Raja Muthirai Part 1 Ch69 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 69 தாப இதயம், வியர்த்த எண்ணங்கள்
Raja Muthirai Part 1 Ch69 | Raja Muthirai | TamilNovel.in
சிங்கணன் ஓலையுடன் பாண்டிய நாட்டுச் சிங்கத்தின் குகைக்குள் நுழைவதுபோலக் கோட்டாற்றுக் கரைக் கோட்டைக்குள் நுழைந்த சேரர் உபதளபதி ராமவர்மனுக்கு, கடந்த இரவுப் போரில் ஏற்பட்ட வியப்புக்குப் பன்மடங்கு அதிகமான வியப்பைத் தரும் நிகழ்ச்சிகள் கோட்டையை அணுகியது முதலே கிடைத்ததால், அவன் பெரும் பீதியுடனேயே இளவரசன் இருப்பிடத்தை அடைந்தான்.
இரு புரவி வீரர்கள் அக்கம் பக்கத்தில் வர, தானும் ஒரு பெரும் புரவி மீது அமர்ந்து கோட்டையின் கிழக்கு வாயிலை அடைந்து தனது வீரர்கள் சம்பிரதாயப்படி கொம்பெடுத்து ஊது முன்பாகவே கோட்டை வாயில் திறந்து விட்டதே வியப்பாயிருந்தது ராமவர்மனுக்கு. முதலில், தானும் வீரர்களும் உள்ளே நுழைந்தவுடன் தனக்காகவே காத்திருப்பவர்கள் போல் புரவிகளில் தயாராயிருந்த நான்கு எதிரி வீரர்கள் தனக்குத் தலை தாழ்த்தி வணங்கியதன்றி, தன்னை எதுவும் கேட்காமலும், தான் வாயைத் திறப்பதற்குக்கூட வாய்ப்பளிக்காமலும் தனக்கு முன் சென்றது வியப்பைச் சற்றே அதிகப்படுத்தியது சேரர் உபதளபதிக்கு. தவிர, கோட்டையின் உட்புறத்தில் போர் நடந்த இடம் பரம் சுத்தமாயிருந்ததையும், மாண்ட தனது ஐந்நூறு வீரர்களும் சரி, புரவிகளும் சரி, இருந்த சுவடு தெரியாமல் அப்புறப்படுத்தப் பட்டிருப்பதையும் கண்ட ராமவர்மன் இத்தனை துரிதத்தில் எப்படி இளவரசன் இடத்தைத் துப்புரவு செய்தான் என்று மேலும் பிரமித்தான். இளவரசனின் மாளிகையை எய்தியதும் அவன் வியப்பு உச்சநிலையை அடைந்தது.
எந்தப் படைத் தலைவன் ரணகளப்பட்டு மரணப் படுக்கையில் படுத்திருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தானோ அதே படைத்தலைவன் மாளிகையின் முன்படிகளில் புரவி ஏறத் தயாராக நின்றிருந்ததைக் கண்ட ராமவர்மனுக்கு படைத் தலைவன் அவன் தானோ என்ற சந்தேகம் உண்டாகவே, புரவியிலிருந்து இறங்காமலே ஒரு வினாடி தயங்கினான். மாளிகைப் படியிலிருந்தவனைக் கண்டதும் தன்னை அழைத்து வந்த புரவி வீரர்கள் புரவியிலிருந்து அவசரமாகக் குதித்துத் தலை தாழ்த்திய காரணத்தாலும் படியில் நின்றவன் தலையில் அப்பொழுதும் பெரிய கட்டு ஒன்று இறுகச் சுற்றப்பட்டு அது பக்கவாட்டில் முடியிட்டுத் தொங்கியபடியாலும் எல்லாவற்றுக்கும் மேலாக அவன் நின்ற தோரணையைக் கண்டதாலும், அவன்தான் வீரபாண்டியனாக இருக்கவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்ட ராமவர்மனும் புரவியிலிருந்து குதித்து அவனும் குத் தலை தாழ்த்தினான்.
அவனுக்குப் பதில் தலை தாழ்த்திய வீரபாண்டியனும் “கொடுங்கள் ஓலையை” என்று கையை நீட்டவே ராமவர்மன் வியப்பு உச்சியையும் தாண்டி நகர்ந்து விட்டதால் சில வினாடிகள் திகைத்து நின்றுவிட்டான்.
அவன் திகைப்பையும் வியப்பையும் கண்ட வீர பாண்டியன், “இதில் வியப்பதற்கு ஏதுமில்லை ராமவர்மரே! என் நிலையில் நீங்களிருந்தால் நீங்களும் ஓலையை எதிர்பார்த்திருப்பீர்கள்,” என்றான் புன்முறுவலுடன்.
மிகப் பயங்கரமான போர் நடந்த இரண்டு ஜாமத்துக்குள் ஒரு படைத்தலைவன் சர்வசாதாரணமாகப் புன்முறுவல் செய்யக்கூடுமென்பதையே ராமவர்மன் எதிர பார்க்கவில்லை. தீர்க்க சிந்தனையும், அடுத்து என்ன செய்யலாமென்ற கவலையும், முகத்தில் துலங்கும் படைத் தலைவனைச் சந்திக்க வந்த ராமவர்மனுக்கு, ஏதே கல்யாணத்திற்குச் செல்பவனைப்போல் அலங்கார உடையணிந்து தலைக் காயத்திற்குப் பட்டாடையும் பரிவட்டம் போல் கட்டிக்கொண்டு சர்வசாதாரணமாக ஓலைக்குக் கை நீட்டிப் புன்முறுவலுடன் தன்னை வீரபாண்டியன் சந்தித்ததும், அவன் எப்படித் திகைப்போ வியப்போ அடையாமலிருக்க முடியும்? ஆகவே, அந்த வியப்பினாலும் திகைப்பினாலும் சற்றே தடுமாற்றத்தை அடைந்த குரலில் ராமவர்மன் “தங்கள் நிலையில் நானிருந்தால் நானிருக்கும் நிலை முற்றும் வேறாயிருக்கும்,” என்றான்.
வீரபாண்டியன் இதழ்களில் இளநகை மேலும் விரிந்தது. “எப்படி வேறாயிருக்கும்?” என்று வினவினான் வீரபாண்டியன் சர்வசகஜமாக.
“மிகவும் கவலையில் இருப்பேன் வீரபாண்டியரே,” என்றான் ராமவர்மன்.
“எதைப்பற்றிக் கவலை?” என்று கேட்டான் வீரபாண்டியன்.
“அடுத்து நடக்க வேண்டியதைப்பற்றி,” என்று சுட்டிக் காட்டினான் ராமவர்மன்.
“அதைப்பற்றி நாம் கவலைப்பட்டு என்ன பயன்?”
“ஏன் பயனில்லை? முன்னதாக நம்மைக் காத்துக் கொள்ளலாம்.”
“இது மனிதனின் பிரமை.”
“மனிதனின் பிரமையா?”
“ஆம் உபதளபதி!”
“தங்களுக்கு எப்படித் தெரியும்? நான் உபதளபதியென்று….?” என்ற ராம வர்மனை இடைமறித்த இளவரசன் சொன்னான்; “ராம வர்மரே! முதலில் உங்கள் தளபதி என்னைச் சந்திக்க வந்தார். அவர் வராததால் உபதளபதிக்குக் குறைந்த யாரையும் என்னிடத்தில் அனுப்பமாட்டார். என்னிடம் அவருக்குள்ள மதிப்பும் மரியாதையும் நான் அறியாததல்ல. அடுத்தபடி இரு உபதளபதிகள் இருப்பதாகவும் அந்த இரு உபதளபதிகளில் முதல்வரின் பெயர் ராமவர்மரென்றும் கேள்விப்பட்டேன். ஆகையால் தாங்கள் தான் அது என்று நினைத்தேன்,” இதைச் சொன்ன இளவரசன் ராமவர்மன் மீது மதிப்புத் துலங்கிய பார்வையொன்றையும் வீசினான்.
ராமவர்மனுக்கு என்ன பதில் சொல்வதென்று விளங்கவில்லை. பெரும் அறிவாளியொருவன் முன்பு தான் நிற்பதை உணர்ந்து கொண்டான். ஆகவே, ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக, “ஆம், ஆம், நான்தான் முதல் உபதளபதி…” என்றான் திக்குமுக்காடி.
இதைக் கேட்டதும் முகத்தில் பெருமகிழ்ச்சி காட்டிய இளவரசன், “தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ராமவர்மரே! தங்களைப்பற்றி நான் அனைத்தும் அறிவேன். தாங்கள் பெரும் வீரர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்து வரும் போர் நிகழ்ச்சியைப்பற்றிய கவலை வீரர்களுக்கு அவசியம்தான். ஆனால் நான் கவலைப்படுவதில்லை ராமவர்மரே! வீண்பிரமையால் மனிதன் கவலைப்படுகிறான். தன்னால் ஏதோ நடக்கிறதென்ற பிரமையே ‘அவன் கவலைக்குக் காரணம். நடக்கவேண்டியதனைத்தும் விதியின் கரங்களால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக் கின்றன. ஆகவே நாம் கவலைப்படுவதில் என்ன அர்த்தம்?” என்று வினவினான்.
இளவரசனின் கடைசி வார்த்தைகளின் பொருளைப் புரிந்துகொண்ட ராமவர்மன் பதில் கூற முடியாமல் திணறினான். எதிர்பாராது தனது படைகள் முறியடிக்கப்பட்ட விஷயத்தையே இளவரசன் குறிப்பிடுகிறான் என்பதை உணர்ந்துகொண்ட ராமவர்மன், மெல்லத் தனது சொரூபத்தையும் காட்டத் தொடங்கி, “தாங்கள் சொல்வது எல்லோருக்கும் பொருந்தாது…” என்று இழுத்தான் சற்று விஷமத்தையும் குரலில் காட்டி.
“எல்லோருக்கும் என்றால்?” இளவரசன் குரலில் வியப்பு ஒலித்தது.
“உதாரணமாகத் தங்களுக்கு!”
“எனக்கா ?”
“ஆம்.”
“விளக்கிச் சொல்லுங்கள் உபதளபதி.”
“தங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. இருப்பினும் சொல்கிறேன். தெற்கு வாயில் தாக்குதலைத் தாங்கள் எதிர் பார்க்க மாட்டீர்களென்று நாங்கள் நினைத்தோம். ஆனால் தாங்கள் எதிர்பார்த்துத்தானிருந்தீர்கள். கோட்டை இன்று காலை எங்கள் வசமிருக்குமென்று நாங்கள் நினைத்தோம். ஆனால் உங்களுக்குத் திட்டமாகத் தெரியும். முடிவு அப்படி யிருக்காதென்று. ஆகவே தாங்கள் சொல்லும் வலிய விதியும் அதன் எதிர்பாராத திருப்பமும் தங்களுக்குப் பொருந்தாது.” என்ற ராமவர்மன் குரலில் இளவரசனைப் பற்றிய பெரு மதிப்புத் தொனித்தது.
இளவரசன் முகத்திலிருந்த விஷமரேகை மறைந்து கனிவு குடி கொண்டது. “ராமவர்மரே, பலர் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாராட்டுதல் என்மனத்தில் அச்சத்தை விளைவிக்கிறது. இத்தனைக்கு நான் தகுதியா என்ற சந்தேகத்தையும் விளைவிக்கிறது.” என்ற வீரபாண்டியன் குரலில் பணிவு நிரம்பிக் கிடந்தது. “சரி, ஓலையைக் கொடுங்கள்” என்று மீண்டும் கை நீட்டினான் இளவரசன்.
ராமவர்மனும் கச்சையிலிருந்த ஓலையை எடுத்து இளவரசனிடம் நீட்டினான்.
இளவரசன் விழிகள் ஓலையில் மிகத் துரிதமாக ஓடின. மூன்று பக்கங்களாக வரையப்பட்டிருந்த அந்தச் செய்தியின் மூன்று ஓலை நறுக்குகளையும் நிமிட நேரத்தில் தள்ளிப் படித்த இளவரசன் முகத்தில் ஒரு விநாடி சிந்தனை படர்ந்தது. மூன்றாவது விநாடி பழைய புன்சிரிப்பு உதடுகளை ஆட்கொண்டது. “சரி ராமவர்மரே, இதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன். சிங்கணனுக்கு எனது நன்றியைச் சொல்லுங்கள்,” என்று கூறினான்.
சிறந்த படைத்தலைவன் மட்டுமின்றிக் கண்ணியமான மனமும் படைத்த ராமவர்மன், பாண்டிய நாட்டு இளவரசனைக் குழப்பம் மிகுந்த முகத்துடன் நோக்கினான். “எதற்கும் ஓலையை நன்றாகப் படித்து விட்டுச் சொல்லுங்கள் தளபதி,” என்றும் கூறினான்.
இளவரசன் சற்று நிதானித்தான். ஏதோ சில வினாடிகள் யோசித்தான். பிறகு புரவி வீரர்களை நோக்கி, “இன்னும் அரை ஜாமம் கழித்து வருவதாகக் கிழக்கு வாயிலுக்கு அறிவித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு, “வாருங்கள் ராமவர்மரே!” என்று ராமவர்மனைக் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு மாளிகைக்குள் சென்றான்.
மாளிகையின் முதல் கட்டைக் கடந்து மாடிப் படிகளில் ஏறித் தனது அறைக்கு வந்ததும், சிங்கணனைச் சந்தித்தபோது தான் அமர்ந்திருந்த சிங்காதனத்தில் ராம வர்மனை உட்காரும்படி சைகை செய்து தான் கட்டிலில் அமர்ந்தான்.
ராமவர்மன் சிங்காதனத்தில் அமராது சிந்தை குலைந்து நின்றான். பாண்டிய நாட்டு இளவரசன் மாளிகையின் வெளி வாயில்படிகளில் காவல்வீரர் பலரும் பார்க்கத் தன்னைச் சுவாதீனமாகக் கையைப் பிடித்து அழைத்து வந்ததே திகைப்பை அளித்தது ராமவர்மனுக்கு பாண்டிய நாட்டு இளவரசர் நிலை எங்கே? சாதாரணப் படைத் தலைவனான என் நிலை எங்கே?’ என்று தவித்து நடக்கமுடியாமல் மாளிகைக்குள் நடந்து வந்த சேரர் உபதளபதிக்கு, “இங்கே அமருங்கள்” என்று இளவரசன் சிங்காதனத்தைக் காட்டியதும் பிரமை மிதமிஞ்சியதால் அவன் உட்காராமல் நின்று கொண்டேயிருந்தான்.
“அமருங்கள் ராமவர்மரே!” என்று அன்பு கனிந்த குரலில் சற்று அழுத்தமாகச் சொன்னான் இளவரசன்.
“இது முறையல்ல,” என்றான் ராமவர்மன்.
“இந்த மாளிகைக்குள் முறையை நிர்ணயிக்க வேண்டியது என் கடமை,” என்று சுட்டிக் காட்டினான் வீர பாண்டியன்.
“இருக்கலாம், ஆயினும் எனது தகுதியும் யோசிக்கத் தகுந்தது.”
“தகுதியையும் நானே நிர்ணயிப்பதற்கு என்ன தடை ?”
“சமூகம், சம்பிரதாயம் இரண்டும் தடைகள்.”
“இரண்டையும் வளைப்பதும் வகுப்பதும் மனிதன். தவிர தகுதியை நான் நிலையான குணங்களால் தீர்மானிக்கிறேன். நிலையற்ற தற்காலிகப் பதவிகளால் அல்ல” என்ற வீரபாண்டியன் ராமவர்மனை வலுக்கட்டாயமாகச் சிங்கா தனத்தில் அமரச் செய்தான். பிறகு காவலொருவனை விளித்து இளநங்கையையும் வரவழைத்து, ராமவர்மனுக்கு அறிமுகப்படுத்தினான்.
இளநங்கை சிங்காதனத்தில் சங்கடப்பட்டு உட்கார்ந்த ராமவர்மனை நோக்கித் தலை தாழ்த்தினாள். ராமவர்மன் சிரம் நன்றாகத் தாழ்ந்தது. சிரம் மட்டுமல்ல அவன் மனமும் பூர்ணமாக வணங்கியது.
“என் மனைவி இளநங்கை,” என்று கூறிப் பெருமிதத் துடன் புன்முறுவல் செய்தான் இளவரசன்.
“தங்கள் மனைவியா!” என்று வாயைப் பிளந்தான் ராமவர்மன்.
“ஆம்.”
“தங்கள் உபதளபதி…”
“அந்தப் பதவியும் இவளுக்கு உண்டு. இரண்டு பதவி களையும் திறமையுடன் வகிக்கிறாள்.”
“தங்களுக்கு…”
“என்ன ராமவர்மரே?”
“திருமணமாகவில்லையென்று சொன்னார்களே?”
“இந்தக் கோட்டைக்கு வந்தபோது ஆகவில்லை.”
“இங்குதான்…” ராமவர்மன் சங்கடத்துடன் மென்று விழுங்கினான்.
“ஆம் ஆம் இங்குதான்.” என்று சொல்லி நகைத்தான் இளவரசன்.
இளவரசனின் கேலியிலும் ராமவர்மனின் சங்கடத்திலும் சிக்கிக்கொண்ட இளநங்கை கோபநகை கூட்டினாள் தனது கொவ்வை இதழ்களில்.
ராமவர்மனின் சங்கடத்தையும் இளநங்கையின் கோபத்தையும் நீக்க, “இனி ஓலையைக் கவனிப்போம்” என்ற இளவரசன் ஓலையில் கண்ட திட்டத்தைப்பற்றித் தர்க்கிக்கலானான். அந்தத் தர்க்க முடிவில் இளவரசன் பூர்ணமாகச் சிங்கணன் வலையில் சிக்கிக் கொண்டா னென்பதை ராமவர்மன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். ‘அந்தப் பாதகன் சூழ்ச்சியால் ஒரு பெரும் வீரனும் இந்த அழகியும் அழிந்து விடப் போகிறார்களே!’ என்று நினைத்துப் பெரும் தாபமும் கொண்டான். அந்தத் தாபத்துடன் சிங்கணன் பாசறைக்கு வந்து சமயத்தில் ராம வர்மன் இதயத்தில் சிங்கணன்மீது இணையிலா வெறுப்பும் ஏற்பட்டது. இத்தகைய துரோகச் செயலில், பஞ்சமா பாதகத்தில் இறங்கக்கூடியவன் ஒரு போர் வீரனாகவோ தளபதியாகவோ இருக்க முடியாதென்ற முடிவுக்கும் வந்த ராமவர்மன் மனத்தில் விபரீத எண்ணங்கள் பல எழுந்தன.