Raja Muthirai Part 2 Ch60 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்
அத்தியாயம் – 60 இடங்கணிப் பொறி! எரிமுகப் பேரம்பு!
Raja Muthirai Part 2 Ch60 | Raja Muthirai | TamilNovel.in
பாண்டிய மன்னன் பாசறையிலிருந்து பாவை குறிஞ்சியைத் தனது பயங்கர சிருஷ்டியிருந்த காட்டுப் பகுதிக்கு அழைத்து வந்த வீரபாண்டியன், குறிஞ்சி இதோபார்,” என்று அங்கிருந்த ஒரு பெரும் பொறியையும் பொறிக்கு முனையில் நான்கு ஆள் நீளத்துக்குப் பரலியின் திக்கை நோக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய அம்பையும் காட்டினான்.
அந்த ஆயுதம் பாண்டியன் பாசறையிலிருந்து கால் காதத்துக்கு மேலிருந்ததால் அவர்கள் அதை அடைந்த சமயத்தில் வெயில் சற்று நன்றாகவே ஏறியிருந்த காரணத்தால் தெளிவாக அதைப் பார்க்க முடிந்தது விஜயவர்மன் மகளுக்கு.
அந்த ஆயுதத்தை நிறுத்த அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த சில மரங்களை வெட்டி, சக்கர வட்டமாக இடம் அமைக்கப்பட்டிருந்ததன்றி, அந்த ஆயுதமும் அதன் அடியிலிருந்த பொறிக்கூடும் இரண்டு சக்கரங்கள் உள்ள ஒரு பொறி ஒரு பெரும் கூடை போலிருந்தது. அதன் மேலெழுந்த பெரிய அம்பின் நுனியில் கழுத்தில் மற்றும் ஒரு பெரும் உருண்டையும் இருந்தது. அந்தப் புது அம்பின் நீளம், உருண்டைக்கழுத்து, அடியிலிருந்த பொறிக்கூடை இத்தனையும் பார்த்த குறிஞ்சி பெரும் பிரமிப்பால் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
நீண்ட நேரம் அப்படி மலைத்து நின்றுவிட்ட குறிஞ்சியை வீரபாண்டியன் சொற்கள் நனவுலகத்துக்கு அழைத்து வந்தன. “குறிஞ்சி! தமிழகத்தின் மூதாதைகள் வகுத்த மிகப் பயங்கரமான ஆயுதத்தை நீ பார்க்கிறாய். சமீப காலத்தில் இதை யாரும் செய்ததுமில்லை, கையாண்டதுமில்லை. தமிழர் படைக்கல அமைப்பில் சொல்லப்படுவது ஏட்டுச் சுரைக்காய் என்று நம்பி வந்தார்கள். ஆனால் இது பற்றி நான் நீண்ட நாட்களாகச் சிந்தித்திருக்கிறேன். மதுரையிலிருக்கும்போது சிறுசிறு ஆயுதங்களை இதுபோல் செய்தும் பார்த்திருக்கிறேன். தேவையில்லாவிட்டால் இப்பொழுது கூட இதைச் செய்திருக்கமாட்டேன் எதிரியின் பெரும்படை, நமது சிறு படையை மதிள் புறம்கூட அணுகவிடாதிருக்க, அதன் காட்டு முகப்பை அழித்தது, விற்பொறிகளையும் வேல் பொறிகளையும் மதிள் மீது ஏற்றியது. இவை காரணமாகவே இதைச் சிருஷ்டித்தேன். இதை நான் அமைக்க முயன்றபோது மன்னர்கூட நகைத்தார். என்னைப் பார்த்தும், தச்சர்களை வேலை வாங்குவதைப் பார்த்தும், காட்டு மரங்கள் சிலவற்றை வெட்டுவதைப் பார்த்தும் இகழ்ச்சிப் புன்முறுவலும் கொண்டார். ஆனால் இதைச் செய்தபின் அவர் முறுவலும் கொள்ளவில்லை: வாய்விட்டு நகைக்கவும் இல்லை ,” என்று கூறினான் வீரபாண்டியன்.
குறிஞ்சி அந்தப் பெரும் ஆயுதத்திலிருந்து கண்களைத் திருப்பி வீரபாண்டியனை நோக்கினாள். வீரபாண்டியன் முகம் பார்ப்பதற்குப் பயங்கரமாயிருந்தது. கண்களில் சதாதுள்ளும் விஷமச் சிரிப்பு மறைந்து கழுகுப் பார்வை துலங்கியது. வீரபாண்டியன் குரலும் தொடர்ந்து பயங்கரமாக ஒலித்தது: “பெண்ணே! சேரன் எனது சகோதரன் மகளை அபகரிக்காத வரையில் நேர்முகப் போருக்கு இலக்கானவனாயிருந்தான். பெண்ணைக் கொண்டு சென்ற பிறகு அவனை அழிப்பதற்கு நேர்முகப் போர் அவசியமில்லை. அதற்குத்தான் இந்தக் காவிய வாளியை அமைத்தேன். எவ்வாளியைக் கொண்டு சிவ பெருமான் முப்புரத்தை அழித்தாரோ அந்த வாளியைப் போன்றது’ இது. ஆகவே இதற்கும் அந்தப் பெயரையே சூட்டியிருக்கிறேன். அந்தப் பெயர் தெரியுமா குறிஞ்சி?” என்று வினவினான் வீரபாண்டியன்.
குறிஞ்சி பதிலேதும் சொல்லவில்லை. அவன் போர் வெறி, அவன் சொற்சீற்றம், கண்பார்வை இவையனைத்தும் அவளுக்கு அச்சத்தையே அளித்தன. அவளிடமிருந்து பதில் வராது போகவே தனது கேள்விக்குத் தானே பதில் சொல்லிக்கொண்டு மேலும் பேசினான் இளவரசன் “அதற்குப் பெயர் எரிமுகப் பேரம்பு, திரிபுரத்தையே அதன் ஜ்வாலை அழித்தது. அது இப்படித் தானிருக்க வேண்டும் குறிஞ்சி. தமிழர் படை இலக்கணம் இருவகைப் படைகளைக் குறிக்கிறது. கைவிடு படை, கைவிடாப் படை என்று இருவகைகள் இருக்கின்றன. ஒரு வகை வாள், வேல், கோடரி முதலியன. மற்றொரு வகை பொறிகளால் இயங்குபவை. இரண்டாவது வகையைச் சேர்ந்தது இது. இடங்கணி என்று கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?”
இதைச் சொன்ன வீரபாண்டியன் சற்றுப் பேச்சை நிறுத்திக் குறிஞ்சியைப் பார்த்தான். குறிஞ்சிக்கு ஏதும் புரியவில்லை. அவனுக்கிருந்த போர் வெறிதான் புரிந்தது அவளுக்கு. “இடங்கணியா!” என்று கேட்டபோதும் மயக்கத்திலேயே கேட்டாள் அவள்.
“ஆம், குறிஞ்சி இடங்கணிதான். கல வீசும் பொறியின் பெயர் அது. இடங்கணியில் கல்விடு கூடை என்று உண்டு. அதில் கருங்கற்களை இட்டு வைத்தால் பொறி இயங்கி இக்கற்களை எடுத்து, கனவேகத்தில் வீசும். பெரும் பந்தங்களையும் வீசும் ஆற்றல் உடையது அது. அந்தப் பொறியையும் வேற்பொறியையும் அந்த அம்பிலேயே இணைத்திருக்கிறேன். இதிலுள்ள இடங் கணியின் கல்விடு கூடையில் கல்லிருக்காது. பெரும் தீப்பந்தங்கள் இருக்கும். இந்தப் பொறி இயங்க முற்பட்டதும் இந்த எரிமுகப் பேரம்பு இடங்கணியுடன்
பெருவேகத்தில் சேரன் . தலைநகர் மீது பாயும். அது நகர்ப்புறத்தை அடைவதற்கும் இடங்கணி இயங்குவதற்கும் நேரம் சரியாயிருக்கும். இடங்கணி பந்தங்களை மலைபோல் சேரர்தலைநகர் மீது வீசும். தலைநகரின் எந்தப் பகுதிகள் எரியுமோ சொல்ல முடியாது. ஆனால் நகரெங்கணும் பல இடங்கள் தீப்பிடிக்கும், பல இடங்கள் பயங்கரமாக எரியும். அப்படி நாற்புறமும் தீப்பிடித்து எரியும்போது, சேரன் படையில் பெரும் குழப்பம் ஏற்படும். அந்தச் சமயத்தில் எனது குதிரைப்படை அந்த மாநகரின் பெரும் நாசத்தை *விளைவிக்கும்” என்றான் வீரபாண்டியன்.
அவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்து நின்றாள் குறிஞ்சி. இப்படித் தனது போர்த் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக விளக்கும் யாரையும் அவள் பார்த்ததில்லை. அதுவும் கோட்டாற்றுக்கரைப் போரில் தனது எண்ணங்களைச் சிறிதும் விளக்காது அடியோடு மறைத்து விட்ட வீரபாண்டியன், நிற்கப்போவது பாண்டிய நாடா, சேர நாடா என்பதை நிர்ணயிக்கும் இந்த முக்கிய போரில் தனது மனத்தைத் திறந்து காட்டுவதைக் கண்டு பெருவியப் பெய்தினாள். அந்த வியப்பைச் சொல்லிலும் வடித்தாள். “பெரும்படைத் தலைவர்கள் தங்கள் போர் முறையைப் பகிரங்கப்படுத்துவதும் வழக்கமில்லையே?” என்று.
“இது போர் முறையல்ல குறிஞ்சி. இது வெறும் அழிவு. அதர்மத்தின் பலனைச் சேரன் அனுபவிக்கப் போகிறான். இதற்கு நான் பொறுப்பாளியல்ல,” என்று பதில் கூறிய வீரபாண்டியன், “இப்பொழுது பார், எரிமுகப் பேரம்பு இயங்கக்கூடிய முறையை” என்று கூறிவிட்டுச் சுற்றிலும் பொறி வண்டியைக் காவல் புரிந்த வீரர்களில் இருவரை அழைத்துக் கையால் சைகை செய்தான். அந்த இருவரும் பொறியை அணுகி அம்பு உட்கார்ந்திருந்த இடங்கணிப் பொறியின் இருபுறங்களிலுள்ள இரு சுழற்சக்கரங்களைத் திருகினார்கள் மெல்ல. அவர்கள் திருகத் திருக, வேலின் முகம் போல் முகங்கொண்டு படைத்திருந்த அந்த அம்பின் முனைப்பகுதி இரண்டாக மெள்ளப் பிளந்தது. பிறகு அதன் கழுத்திலிருந்த சிறு கூடையும் ஒருமுறை அரைவாசி சுழன்று இரண்டாகப் பிரிந்தது. பிறகு உள்ளிருந்த பெரும் மர உருளையொன்று பயங்கர வேகத்தில் ஆகாயத்தை நோக்கிப் பறந்தது. வீரர் இருவரும் சக்கரத்தைச் சுழற்றுவதை நிறுத்தினார்கள். பொறி தட்டென்ற சத்தத்துடன் உட்கார்ந்தது.
வீரபாண்டியன் கண்கள் ஆகாயத்தில் பறந்து சென்ற மர உருளையைக் கவனித்துக் கொண்டிருந்தன. அது கண்ணுக்கு மறைந்த பின்பு திரும்பி அவன் குறிஞ்சியை நோக்கி னான். குறிஞ்சி மர உருளை பறந்த வானையே நோக்கிக் கொண்டிருந்தாள். “குறிஞ்சி” என்று வீரபாண்டியன் அழைத்த பின்புதான் அவள் இவ்வுலகத்துக்கு வந்து வீர பாண்டியன் கண்களைச் சந்தித்தாள்.
வீரபாண்டியன் கண்களில் சிருஷ்டிகர்த்தாவின் பெரு மிதம் இருந்தது. “குறிஞ்சி! அந்த மர உருளையைத் தீப்பந்தாக வைத்துக்கொள். அந்த மாதிரிக் கணக்கில்லாத தீப்பந்துகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் பரலி மீது மழை போல் பொழியும். ஏன் தெரியுமா?” என்று வினவவும் செய்தான் வீரபாண்டியன்.
“ஏன்?” உணர்ச்சியின்றி வந்தது குறிஞ்சியின் கேள்வி.
“இம்மாதிரி பத்து எரிமுகப் பேரம்புகளைச் சிருஷ்டித் திருக்கிறேன். இம்மாதிரிப் பத்துப் பொறிகள் இக்காட்டு முகப்பில் பத்து இடங்களில் இருக்கின்றன. இப்பொழுது நாம் பரலியிலிருந்து ஒன்றரைக்காத தூரத்திலிருக்கிறோம். இன்றே படைகளுக்குப் புறப்பட உத்தரவளிக்கப்படும். எந்தக் காட்டு முகப்பை அழித்து, என் படையைப் பொறிகள் கொண்டு அழித்துவிடச் சேரன் பார்த்தானோ, அந்தக் காட்டு முகப்பு நோக்கி. இந்தப் பொறிகள் இன்று நகர்த்தப்படும்,” என்று கூறிச் சற்று நிதானித்த வீர பாண்டியன், “ஆமாம். இளநங்கைக்கு ஏற்பட்டது போல உனக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டுமே!” என்று வினவினான் திடீரென்று.
“என்ன சந்தேகம் ஏற்பட்டது கொற்கைக் கோட்டைத் தலைவர் மகளுக்கு?” என்று வினவினாள் குறிஞ்சி.
“இரண்டு வீரர்கள் சுழற்சக்கரங்களைச் சுற்றினால் தானே பொறி இயங்குகிறது? அவற்றைச் சுற்றிக்கொண்டு வீரர்கள் கோட்டை முகப்பு முன்பு ஓடும்போது கோட்டை விற்பொறிகள் வாளாவிருக்குமா? என்று கேட்டாள் இளநங்கை,” என்றான் வீரபாண்டியன். குறிஞ்சிக்கு அப்பொழுதுதான் அந்த ஆயுதத்தை இயக்குவதிலும் ஒரு குறைபாடு இருப்பது தெரிந்தது. “ஆம் ஆம். அதற்கென்ன செய்வீர்கள்?” என்றாள்.
“இங்குதான் சேரன் நமக்கு உதவுகிறான். ” என்று கூறினான் வீரபாண்டியன் பயங்கரப் புன்முறுவல் செய்து.
“எப்படி?”
“பரலியின் பிரதான வாயிலுக்கெதிரே பத்துப் பதினொரு புருஷ நீளந்தான் சமவெளி. அதுவும் வண்டிப் பாதைக்கே முன்னோர்கள் போட்டது. அதை அடுத்து இந்த மலைத் தொடர் எழுந்து நிற்கிறது. அவன் அழித்த காட்டை அடுத்து மலை எழுந்து நிற்கிறது. ஆகவே, இந்தப் பொறி மலைச்சரிவுகளில் தள்ளிவிடப்படும். அப்பொழுது வண்டிச் சக்கரங்களுடன் இணைக்கப்பட்ட பொறியின் சுழற்சக்கரங்கள் திரும்பும். பொறி தானாகவே இயங்கும். பொறி வண்டியைத் தள்ளுமுன்பாக எண்ணெய்ப் பத்துகளைக் கல்விடு கூடையில் நிரப்பித்தி வைத்து அனுப்பும் வேலைதான் வீரர்களுக்கு. மற்றவற்றைப் பொறி தானாகவே செய்து கொள்ளும். இது கைவிடாப் படையல்லவா?” என்று கூறிய வீரபாண்டியன் குறிஞ்சியை மகிழ்ச்சியுடன் நோக்கினான்.
குறிஞ்சி முகத்தில் மகிழ்ச்சி எதுவுமில்லை . அந்தப் பயங்கர ஆயுதத்தைப் பார்த்தவண்ணமே நின்றாள். ‘பரலி அழிந்தது,’ என்று தனக்குள் சொல்லியும் கொண்டாள்.
வீரபாண்டியன் திரும்ப அவளைப் பாண்டிய மன்னன் கூடாரத்துக்கு அழைத்து வந்தான். குறிஞ்சி மன்னனைப் பார்த்தாள். மன்னன் பெருமூச்செறிந்தான்.
பிறகு தம்பியை நோக்கிக் கூறினாள், “தம்பி! இன்றே புறப் படட்டும் படை பரலி நோக்கி,” என்று.
தம்பி தலை தாழ்த்தினான். “பல்லக்கையும் தயார் செய்கிறேன்,” என்றான்.
மன்னன் தலையை மட்டும் அசைத்தான். பல்லக்கு எதற்கு என்று அவனும் கேட்கவில்லை. குறிஞ்சியும் கேட்க வில்லை. இளநங்கையைக் கொற்கைக்கு அனுப்பத்தான் பல்லக்கு என்று இருவருக்கும் தெரியும். அன்று அந்தி வேளையில் இளநங்கை பயணமானாள் கொற்கை நோக்கி படைகள் நகர்ந்தன பரலி நோக்கி.