Raja Muthirai Part 2 Ch54 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 54 மனத்தில் ஒரு புதுக் கனவு
Raja Muthirai Part 2 Ch54 | Raja Muthirai | TamilNovel.in
குருநாதன் சிறைப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து பரலிமாநகருக்கு வந்த ராமவர்மனை வீரரவி தனது அந்தரங்க அறையிலேயே சந்தித்தான். அந்தச் சமயத்தில் ராமவர்மன் இருந்த நிலை அரசனுக்கு மட்டுமின்றி சேனாதிபதிக்கும் மிகுந்த வியப்பை அளிக்கவே ஒருவரையொருவர் கணநேரம் பார்த்துக் கொண்டனர். நீண்ட பயணத்துக்கான அறிகுறி எதுவுமே ராமவர்மனிடம் காணப்படவில்லை. உடைகள் பயணத்தால் அழுக்குப் படாமலும் முகத்தில் களைப்பு ஏதும் காணப்படாமலுமிருந்த ராமவர்மனைக் கண்ட சேனாதிபதிக்கு மன்னனைவிட வியப்பு அதிகரித்திருந்ததால், “உமது நிலை மன்னருக்கு வியப்பைத் தருகிறது.” என்று பேச்சைத் துவங்கினான்.
”வியப்பு மன்னருக்கு மட்டுமல்ல,” என்றான் ராமவர்மனும் சேனாதிபதியை ஏறிவிட்டு நோக்கி.
“உமக்கும் ஏற்பட்டிருக்கிறது போலிருக்கிறது?” என்றான் சேனாதிபதி விஷயமாக.
“உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட வரையில் ஆண்டவன் சகலரையும் கமமாகவே படைத்திருக்கிறான்,” என்று குறிப் பிட்டான் ராமவர்மன்.
இதைக் கேட்ட சேனாதிபதி சற்று சங்கடப்பட்டான் பரலி மாநகரிலிருந்து சிங்கணன் தலைமையில் படைகளை நடத்திச் சென்ற ராமவர்மனுக்கும் அன்று தங்களெதிரில் நின்ற ராமவர்மனுக்கும் அதிக மாறுபாடு இருந்ததைக் கவனித்தான் சேனாதிபதி. கேவலம் கர்மவீரனும் மன்னரோ, தானோ எதைச் சொன்னாலும் தட்டிப் பேசாதவனுமான ராமவர்மன் மிகுந்த இடக்குப் பேச்சுப் பேசுவதைக் கண்டதால் சங்கடத்துக்குள்ளான சேனாதிபதி, “மன்னர் வியப்புக்குக் காரணமிருக்கிறது ராமவர்மரே,” என்றான் கடுமையுடன்.
“காரணமின்றி யாருக்கும் வியப்பு ஏற்படுவதில்லை” என்று ராமவர்மன் சுட்டிக் காட்டினான்.
இதனால் சற்றுச் சினத்தின் வசப்பட்ட சேனாதிபதி “உமது நிலைகண்டு மன்னர் வியக்கிறார்,” என்றான் குரலில் கோபம் ஒலிக்க.
சரிதானென்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தான் ராமவர்மன் அந்தத் தலையசைத்தலில் விஷமம் சொட்டுவதைக் கண்ட சேனாதிபதி மேலும் வெகுண்டு. ”உமது உடை சற்றும் நலுங்கவில்லை. முகத்திலும் களைப்பில்லை. ஏதோ விருந்திலிருந்து வருகிற கோலத்திலிருக்கிறீர்,” என்று சீறினான்.
“உண்மை.” என்றான் ராமவர்மன் சேனாதிபதியின் சீற்றத்தைச் சிறிதும் லட்சியம் செய்யாமல்.
“என்ன உண்மை?”
“விருந்திலிருந்து வருகிறேனென்பது.”
“யார் விருந்து வைத்தது?”
“வீரபாண்டியன்!”
இதைக் கேட்ட சேனாதிபதி மன்னன் இருவருமே அசந்து போனார்கள். “என்ன! வீரபாண்டியனா!” என்று இருவரும் ஒரே காலத்தில் கேட்டார்கள்.
ஆமென்பதற்கு அறிகுறியாகத் தைையை அசைத் தான் ராமவர்மன், சேனாதிபதி மீண்டும் ராமவர்மனை நோக்கி, “கோட்டாற்றுக் கரையில் வைத்த விருந்து இத்தனை தூரத்துக்குத் தெம்பு கொடுக்கிறதா?” என்று வினவினான்.
“கோட்டாற்றுக் கரையிலா!” என்றான் ராமவர்மன் வியப்பைக் காட்டி,
“ஆம்,” சேனாதிபதி தனது சாமர்த்தியத்தைக் காட்டியதில் மகிழ்ச்சியுடன் அந்தச் சொல்லை உதிர்த்தான்.
“கோட்டாற்றுக் கரையில் யார் இருக்கிறார்கள்?” என்று வினவினான் ராமவர்மன்.
இதைக் கேட்ட மன்னன் தனது கண்களைச் சந்தேகத்துடன் நாட்டினான் ராமவர்மன்மீது. மறுபடியும் ஏதோ சொல்லப் போன சேனாதிபதியைக் கையமர்த்தி அடக்கி, “ராமவர்மா! நீ சொல்வது புரியவில்லை எனக்கு. கோட்டாற்றுக் கரையில் யாருமில்லையா?” என்று வினவினான்.
அதுவரை சேனாதிபதியுடன் இடக்காகப் பேசி.ய ராமவர்மன் முகத்தில் பெருவியப்பு படர்ந்தது. “மன்னவா! என் தூதன் தங்களிடம் ஏதும் சொல்லவில்லையா?” என்று வினவினான்.
“தூதனா! யாரும் வரவில்லையே,” என்றான் மன்னன்.
வியப்பு மிக அதிகமாயிருந்தது ராமவர்மன் குரலில் “மன்னருக்கு அனுப்பப்படும் ஓலைகளை வேறு யாராவது பார்க்கிறார்களா?” என்று வினவினான் மிதமிஞ்சிய வியப்புடன்.
“ஒருவேளை குருநாதர் பார்த்திருப்பார்,” என்ற மன்னன் ‘ராமவர்மன் நாளை வருவான், விஷயத்தைப் புரிந்து கொள்வாய்’, என்று எச்சரித்த குருநாதன் சொற்கள் நினைப்புக்கு வரவே, ராமவர்மனை நோக்கி, “ஆம் ராமவர்மா. நீ வரப்போகும் விஷயத்தைக் குருநாதரே சொன்னார்,” என்றும் கூறினான்.
ராமவர்மன் சற்று யோசித்தான். “ஓலை, மன்னருக்கு மட்டுமென்று குறித்திருந்தேனே விலாசத்தில்,” என்றான்.
“இருப்பினும் குருநாதர் பிரித்துப் பார்த்திருப்பார்,” என்றான் அரசன்.
“அரசன் ஓலையைப் பிரிப்பது பெரும் குற்ற மாயிற்றே” என்று கூறினான் ராமவர்மன்.
“குற்றத்துக்குத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் குருநாதர்.” என்று கூறிய மன்னன், “அது கிடக்கட்டும் ராமவர்மா! தூதனிடம் என்ன எழுதியனுப்பினாய்?” என்று வினவினான்.
“நான் வீரபாண்டியனால் விடுதலை செய்யப்பட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் தலைநகர் வந்துவிடுவேன் என்று எழுதியனுப்பினேன்…”
வீரரவியின் வதனத்தில் மீண்டும் வியப்பும் கவலையும் விரிந்தன. “அப்படியானால் நீ வீரபாண்டி யனிடம் சிறைப்பட்டிருந்தாயா?” என்று வினவினான் வியப்பு குரலிலும் ஒலிக்க.
“ஆம்,” என்றான் ராமவர்மன்.
“சிங்கணன்?” மன்னன் கேள்வியில் வியப்பும் கவலையும் ஒலித்தன.
“போசளத்துக்குப் போய்விட்டான்.” “எப்பொழுது?”
“கோட்டாற்றுக்கரை வீழ்ந்த பிறகு” என்ற ராமவர்மன், “மன்னவா, அந்த விஷயம் ஏதுமே தெரியாதா இங்கே?” என்று வினவவும் செய்தான்.
“தெரியாது ராமவர்மா! சேர நாட்டுப் பாதைகளை சுந்தரபாண்டியன் அடியோடு கத்தரித்துவிட்டான்.”
“என்னிடம் மட்டும் தூதன் எப்படி வந்தான்?”
“நீ எங்கிருந்தாய்?” என்று கேட்டான் மன்னன்.
“வீரபாண்டியன் பாசறையில்.” “எங்கிருக்கிறது அது?”
“தலைநகரின் வடகிழக்கில் மலைமீதுள்ள அடர்ந்த காட்டுக்குள்.”
“வீரரவி திகைத்தான். சேனாதிபதியின் கண்கள் பிதுங்கி விடும் போல் இருந்தன. “இத்தனை அருகிலா?” என்று மன்னனும் சேனாதிபதியும் ஒரே சமயத்தில் கேட்டார்கள்.
“ஆம். வீரபாண்டியன் தனது மனைவியுடனும் படையுடனும் தலைநகரின் வடகிழக்கிலிருக்கிறான். சுந்தர பாண்டியனும் அருகிலேயே இருக்கிறான். இரு படைகளும் இணைந்து நான்கு நாட்களுக்கு மேலாகிறது,” என்று விளக்கினான் ராமவர்மன். மேற்கொண்டு ராமவர்மனே சொன்னான்: “மன்னவா! கோட்டாற்றுக்கரை வீழ்ந்து விட்டது கண்ணிமைக்கும் நேரத்தில், சிங்கணன் தந்திரம் வீரபாண்டியன் தந்திரத்துக்கு முன்பு ஈடுகொடுக்க முடிய வில்லை . நமது பெரும் படையில் பாதி அங்கு அழிக்கப் பட்டது. மீதிப்பாதியை சிங்கணன் சுந்தரபாண்டியனைப் பின்புறம் தாக்க அனுப்பியிருந்தான். சுந்தரபாண்டியன் அதை சந்திக்கும் நேரத்தில் வீரபாண்டியன் அதை பின் புறத்தில் சந்தித்தான். கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் நெறிக்கப்பட்ட வேர்க்கடலை போல் அதுவும் நெறிக்கப்பட்டுவிட்டது. தோல்வியுற்ற சேரவீரர் நிராயுதபாணிகளாக்கப்பட்டுக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்…”
இங்கு சற்று நிதானித்த ராமவர்மனை நோக்கிய மன்னன், “எந்தக் கிராமங்களுக்கு?” என்று வினவினான்.
“எரிபரந்தெடுத்தலால் மக்களற்ற கிராமங்களுக்கு. அங்கு பிரித்தனுப்பினான். திரும்பி அவர்கள் படைகளாகச் சேரவோ ஆயுதங்களைப் பெறவோ வழியிருக்காதவாறு செய்துவிட்டான் வீரபாண்டியன். என்னையும் இரண்டு நாட்களுக்கு முன்பு விடுவித்தான். இன்று வந்து சேர்ந்தேன். ஆனால் மன்னவா! இந்த நகரத்தின் நிலை என்னைக் குலைநடுக்கமெடுக்கச் செய்கிறது. எங்கும் களியாட்டங் களைப் பார்க்கிறேன். கடற்புறத்தில் சாதாரண மக்கள் கூட்டங்கூட்டமாகத் துரத்தப்படுவதைப் பார்க்கிறேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாயிருந்தாலும் அவற்றைப் பயனற்றதாகச் செய்யும் மக்கள் நிலையைப் பார்க்கிறேன். மக்களிடம் பெரும் கசப்பு இருக்கிறது மன்னவா இந்த நகர நிலை …”
மன்னன் கூறினான், “ராமவர்மா, நீ சென்ற பிறகு பல விஷயங்கள் நடந்து விட்டன தலைநகரில். ஆனால் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் தலைநகரத்தின் நன்மைக்குத்தான்,” என்று. அத்துடன் குருநாதன் முதலில் சிறைப்பட்டதிலிருந்து கடைசியாகச் சிறைப்பட்டதுவரை சகலத்தையும் சேனாதிபதியை விட்டு ராமவர்மனுக்குத் தெளிவு படுத்தவும் சொன்னான்.
சேனாதிபதி ஆதியோடந்தமாகச் சகல விஷயங் களையும் சொன்னான். குருநாதன் போர்த் திட்டத்தையும் சென்னான். குருநாதனை மடக்க மன்னன் செய்த சூழ்ச்சிகளையும் கூறினான். அவையனைத்தையும் கேட்ட, ராமவர்மன் பெருமூச்செறிந்தான். “மன்னவா, மிகச் சிறந்த சந்தர்ப்பத்தை இழந்து விட்டீர்கள்.”
“என்ன சந்தர்ப்பம்” என்று கேட்டான் மன்னன்.
ராமவர்மன் மெள்ள மெள்ள வீரபாண்டியன் பாசறைச் செய்திகளை விவரித்தான். அந்தச் செய்திகள் மன்னன் மனத்தில் ஒரு புதுக் கதவைத் திறந்து விட்டன. அதன் மூலம் தெரிந்த காட்சி பிரமிப்பையும் அச்சத்தையும் ஒருங்கே அளித்தது வீரரவிக்கு.