத்துக் காட்டியதால், அந்தப் பாசறைப் பகுதிகளை அடுத்துத் தங்கியிருந்த படைப்பிரிவிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது நன்றாகப் புலப்பட்டது இளநங்கையின் விழிகளுக்கு. தெற்கு வாயில் போரைக் கவனித்துக்கொண்டு தனது பெரும் புரவியின்மீது படைகளின் இடையில் நின்றிருந்த சிங்கணன் திடீரெனக் கொம்பொன்றை எடுத்து ஊதவே மேற்குப் பகுதியின் படை பாதி பின்னடைந்தது; கிழக்குப் பகுதியின் படையும் பின்னடைந்தது. ஆனால் அந்தப் படை பூராவும் வெளிவரவில்லை. உள்ளே நுழைந்த பகுதியில் இருந்து ஒரு வீரனோ புரவியோ வெளியே தலைகாட்டவில்லை. அதற்குப் பதில் பாண்டியர் புரவிப் படைப் பிரிவொன்று சூறாவளி வேகத்தில் வெளிவந்தது.
அது வந்த வேகத்தையும், அணிவகுப்பு முறையையும் பார்த்த இளநங்கை தெற்கு வாயிலில் உள்ளே நுழைந்த எதிரிப் படையின் பகுதி அங்கேயே கொல்லப்பட்டிருக்க வேண்டுமென்று ஊகித்தாள். இல்லையேல் சிறிது சிறிதாகப் போரிட்டு மந்த கதியில்தான் படை வெளிவர முடியுமென்று அவள் அறிந்து கொண்டாளாதலால், சிங்கணன் சற்றும் எதிர்பாராத முறையில் போர் திரும்புவதை ஊகித்தாள். ஆனால் எப்படித் திரும்புகிறதென்பதைப் பூராவும் நிர்ணயிக்க முடியாத காரணத்தால், தன் வீரர்களைக் கொண்டு எதிரியின் பின்பகுதியில் அம்புகளாலும், வேல்களாலும் தாக்கினாள். ஆற்றின் அக்கரை மூக்குகளிலிருந்த காட்டுப் பகுதியில் வேல் இயக்கப் பொறிகள் மறைந்து கிடந்ததாலும் ஆற்றின் மடியிலிருந்த காரணத்தால் ஆற்றின் கரை எழுச்சியும் ஓரளவு வில் வீரர்களை மறைத்ததாலும், எதிரி தன்னைப் பின்னால் தாக்கிய படைப் பலத்தை உணரச் சக்தியற்றுப் போனதால், அவர்கள் அணிவகுப்பு லேசாகக் கலையவும் முற்பட்டது.
அந்தக் கலைந்த அணிவகுப்பைப் பல இடங்களில் ஊடுருவிய பாண்டியப் படை ஒரே சீராகக் கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதைக் கவனித்த எதிரியின் மேற்குவாயில் படை பாண்டியப் படையைப் பின்புறத்தில் தாக்க ஊர்ந்து வந்தாலும், திடீரென மதில் மீதிருந்த அம்பு மழையால் தடுக்கப்பட்டது. தெற்கு வாயிலிலிருந்து வெளியே வந்த பாண்டியர் படை மதிலோரமே எதிரியைத் தாக்கி முன்னேறியது. பாசறைக்கு அருகேயிருந்த படை தங்கள் வீரர்களுக்கு உதவ முன் வந்தும் முடியவில்லை. கோட்டை மதிலிலிருந்த விற்கூடங்கள் எரியம்புகளைச் சாரிசாரியாக அப்படையை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தன. தவிர வேறொரு புதுத் திருப்பமும் போரில் ஏற்பட்டது.
திடீரெனக் கிழக்கு வாயில் திறக்கப்பட்டு அங்கிருந்த படை கோட்டையைச் சுற்றித் தெற்கு வாயிலை நோக்கிப் பாதி தூரம் வந்து மறுபடி சுழன்று எதிரிப் பாசறையை நோக்கிச் சென்றதால் அந்தப் பகுதியிலும் கிழக்கு வாயிலிலிருந்தும் பேரொலிகள் கிளம்பின. தெற்கு வாயிலிலிருந்தும் வெளிப்போந்த பாண்டியப் படையின் இரு பிரிவுகளில் நெருக்கமாகவும் நீளமாகவும் அணி வகுக்கப்பட்டிருந்ததாலும், அவை வளைந்து வளைந்து சென்று போரிட்டதாலும், அது எந்தப் பக்கம் எப்பொழுது தாக்குமென்பதை அறிய மாட்டாத எதிரிகள், அடிக்கடி அணிவகுப்பை மாற்றிப் போரிட வேண்டியதாயிற்று. இப்படிப் போர் கிழக்கு வாயிற்பகுதியிலும் தெற்கு வாயிற்பகுதியிலும் அரை ஜாமத்திற்கும் மேல் நடந்தது.
வீரபாண்டியன் படைப் பிரிவுகள் பாம்பு வளைவது போல் வளைந்து வளைந்து போரிட்டதால் அவ்வப்பொழுது அணி வகுப்பை மாற்றவேண்டிய அவசியத்தை உணர்ந்த சிங்கணன் பெரிதும் சங்கடப்பட்டான். அந்தப் போர் முறையே பெரும் விசித்திரமாயிருந்தது அவனுக்கு. பல வியூகங்களைப் பற்றியும் போர்ச் முறைகளைப் பற்றியும் அவனறிந்தவனாயிருந்தாலும், அவன் கற்ற போர் சாத்திரத்துக்கு அப்பாற்பட்டதாகவும் சம்பிரதாய விரோத மாகவுமிருந்தது வீரபாண்டியன் வகுத்த போர் முறை. அதை சர்ப்பவியூகமென்றும் சொல்ல முடியாது. சர்ப்ப வியூகமில்லையென்றும் சொல்லமுடியாது. இப்படி இரண்டுங் கெட்டானாக நெளிந்து வளைந்த வியூகத்தைச் சமாளிப்பதிலேயே அதிக நேரம் செலவழிந்ததாலும், அவ்வப்போது ஊடுருவப்பட்ட அணிவகுப்பைத் திருத்த முற்பட்டதாலும் எதிரிகளைத் தான் தாக்க முடியாமல், எதிரியிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியமேற்பட்டதால், வியப்புக்கும் சினத்துக்கும் இலக்காகிய சிங்கணன், தன் படைகளைத் திடீரென ஒரே புறமாகச் சேரப் பணித்து அனைத்தையும் கிழக்கு வாயிலைத் தாக்கப் பணித்தான்.
அதனால் தெற்கு வாயில் புறத்தின் நெருக்கம் அகன்று விடவே தெற்கு வாயிலிலிருந்து ஒரு பந்தம் அக்கரையை நோக்கி ஆடியது. அதன் குறிப்பை உணர்ந்த இளநங்கை தனது முந்நூறு வீரர்களுடனும், வேலெறியும் யந்திரங்களுடனும் தெற்கு வாயிலை நோக்கி விரைந்தாள். அவளும் அவள் படையும் உள் நுழைந்ததும் தெற்கு வாயில் பெருங் கதவுகள் மூடப்பட்டன. உள்ளே இருந்த வெளிச்சம் பிரமை தரும் காட்சியை, பயங்கரக்காட்சியை அவள் கண்களுக்குத் தந்தது.
உள்ளே நுழைந்த சேரர் படையின் முக்கால் பகுதி மதிலிலிருந்து எய்யப்பட்ட வேல்களால் மாண்டு கிடந்தது. புரவிகள் சில துடித்துக் கொண்டிருந்தன. சில மரணக் கனைப்புக் கனைத்துக் கிடந்தன. மரணமடைந்து கீழே கிடந்த வீரர் பலர் ஆகாயத்தை வைத்த கண் வாங்காமல் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். எங்கும் குருதி பட்டையாகப் பூமியை நனைத்திருந்தது. இறந்தவர் போக நிராயுதபாணிகளாயிருந்த சில எதிரி வீரர்களை பாண்டியப் புரவிப் படை வீரர் நெருங்கி நடத்திச் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் வெளியில் பெரும் போர்க் கூச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கூச்சலின் காரணத்தை அறிய மதில் மேல் ஏறிய இளநங்கை மிக விசித்திரமான போர் முறையைக் கண்ணால் கண்டாள்.
அவள் மதில்மேல் உயரத்திலிருந்ததாலும் மிகத் தள்ளி எதிரியின் படை அணிவகுப்புக்குள் பாண்டியப் படைகள் ஊடுருவிவிட்டதாலும், அவள் போர் நிலையை நன்றாகக் காணமுடிந்தது. பாண்டியப்படை நீண்ட சர்ப்பம் போல் வளைந்து வளைந்து எதிரிப் படையில் புகுவதையும், சில சமயம் அதன் வாலும், சில சமயம் அதன் தலையும், சில சமயம் அதன் நடுமுதுகும் வளைந்து கொடுத்துக் கொண்டு, எதிரிப் படையைச் சாடுவதையும் கண்டாள். எதிரியும் அந்தப் புதுமுறைப் போரைச் சமாளிக்கப் படைகளை நெருக்கி அணி வகுப்பு உடையாவண்ணம் செய்ய முயன்றான், அந்த முயற்சி அவனுக்குப் பெரும் யமனாக முடிந்தது.
திடீரெனப் பாம்பு நீண்டு எதிரிப் படையைச் சுற்றி வந்தது. அந்த வட்டத்துக்குள் நின்றவர்களைப் பாண்டிய வீரர்கள் நெருங்கினர். மலைப்பாம்பினால் சுற்றப்பட்ட மனித உடல் எலும்புகள் போல் சிறிது நேரத்தில் எதிரியின் ஒரு படை நொறுங்கியது. அதே சமயத்தில் கிழக்கு வாயில் முரசு ஒலித்தது. சர்ரென்று பாண்டியப் படை பின் வாங்கிக் கோட்டைக்குள் வந்தது. அதைத் தொடர்ந்து எதிரிப் படையைக் கோட்டை மதில் விற்பொறிகள் வீசிய அம்பு மழையும், சாத்தப்பட்ட கிழக்கு வாயில் பெரும் கதவுகளும் தடுத்தன.
புரவிமீது ஆரோகணித்திருந்த சிங்கணனும் தனது சங்கை எடுத்துப் பலமாக ஊதினான். அந்த ஊதலுக்கிசைந்த சேரர்படைகள் மீண்டும் பழைய முற்றுகை நிலைக்குத் திரும்பின. சிங்கணன் தனது படைகளின் சேதத்தை எண்ணி எண்ணிப் பிரமித்து, போர்க்களத்திலேயே நீண்ட நேரம் நின்றான். பிறகு பாசறைக்குத் திரும்பி நெருப்பினால் கருகிப் போன தனது கூடாரத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு புரவியை விட்டிறங்கிப் பக்கத்திலிருந்த பாறைமீது உட்கார்ந்து கொண்டான். அவன் முகத்தில் அப்பொழுதுகூட அச்சமில்லை. படையின் சேதத்தைப் பற்றியோ அன்று எற்பட்ட விளைவைப் பற்றியோ பீதியில்லை. பெரும் குழப்பமே விரிந்து நின்றது அவன் முகத்தில். தனது உத்திரவுப்படி படைகள் பின்வாங்கக் குறைந்தபட்சம் அரை ஜாமம் பிடிக்குமென்பதை அறிந்ததால் அவன் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தான்.
படைகள் பழைய இடத்துக்கு மீண்டன. இருப்பினும் அந்தப் படைகளில் அமைதியில்லை. காயமடைந்தவர் முனகலைத்தவிர, வேறு ஒருவித சந்தேகமும் படை வீரர் களிடை ஊடுருவி விட்டதை சிங்கணன் உணர்ந்தான். அந்தச் சந்தேகமும் தன் படைத் தலைமையைப் பற்றிய தென்பதையும் அவன் அறிந்தான். எதிரியின் தாக்குதலை விட தன்னிடம் தனது படைகளுக்கு ஏற்படக்கூடிய அவ நம்பிக்கை பெரிதும் அபாயமென்பதை அவன் சந்தேகமறப் புரிந்துகொண்டான். அதை உடைக்க என்ன செய்யலாம் என்பதைச் சிந்தித்தவண்ணமே அவன் அந்தப் பாறையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான். வெகு சீக்கிரம் கோட்டைக்குள்ளும் அமைதி நிலவுவதை உணர்ந்தான். வெள்ளி முளைக்கும் தருணம் வந்துவிட்டதால் கோட்டையின் ஓரிரண்டு பந்தங்களும் அணைக்கப்பட்டன.
அடுத்த நான்கு நாழிகைகளில் கதிரவனும் உதய மானான். நிலைமையை மறுபடியும் சீர்படுத்தப் புதிய யோசனையொன்றும் சிங்கணன் சித்தத்தில் எழுந்தது. “வீர பாண்டியா! இன்னும் நீ என்னுடைய பிடியிலிருந்து விடு படவில்லை. இன்று உன்னை எப்படியும் நொறுக்கி விடுகிறேன் பார்” என்று தன் கைகளிரண்டை இறுகப் பிடித்து நொறுக்கினான். பாண்டிய இளவரசனை இதயத்தில் உதயமாயிற்று.