Raja Muthirai Part 2 Ch56 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 56 தலைநகரின் தலைவிதி
Raja Muthirai Part 2 Ch56 | Raja Muthirai | TamilNovel.in
“குறிஞ்சி!” என்று ராமவர்மன் உதடுகளிலிருந்து உதிர்ந்த சொல் பெரும் பிரமிப்பை அளித்தது சேர மன்னனான உதயமார்த்தாண்டவர்மனுக்கு.
“குறிஞ்சியா! அந்த மருத்துவப் பெண்ணா! விஜய வர்மன் மகளா!” என்றான் வியப்புடன்.
“ஆம் மன்னவா!” என்றான் ராமவர்மன் தனது குரலில் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்.
ராமவர்மனை ஒரு விநாடி உற்று நோக்கிவிட்டு, சேனாதிபயைச் சுடும் விழிகளுடன் நோக்கிய வீரரவி, “இப்பொழுது எங்கே அவள்?” என்று வினவினான்.
சேனாதிபதி மன்னன் சீற்றத்தைக் கண்டு சற்றே நடுங்கினான். “எனக்குத் தெரியாது மன்னவா!” என்றான் நடுக்கம் குரலிலும் தெரிய.
“என்னதான் தெரியும் உனக்கு?” என்ற வீரரவியின் பார்வையில் கோபத்துடன் இகழ்ச்சிக் குறியும் கலந்து கொண்டது.
“மன்னவா!” என்றான் சேனாதிபதி மெள்ள.
“என்ன ?”
“இந்த விஷயம் அந்தப்புரத்தைப் பற்றியது.”
“அதனால்?”
“அரண்மனையிலிருக்கும் காவலருக்குத்தான் தெரியும். தவிர…..”
“தவிர?”
“இவள் பணிப்பெண்…”
“அது தெரியும் எனக்கு.”
“பணிப் பெண்களின் தலைவிக்குத்தான் வேலை நேரங்கள், இருப்பிடம் முதலியன தெரியும். ஆனால் இந்தப் பணிப்பெண் விஷயம் அவளுக்குக்கூடத் தெரியுமோ தெரியாதோ!”
இதைக் கேட்ட மன்னன் முகத்தில் இகழ்ச்சி அதிக மாகியது. “இந்தப் பெண் விஷயம் தனிபோலிருக்கிறது.” என்று வினவினான் வீரரவி இகழ்ச்சி குரலில் அதிகமாக ஒலிக்க.
பதிலுக்குச் சேனாதிபதி அதிகப் பணிவைக் காட்டினான். “இந்தப் பணிப்பெண்ணை மன்னரே நேரில் அமர்த்தியதாகக் கேள்வி.”
சேனாதிபதியின் குறும்பு மன்னனுக்கு நன்றாக விளங்கியது. சாத்தன் குறிஞ்சியை அழைத்து வந்தபோது அவளைத் தானே அந்தப்புரத்தில் நிறுத்திக்கொண்டது மன்னனுக்கும் நினைவு வரவே அவன் பதிலேதும் சொல்லவில்லை சில விநாடிகள். “சரி சரி! அவளை அழைத்து வரச் சொல்,” என்று கூறினான்.
அந்த உத்தரவைத் தேக்கும் முறையில் இடையே புகுந்த ராமவர்மன், “மன்னவா! அவள் இங்கிருக்க முடியாது,” என்றான்.
“எப்படித் தெரியும் உனக்கு?” என்று வினவினான் மன்னன்.
“இந்தப் பெண் உங்களிடமிருந்து கொண்டு எதிரிக்கு வேவு பார்க்க வந்தவள். எந்த முத்துக்குமரியைப்பற்றி அறிய வந்தாளோ அந்த முத்துக்குமரி அப்புறப்படுத்தப் பட்ட பின்பு அவளுக்கு இங்கே வேலையில்லை. ஆகவே மறைந்திருப்பாள்,” என்று விளக்கினான் ராமவர்மன்.
இதைக் கேட்ட மன்னன், “ஆம். ஆம். அப்படித்தா னிருக்கும்,” என்று ஒப்புக்கொண்டான். ஆகவே, “சேனாதிபதி! குறிஞ்சியிருந்தால் அவளை அழைத்து வரச்சொல். இல்லையெல் பணிப்பெண்ணின் தலைவியை அழைத்து வரச்சொல்,” என்று மன்னன் உத்தரவிடவே சேனாதிபதி அப்பணிக்குக் காவலரை ஏவாமல் தானே சென்றான். அரசன் பிறகு ராமவர்மனை வீரபாண்டியன் விஷயமாக மற்றும் பல கேள்விகளைக் கேட்கத் துவங்கினான்.
ராமவர்மன் அரசன் கேட்டதற்கெல்லாம் சற்றும் தயங்காமல் பதில் கூறினான். கோட்டாற்றுக்கரையில் தான் நேரிடையாகக் கண்ட நிலவரங்களை மட்டுமின்றி மற்றவர்களிடமிருந்து கேட்ட விவரங்களையும் தெரிவித் தான். அவன் வீரபாண்டியனைப்பற்றிச் சொல்லச் சொல்ல அவன் குரலில் எழுந்த மரியாதையையும் வியப்பையும் கண்ட வீரரவி வீரபாண்டியன் மீது பொறாமையும் கொண்டான். இப்படி எதிரிகளையும் வசீகரிக்கும் குணங்களைக் கொண்டவன் தன்னிடம் அலுவல் புரிபவர்களை அடிமையாக்கிக் கொள்வது ஒரு பிரமாதமில்லை என்றே எண்ணினான்.
இப்படி ராமவர்மனும் அரசனும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் பணிப்பெண்ணின் தலைவியுடன் உட்புகுந்த சேனாதிபதி, “மன்னவா! இதோ தலைவியை அழைத்து வந்திருக்கிறேன்” என்றான்.
“குறிஞ்சி எங்கே?” என்று வினவினான் மன்னன் தலைவியை நோக்கி.
“காணவில்லை.” அவள் பதில் சட்டென்று வந்தது.
“எப்பொழுது காணவில்லை?” என்று கேட்டான் மன்னவன்.
“இரண்டு நாட்களாக”
“அதைப்பற்றி என்ன செய்தாய் நீ?”
“ஏதும் செய்யவில்லை.”
“ஏன்?”
“அவள் எனது கட்டுத்திட்டங்களுக்கு அடங்க வில்லை.”
“அடங்கவில்லையா?”
“ஆம். இஷ்டப்படி அரண்மனையைவிட்டு வெளியே செல்லுவாள், திரும்புவாள், அவளை எதுவும் நான் கேட்பது கிடையாது.”
“மற்றவர்களுக்கு இல்லாத உரிமை இவளுக்கு மட்டும் என்ன இருந்தது?”
“மன்னரைச் சேர்ந்தவள் என்ற உரிமை இருந்தது.”
“நான் சொன்னேனா அப்படி உன்னிடம்?”
“இல்லை.”
"யார் சொன்னதது?"
“யாரும் சொல்லத் தேவையில்லை. அவளிடம் சேர நாட்டு முத்திரை மோதிரம் இருந்தது.”
இந்தப் பதிலுக்குப் பிறகுதான் மன்னன் உண்மையைப் புரிந்துகொண்டான். அவள் சேரனின் முத்திரைமோதிரம், பாண்டியன் முத்திரை மோதிரம் இரண்டயும் தன்னிடம் காட்டியதை நினைத்துப் பார்த்தான். தனது கண்கள் எப்படிப் பலவிதத்தில் அவளால் கட்டப்பட்டது என்பதையும் உணர்ந்தான்.
மன்னனுக்கு மற்றோர் உண்மையையும் சொன்னாள் பணிப் பெண்களின் தலைவி, “இன்னொரு விஷயம் மன்னவா…” என்று இழுத்தாள் மெள்ள.
“என்ன?” என்று வினவினான் மன்னவன் கோபம் துளிர்த்த குரலில்.
“ஒருநாள் இரவு அரண்மனையிலிருந்து ஒரு ரதம் கிளம்பிச் சென்றதல்லவா?” என்று துவங்கினாள் தலைவி.
“ஆம்.”
“அது சென்ற சமயத்தில் நான் வழக்கம்போல் காவலரை எச்சரிக்க அந்தப்புரத்தைச் சுற்றி வந்தேன்…”
“உம்.”
“ரதம் சென்றதும் பாண்டிய இளவரசி இருந்த அறைக் கெதிரேயுள்ள தாழ்வரையில், விளக்குக்கு நேர் எதிரில் மணப்பெண்போல் புத்தாடையணிந்து இந்தப் பணிப்பெண் நின்றிருந்தாள்.”
“பிறகு?”
“உள்ளே சென்றுவிட்டாள்.”
“அவ்வளவுதானே?”
இங்கு சற்று நிதானித்த பணிப் பெண்களின் தலைவி, “அவள் அணிந்திருந்த உடை பணிப்பெண்களின் உடையல்ல மன்னவா, சிறையிலிருந்த அரசகுமாரியின் உடையாயிருந்தது” என்றாள் மெதுவாக.
வீரரவி அவளை நோக்கி, “வேறெதாவது உண்டா?” என்றான்.
“அவள் அந்த உடையுடன் சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப்புரத்தை விட்டுக் கிளம்பினாள்.”
“இப்பொழுதுள்ள சந்தேகம் உனக்கு அப்பொழுதில்லையா?”
“இருந்தது. ஆகையால் அவளை வழிமறித்துக் கேட்டேன். அந்த உடையை அரசகுமாரி செல்லும் போது அவளுக்குப் பரிசாக அளித்துப் போனதாகச் சொன்னாள். அதற்குமேல் நான் ஏதும் சொல்ல முடியவில்லை ,” என்றாள் பணிப்பெண்களின் தலைவி.
அத்துடன் பணிப் பெண்களின் தலைவியை அனுப்பிய மன்னன் நீண்ட நேரம் யோசனையில் இறங்கினான். பிறகு ராமவர்மனை நோக்கிக் கேட்டான், “இன்னும் எத்தனை தினங்களில் நாம் பாண்டியர்களிடமிருந்து தாக்குதலை எதிர்பார்க்கலாம்?” என்று.
“எந்த விநாடியிலும் எதிர்பார்க்கலாம்,” என்றான் ராமவர்மன்.
“அப்படியானால் நாமும் தயாராயிருக்கிறோம். வீர பாண்டியன் சிந்திக்க நாம் இடங் கொடுக்கக் கூடாது: அவனாகத் தாக்கவில்லையானால் தாக்குதலை நாம் துவங்குவோம்,” என்றான் மன்னன்.
“எப்படி மன்னவா?” என்று கேட்டான் ராமவர்மன்’
“அதற்கு திட்டம் வைத்திருக்கிறேன். உனது மன்னன் அறிவும் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது. திட்டத்தை நாளை சொல்கிறேன்,” என்று ராமவர்மனை நோக்கிக் கூறிய. மன்னன், “சேனாதிபதி! அந்தப் பணிப் பெண் எங்கிருந்தாலும் கைப்பிடியாகப் பிடித்து அழைத்து வர உத்தரவு பிறப்பித்துவிடு. அவசியமானால் முரசும் கொட்டு” என்று சேனாதிபதிக்கும் உத்தரவைப் பிறப்பித்தான்.
ஆனால் சேனாதிபதியின் உத்தரவுகளும் சரி, முரசும் சரி, எந்தவிதப் பலனையும் அளிக்கவில்லை . அவள் எங்கு மறைந்திருப்பாள்” என்று சிந்தித்தான் வீரரவி. அந்தச் சிந்தனை மறுநாள் பூராவும் தொடர்ந்து இருந்தது. ஆனால் பணிப்பெண் குறிஞ்சி அவன் சிந்தனையும் எட்டாத தூரத்தில் இருந்தாள். மறுநாள் இரவு அவள் வீரபாண்டியனிடம் மிக முக்கியமான செய்தியைச் சொல்லி கொண்டிருந்தாள். அந்தச் செய்தி பரலிமாநகரின் தலைவிதியை நிர்ணயித்து விட்டது.